Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தேர்தல் ஆணையரை நீக்க தலைமைத் தேர்தல் ஆணையர் பரிநதுரை

தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர்  கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.

நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அவர் அக்கட்சிக்கு சார்பாக நடந்து கொள்கிறார் என்றும் பாரதீய ஜனதா கட்சி ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரும் இக்கோரிக்கையை வைத்திருப்பதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கோபால் சாமியின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவருக்குப் பின் நவீன் சாவ்லாதான் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பார்.  பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்பரிந்துரையால் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் அரசியல் வெளிப்பட்டுள்ளதாகக் கருத முடிகிறது.

தலைமைத் தேர்தல் அதிகாரியின் இப்பரிந்துரையை ஏற்று நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் டி. ராஜா, இப்பரிந்துரை அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றம் சுமத்தினார்.

நடிகர் நாகேஷ் காலமானார்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

அண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.

தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் பூர்வீகம் மைசூர். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். கர்நாடக மாநிலம் அரிசிக்கரேயில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தவர். தாயார் ருக்மணி அம்மாள். ஆரம்பகாலக்கட்டத்தில் இவர்கள் தமிழகத்தில், தாராபுரத்தில் வசித்து வந்தனர். நாகேஷின் முழுப்பெயர் நாகேஸ்வரன்.

'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆசியாவின் தூய்மை கிராமம் மெளலினாங்


மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மெளலினாங் என்ற கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

"டிஸ்கவரி இந்தியா" எனும் புகழ்பெற்ற சுற்றுலா இதழில் பணிபுரியும் இத்துறை வல்லுநர்களால் இந்த கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அழகிய இந்த கிராமத்து மக்கள் 
தங்கள் கிராமத்தை தூய்மை படுத்துதல், சாலைகளில் செடிகளை வளர்த்து அதனைப் பராமரித்து வருதல் என்று அரசை எதிர்பார்க்காமல் தாங்களாகவே செய்து கொள்கின்றனர். சிறு குழந்தைகள் கூட இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். குழந்தைகள் குப்பைகளை சாலைகளில் போடுவது இல்லை.

மூங்கிலால் பிண்ணப்பட்ட கூடைகளை கிராமத்தின் முக்கிய இடங்களில் வைத்து அதில் மட்டுமே குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.

நமது கிராமத்தையும் அழகிய கிராமமாக ஆக்க முயல்வோம்.

ஹரியானா முன்னாள் முதல்வரின் மனைவி கைது

ஹரியாணா முன்னாள் முதல்வரின் இரண்டாவது மனைவி தன்னுடைய கணவர் கடத்தப்பட்டதாக புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை முன்னாள் முதல்வர் மறுத்ததும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தான் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் சக்திவாய்ந்த தூக்க மாத்திரை உட்கொண்டதால்தான் இந்நிலை ஏற்பட்டதாகவும் கூறிய பிஜா, சாந்து முகம்மது பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார். இல்லையெனில் தன்னைப் பார்க்க மருத்துவமனை வந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

ஹரியாணாவின் முன்னாள் முதல்வர் சந்தர் மோகன் என்ற சாந்து முகம்மது அனுராதா பாலி என்ற பிஜாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காகவே இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் மதத்துக்கு மாறினர் என்பது குறிப்பிட்த் தக்கது.

பா.ஜ.க.வை ஆதரிக்க சிவ சேனை நிபந்தனை

பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலை தெளிவாக அறிவிக்கப் பட்டதால்தான் அத்வாணி பிரமாராக சிவசேனை ஆதரவளிக்கும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் மராட்டியர் அதிகமாக வாழும் பகுதியாகும். நீண்ட நாட்களாகவே கர்நாடகாவுக்கும் மகாரஷ்டிராவுக்கும் இது குறித்து பிரச்சனை இருந்து வருகிறது. பெல்காம் மாவட்டத்தை இழக்க விரும்பாத கர்நாடகா பெல்காமை தனது இரண்டாவது தலைநகரம் என்றறிவித்து அங்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராகத் தங்களது ஆதரவு வேண்டுமேனில் பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனை நிபந்தனை விதித்துள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவர்களில் ஒருவருமான மனோகர் ஜோஷி இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மற்றும் அத்வானி ஆகியோரை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்தாலும் பெல்காம் பகுதியில் உள்ள மராட்டி மொழியினர் மிகவும் கஷ்டப் படுகின்றனர் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!