Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் - 40 பேர் பலி!

Published on: வெள்ளி, 17 ஏப்ரல், 2009 // , , , , ,
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எல்லைப் புறத்தில் உள்ள நங்கர்கர் மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 பதிவானது. இதன் பிறகு 2 மணி நேரம் கழித்து 5.1 அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

முதலில் கிடைத்த தகவல்கள்படி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் காயமுற்றுள்ளனர்.

அல்காயிதா அமைப்பை துடைத்தொழிப்போம் - ஒபாமா சூளுரை

அல்காயிதா அமைப்பு பாகிஸ்தானில் பாதுகாப்பான இடங்களில் இருந்துக் கொண்டு இன்னும் செயல்பட்டு வருவதாகவும், மேலும் புதிய தாக்குதல்களை நடத்த அது திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அல்காயிதா அமைப்பினர் செயல்படும் பாகிஸ்தானின் எல்லைப்புறப் பகுதிகள், 'அமெரிக்கர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான பிரதேசங்கள்' என்றும் அவர் வர்ணித்தார்.

செப்-11 தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி அமைத்திருந்த தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அங்கு போர் முடிவுக்கு வரவில்லை என்பதையும், கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.

அல்காயிதா பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதைப் பற்றி பல உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த பின்னரும் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் ஒபாமா எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக மேலும் 21,000 பேர் கொண்ட படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். இதோடு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 65,000 ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்கி 20 பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் பலியானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாலிபான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலமான ஆப்கானிஸ்தானை ஒட்டிய தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினருக்கு எடுத்துச் செல்லப்படும் உணவு மற்றும் ஆயுத விநியோக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதி மீது இன்று அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தங்களது ஆதரவாளர்கள் 25 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று தாலிபான் தரப்பு கூறியதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தப் பகுதி மீது அமெரிக்க 20க்கும் அதிமான வான் தாக்குதலை நடத்தி உள்ளது.

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் - 27 பேர் பலி

Published on: வியாழன், 12 பிப்ரவரி, 2009 // , , ,
ஆப்பானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு அலுவலகங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

சிறைத்துறை அலுவலகத்தில் இருவர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.  நீதி அமைச்சகம் மீது 5 பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். மற்றொருவர் கல்வி அமைச்சகம் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல்களைத் தாங்கள்தான் நடத்தியதாக தாலிபான் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் 35 பேர் காயமுற்றதாக உள்துறை அமைச்சகம் கூறியது.

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் காபூல் வர இருக்கும் நிலையில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆப்கனில் தமிழர் கொலைசெய்யப்பட்டார்

Published on: திங்கள், 9 பிப்ரவரி, 2009 // , , , , ,
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைமன். ஆப்கானிஸ்தானில் ஹெராட் என்னும் மாகாணத்தில் இராணுவ விமான தளம் ஒன்றில் இத்தாலிய இராணுவ வீரர்களுக்கான உணவுப்பொருள் விற்பனை அங்காடியில் வேலைபார்த்து வந்தார்.

பணியிலிருந்த போது அவரை தாலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால், தீவிரவாதிகள் அவரைக் கொன்று விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செய்தியறிந்த சைமன் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

அமெரிக்க இராணுவ தளம் மூடல் இறுதியானது: கிர்கிஸ்தான்


அமெரிக்க இராணுவ விமான தளம் மூடுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கிர்கிஸ்தான் அரசு மீண்டும் கூறியுள்ளது.

கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும் என்று கிர்கிஸ்தான் அதிபர் குர்மன்பக் பகியேவ் செவ்வாய் கிழழை அறிவித்தார். அமெரிக்காவுக்கு இவ்வறிவிப்பு நெருக்கடியை ஏற்படுத்தியது. கிர்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில் கிர்கிஸ்தான் தன்னுடைய முடிவை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

இராணுவ விமான தளத்தை மூடும் முடிவு இறுதி செய்யப் பட்டுவிட்டது என்று கிர்கிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் அய்பக் சுல்தான்காஜியேவ் வெள்ளிக் கிழமையன்று தெரிவித்தார். கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதர கிர்கிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இதுகுறித்த கருத்துக்களையே பறிமாறிக் கொண்டிருப்பதாகவும் விமான தளத்தை தொடர்ந்து இயக்குவது குறித்து அவர்கள் பேசிக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கானில் உள்ள அமெரிக்க கூட்டுப்படையினருக்குத் தேவையான இராணுவத் தளவாடங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பாகிஸ்தானின் கைபர் பாதை வழியாகவும் கிர்கிஸ்தான் வழியாகவுமே அனுப்பப் பட்டு வந்தன. ஏற்கனவே கைபர் பாதையில் தாலிபான் ஆதரவாளர்கள் நடத்தும் தாக்குதலால் பொருள்கள் வருவதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் வழியாகப் பொருள்களை அனுப்ப பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தஜிகிஸ்தான் தங்களுடைய நாட்டின் வழியாக இராணுவத் தளவாடங்கள் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். உணவுப் பொருட்கள் கொண்டு செல்லலாம் என்று கூறி உள்ளது.

கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும்

Published on: புதன், 4 பிப்ரவரி, 2009 // , , , , , , ,

கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும் என்று கிர்கிஸ்தான் அதிபர் குர்மன்பக் பகியேவ் செவ்வாய் கிழழை அறிவித்தார்.

செவ்வாய் கிழமை பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் கைபர் வழியில் உள்ள பாலத்தை தாலிபான் ஆதரவாளர்கள் வெடிவைத்து தகர்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பை கிர்கிஸ்தான் அதிபர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அறிவித்திருப்பதால் ரஷ்யாவின் தூண்டுதலினாலேயே இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கிர்கிஸ்தான் ரஷ்யாவிடம் பெற்றிருந்த  180 மில்லியன் டாலர் கடன் தொகையை ரத்து செய்துவிட்டதாகவும், மேலும் 150 மில்லியன் டாலர் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்யா கிர்கிஸ்தானுக்கு கடனாக வழங்க சம்மதித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 30 ஆயிரம் படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஒபமாவிற்கு ரஷ்யா கொடுத்திருக்கும் முதல் நெருக்கடி என்று சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவ தளமான மனஸ் என்ற இந்த தளத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரான்சைச் சேர்ந்த சுமார் 1000 இராணுவத்தினர் பணியில் உள்ளனர்.

தாலிபான் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை

அமெரிக்காவுக்கு சாதகமான ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானை உருவாக்க முடியாது என அமெரிக்காவின் முன்னணி உளவு மற்றும் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு அமைவது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆப்கானிஸ்தான் குறித்த ஒபாமாவின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

அமெரிக்க 5 இலட்சம் இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தாலும் அமெரிக்காவுக்கு சாதகமான ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானை உருவாக்க முடியாது என்றும் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதெனவும் அது கூறுகிறது.

எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளைத் திரும்ப் பெறுவதுடன் அல்கைதாவுக்கு எதிராக உளவுத்துறையை முடுக்கிவிட வேண்டும் என்றும் அது கூறுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!