Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சூடான் கலவரம், 57 பேர் கொல்லப்பட்டனர்!

Published on: திங்கள், 2 மார்ச், 2009 // , , , , ,
தெற்கு சூடானில் இராணுவத்தினருக்கும் பிரிவினை போராளிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் சுமார் 57 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 16 பேர் பிரிவினைவாதிகளும் 18 பேர் இராணுவத்தினருமாவர். காயமடைந்தவர்களில் அதிகமானவர்களும் சாதாரண பொதுமக்களாஅவர்.

நாடாளுமன்றத்தேர்தல் தேதி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும்,என்று தேர்தல் கமிஷனர் என்.கோபால் சாமி அறிவித்துள்ளார்

முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 16-ந் தேதி தொடங்குகிறது.

2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது.

3-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 30-ந்தேதியும்,

4-ம் கட்டத் தேர்தல் மே 7-ந்தேதி,

5-ம் கட்டத் தேர்தல் மே 13-ந்தேதி நடைபெறுகிறது.

கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறும் மே-13ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது.

மே 16-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் கமிஷனர் என்.கோபால் சாமி அறிவித்தார்.

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் 61.7 பில்லியன் டாலர் நட்டம்!

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் (AIG) 2008 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 61.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய்) நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க காப்பீட்டு நிறுவத்தின் இந்த அறிவிப்பு பங்கு சந்தைகளில் எதிரொலித்தது.

இந்நிறுவனத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசு கூடுதலா 30 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கிய பொருளாதார உதவியில் அரசிடமிருந்து அதிக உதவி பெற்ற நிறுவனம் இதுவே. இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே 150 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன.

அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் வீழ்ச்சியடைந்தால் அது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு: +2 தேர்வுகள் இன்று தொடங்கின

தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளி தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 25-ந் தேதியும், மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 18-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ப்ளஸ் டூ எனப்படும் மேல்நிலைப்பள்ளித் தேர்வுகள் இன்று தொடங்கின. 1738 மையங்களில் நடக்கும் தேர்வுகளில் ஆறுஇலட்சத்து எண்பதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வுகளைக் கண்காணிப்பதற்காக 3000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மூத்த ஆசிரியர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள் இப்படைகளில் இடம் பெற்றிருப்பார்கள்.

தேர்வு முடிவுகளை முடிவு வெளியிட்ட உடன் இலவசமாக அறிய பள்ளிக்கல்வி இணையதளத்தில் இப்போதே மாணவர்கள் தங்கள் தேர்வு ரிஜிஸ்டர் எண் மற்றும் தங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை இப்போதே பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"தி மு க கூட்டணியில் தொடர்வோம்": திருமா

திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியை சந்தித்து வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என்றார்.

ஈழப்பிரசினையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும் காங்கிரஸ்ஸுக்கும் கடுமையான கருத்துவேறுபாடும் மோதல்களும் ஏற்பட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விடுதலைச்சிறுத்தைகளை நீக்கவேண்டும் என்று காங்கிரஸ் திமுகவை நெருக்குவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனையில் சந்தித்துவந்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் "விடுதலைச்சிறுத்தைகளை கூட்டணியிலிருந்து நீக்கமாட்டோம்" என்று தாம் காங்கிரஸை நெருக்கப்போவதாக முதல்வர் தெரிவித்தார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் "எங்களுக்கு திமுகவுடன் தான் கூட்டணி, திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணியில் இல்லை" என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரண தண்டனைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்!

மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கோரி வரும் வேளையில், மரண தண்டனைக்கு ஆதரவாக உச்சநீதி மன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பழிவாங்கலுக்காகச் செய்யப்படும் கொலைகளுக்கு வேண்டுமானால் மரண தண்டனை அளிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொலை மற்றும் அப்பாவி மக்களை கொலை செய்தல் போன்றவற்றிற்கு மரண தண்டனை விதிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் முகுந்தம் சர்மா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சார்ந்த 6 பேரைக் கொலை செய்த இருவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் மரண தண்டனையிலிருந்து வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்திருந்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த கருத்து கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கை கருணை செலுத்தத் தகுதியற்றவர்கள் மீது கருணை செலுத்தப்படும்போது பாதிக்கப்படும் என்றும் எனவே குற்றங்களின் தன்மையைப் பொறுத்து அதற்கான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அண்மைய அறிக்கைபடி இந்தியச் சிறைகளில் 400 மரண தண்டனைக் குற்றவாளிகள் இருக்கின்றனர் எனவும் இவர்களில் 120 பேர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் திரினாமுல் காங்கிரஸ் கூட்டணி?

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜியை ஞாயிற்றுக் கிழமை இரவு கொல்கத்தாவில் சந்தித்துப் பேசினார். தெற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசவ் ராவும் உடன் இருந்தார்.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே மம்தா பானர்ஜி போட்டியிட உத்தேசித்துள்ள தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற பிஷ்னுபூர் இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் போட்டியிலிருந்து விலகியது. இதனையடுத்து அத்தொகுதியில் திரினாமுல் வேட்பாளர் மதன் மித்ரா மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் இஸ்கந்தர் ஹொசைனைவிட 30, 395 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.

1977ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆளுகையில் மேற்கு வங்கம் இருந்து வருகிறது.

40 கார்களின் இசைக்கருவிகள் திருட்டு!

டில்லியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 கார்களில் இருந்த இசைக்கருவிகள் திருடப்பட்டுள்ளன. டில்லியின் மயூர் விஹார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 40 கார்களின் கண்ணாடிகளை உடைத்து திருடப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை கூறியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஒரு காரின் டிரைவர் சாவியை உரிமையாளரிடமிருந்து வாங்கி காரின் அருகே சென்று பார்த்தபோது அந்தக் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இசைக் கருவி திருடப்பட்டிருப்பதை அறிந்து காரின் உரிமையாளரிடம் சென்று கூறினார். உரிமையாளர் தன்னுடைய காரைப் பார்த்துவிட்டு அருகிலிருந்த கார்களைப் பார்த்தபோது, அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த 40 கார்களின் கண்ணாடிகளையும் உடைத்து இசைக்கருவிகள் திருடப்பட்டிருந்ததை அடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!