Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஏமாற்றும் கல்வி நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் யோசனை!

Published on: திங்கள், 16 பிப்ரவரி, 2009 // , , , , ,
பீகாரில் புத்தா மிஷன் பல் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை என்ற நிறுவனமொன்று பல்மருத்துவப் படிப்புக்காக விளம்பரம் செய்தது. அதில் தங்களது கல்லூரி மகத் பல்கலைக்கழக இணைப்பு பெற்றுள்ளதாகவும், இந்திய பல்மருத்துவக் குழுமம் (Indian Dental Council) அக்கல்லூரி படிப்புகளை அங்கிகரித்திருப்பதாகவும் கூறியிருந்தது. அதை நம்பி ஏராளமானவர்கள் அக்கல்லூரியில் சேர்ந்தனர்.

கல்லூரியினர் பொய்யான விளம்பரம் செய்து தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டதாக பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

மாணவர்களை கல்லூரிநிர்வாகம் ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டதால் அக்கல்லூரி நிர்வாகம் தலா இரண்டு இலட்சம் வீதம் 22 இலட்சம் அபராதம் வழங்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாணவர்களை கல்வியின் பெயரால் ஏமாற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் நலவழக்கு தொடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.

நடுக்கடலில் அணுஆயுத நீர்மூழ்கிகள் மோதல்

பிரிட்டன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோதிக் கொண்ட செய்தி வெளியாகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த எச் எம் எஸ் வேன்கார்டு என்ற அணு ஆயுத நீர்மூழ்கியும், பிரான்சைச் சேர்ந்த லா டிரையம்ஃபண்ட் என்ற இன்னொரு அணு ஆயுத நீர்மூழ்கியும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கடியில் இம்மாதத் தொடக்கத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மிகக் கடுமையான அளவில் கடலுக்கடியிலேயே மோதிக் கொண்டதாக இவ்விரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்புகள் தெரிவித்துள்ளன.

கடலுக்கடியிலிருந்து வரும் தாக்குதல்களைச் சமாளிக்க இவை பயன்படுத்தப் படுவதாக அச்செய்திக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இவ்விரு நீர்மூழ்கிகளும் பெருமளவு அணு ஆயுதங்களுடன் நிரப்பட்டிருந்ததாகவும், பெரும் சேதங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் இச்செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சோனார் போன்ற அதிநவீனப் புலனறியும் கருவிகள் பொருத்தப் பட்டிருந்த போதிலும் இவ்வகை மோதல் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு இரு அரசுகளும் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த மோதலால் அட்லாண்டிக் கடலின் கடும் சுற்றுப்புறச் சீர்கேடு நடந்திருக்கும் என அஞ்சுவதாக அணு ஆயுதங்களுக்கு எதிரான தன்னார்வு நிறுவனம் CND (Campain for Nuclear Disarmament) கவலை தெரிவித்துள்ளது. சேதத்தின் உண்மையான விபரங்களை வெளியிடுமாறு பிரிட்டன், பிரான்சு அரசுகளை அவ்வமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய மாவோ தலைவர் சரண்டர்

தடைசெய்யப்பட்ட மாவோ கம்யூனிஸ்டின் ஆந்திர மாநில முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாம்பசிவடு காவல்துறையிடம் சரணடைந்தார்.

கடந்த ஒரு வருடமாகத் தேடப்பட்டு வந்த அவர் நேற்று ஆந்தி மாநில காவல்துறை தலைமையகத்தில் காவல் துறை உயர் அதிகாரி முன் சரணடைந்ததாகத் தகவல் கூறுகின்றன. இந்த தகவலை ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி உறுதி செய்தார். இதுகுறித்து மேலதிக தகவல் தர அவர் மறுத்துவிட்டார்.

கொனாகுரி அய்லையா என்ற இயற்பெயருடை சாம்பசிவடு, 2003 ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப் பட்டிருந்தது.

தெலுங்கானா பகுதியின் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2006 ஆம் ஆண்டு மாவோ தலைவராக இருந்த மாதவ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அந்த இயக்கதின் முக்கியத் தலைவராய் உயர்ந்தார்.

இந்தியா: நிதிநிலை அறிக்கை - ஒரு பார்வை

2008-09ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ. 9,09,053 கோடி

-பட்ஜெட் மதிப்பீட்டை விட வரிகள் மூலமான வருவாய் ரூ. 60,000 கோடி குறைவு

-மானியங்களுக்கு ரூ. 95,500 கோடி ஒதுக்கீடு

-கிராப்புற சுகாதார திட்டத்துக்கு ரூ. 1,200 கூடுதல் நிதி

-ரூ. 40,000 கோடிக்கு வரிச் சலுகைகள்

-உணவு, உரம், பெட்ரோலியம் மீதான மானியம் அதிகரிப்பு

-குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு ரூ. 8,300 கோடி

- குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 7,400 கோடி

- 2009-10ல் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,41,703 கோடி ஒதுக்கீடு

- விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி

- நிதி பற்றாக்குறை 6 சதவீதமாக இருக்கும்

- ஏற்றுமதியாளர்களுக்கு 2 சதவீத வரி சலுகை

- 2009-10ல் பாரத் நிர்மாண் திட்டத்துக்கு ரூ. 40,900 கோடி

- வருவாய் பற்றாக்குறை 4.4% ஆக இருக்கும்

- குழந்தைகள் நல திட்டங்களுக்கு ரூ. 6,705 கோடி

- ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ. 11,842 கோடி

- மத்திய திட்ட ஒதுக்கீடு ரூ. 2,82,957 கோடி

- 2008ல் சிறுபான்மையினர் நலனுக்கு 15 சிறப்பு திட்டங்கள்

- 2009ல் வரியல்லாத வருவாய் ரூ. 96,208 கோடியாக இருக்கும்

- ஐடிஐகளில் சேர இளம் விதவைகளுக்கு முன்னுரிமை

-கிராப்புற வங்கிகளுக்கு ரூ. 652 கோடி ஒதுக்கீடு

- 2003-2008 இடையே பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ. 10,81,000 கோடியாக உயர்வு. இது 81% வளர்ச்சி.

- கிராப்புற வங்கிகளுக்கு ரூ. 621 கோடி ஒதுக்கீடு

- 2009-10ல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் 2 புதிய ஐஐடிக்கள்

- கோதுமைக்கான குறைந்தபட்ச விலை ரூ. 1080

- ஊரக வேலைவாய்ப்பு திட்டங்கள் மேலும் விரிவாக்கப்படும்

- விவசாயக் கடன் ரூ. 2,50,000 கோடியாக அதிகரிப்பு

- பொருளாதார தேக்கத்தை சமாளிக்க வரி சீரமைப்புகள்

- ரூ. 65,300 கோடி விவசாய கடன் தள்ளுபடி

- 35 அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி

- வெளிநாட்டு வர்த்தகம் 35.4 % உயர்வு

- அடிப்படை கட்டமைப்பு துறைக்கு கடன் தரும் வங்கிகளுக்கு ஐஐஎப்சிஎல் மூலம் நிதி தரப்படும்

- ஏற்றுமதி 17.1% சரிவு

- அடிப்படை கட்டமைப்பு துறையில் ரூ.70,000 கோடி முதலீடுகள் அனுமதி

- ரேசன் மூலம் 22.7 மி்ல்லியன் டன் கோதுமை வினியோகம்

- 28.5 மில்லியன் டன் அரிசு வினியோகம்

- கடந்தாண்டு முதலீடுகள் 39 % அதிகரிப்பு

- 7-8% பொருளாதார வளர்ச்சி பராமரிக்கப்படும்

- பற்றாக்குறை 2.7% குறைந்துள்ளது

-வரி வருவாய் 12.5 % அதிகரிப்பு

மகளைக் கற்பழித்ததாக இராணுவ வீரர் கைது!

தன்னுடைய சொந்த மகளைக் கற்பழித்ததாக இராணுவ வீரர் ஒருவர் ஞாயிற்றுக் கிழயைன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

தெற்கு டெல்லியில் உள்ள நாராயணா காவல் நிலையத்தில் இராணுவ வீரரின் 15 வயது மகள் சனிக்கிழமையன்று அளித்த புகாரின் அடிப்படையில் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்ததைச் சேர்ந்த இவர் டெல்லியில் கான்ட் பகுதியில் வசிக்கிறார். இவருடைய மனைவியும் மகனும் சொந்த கிராமத்தில் இருப்பதாகவும் மகளையும் மகளின் இரு தோழிகளையும் இவர் சமீபத்தில் டெல்லி அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கல்யாண விருந்து சாப்பிட்ட 300 பேர் வாந்தி

குஜராத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட சுமார் 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜான்கர் எனும் கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணி அளவில் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. சுமார் 1000 பேர் இதில் கலந்து கொண்டனர். விருந்துண்ட 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 200 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாம் நகரிலிருந்து இரண்டு மருத்துவக் குழுக்கள் இக்கிராமத்திற்கு விரைந்துள்ளதாக ஜாம் நகர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

புலிகள் ஆயுதங்களைத் துறந்தால் பேச்சுவார்த்தைக்கு இந்தியா வலியுறுத்தும் - ப.சிதம்பரம்

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும், பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ஜெயவர்த்தனேயுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

அந்த ஒப்பந்தம் மட்டும் அமலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும், ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும், தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். 

ஆனால் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல், அதை விடுதலைப் புலிகள் காலில் போட்டு மிதித்ததே, இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். 

அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு. 

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. 

இந்தியாவில் நாகாலாந்து, அசாம், மணிப்பூர், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய குழுக்கள் போராடி வருகின்றன. இந்திய அரசால் அசாமில் ஆயுதம் ஏந்தி போராடும் "உல்பா' தீவிரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் நாம் பேச முடியும். 

இந்தியா மட்டுமல்ல; உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல; நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு. 

எனவே, ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. 

இலங்கையில் உடனடியாக அந்நாட்டு அரசு போரை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என விடுதலைப் புலிகளும் அறிவிக்க வேண்டும். 

அவ்வாறு புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடாத வரை போரை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது. 

இதுதான் இந்திய அரசின் கொள்கை. இந்திய அரசின் இந்தக் கொள்கை புரிந்ததால்தான் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இப்பிரச்னையில் இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. 

இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் விளக்க வேண்டும். இந்திய அரசின் இந்தக் கொள்கைக்குப் பின்னால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் திரண்டால், வெறும் 2 நாளில் இலங்கையில் போரை நிறுத்த நம்மால் முடியும். 

இலங்கையின் 40 லட்சம் தமிழர்களையும் மத்திய அரசின் இத்தகைய கொள்கையாலும், காங்கிரஸ் கட்சியாலும்தான் காப்பாற்ற முடியும். இதை தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலமெங்கும் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!