Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

'அழகு சாதன பொருட்கள்' - அரசின் பார்வையில்!

Published on: வியாழன், 5 பிப்ரவரி, 2009 // , , , ,
புகையிலை, பான்பராக் போன்ற போதை பொருள்களை பொது இடங்களில் உபயோகிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது தெரிந்ததே.

திரைப்படத்தில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்குமாறும் அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டிருந்தார். பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் அழகு சாதனங்களாக நடமாடும் வேதிப்பொருட்களை குறிவைத்துள்ளது.
இளம் வயதினரிடையே அழகு சாதன பொருட்கள் மீதும் மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான உள் நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களும் சந்தையில் களமிறங்கி உள்ள நிலையில் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவோருக்கு சுகாதார அமைச்சகம் 'செக்' வைத்திருக்கிறது. விளம்பரத்தில் சொல்லப்படுவது போல உண்மையிலேயே அழகு சாதனங்கள் அழகு கூட்டுகிறதா, உடல்நலத்துக்குக் கேடான வேதிப்பொருட்கள் கலக்காமல் இருக்கின்றனவா? என்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆய்வு செய்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பில் அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் சொல்லப்படுவதை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அறிவியல் ரீதியான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள், மதுவுக்கு எதிராகவும், அமைச்சர்அன்புமணியின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

கல்யாண் சிங் மன்னிப்பை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு

கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக உ.பி. முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதுமே அதற்கு பொறுப்பேற்று தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதாகவும் பாபர் மசூதி இடிப்புக்காக தற்போது மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொல்லியிருந்தார். முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பா.ஜ கவை வீழ்த்துவதற்காக முலாயம்சிங் யாதவுடன் அணி சேர்ந்து இருப்பதாகவும் கல்யாண்சிங் கூறியிருந்தார்.


முலாயம்சிங்குடன் கல்யாண்சிங் கூட்டு சேர்ந்ததை முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ள அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு கூறி இருந்தும், கல்யாண்சிங் மன்னிப்பை முஸ்லிம் தலைவர்கள் நிராகரித்து உள்ளனர்.

ஜாமியத்துல் உலமா அமைப்பு நிர்வாகி மவுலானா ஹமீது "கல்யாண்சிங்கின் இந்த மன்னிப்பு அரசியல் சந்தர்ப்ப விதம் ஆகும். இதை ஏற்க இயலாது" என்று கூறியுள்ளார். "இந்த குற்ற செயலுக்காக அவர் இறைவனிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் அவர்.

பாபர் மசூதி நடவடிக்கை குழு முன்னாள் உறுப்பினர் செய்யது சகாப்தீன் "முஸ்லிம்களைபற்றி தவறாக கணக்கு போட்டுள்ளனர்.இது ஒரு அரசியல் நாடகம்" என்று கூறியுள்ளார்.

அலிகார் முஸ்லிம் பல்கலை கழக பேராசிரியர் மொகிபுல் ஹக் கூறுகையில், இந்துத்துவாவில் இருந்து மதசார்பற்ற அணிக்கு கல்யாண்சிங் வந்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்டதற்காக முஸ்லிம்கள் ஓட்டுகள் சமாஜ்வாடிகட்சி எந்த வகையிலும் உதவாது என்றார்.

கஸபிற்கு எதிராக டி.என்.ஏ ஆதாரம்.

மும்பை தீவிரவாதத் தாக்குதல்இல் கைது செய்யப்பட்ட அஜ்மல் ஆமிர் கஸப் மற்றும் தீவிரவாதிகள் இந்தியாவிற்குக் கடல் வழியாக வர உபயோகித்த குபேர் என்ற படகிலிருந்துக் கிடைத்த ஓவர்கோட்டிலிருந்துச் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ சாம்பிள்களுக்கிடையில் ஒற்றுமையுள்ளதாக மும்பை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா அறிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் குபேர் என்றப் படகில் தான் இந்தியா வந்தனர் என்பதற்கான ஆதாரமாகவும் இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கஸப் இறந்து விட்டதாக முன்பு பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், கையில் கட்டுகளுடன் கைவிலங்கு அணியப்பட்ட நிலையில் கஸப் இருக்கும் புதிய புகைப்படங்களைக் கடந்த தினங்களில் தொலைகாட்சிகள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோலோகாஸ்டை மறுத்த பிஷப் கருத்தை திரும்பப் பெற உத்தரவு


ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகள் நடக்கவே இல்லை என்று கூறிவந்த பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட்சன் என்ற பிஷப் உட்பட 4 பிஷப்கள் 1988ஆம் ஆண்டு கிருத்தவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். கடந்த மாத இறுதியில் இந்த நான்கு பிஷப்புகளையும் மீண்டும் கிருத்தவ திருச்சபையில் இணைத்து போப் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ரிச்சர்ட் ஹோலோகாஸ்ட் நடந்தது உண்மை என்பதை ஒப்புக்கொண்டு அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கத்தோலிக்க தலைமையகமான வாட்டிகன் நேற்று உத்தரவிட்டுள்ளது. நான்கு பிஷப்புகளும் ஹோலகாஸ்டை மறுப்பவர்கள் என்பது போப்புக்குத் தெரியாமல் இருந்தது என்று நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தப் பிரச்சனையை வாட்டிகன் தவறாக அனுகிவிட்டதாக மூத்த கர்டினல் கூறியதாக பி.பிசி. கூறுகிறது. நால்வரையம் மீண்டும் திருச்சபையுடன் இணைக்க போப் உத்தரவிட்டதும் பல்வேறு யூத அமைப்புகளும் போப்பின் செயலைக் கண்டித்திருந்தன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!