Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வங்கதேசம்: இராணுவப்புரட்சிக்கு பாகிஸ்தான் தூண்டல்?

வங்காளதேசத்தில் அண்மையில் துணை இராணுவமான எல்லைப் பாதுகாப்பு படையினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டு ஏராளமான அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக்கொன்றனர். இதில் 200 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைந்து விட்டாலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டதுடன் புரட்சிகாரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். விசாரணையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு புரட்சி செய்து இருப்பதும் பின்னணியில் சலாலுதீன் செளத்ரி என்ற தொழில் அதிபர் இருந்ததும் தெரிய வந்துள்ளது. சலாலுதீன் செளத்ரி சிட்டாகாங் நகரை சேர்ந்த கப்பல் நிறுவன அதிபர்.

முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு நெருக்கமான இவருக்கு பாகிஸ்தான் உளவுப்படையான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆக, சலாலுதீன் சவுத்திரி பாகிஸ்தான் மற்றும் கலீதா ஜியாவின் தூண்டு தலால் இந்த சதி திட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக கூறப்படுகிறது

துணை இராணுவப்படை மூலம் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொன்று விட்டு ஆட்சியை கைப்பற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு தொடர்பாக முழுமையான விசாரணை நடந்து வருகிறது.

ஹைதராபாத்: சோனியாகாந்தி கூட்டத்தில் ரகளை

நேற்று ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கலந்து கொண்டார். மாதிகா ரிசர்வேஷன் போராட்ட சமிதி (அருந்ததியர் இட ஒதுக்கீட்டு போராட்டக்குழு) என்ற அமைப்பினர் தங்கள் இனத்தவரை தாழ்த்தப்பட்டோராக வகைப்படுத்தியதில் காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டதாகக் கூறி ரகளையில் ஈடுபட்டனர்.

உடனடியாக காவல்துறை தலையிட்டு அந்த அமைப்பினரை வெளியேற்றினார்கள். இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் மற்றொரு கோஷ்டியினர் மீண்டும் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன.
காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன

தபால் நிலையத்தில் இனி மருந்துகள் வாங்கலாம்!

இந்தியாவின் தபால்தந்தி துறை ஆண்டொன்றுக்கு ரூ.500 கோடி நஷ்டமடைவதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த நஷ்டத்தை சரிகட்டுவதற்காக அத்யாவசிய மருந்துகளையும், பிற பொருட்களையும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வந்தது.

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறை ப்படுத்தப்படலாமென்று தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது.

ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற தலைவலி, காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள், வைட்டமின், தாதுக்கள் மருந்து, பிற பொது மருந்துகள் இவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, சாதாரண பசை போன்ற, எழுதுபொருட்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்களும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட திட்டம் உள்ளது. சாதாரண மக்களும் இணைய தள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் இணைய தள வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர்வாசிகள் குறைந்த கட்டணத்தில், கணினி கல்வி பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பரிட்சார்த்த கட்டமாக தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தபால் நிலையங்களில் வணிக ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

மற்ற கடைகளை விட விலை குறைவாகவும் அதே சமயம், விற்பனையாளர்களுக்கு விற்பனை ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் இத்திட்டம் வெற்றி பெறும் என்று நம்புவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மன்மோகன் மேலும் ஒரு வாரம் ஓய்வில்!

இதய அறுவை சிகிச்சை செய்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

கடந்த 26ம்தேதி நாடாளுமன்றத்தின் இறுதிக்கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் பெரிதும் விரும்பியிருந்தார். எனினும் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறிவிட்டதால்
மேலும் ஒருவார ஓய்வுக்குப்பின் பிரதமர் மன்மோகன் சிங் பணிக்குத் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் தற்போது கடும் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறார்.
என்று பிரதமர் உடல்நிலைக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தியா: தேர்தல் எப்போது?

இந்தியாவின் 12 ஆம் நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும் பொதுதேர்தல் எப்போது என்ற அறிவிப்பை நடுவண் தேர்தல் ஆணையம் இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியிடும் என்று தெரிகிறது.

தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன்சாவ்லா விடுப்பில் உள்ளதால், அவர் பணிக்குத் திரும்பியதும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி ஏப்ரல் 20ம்தேதி ஓய்வு பெற இருப்பதால் தேர்தல் அதற்கு முன்பாகவே இருகட்டங்களாக நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இம்முறை தேர்தலுக்கான செலவு ரூ.15,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையரை நீக்கக்கோரிய மனு நிராகரிப்பு

இந்தியாவின் தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான நவீன்சாவ்லாவை அப்பொறுப்பிலிருந்து விலக்கிவிடும்படி தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் அந்த கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியரசுத்தலைவரின் இம்முடிவுக்கு பாரதியஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா மொரீஷியசுக்கு துருவ் ஹெலிகாப்டர் அளிக்கிறது!

இந்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் குறைந்த எடையுள்ள "துருவ்" ஹெலிகாப்டர்களை மொரீஷியசுக்கு விற்பனை செய்ய இந்திய அரசும் மொரிஷீயஸ் அரசும் இன்று ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த வகை ஹெலிகாப்டரில் ராக்கெட்டுகள் மற்றும் 20 mm துப்பாக்கிகளைப் பொருத்த முடியும். வான் தாக்குதலுக்கான ஏவுகணைகளையும் பொருத்த முடியும். இதன் விலை 7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இந்தியாவிலிருந்து ஹெலிகாப்டர்களை வாங்கும் இரண்டாவது நாடு மெரிஷீசியஸ் ஆகும். இதற்கு முன் ஈகுவெடார் இந்தியாவிடமிருந்து இத்தகைய ஹெலிகாப்டர்களை வாங்கியிருக்கிறது. இதுவரை ஈகுவெடாருக்கு 5 ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுவிட்டன. மேலும் இரு ஹெலிகாப்டர்கள் 6 மாதத்திற்குள் அனுப்பப்படும்.

பாராளுமன்ற தேர்தல் செலவு 10 ஆயிரம் கோடி!

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையான ரூ.10 ஆயிரம் கோடி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமானதாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் செய்த செலவுகள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 ஆயிரம் கோடி மட்டுமே.


சமீபத்திய ஆய்வின்படி தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான செலவு ரூ.10 ஆயிரம் கோடி. இதில் ரூ.2,500 கோடி வாக்களிக்கும் மக்களுக்கு அளிப்பதற்காக செலவிடப்படுகிறதாம்.

பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது செலவிடப்பட உள்ள தொகையும் கடந்த தேர்தலை விட இரண்டு மடங்காகும்.


கடந்த லோக்சபா தேர்தலில் செலவிடப்பட்ட ரூ.4500 கோடியே வரலாற்றிலேயே அதிகமானதாக கருதப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!