Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கம்யூனிஸ்ட் தொண்டர் குண்டுவீசி கொலை!

Published on: புதன், 31 டிசம்பர், 2008 //

கேரள மாநிலம் கண்ணூரிலுள்ள தலச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீசிய குண்டில் சி.பி.எம் தொண்டர் கொல்லப்பட்டார். பானூர் பகுதியில் பாஜக - சி.பி.எம்மினரிடையே நடந்த மோதலின் தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர், சி.பி.எம் திருவங்காடு தலாயி லோக்கல் கமிட்டி செயலாளரான மதேஷ் ஆவார். சம்பவத்தைத் தொடர்ந்து பானூர், சொக்லி, கொளவன்னூர், கதிரூர், தலச்சேரி, மட்டன்னூர் ஆகிய காவல்துறை எல்லைகளுக்குள் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சி.பி.எம் தொண்டர் கொலையைக் கண்டித்து தலச்சேரி மற்றும் அதனைச் சுற்றிய பஞ்சாயத்துப் பகுதிகளில் நாளைக் கடையடைப்புப் போராட்டத்திற்கு சி.பி.எம் அழைப்பு விடுத்துள்ளது.

கேரளம்: பாஜக - சி.பி.எம் மோதல்!

Published on: //
கேரளத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் சி.பி.எம் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதலில் நான்கு பேருக்கு வெட்டு.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே நடக்கும் அரசியல் மோதல்களுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு அடிக்கடி இவ்விரு கட்சியினருக்கும் இடையே மோதல் நடப்பது வழக்கம்.

இதற்காகவே இவ்விரு கட்சியினரும் வெடிகுண்டு, வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை ஆங்காங்கே சேகரித்து வைப்பர். கடந்த இரு மாதங்களில் இம்மாவட்டத்திலிருந்து பலமுறை குவியல் குவியலாக கேரள காவல்துறை வெடிகுண்டுகளைக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் நேற்றும் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பானூரில் இவ்விரு கட்சியினருக்குமிடையே மொதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களைக் கொன்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் நாங்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த நாணு, ரவி ஆகியவர்களுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது.

300 பேர் கடலில் மூழ்கி இறந்ததாக சந்தேகம்!

Published on: //
சட்டத்துக்கு மீறி கடல்மார்க்கமாக மலேசியாவில் குடியேற முயன்ற முன்னூறுக்கு மேற்பட்டோர் மூழ்கி இறந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை 10 பேரில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்தமான் தீவுகளுக்கருகில் இவர்கள் பிரயாணம் செய்திருந்த படகு சென்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென அடித்த பெருங்காற்றில் நிலைகுலைந்தப் படகு கவிழ்ந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதாக எல்லைப் படையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

இதுவரை 105 பேரைக் காப்பாற்றியிருப்பினும் 300க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளது உறுதியாகியுள்ளது. இவர்களில் 10 பேரில் உடல்களைச் சமீபத்தில் உள்ள பாறைகூட்டங்களுக்கு இடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படகில் பயணம் செய்திருந்தவர்களில் பகளாதேஷ் மற்றும் மியான்மரில் உள்ளர்களே அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் கார் குண்டு வெடித்தது

Published on: //
ஸ்பெயினின் பாஸ்கு பகுதியில் இன்று உள்ளூர் நேரம் காலை 11 மணி அளவில் கார் குண்டு வெடித்தது. பாஸ்கு பகுதியில் உள்ள பில்பாவு எனும் நகரில் அமைந்துள்ள EITB என்ற தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைமையகம் அருகில் இச்சம்பவம் நடைபெற்றது.

பெரும்பாலும் ஊடகத்துறையினரை குறிவைத்தே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. 1968 முதல் 825 பேர் கொல்லப்பட்டதாகவும் இதற்கு ETA குழுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஸ்பெயினின் பாஸ்கு பகுதியில் ETA எனும் ஆயுதம் ஏந்திய குழு தனி நாடு கேட்டு பேராடி வருகிறது. இந்தக் குழுவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா தீவிரவாதக் குழு என்று அறிவித்திருக்கிறது. இதன் உறுப்பினர்கள் அண்மையில் பிரான்சில் கைது செய்யப்பட்டனர்.

கைபரில் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்

Published on: //
பாகிஸ்தானிலிருந்து ஆப்கானில் இருக்கும் அமெரிக்க கூட்டுப் படையினருக்கு உணவு மற்றும் இராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லும் முக்கிய வழியான கைபர் பாதையில் தாலிபான் ஆதரவாளர்கள் தங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இவ்வழியே பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர். கடந்த வாரத்தில் சுமார் 200க்கும் அதிகமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதனை அடுத்து நேற்று பாகிஸ்தான் கைபர் பாதையை மூடியது.

இன்று பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் அந்தப் பகுதியில் மறைந்து இருப்பதாகக் கருதப்படும் தாலிபான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆப்கனில் உள்ள நேட்டோ படையின் செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தானின் இச்செயலை வரவேற்றுள்ளதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

36 ஆயிரம் கோடி கருப்பு பணம்?

Published on: //
புனேயைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி கான் மீது 36 ஆயிரம் கோடி கருப்புப் பணம் வைத்திருந்த ஏன்று விளக்கம் கேட்டு அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் (FEMA) படி அறிக்கை (Show cause Notice) அனுப்பப் பட்டுள்ளது. ஹசன் அலி தற்போது போலி பாஸ்போட்டு வழக்கின் சிறையில் இருக்கிறார்.  இந்த அறிக்கையை அமலக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஹசன் அலியின் புனே மற்றும் மும்பை வீடுகளில் இன்று அளித்தார்.

இவரது வீட்டை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டு சோதனை இட்டபோது UBS என்ற சுவிஸ் வங்கியில்  8,000.45 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பு வைத்திருந்ததை அறிந்தனர்.

அவருக்கெதிரான இக்குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டால் அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் (FEMA) படி அதிகபட்சமாக சுமார் 1.08 இலட்சம் கோடிகள் வரை அபராதம் விதிக்க முடியும்.

மாலேகாவ்: பாண்டே ஒப்புதல் வாக்குமூலம்!

Published on: //
மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட தயானந்த் பாண்டே, குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மும்பை மும்பை தீவிரவாத தடுப்புப் படை தலைவர் கார்கரே, மும்பை தீவிரவாதத் தாக்குதலினிடையே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மாலேகாவ் வழக்கில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

தற்பொழுது மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேலும் இரு இராணுவ உயர் அதிகாரிகளையும் மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேயின் சகோதரர் மகளையும் மும்பை தீவிரவாத தடுப்புப் படை விசாரணை செய்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்ட இந்து அமைப்பு ஒன்றின் தலைவர் தயானந்த் பாண்டே, குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்புள்ளதை ஒப்புக்கொண்டதாக தீவிரவாதத் தடுப்புப்படை அடிஷனல் கமிஷனர் பரம்பீர் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

தயானத் பாண்டேயின் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து முறைகளையும் பேணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

5வது நாளாகத் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்

Published on: //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மீது இஸ்ரேல் ஐந்தாவது நாளாக இன்றும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் மற்றும் சுரங்கப் பாதைகள் மீதும் குண்டுகளைப் பொழிந்தது. இதுவரை 400க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளதாகவும் சுமார் 1750 பேர் காயமுற்றள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலை நிறுத்தாவிட்டால் காஸா மீதாக தாக்குதல் வாரக்கணக்கில் நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இரு தரப்பும் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேற்று கூடிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, வளைகுடா வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு மற்றும் Quartet எனப்படும் அமரிக்கா, ஐரோப்பிய யூனியன், இரஷ்யா, ஐ.நா. சபை போன்றவையும் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

48 மணி நேர தாக்குதல் நிறுத்த திட்டம் ஒன்றை பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதாகவும் அதனை இஸ்ரேலிய அரசு பரிசீலித்தது வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பாக விவாதிக்க இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் லிவ்னி நாளை பிரான்சு செல்கிறார்.

இலங்கை தமிழர் சென்னையில் கைது

Published on: //
இலங்கையைச் சேர்ந்த திலீபன் (வயது 30) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு தொலை தொடர்பு சாதனங்களைக் கடத்த முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இவர் இதற்கு முன் சுவிட்சர்லாந்தில் பணி புரிந்து இலங்கை திரும்பியவர் என்றும் காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக் கிழமையன்று ஆண்டனி (வயது 32) என்பவர் சென்னையில் கைது செய்யப் பட்டார். அவரிடமிருந்து சாட்டிலைட் போன்கள், GPS கருவிகள், அமோனியம் நிட்ரேட் போன்றவை கைப்பற்றப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

"தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது!" - கலிதா ஜியா அறிவிப்பு

Published on: //
பங்களாதேஷில் அண்மையில் நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சி படு தோல்வி அடைந்தது. தனது கட்சித் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் நடத்திய ஜியா, 'தேர்தல் முடிகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல' என்று தேசிய தொலைக்காட்சியில் அறிவித்தார்.

'இந்தத் தேர்தல் முடிவுகளை மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிக பட்ச எண்ணிக்கையில் வாக்குகள் பதிவு செய்யப் பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதும் நம்பத் தகுந்தது அல்ல. வாக்குப் பதிவில் தில்லுமுல்லுகள் நடந்திக்க வாய்ப்பிருக்கிறது' என்றும் கலிதா ஜியா தெரிவித்தார்.

300 உறுப்பினர்களைக் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் கலிதா ஜியாவின் கட்சி 29 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. ஷேக் ஹஸினா தலைமையிலான அவாமி லீக் கட்சி 230 இடங்களை வென்று ஆட்சி அமைக்கிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!