Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இலங்கையை ஐ.நா. சபை கண்கானிக்க வேண்டும் : மனித உரிமை அமைப்பு

Published on: வெள்ளி, 17 ஏப்ரல், 2009 // , , , , , , ,
இலங்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கண்கானிப்பில் கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

போர் நடக்கும் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலை மிகுந்த இழிநிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை இது விசயத்தில் அவசரமாக ஈடுபட வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்களின் அமைப்பு (UTHR) கோரி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் கொழும்பு மட்டுமின்றி, முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள போர் நிறுத்தப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பொதுமக்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் இருந்தால் அந்தப் பகுதி மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமையை கேள்விக்குட்படுத்தும் சக்தியைப் பெறுவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்

Published on: ஞாயிறு, 29 மார்ச், 2009 // , , , , , , ,
இலங்கையில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

சிட்னியில் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கன்பெர்ரா ஆகிய பகுதிகளிலிருந்து தமிழர்கள் 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சிட்னியின் மார்ட்டின் ப்ளேஸ் பகுதியில் புறப்பட்ட பேரணி டவுன் ஹால் வரை சென்றது.

அப்துல் கலாமுக்கு ஹோவர் விருது

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு 2008ஆம் ஆண்டுக்காக ஹோவர் விருது வழங்கப்படுகிறது. புகழ் பெற்ற இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் இவர் ஆவார்.

அமெரிக்க எஞ்சினியர்கள் அமைப்பு ஆண்டுதோறும், தன்னலமற்ற சேவை செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருதை வழங்கி வருகிறது.

கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது, மருத்துவர்களுக்கும் நுட்பவியலாளர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தியது, உயர்தர மருத்துவ வசதிகளை தொலைதூர மருத்துவத்தின் மூலம் கிராமங்களையும் எட்டச் செய்தது என்பன போன்ற சேவைகளைச் செய்ததற்காக அவரை இந்த அமைப்புப் பாராட்டியது.

ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற அவைகளில் பாராட்டு!

Published on: செவ்வாய், 24 பிப்ரவரி, 2009 // , , , , , ,
ஸ்லம் டாக் திரைப்படத்திற்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையிலும், மாநிலங்களவைக் கூட்டம் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலும் இன்று நடைபெற்றது. மூன்று இந்தியர்களுக்குக் கிடைத்த இந்த அகாடமி விருதுகள் இந்தியக் கலைஞர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இது என்றும் கூறப்பட்டது.


மக்களவைக் கூட்டம் தொடங்கிய உடனே அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, ஸ்லம் டாக் மற்றும் ஸ்மைல் பிங்கி திரைப்படங்களுக்காக விருது பெற்றவர்களுக்கும் இத்திரைப்படங்களில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.


ஸ்லம் டாக் திரைப்படம் சிறந்த திரைப்படம் என்ற விருது உட்பட 8 பரிசுகளை வென்றிருப்பது பெருமிதம் அடைய வேண்டிய செய்தி என்றும், ஏ. ஆர். ரஹ்மான், குல்சார், ரசூல் பூக்குட்டி ஆகியோரின் இந்த வரலாற்றுச் சாதனையால் ஒவ்வொரு இந்தியனின் இதயமும் மகிழ்வடைவதாகவும் அவர் கூறினார்.


ஸ்மைல் பிங்கி படம் குறையுடைய உதடுகளைக் கொண்ட இந்தியப் பெண் குறித்த குறும் ஆவணப் படம் என்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலைப்புலிகள் வான் தாக்குதல்

Published on: சனி, 21 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
விடுதலைப்புலிகள் இரண்டு விமானங்கள் கொழும்பில் உள்ள அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 48 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள உள்நாட்டு வருவாய் அலுவலகம் மீது ஒரு விமானம் மோதியதாகவும் மற்றொரு விமானம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே சுட்டு வீழ்த்தப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 9.30 மணிக்கு நடத்தப்பட்ட இத்தாக்குதலையடுத்து கொழும்பு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விமான எதிர்ப்பு குண்டுகள் வீசப்பட்டன.

வன்னிப் பகுதியில் 108 பேர் படுகொலை

Published on: புதன், 18 பிப்ரவரி, 2009 // , , , , , , ,

வன்னி பகுதியில் இன்று அதிகாலை இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் 108க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய ஊர்களைக் கொண்ட பாதுகாப்புப் பகுதி என்று புதிதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடித்த இந்த தாக்குதலின்போது கொத்து குண்டுகள் உபயோகிக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

புலிகள் ஆயுதங்களைத் துறந்தால் பேச்சுவார்த்தைக்கு இந்தியா வலியுறுத்தும் - ப.சிதம்பரம்

Published on: திங்கள், 16 பிப்ரவரி, 2009 // , , , , , , , , ,
ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும், பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ஜெயவர்த்தனேயுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

அந்த ஒப்பந்தம் மட்டும் அமலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும், ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும், தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். 

ஆனால் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல், அதை விடுதலைப் புலிகள் காலில் போட்டு மிதித்ததே, இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். 

அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு. 

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. 

இந்தியாவில் நாகாலாந்து, அசாம், மணிப்பூர், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய குழுக்கள் போராடி வருகின்றன. இந்திய அரசால் அசாமில் ஆயுதம் ஏந்தி போராடும் "உல்பா' தீவிரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் நாம் பேச முடியும். 

இந்தியா மட்டுமல்ல; உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல; நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு. 

எனவே, ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. 

இலங்கையில் உடனடியாக அந்நாட்டு அரசு போரை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என விடுதலைப் புலிகளும் அறிவிக்க வேண்டும். 

அவ்வாறு புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடாத வரை போரை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது. 

இதுதான் இந்திய அரசின் கொள்கை. இந்திய அரசின் இந்தக் கொள்கை புரிந்ததால்தான் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இப்பிரச்னையில் இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. 

இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் விளக்க வேண்டும். இந்திய அரசின் இந்தக் கொள்கைக்குப் பின்னால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் திரண்டால், வெறும் 2 நாளில் இலங்கையில் போரை நிறுத்த நம்மால் முடியும். 

இலங்கையின் 40 லட்சம் தமிழர்களையும் மத்திய அரசின் இத்தகைய கொள்கையாலும், காங்கிரஸ் கட்சியாலும்தான் காப்பாற்ற முடியும். இதை தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலமெங்கும் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்

ஈழத்தில் காயமுற்ற தமிழர்கள் படகு மூலம் மீட்பு

Published on: புதன், 11 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
முல்லைத் தீவு பகுதியில் காயமுற்றுள்ள நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள் அந்தப் பகுதிகளில் போதுமானதாக இல்லாத நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நோயாளிகளைப் படகுகள் மூலம் திரிகோணமலையில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது. இதுவரை 240 பேர் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் இருக்கும் வசதிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக மருத்துவமனையைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப் படுகிறது. திங்கள் கிழமை புதுமாத்தளன் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பவுல் காஸ்டெல்லா கூறினார். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக இலங்கை இராணுவ செய்தியாளர் உதய நானயக்கரா கூறினார். 1000 பேர் கொண்ட குழு இப்படி வரும்போது புலிகள் அவர்களைத் தாக்கியதாகவும் அதில் 17 பேர் கொல்லப் பட்டதாகவும், 69 பேர் காயமுற்றிருந்தாகவும் கூறினார்.

ஆனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் பகுதி என்றறிவிக்கப் பட்ட பகுதிகள் மீதும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதால் தமிழர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்தாக அந்த தளம் கூறுகிறது.

பாதுகாப்பு பகுதியிலும் இலங்கை இராணுவம் தாக்குதல்

Published on: திங்கள், 9 பிப்ரவரி, 2009 // , , , , ,

பாதுகாப்பு பகுதிகள் என வரையறை செய்யப் பட்ட சுதந்திரபுரம், இருட்டுமாடு, உடையார்காடு, தேவிபுரம் ஆகிய இடங்களிலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 120 பொதுமக்கள் இந்தப் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று 59 பொதுமக்களும், சனிக்கிழமை 62க்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி வெள்ளிக் கிழமையன்று புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 61பேர் கொல்லப் பட்டனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை: மேலும் ஒருவர் தீக்குளிப்பு

Published on: ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,

இலங்கையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முயற்சி எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ராஜா என்பவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார். காவலர்கள் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.


சென்னையில் முத்துகுமார், பள்ளப் பட்டி அருகே ரவி, சீர்காழி ரவிச்சந்திரன் இவர்களைத் தொடர்ந்து மலேசியாவில் ராஜா என இதுவரை நான்கு பேர் தங்களைத் தாங்களே எரியூட்டிக் கொண்டு மடிந்துள்ளனர்.

முழு அடைப்பு : பஸ், ரெயில் இயக்கப்பட்டன; கடைகள் மூடப்பட்டன

Published on: புதன், 4 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
இலங்கையில் போதை நிறுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. வணிகர் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும் மற்ற மாவட்டங்களில் பெருமளவும் கடைகள் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பின் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை. ஒருசில அரசு பஸ்கள் ஓடியன.  3 அரசு பஸ்கள் தாக்கப் பட்டன.

தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திருத்துறைப்பூண்டியில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் உள்பட 50 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் இரண்டு அரசு பஸ்கள் கல் வீசி சேதப் படுத்தப் பட்டன.

நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ராஜபக்சேவின் உருவபொம்மையையும், இலங்கை தேசியக் கொடியையும் தீயிட்டுக் கொளுத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப் பட்டனர்.

திருமங்கலத்திலும் ராஜபக்சேவின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப் பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. குறைவான என்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப் பட்டன.

மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல்

Published on: செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 // , , , , ,

முல்லைத் தீவு அருகே உள்ள புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்றும் இதுவரை மருத்துவ மனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 12 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 30க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

சுமார் 2,50,000 தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக சேவை நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் அப்பகுதியில் 1,20,000 பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.

மக்கள் பாதுகாப்பான பகுதிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான பகுதி என்று எதுவும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தியாளர் கர்லா ஹத்தாத் தெரிவித்தார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!