Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்திய தபால் துறை ஆண்டுக்கு ரூ.500 கோடி நஷ்டத்தில்!

இந்திய தபால் தந்தி துறை ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மக்களுக்கு 26 விதமான சேவைகளை வழங்கிவரும் இத்துறையில் 20 சேவைகள் அரசின் மானிய உதவியாலே வழங்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2005-06ம் ஆண்டு 1,200 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், 2007-08ம் ஆண்டு 1,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தனியார் கூரியர் நிறுவனங்கள் பற்றியும் அவைகளின் வருமானம் பற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லையென்றும், தபால் துறையின் வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஒசாமா வாழ்விடம்: அமெரிக்கப் பேராசிரியர்கள் தகவல்

ஒசாமா பின் லாதன் எங்கு மறைந்திருக்கக் கூடும் என்பதை அமெரிக்க புவியியல் துறை பேராசிரியர்கள் தாமஸ் கில்லெஸ்பி மற்றும் ஜான் அக்னியு ஆகியோர் செயற்கைக் கோள் புகைப்படங்கள், புவியியல் முறைகள் மூலம், தர்க்க ரீதியாக கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் ஆய்வின் படி, பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதியில் உள்ள பராசினார் நகரில் உள்ள மலைகளில், ஒசாமா ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில், 19 கி.மீ., தொலைவில் பராசினார் நகரம் இருக்கிறது. இந்நகரில் மூன்று சுற்றுச்சுவர்கள் கொண்ட வளாகத்தில் ஒசாமா பின் லாடன் தங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இந்த கண்டுபிடிப்பு அறிவியல் பூர்வமானது. ஒசாமா இடம் மாறினால், அமெரிக்க உளவுத்துறையின் புதிய தகவல்களின் அடிப்படையில், மறைவிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிடலாம், என்று இப்பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தனது மறைவிடத்தில் மின்சார வசதி, பாதுகாப்பு, தனிப்பட்ட வாழ்வுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் மிகக் குறைந்த மெய்க்காவலர்களுடன் ஒசாமா இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது


2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பாந்தட்டப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனை தொடங்கப் பட்டுள்ளது.

64 ஆட்டங்கள் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைப் போட்டிகளைக் காண சுமார் 30 இலட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முதல்கட்ட விற்பனையில் நுழைவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஏப்ரல் மாதம் குலுக்கல் முறையில் சிலர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

குறைந்த கட்டணமுள்ள சுமார் 4,50,000 சீட்டுகள் தென் ஆப்பிரிக்கர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,20,000 சீட்டுகள் விளையாட்டு மைதான உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

தென் ஆப்பிரிக்கர்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ள குறைந்த கட்டண சீட்டுகளின் விலை 20 டாலர் எனவும், இறுதி ஆட்ட நுழைவுச் சீட்டின் விலை 900 டாலர் எனவும் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் உலகக் கோப்பை போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவின் 9 நகரங்களில் உள்ள 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மைதானங்களை விரிவுபடுத்தும் பணி, விமான நிலையங்கள் விரிவாக்கப் பணி என்று அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

சரணடைய ஊர்வலமாக வந்த சீமான் கைது!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீமான் பேசினார் என்று காங்கிரஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுவை காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய தனிப்படைப் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் அவர்களிடம் பிடிபடாமல் ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்களில் சீமான் பங்கேற்றுப் பேசி வந்தார்.

நேற்று முன்தினம் நெல்லையில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், காலவர்களிடம் அகப்படாமல் தப்பித்தார். கடந்த இரு தினங்களாக காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.

சில பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் தான் சரணடையவில்லை என்றும், நீதிமன்றத்தில் நானே சரணடைவேன் என்றும் நேற்று சீமான் கூறியிருந்தார்.

இதற்கிடையே காங்கிரசார் இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பியதால், சீமானைப் பிடிக்க 5 தனிப்படைப் போலீஸார் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

இந்நிலையில் இன்று நெல்லையில் நீதிமன்றத்தில் சீமான் சரணடையச் சென்றார்.

அப்போது அவரை காவலர்கள் வழிமறித்துக் கைது செய்தனர். பின்னர் நெல்லை மாநகர காவல் ஆணாயர் முன்பாக சீமான் சரணடைந்ததாக அறிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சீமான் பின்னர் பாண்டிச்சேரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படக் கூடும்.

முன்னதாக முன்ஜாமீன் கேட்டு சீமான் பதிவு செய்திருந்த வழக்கின் விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இரயில்வேயில் 1,70,000 பணியிடங்கள் காலி!

இந்திய இரயில்வேயில் 1, 70, 000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக வியாழக் கிழமையன்று அரசு அறிவித்துள்ளது.

நாடாளு மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கையில் மத்திய இரயில்வே இணை அமைச்சர் வேலு இதனைத் தெரிவித்தார். இவற்றில் 32,600 பதவிகள் எஸ். சி., எஸ்.டி., மற்றும் பிற்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் என்றும் அவர் கூறினார்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்றும் பொதுவான இடங்களுக்கும் பணி நியமனங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில இடங்களுக்குத் திறமையான நபர்கள் கிடைக்கவில்லை என்றும், மேலும் சில இடங்கள் பணி உயர்வு வழங்கப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதம் ஐ.நா.வின் கட்டுபாட்டில் : பா.ஜ.க. கோரிக்கை

பாகிஸ்தானிய அரசு பல்வேறு வகைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் கேந்திரமாகவும் விளங்குகிறது. எனவே பாகிஸ்தானின் அனு ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை உடனே தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தாலிபான், அல்கைதா போன்ற தீவிரவாதிகளின் கைகளில் சென்றுவிட வாய்ப்பு இருப்பதால், பாகிஸ்தானின் அணு ஆயதங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுமைக்குமே அச்சுறுத்தல் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலத்தில் ஷரீயத் சட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பது தாலிபான்களிடம் அரசு சரணடைந்திருப்பதையே காட்டுகிறது என்று கூறிய அவர், பாகிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வாய்ப்புகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சருக்கெதிரான விசாரணையை மேற்கொள்ள குஜராத் நீதிபதி மறுப்பு!

குஜராத் மாநில அமைச்சர் மாயா கொடானி மற்றும் விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெயதீப் பட்டேல் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு தொடர்ந்த வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன். வேறொரு நீதிபதி விசாரிப்பார் என்றும் விசாரணை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதி ஆனந்த் தவே இதற்காக காரணத்தைக் கூறவில்லை.


முன்னதாக மாநகர அமர்வு நீதிமன்ற நீதிபதி அஷ்வனி, மாநில கல்வித்துறை அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத்தலைவருக்கும் முன்ஜாமீன் இந்த மாதம் 5ஆம் தேதி அளித்தார்.

குஜராத் கலவரம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து. இதுகுறித்த விசாரணைக்கு நேரில் வருமாறு மாநில அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத் தலைவருக்கம் சிறப்பு விசாரணைக் குழு பலமுறை அறிவிக்கை அனுப்பியும் இருவரும் ஆஜராகாமல் இருந்தனர். இவர்கள் இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

16 மாத குழந்தையைக் கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!

தன்னுடைய 16 மாத வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு டெல்லி மாநகரநீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

2004ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடந்த இந்த கொடூர செயலைச் செய்த 40 வயதான ஓம் பிரகாஷுக்கு டெல்லி மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அலோக் அகர்வால் ஆயுள் தண்டனையும் ரூ. 2000 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஓம் பிரகாஷ் சாராய பாட்டிலைக் குழந்தையின் தலையில் அடித்துப் பின்னர் குழந்தையைச் சுவற்றின் மீது தூக்கி வீசி கொலை செய்ததாக அவரது மனைவி கீதா புகார் அளித்திருந்தார்.

கீதா கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த அவனது கணவன் கீதாவைக் கண்டித்ததாகவும், பின்னர் இருவருக்கும் சன்டை ஏற்பட்டு இச்சம்பவம் நடந்ததாகக் கூறிய பிரகாஷின் வழக்கறிஞர், அவர் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை என்று வாதிட்டார்.

ஹோலேகாஸ்டை மறுக்கும் பாதிரியார் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற உத்தரவு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பிவரும் பாதிரியார் ரிச்சர்ட் வில்லியம்சன் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற அர்ஜென்டினா அரசு உத்தரவிட்டுள்ளது.

அர்ஜென்டினா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பத்து நாட்களுக்குள் அவர் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக 1988ஆம் ஆண்டு திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இவரையும் மேலும் மூன்று பாதிரியார்களையும் மீண்டும் திருச்சபையுடன் இணைத்து கடந்தமாதம் போப் உத்தரவிட்டிருந்தார். போப்பின் இந்த முடிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து பாதிரியார் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வாட்டிகன் கூறியிருந்தது.

சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியேற்றம்

உயர்நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்ற மோதல் தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அவையிலிருந்து ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து, சென்னை உயர்நீதி மன்ற மோதல் விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், தமிழக சட்டசபையில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது . சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விவாதிக்க வேண்டும் எனவும், அதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் , பா.ம.க., ம.தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சியினர் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. சபாநாயகர் குழப்பம் விளைவிப்பவர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். அமளி காரணமாக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பா.ம.க., கட்சியினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளியில் நின்று தி.மு.க., அரசு கலைக்கப்பட வேண்டும் எனவும், தாக்குதல் சம்பவத்துக்கு அரசு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள். வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வரலாறு காணாத கொடூர சம்பவம் எனவும் கூறினார்கள் .
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!