Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஜார்ஜ் புஷிற்குப் பாரதரத்னா?

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷிற்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வி கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற விவகார அமைச்சருமான வயலார் ரவி, அவரின் கருத்துக்கு எதிராக கடுமையான விமர்சனம் தெரிவித்தார்.

பெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசும் பொழுது, "இந்திய-அமெரிக்க உறவை நெருக்கமாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக புஷிற்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும்" என்று சிங்வி கூறினார்.

"தனிப்பட்ட கருத்தாக இருந்தால் கூட, இது போன்ற கருத்துகள் கூறும் பொழுது காங்கிரஸ் பிரமுகர் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என வயலார் ரவி கூறினார். "இது போன்ற கருத்துகளைக் காங்கிரஸின் எதிரிகள் எதிர்மறையாக திரித்துப் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக"வும் அவர் கூறினார்.

"முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்குப் பாரத ரத்னா வழங்குவதை எதிர்க்கவும் புஷிற்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும் என கோரிக்கை விடவும் செய்வது காங்கிரஸ் எப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக" பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

அதேநேரம், "பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தோ-அமெரிக்க பாரத்தின் சேர்மன் என்ற நிலையில் தான் தெரிவித்தத் தனிப்பட்டக் கருத்தை விவாதமாக்க முயற்சிகள் நடப்பதாகவும் புஷிற்குப் பாரத ரத்னா வழங்குவதற்காக தான் அதிகாரிகளுக்கு சிபாரிசு எதுவும் செய்யவில்லை" எனவும்சிங்வி ஏ.ஐ.சி.சிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தி: புதிய காமராக்கள் பதிக்க அனுமதி!

அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது இருக்கும் மூன்று குளோஸ்ட் சர்க்யூட் டிவி காமராக்களை அகற்றிவிட்டுப் புதிய காமராக்கள் நிறுவ அலகபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது காமராக்கள் இருக்கும் அதே இடத்தில் உயர அளவில் கூட எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்ற கட்டளையுடன் பைசாபாத் டிவிசன் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்களிடம் பேசுவதற்காகத் தற்பொழுது அவ்விடத்தில் உள்ள மேடையில் அதிக தூரத்திற்குப் பேச்சுகள் செல்லத்தக்க விதத்தில் உயர்தர ஸ்பீக்கர்கள் நிறுவுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காமராவும் மேடையும் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு தேவைகளுக்கும் மற்ற அவசரகட்டங்களிலும் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காதலர் தினத்திற்கு எதிரானவர்கள் அல்ல - பஜ்ரங்தள்!

இளம் தலைமுறையினர் நாகரீகமான நடவடிக்கைகளைப் பேணும் வரை காதலர் தினத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என பஜ்ரங்தள் அறிவித்துள்ளது. கிருஷணன் மற்றும் ராதாவின் தெய்வீகக் காதலை நாங்கள் என்றும் ஆராதித்தே வந்துள்ளோம் என பஜ்ரங்தள் தேசிய கன்வீனர் பிரகாஷ் சர்மா தெரிவித்தார்.

ஆனால், தலைமையின் நிலைபாடுகளுக்கு எதிராக இன்றைய காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிராகப் பல இடங்களிலும் பஜ்ரங்தள் தொண்டர்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தினர். வாழ்த்து அட்டை விற்பனை அங்காடிகள் மற்றும் காதலர்களுக்கு எதிராகப் பரவலாக தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.

உண்மையான காதலின் பக்தர்கள் பஜ்ரங்தளத்தினர் தான் எனக் கூறிய சர்மா, இளம் தலைமுறையினர் ஒரு நாளுக்குப் பதிலாக ஆண்டில் எல்லா நாட்களையும் காதலர் தினமாகக் கொண்டாட வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். திடீரென இந்த மனம் மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று கேட்டபொழுது, "இளம் தலைமுறையினரின் ஆசைகளுக்கு நாங்கள் எதிரல்ல" எனவும் "நடவடிக்கைகளில் நாகரீகத்தைப் பேண வேண்டும் என்பது மட்டுமே பஜ்ரங்தளத்தின் கோரிக்கை" என்றும் அவர் பதிலளித்தார்."

மது விற்பனை கூடங்களிலும் மக்கள் கூடும் வியாபார அங்காடிகளிலும் காதலர் தினத்தில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்" என பஜ்ரங்தள் டெல்லி மண்டல கன்வீனர் அசோக் குமார் காவல்துறை கமிஷனருக்குக் கோரிக்கை விடுத்ததார். ஸ்ரீராமசேனைக்கும் தங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை எனவும் பஜ்ரங்தள் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

என்றாவது ஒருநாள், பிரதமர் ஆவேன் லாலு சொல்கிறார்

என்றாவது ஒருநாள், பிரதமர் ஆவேன் லாலு சொல்கிறார்


புதுடெல்லி, பிப்.14-

ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ், பிரதமர் பதவி மீதான தனது ஆசையை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். நேற்றும் அவர் பிரதமர் ஆக விருப்பம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த லாலுவிடம், "தேர்தலுக்கு பிறகு நீங்கள் மீண்டும் ரெயில்வே மந்திரி ஆவீர்களா?'' என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு லாலு, "நான் என்ன ஆவேன், என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதெல்லாம் கடவுள் நிர்ணயித்த விதிப்படிதான் நடக்கும். கடவுள் என் நெற்றியில் என்ன எழுதி இருக்கிறோரோ? எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள், நான் பிரதமர் ஆவேன்'' என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை


தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தங்கம் விலை எதிர்பாராத ஏற்றம் கண்டு வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் பாரல் 35/ டாலர் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இதன் காரணமாக, உலகநாடுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வங்காட்டுவதால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு ஏறி வருகிறது.


கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்தியாவில் ரூ.8,784/= க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.10,928/=க்கு விற்கப்பட்டது.

தங்கத்தில் சேமிப்பது அதிகரித்திருக்கிறது. தங்கச் சுரங்கம் ஒன்று ஆப்ரிக்காவில் தன் உற்பத்தியைக் குறைத்துள்ளது. இக்காரணங்களால் தங்கத்தின் விலை உயர்வு காணப்படுவதாக நகைக்கடை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

ஆர் எஸ் எஸ் தயாரிக்கும் மாட்டுச்சிறுநீர் பானம்

பசுவின் சிறுநீரிலிருந்து குளிர்பானம் தயாரித்து விற்பனைச் செய்ய ஆர் எஸ் எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. கெள ஜல் என்று பெயரிடப்பட்டுள் இப்பானம் ஆய்வக பரிசோதனையில் இருப்பதாகவும் விரைவில் சந்தைக்கு வரும் என்று ஆய்வுக்குழு தலைவர் ஓம்பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.

அமெரிக்கக் குளிர்பானங்களுக்கு இது கடும்போட்டியை ஏற்படுத்தும் என்றும் உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிச் செய்யப்படும் என்றும் விலை மலிவாக விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாட்டயா டென்னிஸ் இறுதியாட்டத்தில் சானியா!

பாட்டயா ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் ஆட இந்தியாவின் சானியா மிர்ஸா தகுதி பெற்றுள்ளார்.

தரவரிசையில் மிகவும் பின் தங்கி 126 ஆவது இடத்திலிருக்கும் சானியா அரையிறுதிஆட்டமொன்றில் 51ஆம் தரவரிசை பெற்ற மக்தலீனா ரைபரிக்கோவ் என்னும் ஸ்லோவோக்கியரை 6-4, 5-7, 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.

இறுதியாட்டத்திற்கு தகுதிபெறுவது சானியாவுக்கு நான்காம் முறை என்றாலும் 2005ல் ஹைதராபாத் ஓபன் போட்டியைத் தவிர அவர் வேறு எதிலும் பட்டம் வென்றிருக்கவில்லை. 2007 ல் ஸ்டான்ஃபோர்ட் இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றதே அவருடைய கடந்த கால அதிகபட்ச சாதனை.

அதே சமயம், இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சானியா இத்தாலியின் மாரா சாண்டஞ்சிலோ இணை தோல்விகண்டது.

திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி?

திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இன்று கொல்கத்தாவில் கூடிய மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி தலைமை தாங்கினார். மேற்கு வங்க காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் மோசினா கித்வாய்  மற்றும் மாநில நிர்வாகிககள் பலரும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் சமீபத்தைய அரசியல் நிலை குறித்து விவாதிக்கப் பட்டது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதீப் பட்டர்ஜி, மேற்கு வங்க மாநில மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் இந்த மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சி என்றும் கூறிய அவர், நிபந்தனைகளின் அடிப்படையில் அக்கடசியுடன் கூட்டணிக்கு முயல்வோம் என்றும் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். ஆனால் கடைசி நேரம் வரை காங்கிரசுக்காகக் காத்திருக்க மாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறியிருந்தார்.

காதலர் தின நிகழ்வுகள் : காவல்துறை உதவி ஆய்வாளர் இடைநீக்கம்

பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகின் பல பகுதிகளிலும் சிலரால் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தியாவில் இந்துத்துவ அமைப்புகள் இந்தக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உஜ்ஜைனிலும் ஹரியாணாவிலும் பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் ஒரு அறையில் ஒன்றாய் இருந்த காதலர்களை காவல் உதவி ஆய்வாளர் மூல ராம் என்பவர் அடித்துத் துன்புறத்தினார் என்ற புகாரை அடுத்து அவர் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணை முடிந்த பின் அவர் மீது மேலும் நடடிவக்கை எடுக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உஜ்ஜைனில் அண்ணனும் தங்கையம் விக்ரம் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் வழியில் பஜ்ரங் தளத்தைச் சார்ந்த நால்வர் அவர்களிடம் பிரச்சனை செய்ததாக கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால் நால்வரும் பஜ்ரங் தளத்தைச் சார்ந்தவர்கள் அல்லர் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.

ஸ்ரீராம் சேனா, சிவ சேனா, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த சுமார் 600 பேர் கர்நாடாகா, மத்தியப் பிரதேசம் மற்றும் டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கைது செய்யப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் அமைச்சர் நியமனம்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சவுதி அரேபியா மன்னர் நீதித்துறை அமைச்சர், செய்தித்துறை அமைச்சர், கல்வி அமைச்சர், புதிய தலைமை நீதிபதி போன்றவர்களை நியமித்து இன்று உத்தரவிட்டார். இதில் கல்வித்துறை துணை அமைச்சராக நூரா அல்பைஜ் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.  இவரது பெயரை தலைமை மதகுரு முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.

சவுதி வரலாற்றில் பெண் ஒருவர் அமைச்சராவது இதுவே முதல் முறையாகும்.

ஈழ அகதிகள் பேருந்து தாக்கப்பட்டது

போர் நடக்கும் இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை அரசின் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயரும் போது புளியன்குளம் அருகில் பேருந்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமுற்றனர்.

விடுதலைப் புலிகள்தான் இந்த தாக்குதலைத் தொடுத்தனர் என்று இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயகரா தெரிவித்ததாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நடக்கும் பகுதிகளில் தனியார் பத்திரிகைகளுக்குத் தடைவிதித்திருப்பதால் இராணுவத்தின் இந்த அறிவிப்பை உறுதி செய்ய முடியவில்லை.

"அமெரிக்கப் பொருளாதாரம் சீரடைய வருடங்களாகும்" - ஒபாமா

அமெரிக்கப் பொருளாதாரம் சீரடைவதற்கு மாதங்களல்ல; வருடங்கள் தேவைப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நலிவடைந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் 789 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்கப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக, தொழிலதிபர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். "கடும் உழைப்பு தேவைப்படும் காலக்கட்டம் இது, இது தொடக்கக் கட்டம் தான்" என்றும் அவர் தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டில், நிதித்துறையில் கடும் சவால்களைச் சந்திக்க வேண்டி, நல்லதொரு பொருளாதாரத் திட்டத்தை தீட்டவேண்டிய காலக்கட்டாயத்தில் அரசு உள்ளது என்றார் அவர்.

பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்கி 20 பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் பலியானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாலிபான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலமான ஆப்கானிஸ்தானை ஒட்டிய தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினருக்கு எடுத்துச் செல்லப்படும் உணவு மற்றும் ஆயுத விநியோக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதி மீது இன்று அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தங்களது ஆதரவாளர்கள் 25 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று தாலிபான் தரப்பு கூறியதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தப் பகுதி மீது அமெரிக்க 20க்கும் அதிமான வான் தாக்குதலை நடத்தி உள்ளது.

பச்சிளம் குழந்தையை கூவி விற்க முனைந்த பெண்

நான்காவதாகவும் பெண்குழந்தை பிறந்ததால், அப்பெண்குழந்தையை நகரில் கூவி விற்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது பற்றிய செய்தி வருமாறு:

கண்டமங்கலம் அருகே உள்ள துலுக்காநத்தம் காலனியைச்சேர்ந்தவர் வில்வநாதன். கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி லலிதா(வயது 35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாக்கம் கூட்டு ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் லலிதாவுக்கு 4-வதாக அழகான பெண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தை பிறந்தது பற்றி தகவல் தெரியவந்தால் கணவர் திட்டுவாரே என்று பயந்த லலிதா அந்த குழந்தையை விற்க முடிவு செய்தார்.

இதனால் அவர் துணைக்கு ஒரு மகளை அழைத்துக்கொண்டு பச்சிளம் குழந்தையுடன் கடலூருக்கு வந்தார். டவுன்ஹால் எதிரே பாரதிசாலையோரத்தில் பெண்களிடம் கூவி கூவி குழந்தையை விற்க முயன்றார். 20 ஆயிரம் ரூபாய் தந்தால் குழந்தையை தருவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து லலிதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவளிடம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் விசாரணை நடத்தினார். அப்போது 4-வது பெண் குழந்தையாக இருந்ததால் வறுமையின் காரணமாக குழந்தைய விற்க முயன்றதாக கூறினார்.

இதையடுத்து அவளையும், குழந்தையையும் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர்.

வறுமை வாட்டுவதால் இந்தக் குழந்தையை என்னால் வளர்க்க முடியாது. எனவே அரசு இந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் லலிதா கூறினார். உடனே குழந்தையை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சமூகநலத்துறை அதிகாரிகள் ஏற்று கடலூர் புதுப் பாளையத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பெப்சியில் கிடந்த பல்லி: 16,000 இழப்பீடு

கோவை மாவட்டம் பல்லடம் வீரபாண்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திருப்பூரில் ஒரு அங்காடியில் பெப்சி குளிர்பானம் வாங்கித் திறந்த போது, அதில் பல்லி ஒன்று செத்து மிதக்கக் கண்டார். இதையொட்டி, குளிர்பானம் வாங்கியதற்கான அத்தாட்சி பெற்றுக்கொண்ட அவர், கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

நுகர்வோர் மன்ற நீதிபதி ஸ்ரீராமுலு, உறுப்பினர் இரத்தினம் ஆகியோர் தங்களது தீர்ப்பில் செந்தில்குமாருக்கு அங்காடி உரிமையாளர், மொத்த விற்பனையாளர், குளிர்பான நிறுவனம் மூன்றும் சேர்ந்து ரூ.16,000/= இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்

25 ரூபாய் இலஞ்சத்துக்கு 24 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

பீகார் அரசு மருத்துவர் ஒருவர் கடந்த 1985 ஆம் ஆண்டு மருத்துவச்சான்றிதழ் வழங்குவதற்காக கடைநிலை ஊழியர் ஒருவரிடமிருந்து 25 ரூபாய் இலஞ்சமாகப் பெற்ற வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது.

பாலகோவிந்த் என்ற அந்த மருத்துவர் பாட்னா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் மருத்துவச் சான்றிதழ் ஒன்றினுக்கு கடைநிலை ஊழியர் ஒருவரிடம் ரூ.25/- இலஞ்சமாகக் கோரியிருந்தார். அந்த கடைநிலை ஊழியர் காவல்துறையில் புகார் தெரிவிக்கவும், இரசாயனப் பொடி தூவிய ரூபாய் தாள்களை வழங்கும்படி காவல்துறை பணித்தது. திட்டமிட்டபடி, கையும் களவுமாக மருத்துவர் பிடிபட்டார்.

இவ்வழக்கில் கடந்த 1992ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மூன்றுமாத சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர் தன் செல்வாக்கால் மேல்முறையீடு என்ற பெயரில் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் மூன்றுமாத சிறைத்தண்டனை, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் என்று இப்போது தீர்ப்பு வந்துள்ளது. 75 வயதாகிவிட்ட மருத்துவரை காவல்துறை தேடி வருகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!