Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

படகு கவிழ்ந்து 300 பேர் பலியானதாக சந்தேகம்!

Published on: செவ்வாய், 31 மார்ச், 2009 // , , , , , , ,
லிபியாவின் கடல்பகுதியில் படகு கவிழ்ந்து 300 க்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் மரணமடைந்ததாக சந்தேகம். ஐரோப்பாவில் குடியேற சிறிய படகுகளில் சட்டவிரோதமாக புறப்பட்ட ஆப்ரிக்க குழுக்களின் படகுகள், மோசமான காலநிலையில் தகர்ந்ததாக அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படகுகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்திருப்பர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 23 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் 6 இந்தியர்கள் பலி!

அமெரிக்காவில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் இந்தியர் ஒருவர். பொருளாதார மந்தநிலையினைத் தொடர்ந்து குடும்ப செலவுக்குப் போதிய வருமானமில்லாததால் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

கேரளாவிலுள்ள வயநாடு அய்யன்கொல்லியிலுள்ள செரியேரியைச் சேர்ந்தவர் அப்பு மாஸ்டர். இவரின் அஸோக். அப்பு மாஸ்டரின் மகளான அபயாவின் கணவர் தேவராஜன். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் சிலிக்கன்வேலி ஸாண்டாக்ளாராவில் பணிபுரிகின்றனர்.

சம்பவத்தினத்தன்று, குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தேவராஜன் குடும்பத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் அசோகன், மனைவி சுஜிதா, மக்களான அலகா, அகில், மேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். தேவ ராஜனின் மனைவி மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியப்பின் தேவராஜனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் பல உயிர்களையும் பலிவாங்குவது தொடர்கதையாகி வருகிறது.

சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை!

மக்களவை தேர்தலில் போட்டியிட சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், தன் மீதான தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி சமர்ப்பித்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தேர்தல் சட்டம் தடை விதிக்கிறது. இதனை மனதில் வைத்தே, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க சஞ்சய் தத் மனு அளித்திருந்தார்.

மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "இது தவறான முன்னுதாரணத்திற்கு அடிகோலி விடும்" என கூறியது.

முன்னதாக, சஞ்சய் தத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் தேர்தல் களம் கிரிமினல்களின் கூடாரமாகி விடும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.

தற்போதைய மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர்களில் சுமார் 57 பேர் கிரிமினல் குற்றபின்னணி கொண்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிக அதிகபட்சமாக 27 பேர் பாஜக சார்பாக களமிறங்குபவர்களாவர்.

பஞ்சாபில் சாலை விபத்து, 20 புனித யாத்திரிகர் மரணம்!

பஞ்சாப் மாநிலம், அனந்தபூருக்கு அருகில் புனித யாத்திரிகர்கள் பிரயாணம் செய்திருந்த ட்ரக் மறிந்து 20 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர். 65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள நைனா தேவி கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடி விட்டூ ஊர் திரும்பிக் கொண்டிருந்த யாத்திரிகளின் ட்ரக் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபிலுள்ள லூதியானாவிற்கு அருகில் மச்சிவாரா கிராமத்தில் உள்ளவர்கள் ஆவர்.

தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ் மக்கள்

தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ் மக்கள்


உடுமலை, மார்ச் 30: உடுமலை அருகே உள்ள தளிஞ்சி, தளிஞ்சி வயல் பகுதி மழைவாழ் மக்கள், தேர்தல் குறித்த விவரங்களே அறியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் எந்தத் தொகுதியை சேர்ந்தவர்கள், நடைபெற இருக்கும் தேர்தல் மத்திய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா அல்லது மாநில அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா என்ற விவரமே தெரியாமல் உள்ளனர்.

வேட்பாளர்கள், சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் இம்மக்களுக்கு விருப்பம் இல்லை.

"தேர்தல் நாளில் ஓட்டுப்போட யாராவது வந்து அழைத்தால் ஓட்டுப் போடுவோம்; அழைக்காவிட்டால் ஓட்டுப் போடமாட்டோம்.

யார் வெற்றி பெற்றால் என்ன பயன்' என்கின்றனர் இக்கிராம மக்கள்.

தாடியும் பர்தாவும் தாலிபானிசம் - உச்சநீதிமன்றம் அதிரடி!

தாடி வளர்த்துவதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டும் என கோரி மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு கான்வெண்டில் பயிலும் மாணவன் சமர்ப்பித்த வழக்கில், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிச மயமாக்குதலின் பாகம்" என கருத்து கூறிய உச்சநீதி மன்றம், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

மதசார்பற்ற நிலைபாட்டை விசாலமாக்கி இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது எனவும் நீதிமன்றம் கருத்து கூறியது. "நாளை ஒரு பெண் வந்து பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நமக்கு அனுமதிக்க முடியுமா?" என நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பினார்.

தான் ஒரு மதசார்பற்றவன் எனவும் இருப்பினும் மத நம்பிக்கைகளை அடிப்படை உரிமைகளிலிருந்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறினார்.

மத்தியபிரதேசத்திலுள்ள நிர்மலா கான்வெண்டில் மேல் நிலை பிரிவில் பயிலும் முஹம்மது ஸாலிம், "முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளி சட்டத்திட்டத்தினைக் கேள்விக்குட்படுத்தி சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாடி வளர்ப்பது தன்னுடைய மத உரிமை என்றும் மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக்கூடாது எனவும் எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கதல் செய்திருந்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30 ஆம் பிரிவு படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்குவதற்கு அனுமதியுள்ளது என நீதிமன்றம் விளக்கமளித்தது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸாலிம் பயில்வதற்கு வேறு பள்ளியினைத் தேர்வு செய்தூ கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்தவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும் போது, தன்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி அதிகாரிகளின் தெளிவான இரட்டை நிலைபாடு என ஸாலிம் வாதித்த போதிலும் நீதிமன்றம் ஸாலிமின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை

ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை!

திமுக கூட்டணி அறிவிப்பு தொகுதி பங்கீட்டுச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தவித தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திமுக மமக கூறிவந்தன. இந்நிலையில், ம ம க, 2 மக்களவை+1 மாநிலங்களவை என்று கோரிக்கை வைப்பதாகவும், திமுக 1 மக்களவைத் தொகுதிக்கே ஒத்துக்கொண்டுள்ளதால், கூட்டணி மாறுவது பற்றி ம ம க யோசித்து வருகிறது.

இதற்கிடையே,
மனித நேய மக்கள் கட்சியை தங்கள் கூட்டணியில் நீடிக்கவைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தின் சார்பில் அவரது பிரதிநிதிகள் ஜே.எம்.ஆருண் எம்.பி.யும், தொழிலதிபர் பிரசிடென்ட் அபு ஆகியோர் மமக கட்சி நிர்வாகிகளுடன் பேசி

திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடத்தில் இது பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்தும் மனித நேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மனித நேய மக்கள் கட்சி தனது நிலைகுறித்து இன்று இரவு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நால்வரைக் கொலை செய்த வழக்கில் 46 பேருக்கு வாழ் நாள் சிறை!

மேற்கு வங்கத்தில் நான்கு பேரை கொலை செய்த வழக்கில் 46 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


1987ஆம் ஆண்டு பீர்பூம் மாவட்டத்தில் லெனினிய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மூவர் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த 43 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீபக் சாஹா ராய் இந்த தீர்ப்பை அளித்தார்.

1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீர்பூம் மாவட்டத்தில் போல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முலுக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.

மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள் -

மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள்.


கோவையைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் சேர்ந்து 'ஆல்கஹால்' வாடைஇருப்பின் வாகனமே செயலிழந்துபோகும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் .


மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது வாகன ஓட்டுனருக்கு மட்டுமின்றி, எதிரே வரும் வாகனத்தில் அமர்ந்திருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. கோவை நகரில் விபத்தை தடுக்க, காவல்துறை வகுக்கும் வியூகங்கள் எல்லாம் தவிடு பொடியாகிப் போகின்றன. இச்சூழலில், கோவை வழியாம்பாளையத்திலுள்ள எஸ். என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி மாணவர் கீர்த்திவாசன், கோவை அவினாசி ரோட்டிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், ஹரி பிரசாத் ஆகியோர், மதுபானம் அருந்தி, வாகனம் ஓட்டுவதைத் தடுக்க, புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் அனைவரும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பிகரோ 880 ' என்ற நுண்ணுணர்வி (சென்ஸார்), மது நெடியை உணரக்கூடியது. இந்த சென்சாரைக் கொண்டு புதிய சர்க்யூட்டை மூன்று மாணவர்களும் உருவாக்கியுள்ளனர். இந்த சர்க்யூட் காரின் ஸ்டீயரிங்கில் பொருத்தப் படும். சென்ஸார் மட்டும் வெளியில் தெரியும். சாவியைப் போட்டு திருகும் போது இரு இக்னேஷியன்கள் இணைவதால், கார் ஸ்டார்ட் ஆகிறது. இந்த இக்னேஷியனுக்கு நடுவில், "ரிலே' பொருத்தப்படும்.


இது, சென்ஸாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நபர், மதுபானம் அருந்தி கார் சாவியை திருகி ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் போது, சென்ஸார், ஆல்ஹகால் நெடியை உணர்ந்து, ரிலேவை செயல்பட வைக்கும். இதையடுத்து கார் சாவியை எத்தனை முறை திருகினாலும், இக்னேஷியன்கள் இணையவே இணையாது. முற்றிலும் ஆல்ஹகால் நெடி இல்லாமலிருந்தால் மட்டுமே கார் ஸ்டார்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாணவர்களும் இரு ஆய்வுகளையும் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களில் நள்ளிரவு நடக்கும் விபத்துகளுக்கு மது அருந்தி வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்.

மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து, புதிய கார் தயாரிக்கும் போது பயன்படுத்தினால், நிச்சயம் மது அருந்தி கார் ஓட்டுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையக்கூடும்.

மாணவர் கீர்த்திவாசனின் நண்பர், சமீபத்தில் தனது காரில் பாலக்காடு நோக்கி சென்ற போது கார் விபத்துக்குள்ளானதில் பலியானார். எதிரே வந்த வாகனத்தின் விளக்கு வெளிச்சத்தில் தடுமாறியதால், கார் கட்டுப் பாடு இழந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து எதிரே வரும் வாகனத்தின் வெளிச்சத்துக்கு ஏற்ப, காரை ஓட்டும் வகையில் ஒளி விளக்கு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் எனக்கருதிய மூன்று மாணவர்களும், சென்சாரை பயன்படுத்தி "ஆட்டோ டிப்பர்' என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் கண்டுபிடித்த சர்க்யூட் போர்டை, ஒரு காரின் முகப்பு விளக்கு அருகே பொருத்திவிட் டால் போதும். எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கில் இருந்து வெளிவரும் ஒளி அதிகமாக உமிழப்பட்டு (ஹை பீம்), காரின் முகப்பு விளக்கில் படும் போது தானாகவே காரின் விளக் கில் இருந்து ஒளி உமிழ்வது குறைவாக்கப்படும் (லோ பீம்).

எதிரே வரும் வாகனம் கடந்து சென்ற பின், தானாகவே ஹை பீம் முறைக்கு காரின் விளக்கு மாறிக் கொள்ளும். இப்புதிய தொழில்நுட்ப முறையை பல தொழில்நுட்ப கண்காட்சியில் இடம்பெறச் செய்து, மூன்று மாணவர்களும் பரிசுகள் பல பெற்றுள்ளனர்.

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடவில்லை" - கமல்

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிட்டுவிடவில்லை" என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் வந்த அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்

இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.

நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.

எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.

எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.

பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.

பயணிகள் மீதான சந்தேகத்தால் விமானம் தரையிறக்கம்.

இன்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கல்கத்தா நோக்கி ஏர் இந்தியா விமானம் 104 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த 3 பயணிகளின் நடவடிக்கையில் விமான பணிப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால்
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மீண்டும் விமானத்தைத் தரை இறக்க விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வானில் பறந்த விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய அந்த 3 நபர்களிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதும், இம்பால் புறப்பட்டு சென்றதும் தெரிய வந்தது. எனவே, அவர்களை தொடர்ந்து பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது

லாஹூர் போலீஸ் மையம் மீதான தாக்குதலில் தாலிபான்

லாஹூரில் காவலர் பயிற்சி மையம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

6 தீவிரவாதிகளும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். 6 தீவிரவாதிகளில் 2 பேர் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்திகா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் லாகூர் காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்த தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த தாக்குதல் பின்னணியில் தாலிபான் இயக்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் லாகூரில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று தஹ்ரீக் -யே-தாலிபான் இயக்கத் தலைவர் பைத்துல்லா மக்சூத் பொறுப்பேற்றதுடன் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தாலிபான் இயக்கத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தாலிபான்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

தீவிரவாதி கசாப்பின் வக்கீல் அஞ்சலி விலகல்!

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாட மராட்டிய மாநில இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து பெறப்பட்ட 17 வக்கீல்களின் பட்டியலில் இருந்து புனேயைச் சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் அஞ்சலி வாக்மாரே என்பவரையும், அவருக்கு உதவியாக ஜுனியர் வக்கீல் ஒருவரையும் நியமனம் செய்து, செசன்சு நீதிபதி தகில்யானி நேற்று உத்தரவிட்டிருந்தார்.

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் அஞ்சலி வாக்மாரே வீடு முன்பு சிவசேனா தொண்டர்கள் கோஷம் எழுப்பி, அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கசாப்பிற்க்காக வாதிடுவதிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் அஞ்சலி வாக்மாரே தெரிவித்துள்ளார்.

மேற்கு மும்பை தொகுதியில் நடிகை நக்மா போட்டி?

காங்கிரஸ் எம்.பி யும் நடிகருமான கோவிந்தா வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தன் விருப்பமின்மையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகை நக்மாவை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

நடிகர் கோவிந்தா, கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பிஜேபி யின் ராம் நாயக்கை 48,271 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் தேர்தலில் உட்கட்சி பிரச்னை காரணமாக தான் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் கோவிந்தா கடந்த வாரம் கூறியிருந்தார்.


இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே ஆண்டனி கட்சி மேலிடத்திடம் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!