Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

15 ரூபாய்க்காக தாயைக் கொன்ற மகன்

Published on: புதன், 14 ஜனவரி, 2009 //
குடிப்பழக்கம் உள்ள பக்குராம் தன்னிடம் குடிப்பதற்குப் பணம் இல்லாததால் தாயிடம் 15 ரூபாய் கேட்டான். மகன் குடிப்பதை விரும்பாத தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டாள். இதனால் கோபமடைந்த மகன் 58 வயதான ஹிர்மத் பாய் என்ற தன்னைப் பெற்ற தாயையே கொலை செய்துவிட்டான்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தின் கயா எனும் கிராமத்தில் கடந்த திங்கள் கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பக்குராம் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், கொலை செய்யும்போது குடித்திருந்ததாகவும் கூறியதாக உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் 17 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக லெபனானின் எல்லையிலிருந்து 4 ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லையில் வந்து வீழ்ந்ததாகவும் அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலைத் தொடுத்தது எனவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது கடந்த 19 நாட்களாக இஸ்ரேல் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில் நடக்கும் இரண்டாவது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக கடந்த 8ஆம் தேதியன்று இதுபோன்று தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. இந்த தாக்குதல்களை தாங்கள் மேற்கொள்ளவில்லை என லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏற்கனவே கூறியிருந்தன.

கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனான் மீதும், ஹிஸ்புல்லாஹ்வின் தொலைக்காட்சி நிலையம், அதன் தலைமையகம் உள்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து வான் தாக்குதல்களைத் தொடுத்தது. ஐ.நா. தலையீட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தெற்கு லெபானனின் இஸ்ரேலிய எல்லைப் பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இராணுவம் கண்கானித்து வருவது குறிப்பிடத் தக்கது.

ஐ.நா. செயலாளர் எகிப்து வருகை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுவிட்டதாகவும், 4500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சன்டையை நிறுத்த வேண்டும் என்று இரு தரப்பினரையும் வலியுறுத்தினார். இஸ்ரேல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் 19ஆவது நாளாகத் தாக்குதலை தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சற்று முன் வந்து சேர்ந்தார். இங்கு எகிப்து அதிபர் முபாரக்குடன் பேச்சு வார்ததை நடத்துகிறார். அதன் பின்னர் இஸ்ரேல், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களை அவர் சந்திக்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

மும்பை சம்பவம் - பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பில்லை : பிரிட்டன்

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை உதவியுடன் நடத்தப்பட்டது என்று இந்திய அரசு கூறி வரும் நிலையில் அதனை பிரிட்டன் மறுத்துள்ளது.

"மும்பை தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசால் நடத்தப்பட்டதல்ல என்று உறுதியாக நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தேன். அதனை மீண்டும் கூறுவது அவசியமானது என்று நான் நம்புகிறேன்" என்று பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் நேற்று கூறினார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உபயோகித்த சாட்டிலைட் போன் தகவல்கள் மற்றும் உயிருடன் பிடிபட்டுள்ள கசாப்பின் வாக்கு மூலம் ஆகியவற்றை இந்தியா பாகிஸ்தான் அரசிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தது.

இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும், இவை வெறும் தகவல்கள்தான் எனவும் பாகிஸ்தானின் பிரதமர் கூறியுள்ளார்.

போலி விமான விபத்து

அமெரிக்காவைச் சேர்ந்த மார்கஸ் ஷ்ரன்கர் (வயது 38) என்ற விமான ஓட்டி பல்வேறு நிதி மோசடி வழக்குகளில் சிக்குண்டு காவலர்களால் தேடப்பட்டு வந்தார். இந்த வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக இவர் போலியாக விமான விபத்து சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை இன்டியானா மாநிலம் ஆன்டர்சன் நகரிலிருந்து ப்ளோரிடாவுக்கு விமானத்தில் பறந்தார். அலபாமா மாநில எல்லையில் இருக்கும் போது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு போலியாக அவசர அழைப்பு விடுத்து தனது விமானத்தின் இறக்கைகள் சேதமடைந்துள்ளதாக தகவல் தந்தார். பி்ன்பு விமானம் தானாகவே இயங்கும் வகையில் ஏற்பாடு செய்தார். பின்பு பாராசூட்டைக் கட்டிக் கொண்டு விமானத்திலிருந்து குதித்துவிட்டார். விமானம் ப்ளோரிடா மாநிலம் மில்டன் நகர் அருகே தரையில் விழுந்தது.

இப்படி அவர் செய்யக் காரணம் தான் இறந்துவிட்டதாகப் பதியப்பட்டு விட்டால் நிதி மோசடி வழக்குகளிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்காக. ஆனால் அவர் போலியாக விடுத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து அவரது விமானத்திற்கு உதவி செய்ய இராணுவ விமானம் ஒன்று விரைந்து வந்தது. அவர்கள் அந்த விமானத்தின் அருகி்ல் வந்து பார்த்தபோது விமானத்தின் கதவு திறந்த நிலையில் இருப்பதை அறிந்தனர். எனினும் விபத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் அலபாமா நகரில் ஒருவர் கால் முட்டியில் காயத்துடன் தனது ஓட்டுநர் உரிமத்தைக் காண்பித்து தனக்கு உதவி தேவை என்று காவலர்களிடம் கோரினார். ஓட்டுநர் உரிமத்தி்ல் ஷ்ரன்கர் என்று அவர் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. தான் ஒரு விபத்தில் அடிபட்டதாகக் கூறிய அவரை காவலர்கள் ஒரு விடுதியில் தங்க வைத்தனர். சற்று நேரத்திற்குள் அலபாமா காவலர்களுக்கு போலி விமான விபத்து தகவல் வந்து சேர்ந்தது. விடுதிக்கு வந்து ஷ்ரன்கரைத் தேடியபோது அவர் தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது.

வட இந்தியாவில் குளிருக்கு 100 பேர் பலி

Published on: //
இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. குளிரின் காரணமாக இதுவரை சுமார் 100 பேர் இறந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குளிர் மட்டுமல்லாது கடும் பனியும் பொழிவதால் சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. பல இரயில்கள் தாமதமாக புறப்பட்டன.

ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிர்தசரசில் 3.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. நேற்று காலையில் டில்லியில் கடும் குளிராக இருந்தது. டில்லியின் வெப்ப நிலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது. வழக்கமான சராசரி அளவை விட இது குறைவாகும்.

உத்திரப் பிரதேசத்தில் குளிரின் காரணமாக நேற்று 4 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இம்மாநிலத்தின் முஜப்பர்நகர் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 பேர் குளிரின் காரணமாக இறந்துள்ளனர்.

இந்தியா ஆதாரங்கள் வழங்கவில்லை - பாகிஸ்தான்!

Published on: //
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் குறித்த ஆதாரங்களை இந்தியா வழங்கவில்லை என பாகிஸ்தான் அதிபர் கிலானி தெரிவித்துள்ளார்.

"இந்தியா வழங்கியவை ஆதாரங்கள் அல்ல எனவும் ஆதாரங்கள் என்ற பெயரில் சில விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளனர் எனவும்" கிலானி தெரிவித்தார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் - முக்கிய சாட்சி மாயம்!

Published on: //
கடந்த நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்தத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை நேரடியாக கண்ணால் கண்ட 47 வயதுடைய அனிதா ராஜேந்திர உதயா என்ற முக்கிய சாட்சியைக் காணவில்லை. இவர் எங்கு சென்றார் என்பதைக் குறித்து குடும்பத்தினருக்கோ காவல்துறைக்கோ எவ்விதத் தகவலும் தெரியவில்லை.

தாக்குதல் நடந்த நாளில் மீன்பிடி படகில் அமர்ந்திருந்த இவர், கப் பரேடிலுள்ள பத்வர் பார்க்கில் படகில் வந்திறங்கிய 6 தீவிரவாதிகளைப் பார்ந்திருந்தார். தாக்குதலுக்குப் பின்னர் ஜெ.ஜெ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இந்த 6 பேரின் உடல்களை இவர் அடையாளம் கண்டிருந்தார்.

இதற்குப் பின்னர் அனிதாவிற்கு மிகுந்த பயம் இருந்ததாக மகள் சீமா கேதல் ஜோஷி கூறினார். சீமா தெரிவித்தப் புகாரின் அடிப்படையில் கப் பரேட் காவல்துறை விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!