Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காந்தமால் பா.ஜ.க. வேட்பாளர் கைது!

Published on: செவ்வாய், 14 ஏப்ரல், 2009 // , , , , , , , ,
ஒரிசா மாநிலம் காந்தமால் நாடாளுமன்றத் தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அஷோக் சாகு இன்று கைது செய்யப் பட்டார். இம்மாதத் தொடக்கத்தில் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வண்ணம் பேசியதாக அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தது. காவலர்களிடம் பிடிபடாமல் நீதிமன்றத்தில் பிணை கேட்டு அவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டதை அடுத்து அவர் கைது செய்யப் பட்டு நீதி மன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 125 (A) ஆகிய சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.

ஐ.பி.எம். நிறுவனத்தில் இனி தேநீர், காபி இல்லை!

கணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம். நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தங்களது கிளைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு தேநீர், காபி போன்றவை இலவசமாக அளிப்பது நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வருகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் இந்நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கு அவர்களின் இல்லங்களில் நிறுவனத்தின் சார்பில் வழங்கி வந்த இலவச இணைய இணைப்பும் நிறுத்திக் கொள்ளப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஐ.பி.எம் நிறுவனம் 2800 ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்து அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தது. மேலும் இந்நிறுவனத்தின் அமெரிக்கக் கிளைககளில் பணிபுரியும் சுமார் 5000 பேர் வேலை இழக்கக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பாஜக வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: ஜெ திட்டவட்டம்

பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்ற செய்திகள் அடிப்படை இல்லாதவை என அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைய அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. எவ்விதக் கூட்டணியும் அமைக்காது என ஜெயலலிதா மறுத்துள்ளார்.

"தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரும் என சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. நாங்கள் 2009 மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்ற செய்திகள் எவ்வித அடிப்படையும் இல்லாதவை. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து நாங்கள் எந்தக் கட்சியுடனும், எந்த பேச்சும் நடத்தவில்லை," என ஜெயலலிதா கூறியுள்ளார்.

"பாபர்மசூதியை இடித்தது நியாயம் தான்" - பாஜக வின் அலிஆசாத்

"பாபர்மசூதியை இடித்தது நியாயம் தான்" - பாஜக வின் அலிஆசாத்

குலாம்நபி ஆசாத்தின் தம்பியும் பாஜக பிரமுகருமான அலி ஆசாத் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.அண்மையில்தான் இவர் பாஜக கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அந்த இடத்தில் அன்றும், இன்றும் ஒரு மசூதி இருந்ததில்லை" என்ற அலி ஆசாத், காங்கிரஸ் கட்சி அத்வானி மீது பழிசுமத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தம்பியின் கருத்து குறித்து காஷ்மீர் முன்னாள்முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் கருத்துத் தெரிவிக்கையில் 'பொருட்படுத்தத் தேவையில்லாத பேச்சு" என்றார். "அவரிடத்தில் எனக்கு சற்றும் தொடர்பு இல்லை" என்றார் குலாம்நபி ஆசாத்.

"அத்வானி, வாஜபேயியை அரபிக்கடலில் எறியுங்கள்" - காங்கிரஸ்

"அத்வானி, வாஜபேயியை அவர்கள் முதலில் அரபிக்கடலில் எறியட்டும்" என்று காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிக்கு பதிலளித்துள்ளது. காங்கிரஸ் முதியவர்களின் கட்சியாகிவிட்டது என்று கிண்டலடித்த நரேந்திர மோடிக்கு பதிலடியாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரிபிரசாத் இவ்வாறு கூறியுள்ளார்.
"காங்கிரஸ்சாரின் முதிய வயது பற்றிய கமெண்ட் அடித்த புண்ணியவான் முதலில் தன் கட்சியில் அதை அமல்படுத்தட்டும்" என்றார் அவர்.

ஒரு மனிதரின், நாட்டின், சமூகத்தின் பண்பாடு என்பது சிறுவர்களையும் முதியவர்களையும் பெண்களையும் அவர்கள் நடத்தும் விதத்தில்தான் இருக்கிறது என்ற ஹரிபிரசாத் மோடியின் வஞ்சகப்பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாகச் சொன்னார்.

மரபையும் பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கடைபிடித்து வருவதாகச் சொன்ன அவர், பிஜேபி குறித்து கூற ஒன்றுமில்லை என்றார். "எப்போதும் அக்கட்சி தேவையில்லாதவற்றையே பிரசினைப்படுத்துகிறது"

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நேற்று தரையிறங்கிய விமானத்தில் ஐந்து பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆம், நேப்பிள்சில் இருந்து கிளம்பிய இரட்டை எந்திர விமானம் ஒன்று தானியங்கி நிலையில் 10,000 அடி தூரத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், விமானிக்கு மரணம் சம்பவித்தது.

இதையடுத்து, பயணிகளில் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொள்ள, ஒற்றை எந்திரம் உரிமம் மட்டுமே பெற்றிருந்த அந்தப் பயணிக்கு தேவையான குறிப்புகளை அளித்து அந்த இரட்டை எந்திர விமானத்தை தென்மேற்கு ஃப்ளோரிடா விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக மாகாண விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தின் மற்ற ஐந்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஹாக்கி: கோப்பையை வென்றது இந்தியா!

Published on: ஞாயிறு, 12 ஏப்ரல், 2009 // , , ,
மலேசியாவின் ஈப்போ நகரில் நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி இறுதிப்போடியில் இந்திய அணி மலேசியாவை வென்று சாதித்துள்ளது.

லீக் போட்டியில் மலேசியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, எகிப்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான போட்டியை "டிரா' செய்தது. இதன்மூலம் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


இதேபோல் பாகிஸ்தான், எகிப்து அணிகளை வீழ்த்திய மலேசிய அணி, நியூசிலாந்து அணியுடனான போட்டியை "டிரா' செய்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த மலேசிய அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு தகுதிபெற்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இதுவரை இத்தொடரில் ஐந்து முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, நான்கு முறை (1985, 1991, 1995, 2009) கோப்பை வென்றுள்ளது.

இதன்மூலம் இத்தொடரில் இந்திய அணி சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்றுள்ளது. தவிர, இத்தொடரில் இந்திய அணி நான்கு முறை (1983, 2000, 2006, 2007) மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அர்ஜென்டினா அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து கோப்பையை பறிகொடுத்தது.

வெற்றி வாகை சூடிய இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் M.S.கில் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உலக நாடுகள் ஆர்வம்!

100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் பயன்படுத்த மலேசியா,சிங்கப்பூர்,மொரீசியஸ்,நமீபியா போன்ற நாடுகள் ஆர்வம் தெரிவித்திருக்கின்றன.

இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்த ஒரு நாட்டிலும் எதுபோன்ற காலநிலையிலும் சிறப்பாக இயங்கக்கூடியவை. அதனை கடினமாகவும் கையாளலாம். வாக்குப் பதிவில் இருந்து வாக்கு எண்ணிக்கை வரை அனைத்துமே துரிதமாக நடைபெற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெரும் உதவியாக உள்ளன. இதுபோன்ற ஏராளமான சிறப்பம்சங்களை இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுள்ளது உலக நாடுகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஏற்கெனவே நேபாளம், பூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நேபாளத்துக்கு கடந்த ஆண்டு தேர்தலில் பயன்படுத்த 200 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டன.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: ஜெ அதிரடி

திருவள்ளூர் (தனி) மற்றும், பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியல் இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில், திருவள்ளூர் தொகுதியில் ஆர். ராஜனும், பெரம்பலூர் தொகுதியில் ஆர்.பி.மருதை ராஜும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இவ்விரு வேட்பாளர்களும் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் தொகுதியில் ஜி.கே. இன்பராஜ், பெரம்பலூர் தொகுதியில் கே.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுவார்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றத்திற்க்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

பிரதமர் வெளிநாட்டுப் பயணம்; பாதுகாப்புச் செலவு ரூ.234 கோடி

Published on: வெள்ளி, 10 ஏப்ரல், 2009 // , , , , ,
பிரதமர் வெளிநாட்டுப் பயணம்; பாதுகாப்புச் செலவு ரூ.234 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார். அவர் பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட செலவு தொகை எவ்வளவு என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சேத்தன் கோத்தாரி என்பவர் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு, பிரதமர் மன்மோகன்சிங்கின் வெளிநாட்டு பயண செலவு ரூ 233.8 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பிரதமர் வாஜ்பாயின் 1999-2003-ம் காலகட்டத்தில் வெளிநாட்டுப் பயண செலவு ரூ.185.60 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

சுற்றுப் பயணத்தின் போது உடன் சென்ற பிரதமர் குடும்பத்தினருக்கு ரூ.5.3 கோடியும், தகவல் தொலைத் தொடர்பு, பயணப்படி அலவன்ஸ் மற்றும் விடுதி வசதிக்காகவும் ரூ.1.21 கோடியும் செலவானதாக கூறப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்

திமுக கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டிருந்தது அறிந்ததே! அக்கட்சி சார்பில் அதன் தமிழ்மாநிலத்தலைவரும் நடப்பு மக்களவை உறுப்பினருமான பேரா.காதர் மொய்தீன் போட்டியிடுவார் என்றும் இம்முறை உதயசூரியன் சின்னத்தில் அல்லாமல் பிரத்யேகமாக ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் முஸ்லிம் லீக் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடவேண்டுமென்று திமுக தலைமையால் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வருத்தமடைந்த பேராசிரியர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒத்துக்கொண்ட அதே வேளை, தனக்குப் பதிலாக அமீரக காயிதேமில்லத் பேரவைத் தலைவர் அப்துர்ரஹ்மான் போட்டியிடுவார் என்று அறிவித்திருக்கிறார். முறைப்படி இவ்வறிவிப்பை முஸ்லீம் லீக் இன்று வெளியிடுமாம்.

இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர்: 514 கோடி ரூபாய் சொத்து!

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கிம்ஜி படாடியா தன்னுடைய சொத்து ரூபாய் 514 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் தகவல் தந்துள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக சொத்துடைய வேட்பாளராக இவர் அறியப்பட்டுள்ளார்.

சுரேந்திர நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் இவர் தன்னுடைய அசையும் சொத்துகளின் மதிப்பு ரூபாய் 255 கோடி என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூபாய் 259 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

41 இலட்சம் மதிப்புடைய மெர்சிடீஸ் பென்ஸ் உள்பட நான்கு கார்கள், சுமார் 50 இலட்சம் மதிப்புள்ள 1.05 கிலோ தங்கம், மகாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் சில இடங்களில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூபாய் 208 கோடி மதிப்பிலான மற்றவகை நிலங்கள் என்று தன்னுடைய அசையும் மற்றம் அசையா சொத்துகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

தன்னுடைய கல்வித்தகுதியாக அவர் எஸ்.எஸ்.சி. (பத்தாம் வகுப்பு) யையே அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மூன்று தொகுதிகளில் ம ம க தனித்துப்போட்டி!

திமுக கூட்டணியில் இடம்பெறாத நிலையில், அதிமுகவுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக அமையாது போனதால்
பதினைந்தாம் மக்களவைக்காக மே 13ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தமுமுக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஜெகதீஷ் டைட்லர் விலகினார்

மக்களவைத் தேர்தலில் டெல்லி வடகிழக்குத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவர் ஜெக்தீஷ் டைட்லர். இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்திற்கு டைட்லரே காரணம் என்று எதிர்கட்சிகள் கூறிவந்தன. ஆயினும் சிபிஐ விசாரணையில் குற்றமற்றவர் என்று அண்மையில் டைட்லர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக, பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது கேள்விகளும் செருப்பும் வீசப்பட்டன.

இந்நிலையில், பிரச்னைகளுக்குத் தான் காரணமாக இருக்கவிரும்பவில்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்குவதாக 65 வயதாகும் ஜெக்தீஷ் டைட்லர் கூறியுள்ளார். தனது முடிவை சோனியாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதே தொகுதியில் இவர் மூன்று முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இறுதி

எதிர்வரும் 15ஆம் மக்களவைத் தேர்தலுக்கான தமிழ்நாடு புதுவை தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி, மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத், பிருதிவிராஜ் சவுகான், ஆகியோரும் பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்நாடு புதுவைக்கான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு மேலிடப் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறிப்பாக ப.சிதம்பரம் அதே சிவகங்கைத் தொகுதியிலும், மணிசங்கர ஐயர் மயிலாடுதுறையிலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மூவர் காயம்

இன்று காலை ஏழு மணியளவில் இராஜஸ்தானின் ஜெய்சால்மீர், பாமர் பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டேர் அளவீட்டில் 5.3 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீட்டின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

15 முதல் 20 விநாடிகளே இந்நிலநடுக்கம் இருந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடங்களில் அரசின் கவனம் திருப்பப்பட்டுள்ளது.

தேர்தல் விதி மீறல் பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு

உ.பி.யில் முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான் உள்பட 11 பாஜக தலைவர் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான், எம்.எல்.ஏ. வீரேந்திர சிங் சிரோஹி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மஹேந்திர சிங் யாதவ் உள்பட 11 பாஜக தலைவர்கள் மார்ச் 30-ம் தேதி தடையை மீறி போராட்டம் நடத்தி தேர்தல் விதியை மீறினர். இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 11 பேர் அளித்த பதிலும் திருப்தியாக இல்லை. இதனால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என புலந்த்ஷஹர் மாவட்ட ஆட்சியர் சுஷில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அருணாச்சலப் பிரதேச சுற்றுபயணம்: சீனா கண்டனம்!

அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத் தலைநகர் இடாநகருக்குச் சென்ற பிரதிபா பாட்டீல், எல்லைப் பகுதியான தவாங்கைப் பார்வையிட்டார். இது தொடர்பாக சீனா அதிப்ருதி தெரிவித்தது.

சீனாவின் எதிர்ப்பு தேவையற்றது என்றும், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பாகம் என்றும், இந்தியாவின் தலைவர்கள் அங்கு சுற்றுப் பயணம் செய்ய உரிமையுள்ளது எனவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்தபோதும் சீனா கண்டனக் குரல்களை எழுப்பியது இங்கு குறிப்பிடதக்கது.

இத்தாலி பூகம்பம் : பலி எண்ணிக்கை 235ஆக அதிகரிப்பு

Published on: புதன், 8 ஏப்ரல், 2009 // , , , , ,
கடந்த திங்கள் கிழமையன்று இத்தாலியின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. திங்கள் கிழமை நடந்த பூகம்பத்தைத் தொடர்ந்து இதுவரை சுமார் 200 முறை நில அதிர்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நில அதிர்வுகள் பூகம்ப பகுதியில் இருந்து தொலைவில் உள்ள ரோம் போன்ற இடங்களிலும் உணரப்பட்டன.

மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் மற்றும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தன்னார்வளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த பூகம்பத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் அப்ருசோ பகுதியில் 500க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களில் 100 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஒபாமாவின் முதல் இராக் பயணம்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட பின் பராக் ஒபாமா முதன் முறையாக செவ்வாய் கிழமையன்று இராக் பயணம் மேற்கொண்டார்.

இலண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாடு, பிரான்சு மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற நாட்டோ மாநாடு மற்றும் பராகுவேயில் நடைபெற்ற ஐரோப்பிய அமெரிக்க மாநாடுகளை முடித்துக் கொண்டு செவ்வாய் இரவு அவர் இராக் பயணம் மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பயணம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. இராக்கின் தலைநகர் பாக்தாதில் நான்கு மணி நேரம் மட்டுமே தங்கியிருந்த அவர் இராக்கின் அதிபர் ஜலால் தலபானி, பிரதமர் நூரி அல் மாலிகி மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். செவ்வாய் நள்ளிரவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!