Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

உயர்நீதி மன்ற கலவரம் : காவல் அதிகாரிகள் இடைநீக்கம்!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி வழக்கறிஞர்கள் - காவலர்கள் இடையே நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல் துறை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் ராமசுப்ரமணியம் ஆகியோரை இடை நீக்கம் செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கறிஞர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் பணித்துள்ளது.

மன்னிப்புக் கேட்கப் போவதில்லை - வருண்!

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்களும் வருணின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று வருண் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தான் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறிய அவர், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் தாம் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சமூக அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக இவர் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் செவ்வாய் கிழமை உத்தரவிட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியிடம் இவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு அக்கட்சிக்கும் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

நான் என்னுடைய நம்பிக்கையில் பெருமிதம் அடைகிறேன். இதற்காக எவரிடமும் மன்னிப்புக் கோரப் போவதில்லை. நான் காந்தி, இந்து, இந்தியன். அரசியல் காழ்ப்புணர்வில் நான் பலியாக்கப் பட்டுள்ளேன். நான் பேசியதாக ஒலிபரப்பானவை என் பேச்சுக்கள் அல்ல. அது என் குரலும் அல்ல. சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் நான் எதுவும் பேசவில்லை என்றும் வருண் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அலிபுர்துவார் நகரில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயமுற்றுள்ளனர்.

நகரின் செளபதி என்ற பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே இந்த சைக்கிள் குண்டு வெத்ததாக மேற்கு வங்க வடக்குப் பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் கூறினார். இந்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என்றும் அதன் தன்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இது உல்பா இயக்கத்தினரின் செயலாக இருக்குமா? என்ற கேள்விக்கு உல்பா இயக்கத்தினர் இங்கு ஏன் வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெருமளவிலான வெடிகுண்டுகள் பறிமுதல்

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் பெருமளவிலான வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தைக் காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று பறிமுதல் செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலை சீர் குலைக்கும் வகையில் இந்த குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கக் கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் அனுமானித்துக் கூறினர்.

ஜஷ்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த லோடம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் அமோனியம் நிட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், கன்னி வெடி தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் என சுமார் 5000 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

12போர் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தப் படும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் 17, 750 மற்றும் 9 மிமி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் சுமார் 1,550 போன்றவையும் இந்த வாகனத்தில் இருந்து கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது. காவலர்களைக் கண்டதும், இந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பீகாரிலிருந்து இந்த வாகனம் வந்ததாகவும், அரிசி மற்றும் உணவுப் பொருட்களுக்கு அடியில் இந்த ஆயுதங்களைப் பதுக்கி எடுத்து வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாலுவின் மைத்துனர் காங்கிரசில் இணைந்தார்

ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.

"நான் காங்கிரசில் இணைவதற்காக இங்கு வந்துள்ளேன். அவர்களுக்கு (ராஷ்டிரீய ஜனதா தளத்தினருக்கு) என்னுடைய அனுதாபங்களை கூறிவிட்டேன். கண்டிப்பாக நான் தேர்தலில் போட்டியிடுவேன். எங்கு, எப்படி என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் இக்பால் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சாது யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வானிடம் லாலு பிரசாத் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

சாது யாதவ் தற்போது கோபால்கன்ஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!