Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியா பாகிஸ்தானை புரிந்து கொள்ள வேண்டும் - ரைஸ்

Published on: திங்கள், 19 ஜனவரி, 2009 // , ,
இன்றுடன் பதவி முடியும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த கான்டலீசா ரைஸ் இந்தியா பாகிஸ்தானை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பதவி முடியும் தறுவாயில் மூன்று தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரைஸ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருவதாகவும், எல்லை தாண்டிய பயங்கராவாதத்தை ஒடுக்குவதிலும் அக்கறை காட்டி வருவதாகவும் ரைஸ் அப்போது விவரித்தார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைய ஒப்புக் கொண்ட ரைஸ், இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையாக நடந்து கொண்டால் அது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபாகரன் வெளிநாடு தப்பினார்?

Published on: //
ஸ்ரீலங்காவில் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்தியத் தாக்குதலில் 31 புலிகள் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ரகசிய படகு நிர்மாணசாலையைத் தகர்த்ததாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பகுதியான முல்லை தீவினை நோக்கி இராணுவம் நகரத்துவங்கிய நிலையில், பிரபாகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லை தீவை நோக்கியை இராணுவத்தின் முன்னேற்றம் தற்பொழுது மாங்குளம்-முல்லை தீவு சாலைவரை வந்துள்ளது. மிக விரைவிலேயே முல்லைதீவினுள் இராணுவம் நுழையும் எனக் கருதப்படுகிறது.

புலிகளிடம் தற்பொழுது பயிற்சி பெற்ற வெறும் 1000 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளதாகவும் அவர்களும் முல்லை தீவின் உள் காட்டுப்பகுதியில் ஒளிந்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி சரத் போன்ஸகா கூறினார். புலிகளுக்கெதிரான போராட்டம் மிக விரைவிலேயே முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

மாலேகான் வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி!

Published on: //
11 வயது சிறுமி உட்பட 6 பேர் மரணத்திற்குக் காரணமான மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி நகர்கிறது!

வெடிகுண்டு தயாரிப்பில் திறமைசாலியான பிரவீன் முதலிக் எனும் நபரைத் தேடி, வழக்கை விசாரிக்கும் மும்பை தீவிரவாதத் தடுப்புப்படை கர்நாடகா விரைந்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்புக்குத் தேவையான வெடிகுண்டுகளைத் தயாரித்து வழங்கிய ராம்ஜி மற்றும் சந்தீப் டாங்கெயுடன் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதான பிரவீனும் இருந்ததாக ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது. வெடிகுண்டு தயார் செய்வதில் நிபுணனான இந்நபரைக் கைது செய்தால், தலைமறைவாக இருக்கும் மற்றும் இருவரைக் குறித்தத் தகவல்கள் தெரிய வரும் என ஏடிஎஸ் கருதுகிறது.

இதற்கிடையில் மும்பை ஏடிஎஸ், தங்களைச் சட்டவிரோதமாக கஸ்டடியில் வைத்ததாகவும் ஆகவே ஏடிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மத்திய பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் வழங்கிய புகாரை இன்டோர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாரக் ஏவுகணை விவகாரம்: சி.பி.ஐ இஸ்ரேல் உதவி கோரியது!

Published on: //
இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட 1,150 கோடி ரூபாய்கான பாரக் ஏவுகணை வியாபாரத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் மத்திய புலனாய்வு துறை இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணையில், ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலில் வைத்து நடந்த பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவரங்களை இஸ்ரேல் அரசிடம் சிபிஐ கேட்டுள்ளது.

இவ்வொப்பந்தத்தில் உள்ள முக்கிய சில குளறுபடிகள் இஸ்ரேலில் வைத்து நடந்துள்ளதால் அவை தொடர்பான அனைத்து விவரங்களும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட அனுமதியின் மூலம் இஸ்ரேல் அரசுக்குச் சி.பி.ஐ கோரிக்கை அனுப்பியுள்ளது.

முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃப்ர்னாண்டஸ், இராணுவ முன்னாள் உயரதிகாரி சுஷில் குமார், சமதா கட்சியின் தலைவராக இருந்த ஜெயா ஜெட்லி, ஆயுத வியாபாரி சுரேஷ் நந்தா போன்றவர்களை உட்படுத்தி கடந்த 2006 அக்டோபர் மாதம் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

இஸ்ரேலிடமிருந்து 7 பாரக் ஏவுகணைகள் வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட தொகை 17 மில்லியன் டாலர் எனவும், இத்தொகை 1996 ஆம் ஆண்டு இஸ்ரேல் வாக்களித்த ஒப்பந்தத் தொகையை விட அதிகமானது எனவும் சி.பி.ஐ கண்டுபிடித்தது.

1996 ல் இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் இறக்குமதி செய்வதற்கான அட்மிரல் குமாரின் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய விஞ்ஞான ஆலோசகராகவும் இருந்த விஞ்ஞானி அப்துல் கலாம் எதிர்த்த போதிலும் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தின்படி ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ஃபெர்னாண்டஸ் கட்டளையிட்டிருந்தார்.

2001 ல் தெஹல்கா இதழ் இரகசிய கேமரா மூலம் நடத்திய விசாரணையின் மூலமே இவ்வொப்பந்தத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட ஊழல் வெளியானது.

வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம்

தலைநகர் டில்லி உள்பட இந்தியாவின் வட மாநில மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குறைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள மாற்றங்களை எதிர்த்து இப்போராட்டம் நடைபெறுகிறது. தலைநகரில் இம்மாதம் வழக்குறைஞர்கள் நடத்தும் மூன்றாவது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இம்மாதம் 7 மற்றும் 14 ஆம் தேதிகளில் ஏற்கனவே வேலை நிறுத்தம் நடைபெற்றது.

வட மாநிலங்களான டில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ஜம்மு கஷ்மீர் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறுவதாக வழக்குறைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.


ஜார்கண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஷிபு சோரன் முதல் அமைச்சராகப் பதவி வகிகத்து வந்தார். பதவியேற்றதிலிருந்து ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தற்காலிக முதல்வராகத் தொடர்கிறார்.

அவருக்குப் பதில் வேறொரு முதல்அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நிலவி வந்தது. இதனையடுத்து மாநில ஆளுநர் சையத் சிப்தி ராஜி ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். மத்திய அமைச்சரவையும் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.

மாநில சட்டமன்றம் கலைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் திருமா

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

நான்காவது நாளான நேற்று திருமாவளவனின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. நேற்று மாலை அவர் மயக்க நிலைக்கு போனார். இதையடுத்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். பல்வேறு கட்சித் தலைவர்களும் திருமாவளவன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரினர்.

பின்னர் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம், உண்ணாவிரதம் நடந்த மேடைக்கு அருகில் கூடியது. அக்கூட்டத்தில் உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிட வேண்டும் என மமுடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மாலை 5 மணியளவில் உண்ணாவிரத மேடைக்கு டாக்டர் ராமதாஸ் வந்தார். அவர் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. எனவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். அப்போராட்டத்தில் பால் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் எந்த ஊர்தியும் ஓடாது.

எனவே உண்ணாநிலை போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

அதனைக் கேட்ட திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவதாகவும், இலங்கைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் கலைஞர் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாகவும் ராமதாஸ் உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

திருமாவளவனின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ராமதாஸ் உறுதியளித்தார். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

தேவாலயத்தின் கூரை விழுந்து ஏழுபேர் பலி

ஞாயிற்றுக் கிழமையன்று பிரேசிலின் மிகப்பெரிய நகரான சாபோலோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் கூரை நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 7 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

தீயனைப்புத் துறையினரும் உதவிக் குழுவினரும் விரைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2000 பேர் ஒரே நேரத்தில் வழிபடக் கூடிய அளவில் உள்ள இந்த தேவாலயத்தில் சம்பவத்தின் போது 400லிருந்து 500 பேர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்று பிரேசிலின் செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது. ஆனால் 60 பேர்தான் இருந்ததாக தேவலாய நிர்வாகம் தெரிவித்தது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!