Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தமிழகம்: நீதிபதி பெயர் கூறி செல்பேசிகள் திருட்டு

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள செல்பேசி விற்பனை கடையில் உதயகிரி என்ற 23 வயடு வாலிபர் விற்பனையாளராகப் பணிபுரிகிறார்.கடந்த 20ம் தேதி 12 மணிக்கு உதயகிரி கடையில் இருந்த போது, வாலிபர் ஒருவர் வந்தார். கடலூர் நீதிபதிக்கு மொபைல் போன் தேவைப்படுகிறது. கடையில் உள்ள ஐந்து மொபைல் போன்களை எடுத்து வந்தால் பார்த்து வாங்கிக் கொள்வார் எனக் கூறியுள்ளார்.

உதயகிரி கடையில் இருந்து 33 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து நோக்கியா மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு அந்த வாலிபருடன் ஆட்டோவில் சென்றார். ஜட்ஜ் பங்களா ரோட்டில் உள்ள நீதிபதி குடியிருப்புப் பகுதிக்குச் சென்று ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார்.மொபைல் போன்களைக் கொடுங்கள் நீதிபதியிடம் காண்பித்துவிட்டு எது தேவை எனக் கேட்டு வருவதாகக் கூறி அருகில் நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றார்.இதுகுறித்து உதயகிரி கொடுத்த புகாரின்படி, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தமிழகம்: திமுக-காங் கூட்டணி இற்றைப்படுத்தப்பட்டது?

பதினைந்தாம் மக்களவைக்கான எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும்,அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. தே.மு. தி.க.வும் தனித்துப் போட்டியிட இருப்பதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.


தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அதில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு பற்றிய விவரம் 2 நாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்து இருந்தார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்படுவது உறுதியாகி விட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

வடசென்னை, காஞ்சீபுரம் (தனி), தர்மபுரி, ஆரணி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமாரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்க பேசப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.

மீதம் உள்ள 24 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் ஒதுக்கி 21 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.

திருவள்ளூர் (தனி), தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப் புரம் (தனி), சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய 21 தொகுதிகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

விடுதலைச்சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம்லீக் கட்சிக்கு வேலூரும், மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.

நன்றி: மாலைமலர்.

தீயிட்டுக் கொளுத்தப்படும் 170 கோடி ரூபாய்

திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகள் வழியாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள், பழைய 5 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளும் சேகரிக்கப்பட்டன. இவை ரூ.170 கோடி அளவுக்குச் சேர்ந்தது. இந்தக் கிழிந்த நோட்டுகள் கட்டுக்கட்டாக சரக்குப்பெட்டகங்களில் ஏற்றப்பட்டு சரக்கு தொடர்வண்டிகள் மூலமாக சென்னை வந்தடைந்தன.

அதன்பின் அவை சுமையுந்துகளில் பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டபின், காவல்துறை பாதுகாப்புடன் தீயிட்டு எரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை வந்த ராகுல் பேட்டி.

இன்று விமானம் மூலம் சென்னை வந்தார் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி. அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் புதுவை வந்த அவரிடத்தில் நிருபர்கள் பேட்டி கண்டனர்:

வருண் காந்தியின் பேச்சு குறித்து ராகுல் கருத்து தெரிவித்த போது,

வருணுக்கு அவர் விரும்பியதைப் பேச உரிமை உண்டு என்றாலும் அடுத்தவர் மீது வெறுப்போ, கோபமோ கூடாது. அடுத்தவரை புண்படுத்தும் பேச்சு சரியல்ல. இது குறித்து பிரியங்கா விவரமாக கருத்து தெரிவித்துவிட்டார். நான் மேலும் பேச விரும்பவில்லை.

ஆனால் ஒன்று, வருணின் பேச்சு எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. பிரதமர் மன்மோகன் சி்ங் பாஜகவினர் கூறுவது போல பலவீமானவர் அல்ல. இந்த நாட்டுக்கு நிறைய நல்லது செய்த மனிதர். அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி. மிகச் சிறந்த ஜென்டில்மேன். அப்படிப்பட்ட நபர்களைப் பார்ப்பதே அரிது. அவரது நடவடிக்கைகளே அவரது தரத்துக்கு எடுத்துக்காட்டு.

அதே நேரத்தில் பெரியவர்கள் குறித்து நான் தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை. நான் ரொம்ப சிறியவன் என்றார்

பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சி தோல்வி!

பா.ம.க.வை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கச் செய்வதற்கான முயற்சி நடந்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் அகமது பட்டேல், அன்புமணியை சந்தித்து பேசினார். அப்போது பா.ம.க. கூட்டணியை விட்டு விலகக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

முக்கிய கட்சியுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் கூட்டணியில் பா.ம.க. நீடிக்க முடியாததற்கான காரணங்களை அவர்களிடம் அன்புமணி விளக்கியதாக சொல்லப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியின் இறுதி கட்ட முயற்சியும் வெற்றி பெறவில்லை.

சோனியா மற்றும் தலைவர்கள் கருத்து குறித்து அன்புமணி மற்றும் டாக்டர் ராமதாசிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது டாக்டர் ராமதாஸ் “கட்சி முடிவே முக்கியம்” என்று சொன்னதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் அமைச்சர்கள் அன்புமணி, வேலு ஆகியோர் ராஜினாமா பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!

இந்தியா கடற்படைக்குச் சொந்தமான சாப்பர் வகை ஹெலிகாப்டர் ஒன்று கோவா கடற்கரைப் பகுதியில் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த மூவர் எந்தப் பிரச்சனையுமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவா கடற்கரையிலிருந்து 22 மைல் தொலைவில் இன்று காலை 11 மணி அளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதிலிருந்த இராணுவத்தினர் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். அவர்களுக்குச் சிறிய அளவில் காயமேற்பட்டடதாகவும், அவர்கள் கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கியது கோவா!

ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கி கோவா மாநில சட்டமன்றத்தில் செவ்வாய் கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பானாஜியில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டை கோவாவில் தடை செய்திருந்தது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரெஜினால்டோ கொண்டு வந்த ஒரு நபர் தீர்மானத்தை அடுத்து மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜல்லிக் கட்டு சட்டபூர்வமாக்கப் பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்த ரெஜினால்டோ பாரம்பரியமான இந்த விளையாட்டு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார். விவாதத்தின் இடையில் குறுக்கிட்ட அவைத் தலைவர் பிரதாப் சிங் ரானே, ஜல்லிக் கட்டின் மூலம் மிருகங்கள் வதை செய்யப்படக் கூடும் என்று கூறினார். எதிர்கட்சித் தலைவர் மனோகர் பரிகார் மிருகங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மிருகங்களின் பாதுகாப்புகளைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்புடன் ஜல்லிக்கட்டை அனுமதித்து சட்டமியற்றப் பட்டது.

சீக்கியர்களுக்கு எதிராக வருண் பேசியதாக பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் பிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண் சீக்கியர்களுக்கு எதிராகப் பேசியதாக பஞ்சாப் அரசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சியினரும், சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஆளும் அகாலி தள கட்சி இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தில் பிலிபிட் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சீக்கியர்களுக்கு எதிராகப் பேசிய வருணின் பேச்சுக்கள் அடங்கிய சிடிகளை பஞ்சாப் மாநிலம் முழுவதும் விநியோகிக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அகாலி தளம் கட்சிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

வருண் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர். அகாலி தளம் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது பிரகாஷ் சிங் பாதல் வருணுடன் கூட்டணி அமைத்துள்ளது போன்றதே. சீக்கியர் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வருணின் கீழ்த்தரமான விமர்சனங்களை பாதல் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை அவர் விளக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளவில்லை எனில், வருணின் இந்தப் பேச்சு குறித்து அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைக் கூற வேண்டும் என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

வருணின் இந்தப் பேச்சு குறித்து விவாதிக்க ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் குழு என்ற முக்கிய சீக்கிய அமைப்பு வியாழக் கிழமையன்று கூடுகிறது. தள் கல்சா போன்ற சீக்கி அமைப்புகள் வருணின் சீக்கிய எதிர்ப்பு குறித்து அகாலி தளம் மெளனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அசாமில் பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்டார்

"அஜி" என்ற அசாமிய பத்திரிகையின் தலைமைய ஆசிரியரான அனில் மஜூம்தார் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய் கிழமை இரவு 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அசாமியத் தலைநகர் கெளஹாத்தியில் ராஜ்கர் சாலையில் உள்ள அவரது வீட்டினருகே இளைஞர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி வீட்டின் வாயிற்கதவைத் திறக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத 7 பேர் அவரைத் தாக்கியதாகவும் பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!