Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ரன்வீர் சேனாவுக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டில் இரு பத்திரிகையளார்கள் கைது

Published on: புதன், 4 பிப்ரவரி, 2009 // , , , , ,
இந்து தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக இரு பத்திரிகையாளர்கள் உள்பட நால்வரை கைது செய்துள்ளதாக நேபாள காவல்துறை இன்று அறிவித்தது.

ரிஷி தமலா மற்றும் பிரேந்திர குமார் மகாட்டோ என்ற இந்த பத்திரிகையாளர்கள் ஆயுதம் ஏந்திய இந்து தீவிரவாத அமைப்பான ரன்வீர் சேனாவுக்கு உதவி செய்ததாக காவல்துறை கூறுகிறது. ரிஷி தமலா நேபாள நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். பிரேந்திர குமார் தனியார் வானொலி செய்தியாளர் ஆவார்.

கடந்த ஆண்டு காட்மண்டுவில் நடந்த மூன்று குண்டு வெடிப்புகளுக்கு ரன்வீர் சேனா பொறுப்பேற்றுக் கொண்டது. அதற்கு முன்வரை இத்தகைய அமைப்பு குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்த அமைப்பு கடந்த ஆண்டு திரிபுவன் பன்னாட்டு விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில், காட்மண்டு மால் என்ற வணிக வளாகம் முன் மற்றும் தர்பார் உயர்நிலைப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குமார் கூறினார்.

கைது செய்யப்பட்ட மற்ற இருவர் ரன்வீர் சேனாவின் உறுப்பினர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆறு வயது சிறுமியைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்கு.


உத்தரபிரதேசத்திலுள்ள இட்டாவ எனும் இடத்தில் திருடியதாக அழைத்து வரப்பட்ட ஆறு வயது தலித் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கிய இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சப் இன்ஸ்பெக்டர் சியாம்லால் யாதவ் பணி நீக்கம் செய்யபட்டார். மற்றொருவரான சந்திரபான் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிறுமியிடம் எஸ்.பி மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தையில் வைத்து தனது பையிலிருந்து 280 ரூபாயைத் திருடியதாக கோமள் என்ற சிறுமியை அஞ்சு கதாரிய என்ற பெண் ஜஸ்வந்த்பூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்த வேளையில், காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் சிறுமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு: கல்யாண்சிங் மன்னிப்பு கேட்டார்!

பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் வருத்தம் கொள்வதாகவும் செய்து போன தவறுக்காக மன்னிப்பு கோருவதாகவும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் கூறினார்.

பாஜகவிலிருந்து வெளியேறிய கல்யாண்சிங் கடந்தச் சில நாட்களுக்கு முன்னர் முலாயம் சிங்கின் கட்சியில் இணைந்திருந்தார். முலாயம் சிங்குடன் இணைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கல்யாண்சிங்கிடமிருந்து இவ்வறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"பாஜகவை அழிப்பதே இனி எனது இலட்சியம்" எனவும் கல்யாண்சிங் கூறினார். "பாபரி மஸ்ஜித் என்னுடைய ஆட்சி காலத்தில் தகர்க்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களை அகற்றி நிறுத்துவதற்கோ அவர்களை எதிரியாக கருதுவதற்கோ நான் தயாராகவில்லை" என அவர் மேலும் கூறினார். பாஜகவை விட்டு விலகியதை ஆதரித்து அநேக முஸ்லிம் நண்பர்கள் தனக்குக் கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.

முழு அடைப்பு : பஸ், ரெயில் இயக்கப்பட்டன; கடைகள் மூடப்பட்டன

இலங்கையில் போதை நிறுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. வணிகர் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும் மற்ற மாவட்டங்களில் பெருமளவும் கடைகள் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பின் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை. ஒருசில அரசு பஸ்கள் ஓடியன.  3 அரசு பஸ்கள் தாக்கப் பட்டன.

தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திருத்துறைப்பூண்டியில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் உள்பட 50 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் இரண்டு அரசு பஸ்கள் கல் வீசி சேதப் படுத்தப் பட்டன.

நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ராஜபக்சேவின் உருவபொம்மையையும், இலங்கை தேசியக் கொடியையும் தீயிட்டுக் கொளுத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப் பட்டனர்.

திருமங்கலத்திலும் ராஜபக்சேவின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப் பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. குறைவான என்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப் பட்டன.

கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும்


கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும் என்று கிர்கிஸ்தான் அதிபர் குர்மன்பக் பகியேவ் செவ்வாய் கிழழை அறிவித்தார்.

செவ்வாய் கிழமை பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் கைபர் வழியில் உள்ள பாலத்தை தாலிபான் ஆதரவாளர்கள் வெடிவைத்து தகர்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பை கிர்கிஸ்தான் அதிபர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அறிவித்திருப்பதால் ரஷ்யாவின் தூண்டுதலினாலேயே இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கிர்கிஸ்தான் ரஷ்யாவிடம் பெற்றிருந்த  180 மில்லியன் டாலர் கடன் தொகையை ரத்து செய்துவிட்டதாகவும், மேலும் 150 மில்லியன் டாலர் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்யா கிர்கிஸ்தானுக்கு கடனாக வழங்க சம்மதித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 30 ஆயிரம் படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஒபமாவிற்கு ரஷ்யா கொடுத்திருக்கும் முதல் நெருக்கடி என்று சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவ தளமான மனஸ் என்ற இந்த தளத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரான்சைச் சேர்ந்த சுமார் 1000 இராணுவத்தினர் பணியில் உள்ளனர்.

புலிகள் சரணடைய வேண்டும் என சர்வதேச குழு வலியுறுத்தல்!

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள வேளையில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் குழு புலிகளை சரணடையும்படி வலியுறுத்தியுள்ளது. இந்தக் குழுவில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

புலிகளுக்கு மிகக்குறைவான கால அவகாசமே இருக்கிறது என்பதால் இரு தரப்பிலும் ஏற்படும் வீணான உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்காக புலிகள் சரணடைவதே சிறந்தது என அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கை அரசாங்கத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை புலிகள் தரப்பு விரைவில் தொடங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இந்த அறிக்கைக்கு புலிகள் தரப்பிலிருந்து இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

அஹமதாபாத் தொடர்குண்டு வெடிப்பு: மேலும் 5 குற்றப் பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு 57 பேரை பலிவாங்கிய அஹமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 5 குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்தது.

சர்கேஜ், மணிநகர் (2 வழக்குகள்), கலுப்பூர், வாத்வா ஆகிய பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக குற்றப் பிரிவு காவல்துறை இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கடந்த ஆண்டு ஜூலை 26 அன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் 21 குண்டுகள் வெடித்தன. குற்றப் பிரிவு ஒவ்வொரு குண்டு வெடிப்பையும் தனி வழக்குகளாகப் பதிவு செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறினர்.

சர்கேஜ் குண்டு வெடிப்பில் 54 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 47 பேர் தலைமறைவாக உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மணி நகர் குண்டு வெடிப்பில் 44 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 48 பேர் தலைமறைவாக உள்ளனர். வாத்வா மற்றும் கலுப்பூர் குண்டு வெடிப்புகளில் 43 பேர் குற்றவாளிகள் எனவும் 45 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இக்குற்றப் பத்திரிகை ஒவ்வொன்றும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் சிமி அமைப்பினர்தான் தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கூறுகிறது.

அத்வானியின் நெருங்கிய உதவியாளருக்கு எதிராக கிரிமினல் வழக்கு!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் பொழுது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் அளித்ததாகக் கூறி பாஜக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் கோடி ரூபாய்களைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக பாஜகவின் பிரதமர் வேட்பாளரான அத்வானியின் மிக நெருங்கிய உதவியாளரான சுதீந்திரா குல்கர்ணிக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் படி டில்லி காவல்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி நடந்தது தொடர்பாக சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி பாராளுமன்ற சமிதியை நியமித்திருந்தார். இச்சமிதி வழங்கிய அறிக்கையினை டில்லி காவல்துறைக்கு வழங்கிய மத்திய அரசு, குல்கர்ணி உட்பட மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தர்விட்டது. மேலும், கடந்த கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாளில் பாஜக தலைமையகத்தில் இருந்து திருட்டுப் போன இரண்டு கோடி ரூபாய்க்கும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் கொண்டுவந்த பணத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பதைக் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பாஜக அலுவலகத்தில் பணம் திருட்டுப் போன அறையைப் பரிசோதிக்க அனுமதி தர வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் டில்லி காவல்துறை ஆணையர் அனுமதி கோரியுள்ளார். இத்திருட்டு சம்பவம் தொடர்பாக பாஜக காவல்துறையில் புகார் எதுவும் அளிக்காதது குறிப்பிடத் தக்கது.

பெங்களூரூவில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட தீவிரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்று கர்நாடக மாநிலத்தலைநகர் பெங்களூரூவில் அரண்மனை மைதானத்தில் நடந்தேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜமியியத் யே உலமாயே ஹிந்த் என்ற முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஹிந்து, இஸ்லாமிய அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

தீவிரவாதம் அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்க்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் மக்களிடம் பெறப்பட்டது.

ஜம்யியத்துல் உலமா யே ஹிந்த் தலைவர் சையத் முஹம்மத் உஸ்மான், பாராளுமன்ற உறுப்பினர் மெளலானா மஹ்மூது மதனி, ஆரிய சமாஜின் சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், ஹிந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ்பட் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சார்பற்று செயல்படுவதற்கும், அண்மைக்காலத்தில் புதிதாக அறிய வந்துள்ள தீவிரவாதங்களின் கைவரிசைகள் குறித்த நேர்மையான விசாரிப்புக்கும் இம்மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

இராக்: அமெரிக்க இராணுவம் திரும்பப் பெறப்படும்.

Published on: செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,
கடந்த 2003-ம் ஆண்டு இராக் மீது தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது முதல் அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இப்போது அந்த நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். அங்கு இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கர்கள் உட்பட பல நாட்டினரும் கோரி வந்தனர். இதற்கு முந்தைய ஜனாதிபதி புஷ் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா, மாதம் ஒன்று அல்லது இரண்டு படைப்பிரிவு என்ற அடிப்படையில் 16 மாதத்துக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க இராணுவத்தை திரும்பப் பெறுவோம் என்று உறுதி மொழி கொடுத்திருந்தார்.

என்.பி.சி. டி.வி சேனலுக்கு அளித்த சமீப பேட்டியில், ஒரு ஆண்டு காலத்துக்குள் பெரும் அளவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் ஈராக்கியர்கள் மீது மேலும் அதிகமான பொறுப்புகளை சுமத்தக்கூடிய நிலையில் தாங்கள் இருப்பதாகவும் ஒபாமா கூறி உள்ளார்.

அதே நேரம், ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்திற்கும் அதிகப்படுத்தப்படுத்தலாமா என்று ஒபாமா நிர்வாகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் வாஜபேயி.

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி இன்று இரவு அகில இந்திய விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் இதயக்கோளாறு காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு 10.00 மணிக்கு ஐசியூ என்று சொல்லப்படும் இண்டென்சிவ் கேர் யூனிட்டில் வாஜ்பாய் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக ஏஐஎம்எஸ் கண்காணிப்பாளர் மருத்துவர் D K ஷர்மா தெரிவித்துள்ளார்.

84 வயதாகும் வாஜ்பேயி உடன் அவருடைய பிரத்யேக மருத்துவர் ரந்தீப் குலேரியா மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டுள்ளார்.

பா ஜ க தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அரசியல் வானில்: மனிதநேய மக்கள் கட்சி பிப்.7ல் உதயம்.

தேர்தல் அரசியலில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தன் ஆதரவில் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை பிப்ரவரி 7ம் தேதி துவக்குகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.

இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,

தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட இருக்கிறது. துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமுமுக சமூக சேவை அமைப்பாக தொடர்ந்து செயல்படும்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.

ராமநாதபுரம், வேலூர், நெல்லை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவற்றில் எதாவது இரண்டு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்
என்றார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்.

இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன கிளை அலுவலகம் திருச்சி நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் செயற்பட்டு வருகிறது.

நேற்றுமாலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்ற 10க்கும் மேற்பட்ட ஆட்கள் இலங்கை அரசுக்கும், ராணுவத்திற்கும் எதிராக கோஷமிட்டபடி தாக்குதலில் இறங்கினர்.

அலுவலக கண்ணாடி கதவுகள், விளம்பர போர்டுகளை தாக்கி சேதப்படுத்தினர். கதவுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அலுவலகத்திற்குள் பணியில் இருந்த இரு ஊழியர்களும் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் சென்று விட்டனர்.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம்: நாளைய முழுஅடைப்புக்கு தடை இல்லை.

நாளை தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த முழுஅடைப்பு என்று கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் சரவணகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நாளை சில அரசியல் கட்சிகள் ஆதரவுடன் `முழுஅடைப்பு' நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை உச்சநீதிமன்றம் சட்ட விரோதம் என அறிவித்து பந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனதுமனுவில் கோரியிருந்தார்.

இன்று பிற்பகல் இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் வேலை நிறுத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.

நீதிபதிகள் அளித்த உத்தரவில், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்.அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை உள்ளதுஎன்று தெரிவித்துள்ளனர்.

இம்மனு மீதான அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடரை இந்தியா கைப்பற்றியது.

இலங்கையுடனான ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் அடங்கிய தொடரில், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது.

முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற உற்சாகத்தில் களம் இறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் கவுதம் கம்பீர் மற்றும் தெண்டுல்கர் இருவரின் முக்கிய விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்து சரிவைச் சந்தித்த போதிலும் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியா 364 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் இணைந்து 214 ரன்கள் குவித்தனர். வீரேந்திர சேவாக் 116 ரன்களும் யுவராஜ் சிங் 117 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணிக்கு எந்த ஒரு கட்டத்திலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை வழங்காமல் இந்தியா ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில் 147 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய ஏற்றுமதித் துறையில் 15 லட்சம் பேர் வேலை இழக்க நேரலாம்!

'இந்தியாவில் ஏற்றுமதி சார்ந்த துறைகளில் பணி புரிவோரில் சுமார் 15 லட்சம் வேலை இழக்க நேரலாம்' என மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குவதால் அந்நாடுகளிலிருந்து வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதித் துறை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த பிள்ளை, இதே நிலை தொடர்ந்தால் மார்ச் மாதத்திற்குள் மேலும் 5 லட்சம் ஊழியர்கள் வேலையை இழக்கக் கூடும் என்றும் கூறினார்.

ஜவுளி மற்றும் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப் படும் என்று அவற்றில் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலும் உருவாகலாம் என்று அவர் அப்பேட்டியில் தெரிவித்தார்.

மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல்


முல்லைத் தீவு அருகே உள்ள புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்றும் இதுவரை மருத்துவ மனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 12 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 30க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

சுமார் 2,50,000 தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக சேவை நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் அப்பகுதியில் 1,20,000 பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.

மக்கள் பாதுகாப்பான பகுதிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான பகுதி என்று எதுவும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தியாளர் கர்லா ஹத்தாத் தெரிவித்தார்.

சொந்த தயாரிப்பில் இரான் செயற்கை கோள் அனுப்பியது

இரான் முதன் முறையாக தன்னுடைய நாட்டில் தயாரான செயற்கைக் கோளை இன்று காலை விண்ணில் ஏவியது. ஒமிட் (நம்பிக்கை) என்று பெயரிடப் பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் சபீர் 2 என்ற உள்நாட்டில் தயாரான ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இரானில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.

2005ஆம் ஆண்டு இரானின் செயற்கைக் கோளை ரஷ்யா விண்ணில் ஏவியது. பின்னர் சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து 2008 ஆம் ஆண்டு செயற்கைக் கோளை ஏவியிருக்கிறது.

500 ரூபாய்க்கு மடிக்கணினி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மடிக்கணினி இன்று திருப்பதியில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதன் விலை 10 அமெரிக்க டாலர்கள் (சுமார் 500 ரூபாய்) என்று கூறப்படுகிறது.

கணினியைப் பயன்படுத்துவதில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் களைவதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றாய் இக்கணினி அமையும்.

VIT (Vellore Institute of Technology), சென்னை ஐ.ஐ.டி. ஆகிய நிறுவனங்கள் இணைந்து இக்கணினியை வடிவமைத்துள்ளன. கணினியின் வடிவமைப்பு குறித்து விரிவான தகவல்கள் இல்லை எனினும் 2 ஜி.பி மெமோரி, வைஃபி, ஈதர்நெட் போன்ற வசதிகளுடன் இக்கணினி அமையும் என்று கூறப்படுகிறது.

எடியூரப்பா மனைவி மரணம் குறித்து மறு விசாரணை!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் மனைவி மைத்ரா தேவி கடந்த 2004-ம் ஆண்டு ஷிமோகா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் தண்ணீர் தொட்டி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி அப்போது காவல்துறையினர் விசாரணை செய்து வழக்கையும் மூடி விட்டனர்.

ஷிமோகாவைச் சேர்ந்த ஆர் சேஷாத்ரி என்ற வழக்குரைஞர், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மறு விசாரணை செய்யும்படி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்குரைஞர் சேஷாத்ரி, இந்த மரணம் ஒரு கொலை என்றும் உண்மைகள் மறைக்கப்பட்டு சாட்சியங்கள் திரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறார். எடியூரப்பா, அவரது மகள், இரண்டு மகன்கள், பணியாளர்கள் அனைவரும் காவல் துறையினருக்குத் தவறான தகவல்களைத் தந்து திசை திருப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கிறார்.

முதல்வர் எடியூரப்பா இது பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!