Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மாவோவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி.

Published on: வெள்ளி, 24 மே, 2013 // , , , , ,
பீகாரில் மாவோவாதிகளின் செல்வாக்கு அதிகமுள்ள பாட்னாவுக்கு அருகிலுள்ள பகுதியில் 100க்கு மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையம் மீது நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். பாட்னாவிலிருந்து 80 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதே பகுதியில் கடந்த வாரம் மாவோவாதிகளின் துப்பாக்கி சூடில் 15 போலீசார் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தாக்குதல் விசாரனை : 109 சாட்சிகளை விசாரிக்க வேண்டும்

மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரனையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் கூறினார். அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிபுனர்கள் உள்பட பலரும் இதில் அடங்குவர்.

இந்த வழக்கில் மொத்தம் 1820 சாட்சியாளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர் என்றும் ஆனால் அவர்களில் 109 பேரிடம் மட்டும் விசாரனை மேற்கொள்ள வேண்டும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறினார்.

கசாப் பஹீம் அன்சாரி மற்றும் சபாதீன் அகமது ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதற்கான காவல்துறை திரட்டிய வரைகலை ஆதாரத்தை நிகாம் சமர்ப்பித்தார். தீவிரவாதிகள் பயன்படுத்திய GPS கருவிகள் ஐந்து கைப்பற்றப் பட்டதாகவும் அவர் கூறினார்.

வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் 11பேர் பலி!

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். இவர்களில் 9 பேர் காவல்துறையினர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தின் லேடேஹர் மாவட்டத்தில் கன்னிவெடிகளை வெடிக்கச் செய்தபோது, வாக்குச்சாவடியின் பாதுகாப்புக்காக அவ்வழியே சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சார்ந்த 7 பேர் கொல்லப் பட்டனர். அவர்கள் சென்ற வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளரும் இதில் கொல்லப் பட்டனர்.

பீகாரில் கயா மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடி மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு காவலர்கள் கொல்லப் பட்டனர்.

ஒரிசாவில் மல்கான்கிரி மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் வாக்கு இயந்திரத்தையும் ஒரு வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

அசாமில் குண்டு வெடித்து நால்வர் பலி!

கவுஹாத்தியில் இன்று குண்டு வெடித்து நான்கு பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் காயமுற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இதற்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இது உல்பா இயக்ததைச் சார்ந்தவர்களின் வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நியூயார்க்கில் துப்பாக்கியால் சுட்டு நால்வர் பலி!

இன்று நியூயார்கில் உள்ள பிரிங்ஹாம்டன் எனும் இடத்தில் ஒரு கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானதாகவும் 12 பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்தக் கட்டிடத்தில் அமெரிக்க குடியுரிமை வழங்கல் அலுவலகம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்திற்குள் புகுந்த ஒருவன் இன்று காலை (உள்ளூர் நேரம்) 10.30 மணிக்கு துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமுற்றுள்ளனர். மேலும் அந்தக் கட்டிடத்தில் இருந்த 41 பேரை பிணைக் கைதிகளாக அவன் பிடித்து வைத்துள்ளான்.

அந்தப் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் எப்.பி.ஐ. இறங்கியுள்ளது. அவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

லாஹூர் போலீஸ் மையம் மீதான தாக்குதலில் தாலிபான்

லாஹூரில் காவலர் பயிற்சி மையம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

6 தீவிரவாதிகளும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். 6 தீவிரவாதிகளில் 2 பேர் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்திகா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் லாகூர் காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்த தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த தாக்குதல் பின்னணியில் தாலிபான் இயக்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் லாகூரில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று தஹ்ரீக் -யே-தாலிபான் இயக்கத் தலைவர் பைத்துல்லா மக்சூத் பொறுப்பேற்றதுடன் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தாலிபான் இயக்கத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தாலிபான்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கசாபுக்கு அரசு வழக்குரைஞர் - ஏப்ரல் 6 முதல் விசாரணை துவக்கம்

Published on: திங்கள், 30 மார்ச், 2009 // , , , , , ,
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது கைது செய்யப் பட்ட பாகிஸ்தானைச் சார்ந்த அஜ்மல் அமீர் கசாபுக்கு நீதிமன்றம் அரசு வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது.

மகராஷ்டிரா சட்ட உதவிக் குழுவில் உள்ள வழக்குரைஞர் அஞ்சலி வக்மரேவை இந்த வழக்கின் போது கசாபின் சார்பில் வாதிட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகில்யானி நியமனம் செய்து இன்று அறிவித்தார்.

மேலும் லஷ்கரே தொய்பாவைச் சார்ந்த பஹீம் அன்சாரி மற்றும் சகாபுதீன் முகமது ஆகியோர் தங்களுடைய வழக்குரைஞர் குறித்து உடன் முடிவெடுக்குமாறும் நீதிபதி வலியுறுத்தினார்.

பாகிஸ்தானில் காவல் பயிற்சி மையம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!

இன்று காலை பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள காவல் பயிற்சி மையத்தின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில்ல 9 பேர் பலியானார்கள். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

850 பயிற்சி பெற்று வரும் இப்பள்ளியில் தாக்குதல் நடந்த போது சுமார் 400 பேர் இந்த மையத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 குண்டுகள் வெடித்ததாகவும், துப்பாக்கிச் சூடும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினரைப் போல் உடையணிந்து வந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய தீவிரவாதத் தாக்குதல் இந்நேரம் வரை தொடர்ந்து வருகிறது.

ஒரிசாவில் குண்டு வெடித்து 4 பேர் பலி!

ஒரிசாவில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து 4 பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் காயமுற்றனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பெர்ஹாம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புருஷோத்தம்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் இன்று காலை 2 மணி அளவில் இந்த குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

அசாமில் பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்டார்

Published on: புதன், 25 மார்ச், 2009 // , , , , , , ,
"அஜி" என்ற அசாமிய பத்திரிகையின் தலைமைய ஆசிரியரான அனில் மஜூம்தார் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய் கிழமை இரவு 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அசாமியத் தலைநகர் கெளஹாத்தியில் ராஜ்கர் சாலையில் உள்ள அவரது வீட்டினருகே இளைஞர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி வீட்டின் வாயிற்கதவைத் திறக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத 7 பேர் அவரைத் தாக்கியதாகவும் பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் இருவர் கைது

Published on: ஞாயிறு, 22 மார்ச், 2009 // , , , , ,
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கிருஷ்ணகிரி காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல் துறையினர் கூறுகையில், கிருஷ்ணகிரி பெரியகல்லுபள்ளி வனப்பகுதி அருகே காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது வனப்பகுதிக்குள் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்த தேவராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி நரசிம்மாச்சாரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமிருந்தும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கஷ்மீரில் மூன்று கொரில்லாக்கள் கொல்லப் பட்டனர்

Published on: வெள்ளி, 20 மார்ச், 2009 // , , , , ,
கஷ்மீரில் தனி நாடு கேட்டுப் போராடும் இயக்கங்களைச் சேர்ந்த மூன்று கொரில்லாக்கள் இன்று கொல்லப் பட்டனர். கஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செளகிபல் அருகே உள்ள ரங்வர் என்னும் வனப் பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இவர்கள் கொல்லப் பட்டனர்.

இன்று நடந்த தேடுதலின்போது வனத்தைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் நடந்த துப்பாக்கிச் சன்டையில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரார் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

4 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் இடை நீக்கம்!

கஷ்மீரில் போலி என்கவுண்டர் மூலம் தச்சர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் படையைச் சார்ந்த ஒரு துணை கமாண்டோ மற்றும் மூன்று காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புல்வாமா மாவட்டத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமையன்று 35 வயதுடைய குலாம் முகைதீன் என்பவரை அவரது வீட்டில் மத்திய ரிசர்வ் படையின் 181 படைப்பிரிவினர் சுட்டுக் கொன்றனர். கடந்த ஒரு மாதத்தில் பொதுமக்கள் படையினரால் கொல்லப்படுவது இது மூன்றாவது நிகழ்வாகும்.

மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அலிபுர்துவார் நகரில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயமுற்றுள்ளனர்.

நகரின் செளபதி என்ற பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே இந்த சைக்கிள் குண்டு வெத்ததாக மேற்கு வங்க வடக்குப் பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் கூறினார். இந்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என்றும் அதன் தன்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இது உல்பா இயக்கத்தினரின் செயலாக இருக்குமா? என்ற கேள்விக்கு உல்பா இயக்கத்தினர் இங்கு ஏன் வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெருமளவிலான வெடிகுண்டுகள் பறிமுதல்

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் பெருமளவிலான வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தைக் காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று பறிமுதல் செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலை சீர் குலைக்கும் வகையில் இந்த குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கக் கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் அனுமானித்துக் கூறினர்.

ஜஷ்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த லோடம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் அமோனியம் நிட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், கன்னி வெடி தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் என சுமார் 5000 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

12போர் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தப் படும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் 17, 750 மற்றும் 9 மிமி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் சுமார் 1,550 போன்றவையும் இந்த வாகனத்தில் இருந்து கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது. காவலர்களைக் கண்டதும், இந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பீகாரிலிருந்து இந்த வாகனம் வந்ததாகவும், அரிசி மற்றும் உணவுப் பொருட்களுக்கு அடியில் இந்த ஆயுதங்களைப் பதுக்கி எடுத்து வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர் பலி

Published on: வியாழன், 12 மார்ச், 2009 // , , , , ,
ஜெர்மனியில் 17 வயது மாணவன் ஒருவன் தன்னுடைய பழைய பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் சென்று 15 பேரைச் சுட்டுக் கொன்றான். இச்சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிம் க்ரெட்ஸ்மர் என்ற அந்த மாணவன் தான் முன்பு பயின்ற ஆல்பர்வில்லே மேல்நிலைப் பள்ளிக்கு புதன் கிழமை காலை 9.30 மணிக்குச் சென்றான். பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் தலையைக் குறிவைத்துச் சுட்டான். இதில் எட்டுச் சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மாணவன் காவல்துறைக்குத் தகவல் தந்ததை ஒட்டி காவலர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற அவன் வழியில் ஒருவரைக் கொன்று விட்டு, வழியிலிருந்த ஒரு காரைக் கடத்திச் சென்றான். அந்த காரின் டிரைவரை பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டான்.

பள்ளியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வென்டிங்கன் என்னும் ஊருக்கு வந்தான். அங்கு தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் இருந்த கார் விற்பனை நிலையத்தில் இருவரைக் கொலை செய்தான். காவலர்கள் அவனைச் சுற்றி வளைத்து அவனது காலை நோக்கிச் சுட்டனர். கீழே விழுந்த அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணமடைந்ததாகக் காவல்துறை கூறுகிறது.

அந்த மாணவனின் வீட்டைச் சோதனையிட்டதில் அவனது வீட்டில் சமார் 16 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் மாணவர்கள் பள்ளிகளில் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு மாணவன் 11 பேரை சுட்டுக் கொன்றான். 2002ஆம் ஆண்டில் பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் 17பேரைச் சுட்டுக் கொன்றான்.

இலங்கை: மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்

Published on: செவ்வாய், 10 மார்ச், 2009 // , , , , ,
இலங்கையில் மட்டாரா என்னுமிடத்தில் மசூதி அருகே மிலாடி நபி விழா கொண்டாடப்பட்ட போது தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தபால் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் மஹிந்தா விஜயசேகராவுடன் 3 அமைச்சர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்,15 பேர் பலியாகியுள்ளனர்.தாக்குதலில் தெற்கு பிராந்திய முதல்வர் ஸ்ரீசேனாவும் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும் அமைச்சர்களை குறிவைத்தே இத்தாக்குதலை விடுதலைப்புலிகள் நிகழ்த்தியுள்ளதாக இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்

பிரக்யா சிங் தாக்கூரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - நீதிமன்றம்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூரைத் தேவையெனில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் வழங்கப்பட்டும் உணவை உட்கொண்டதால் பிரக்யா சிங் தாக்கூருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் சமர்ப்பித்த புகாரின் மீது விசாரணை நடத்திய நீதிபதி வை.டி. ஷிண்டா, அவரின் உடல்நிலை கெட்டுள்ளது எனில் அவரை அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க வேண்டும் என சிறைதுறைக்கு உத்தரவிட்டார்.

20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும்

Published on: புதன், 18 பிப்ரவரி, 2009 // , , ,
11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இவ்வாறு கூறியுள்ளார்.

அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. தீவிவாதிகளின் தாக்குதலை முறியடித்தல் மற்றும் அவசர கால காட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மையங்களில் அந்தந்த மாநில காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

முக்கிய மாவோ தலைவர் சரண்டர்

Published on: திங்கள், 16 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
தடைசெய்யப்பட்ட மாவோ கம்யூனிஸ்டின் ஆந்திர மாநில முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாம்பசிவடு காவல்துறையிடம் சரணடைந்தார்.

கடந்த ஒரு வருடமாகத் தேடப்பட்டு வந்த அவர் நேற்று ஆந்தி மாநில காவல்துறை தலைமையகத்தில் காவல் துறை உயர் அதிகாரி முன் சரணடைந்ததாகத் தகவல் கூறுகின்றன. இந்த தகவலை ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி உறுதி செய்தார். இதுகுறித்து மேலதிக தகவல் தர அவர் மறுத்துவிட்டார்.

கொனாகுரி அய்லையா என்ற இயற்பெயருடை சாம்பசிவடு, 2003 ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப் பட்டிருந்தது.

தெலுங்கானா பகுதியின் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2006 ஆம் ஆண்டு மாவோ தலைவராக இருந்த மாதவ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அந்த இயக்கதின் முக்கியத் தலைவராய் உயர்ந்தார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!