Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியா: பணவீக்கம் மிகவும் குறைந்தது.

இந்தியாவின் வணிகச் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு பணவீக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில் அது வெறும் 0.44 சதவீதம் என்று இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒரே வாரத்தில் 1.99 சதவீதம் குறைந்திருக்கிறது.

கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 7.78 சதவீதமாக இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பண வீக்கம் வெகுவாகக் குறைந்து விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது.

உணவுப்பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் சில உற்பத்தி பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதை அடுத்து ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி கருத்தளிக்கையில் விரைவில் பணவீக்கம் 0% என்ற நிலையை அடையும் என்கின்றனர்.

காங்கிரஸ் 170 தொகுதிகளில் வெல்லும் - கருத்துக்கணிப்பு

பதினைந்தாவது மக்களவையைத் தீர்மானிக்க நடத்தப்படும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. அரசு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 170 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு அதிக இடங்கள் கிடைக்குமென்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவில் 17 இடங்களிலும், மே. வங்கத்தில் காங்கிரஸ் - திரிணாமூல் கூட்டணிக்கு 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில் குஜராத், மராட்டியம், கர்நாடகாவில் காங்கிரசுக்கு குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 30 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சமாஜ்வாடி கட்சிக்கு குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் அதனுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. தற்போது காங்கிரசில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், மராட்டியத்திலும், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி உத்தரபிரதேசத்திலும் குறைந்த தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பும் உள்ளது.

பாரதிய ஜனதாவின் செல்வாக்கு நாளுக்குநாள் சரிந்து வருவதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதற்கு அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசல்களே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் சங்கிலித்தொடர் உணவகங்களின் உரிமையாளர் ராஜகோபால். அண்ணாச்சி என்று அழைக்கப்படுபவர். தன்னிடம் பணிபுரிந்த சென்னை வேளாச்சேரியை சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் மனைவி ஜீவஜோதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதற்காக வழக்கு விசாரணை நடந்து கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்மு‌றையீடு செய்திருந்தார். அந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் பானுமதி, மிஸ்ரா அடங்கிய குழுமம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ளது.

தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மூன்றாம் டெஸ்ட் போட்டி

தென் ஆப்ரிக்காவில் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பந்தடிக்க தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவின் அபாரமான பந்து வீச்சால் 8 விக்கெட்களை இழந்து 205 எடுத்து இருந்தது. அணித்தலைவர், ரிக்கி பான்டிங் மற்றும் உதவி தலைவர் கிளார்க் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி உலக சாதனை புரிந்தனர்.

நியுஜிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா நிதானமான தொடக்கம்.

நியுஜிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை குவித்தது. சச்சின் அபாரமாக ஆடி 70 ரன்களுடனும், யுவராஜ்சிங் 8 ரனகளுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக முதலில் ஆடிய நியுஜிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 279 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தடுமாறிய நியுஜிலாந்து, அணித்தலைவர் வெட்டொரி மற்றும் புதுபுக வீரர் ரைடர் அபாரமான ஆட்டத்தால் 279 ரன்களை எடுத்தது. இருவரும் சதங்களை அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.

முன்னாள் இஸ்ரேலிய அதிபர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றம் அறிவிப்பு


டெல் அவிவ்: முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே கட்சவ் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்நாட்டு அரசு மற்றும் நீதிமன்றம் அவருடன் பதவி விலகுவதற்கு பதிலாக சிறை தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதாக செய்து கொண்ட உடன்படிக்கையை ரத்து செய்துள்ளது.


63 வயது இஸ்ரேலிய அதிபர் தன்னுடன் பணியாற்றி வந்த அலுவலரை கற்பழித்ததாகவும் மற்றும் இரண்டு பணிப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

கட்சவ் தான் மத்திய கிழக்கு பகுதியை சார்ந்தவன் என்பதால் தன்னை சிலர் குறி வைத்து தாக்குவதாக புகார் கூறியிருந்தார்.

அப்பெண்கள் கட்சவ் அதிபராக கடந்த 2007 வரை இருந்த காலத்தில் அவருடன் பனி செய்து வந்தார்கள்.

1998 ல் கட்சவ் ஒரு பெண்ணை தரையில் தள்ளி விட்டு அப்பெண்ணின் பேன்டை உருவி கற்பழித்தார். இரண்டாவதாக அவர் அப்பெண்ணை ஜெருசலேம் ஹோட்டல் ஒன்றுக்கு அலுவல் காரணமாக வரக்கட்டலையிட்டுஅங்கிருந்த அறையில் கற்பழித்தார்.கட்சவ் கோபமுற்ற அப்பெண்ணிடம் நீ நல்ல சுகத்தை அனுபவி என்று கூறி அமைதியாக்கினார்.

௨௦௦௫ ல் அவருடைய 60 வது பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த பெண்ணிடம் பலாத்காரமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின் காரணமாக முன்னதாகவே அவர் பதவி விலகினார்.

நன்றி AP.

9 ஆண்டுகளாக தன் மகளையே வன்புணர்ந்து வந்ததாக தந்தை கைது!

கடந்த 9 ஆண்டுகளாக தன்னுடைய மகளையே வன்புணர்ந்து வந்ததாக 60 வயதுடைய தொழில் அதிபர் ஒருவரை மும்பை மீரா சாலை காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று கைது செய்துள்ளனர். தற்போது 21 வயதாகும் அந்த மகள், தன்னைத் தொடர்ந்து 15 வயதான தன் சகோதரியையும் வன்புணர்ந்ததை அறிந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இந்தப் பெண்களின் தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மந்திரவாதி 2000ஆம் ஆண்டு இந்த தொழில் அதிபர் குடும்பத்திடம், 12 வயதான தன் மகளிடம் தந்தை உடலுறவு கொண்டால் குடும்பத்தின் எதிர்காலம் செழிக்கும், வருமானம் பெருகும் என்று கூறியதை அடுத்து அவர் இச் செயலில் ஈடுபட்டு வந்ததாக மீரா ரோடு காவல் துறையினர் கூறினர். தொடர்ந்து அந்த மந்திரவாதியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் (பெயரை காவல்துறை வெளியிடவில்லை), மீரா - பையாந்தர் சாலையில் உள்ள கோல்டன் நெஸ்ட் வளாகத்தின் பகுதி 1ல் வசித்து வந்ததாகவும், தொழில் அதிபர் அந்தேரியில் வாகனங்களுக்குப் பொருத்தப்படும் ரேடியம் பிளேட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மந்திரவாதி ரத்தோடுடன் இக்குடும்பத்தினருக்கு 20 ஆண்டுகால பழக்கம் உண்டு என்று கூறிய காவல் துறையினர், தன்னுடைய மூத்த மகளை நீண்ட காலம் அவளுடைய தாயின் முன்னிலையிலேயே வன்புணர்ந்ததாகக் கூறி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜோஸ் பிரிட்ஸல் என்பவர் தன்னுடைய மகளை 24 ஆண்டுகளாகப் பூட்டி வைத்து வன்புணர்ந்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து கொண்டுள்ளது. மும்பை நிகழ்வும் ஆஸ்திரேலிய நிகழ்வை ஒத்ததாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பீகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் இணைந்து பீகாரில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை அறிவித்தன. அப்போது காங்கிரசுக்கு இரு கட்சிகளும் மூன்று தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியிருந்தன. இதனால் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி பீகாரில் 26 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடப் போவதாக புதன் கிழமை இரவு அறிவித்தது.

உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இதனைத் தெரிவித்தார். மேலும் உத்திரப் பிரதேசத்திலும் ஏற்கனவே அறிவித்திருந்த 24 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உயர்நீதி மன்ற கலவரம் : காவல் அதிகாரிகள் இடைநீக்கம்!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி வழக்கறிஞர்கள் - காவலர்கள் இடையே நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல் துறை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் ராமசுப்ரமணியம் ஆகியோரை இடை நீக்கம் செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கறிஞர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் பணித்துள்ளது.

மன்னிப்புக் கேட்கப் போவதில்லை - வருண்!

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்களும் வருணின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று வருண் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தான் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறிய அவர், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் தாம் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சமூக அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக இவர் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் செவ்வாய் கிழமை உத்தரவிட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியிடம் இவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு அக்கட்சிக்கும் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

நான் என்னுடைய நம்பிக்கையில் பெருமிதம் அடைகிறேன். இதற்காக எவரிடமும் மன்னிப்புக் கோரப் போவதில்லை. நான் காந்தி, இந்து, இந்தியன். அரசியல் காழ்ப்புணர்வில் நான் பலியாக்கப் பட்டுள்ளேன். நான் பேசியதாக ஒலிபரப்பானவை என் பேச்சுக்கள் அல்ல. அது என் குரலும் அல்ல. சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் நான் எதுவும் பேசவில்லை என்றும் வருண் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அலிபுர்துவார் நகரில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயமுற்றுள்ளனர்.

நகரின் செளபதி என்ற பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே இந்த சைக்கிள் குண்டு வெத்ததாக மேற்கு வங்க வடக்குப் பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் கூறினார். இந்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என்றும் அதன் தன்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இது உல்பா இயக்கத்தினரின் செயலாக இருக்குமா? என்ற கேள்விக்கு உல்பா இயக்கத்தினர் இங்கு ஏன் வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெருமளவிலான வெடிகுண்டுகள் பறிமுதல்

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் பெருமளவிலான வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தைக் காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று பறிமுதல் செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலை சீர் குலைக்கும் வகையில் இந்த குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கக் கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் அனுமானித்துக் கூறினர்.

ஜஷ்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த லோடம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் அமோனியம் நிட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், கன்னி வெடி தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் என சுமார் 5000 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

12போர் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தப் படும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் 17, 750 மற்றும் 9 மிமி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் சுமார் 1,550 போன்றவையும் இந்த வாகனத்தில் இருந்து கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது. காவலர்களைக் கண்டதும், இந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பீகாரிலிருந்து இந்த வாகனம் வந்ததாகவும், அரிசி மற்றும் உணவுப் பொருட்களுக்கு அடியில் இந்த ஆயுதங்களைப் பதுக்கி எடுத்து வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாலுவின் மைத்துனர் காங்கிரசில் இணைந்தார்

ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.

"நான் காங்கிரசில் இணைவதற்காக இங்கு வந்துள்ளேன். அவர்களுக்கு (ராஷ்டிரீய ஜனதா தளத்தினருக்கு) என்னுடைய அனுதாபங்களை கூறிவிட்டேன். கண்டிப்பாக நான் தேர்தலில் போட்டியிடுவேன். எங்கு, எப்படி என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் இக்பால் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சாது யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வானிடம் லாலு பிரசாத் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

சாது யாதவ் தற்போது கோபால்கன்ஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழகம்: பிஜேபியுடன் சரத்குமார், கார்த்திக் கட்சிகள்

தமிழ்நாட்டில் பாஜகவுடன் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. விஜயகாந்தின் தேமுதிக வை தனது அணியில் சேர்க்க பாஜக எடுத்து வரும் முயற்சிக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

இதையடுத்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக் தலைமையில் இயங்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி போன்றவற்றுடன் பாஜக கூட்டணி சேர முயற்சி நடந்ததாகவும் இதற்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது.சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை இடம், வேட்பாளர்கள் யார் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.இது போல கார்த்திக்கும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடலோரப்பாதுகாப்பு: அமெரிக்கவிமானம் வாங்குகிறது இந்தியா

மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை முன்னிட்டு கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய அரசு முடிவு செய்திருந்தது.இதற்காக நவீன ரோந்து விமானங்களையும், கப்பல்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் 'போயிங்கோ பி-81' விமானத்தை வாங்க முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்க நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியா மொத்தம் 8 விமானங்களை வாங்குகிறது. இவற்றின் மொத்த விலை ரூ. 10 ஆயிரம் கோடி. இதே போல ரோந்து படகுகளையும் பல்வேறு நாடுகளிலிருந்து வாங்க திட்டமுள்ளதாம்

'மூன்றாவது அணியில் சேர மாட்டோம்' - சமாஜ்வாதி

மூன்றாவது அணியில் இருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் வெளியேறினாலும் சமாஜ்வாதி கட்சி இணைய வாய்ப்பில்லை என்று சமாஜ் வாதி பொதுச்செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.

அமர்சிங் நிருபர்களின் கேள்விக்குயொன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தனிப்பட்ட மற்றும் அரசியல் வேறுபாடு அறிந்தவர். அவர் பொதுச் செயலராக இருந்திருந்தால், மூன்றாவது முன்னணியில் சேர்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும்" என்றார் அமர்சிங். "ஆனால்,பிரகாஷ் காரத்தின் ஆதிக்கத்தின் கீழ் மூன்றாவது அணியில் சேர விரும்பவில்லை"

"காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னையால் கூட்டணி ஏற்படவில்லை என்றாலும், அக்கட்சியுடன் சில கொள்கை உடன்பாடு நிலவுகிறது.அத்வானி, மாயாவதி மன்மோகன் சிங் என்று பார்த்தால், பிரதமருக்கான சிறந்த தேர்வாக மன்மோகன் சிங்கையே கருதுகிறோம்" - இவ்வாறு அமர்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து பேசிய பாஜகவின் ஃபிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. மட்டுமின்றி, குற்ற வழக்கும் அவருக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது.

பேச்சு குறித்த ஒலிநாடாக்களைக் கோரியுள்ள தேர்தல் ஆணையம், வரும் செவ்வாயன்று இப்பிரசினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

அரசியல் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் "தெளிவாக,இப்பேச்சுகள் சட்ட மீறலாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தான் சமூக வெறுப்புணர்வைத் தூண்டுமாறு பேசவில்லை என்றும், அவை திரிக்கப்பட்டுள்ளதாகவும் வருண்காந்தி தெரிவித்துள்ளார்.

மத உணர்வுகளைப் புண்படுத்துவது கட்சியின் கலாச்சாரம் இல்லை - பா.ஜ.க.

மத உணர்வுகளைப் புண்படுத்துவது பாரதீய ஜனதா கட்சியின் கலாச்சாரம் இல்லை என்றும், தங்களது கட்சியின் வேட்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் பேசிய பேச்சின் விளைவால் எழுந்துள்ள விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் வருண், அங்கு நடந்த கூட்டமொன்றில் பேசிய போது, (தமது கையை உயர்த்தி) 'இது "கை" (காங்கிரசின் சின்னம்) இல்லை. தாமரையின் (பா.ஜ.க. சின்னம்) சக்தி. இது முஸ்லிம்களின் தலையை வெட்டும். ஜெய் ஸ்ரீராம்' என்று குறிப்பிட்டார்.

மற்றொரு கூட்டத்தில் பேசிய வருண், "எவரேனும் இந்துக்களுக்கு எதிராக கையை நீட்டினால் அல்லது இந்துக்கள் பலவீனமானவர்கள், தலைமை இல்லாதவர்கள் என்று எவரேனும் எண்ணினால், எவரேனும் இந்துக்களுக்கு எதிராக கையை உயர்த்தினால், பகவத் கீதை மீது ஆணையாக அந்த கையை நான் வெட்டுவேன்" என்றும் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஷ்டிரிய ஜனதா தளம் - லோக் ஜன சக்தி தொகுதி உடன்பாடு

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும் லோக்ஜனசக்தி கட்சிக்கும் இடைய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா கட்சி 25 தொகுதிகளிலும், லோக்ஜனசக்தி கட்சி 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்றார். மேலும் பேசிய அவர் பாஜக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம் என்றார்.

2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி கட்சி 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டது குறிப்பிடத் தக்கது.

கட்சிக்கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் ஜெட்லி

பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் அருண்ஜெட்லி. இன்று பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் டில்லியில் கூடி ஆந்திரா, குஜராத், டில்லி மற்றும் உ.பி., மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் ராஜ்நாத்சிங் தலைமையில் ந‌டந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை அருண்ஜெட்லி புறக்கணித்தார். மார்ச் 13ம் தேதி நடந்த கூட்டத்தையும் ஜெட்லி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்‌தக்கது.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும் அருண் ஜெட்லிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் அதிகரித்து வருவதையே இது குறிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னதாக அருண் ஜெட்லியைச் சந்தித்து சமாதானம் ஏற்படுத்த முயன்ற பா.ஜ.க. தலைவர்களை அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாயின. பாரதீய ஜனதா கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க ஆர். எஸ். எஸ். அமைப்பும் முயற்சிகளை மேற்கெண்டு வருகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!