Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆதாரங்களுக்கு பதில் தராத பாகிஸ்தான்!

Published on: ஞாயிறு, 11 ஜனவரி, 2009 // ,

இந்தியா சமர்ப்பித்துள்ள ஆதாரங்களுக்கு இதுவரை ஏதும் பதில் தரவில்லை பாகிஸ்தான்.

மும்பை பயங்கரவாதம் தொடர்பான ஆதாரங்களைப் பாகிஸ்தானிடம் சமர்ப்பித்தது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சரான ஆனந்த் ஷர்மா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மும்பையின் இப் பயங்கரவாதச் செயலில் தொடர்புடைய தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் அவை மீதான அரசின் நடவடிக்கை பற்றியும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஷர்மா.

மேலும், பாகிஸ்தான் இச்செயலைச் செய்தது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்றை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்றார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இனை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பிக்கப் பட வேண்டும் என்று பிஜேபியின் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று பாஜக நேற்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on: //
சென்னையிலுள்ள பாம்குரோ நட்சத்திர ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் இல்லையேல் ஹோட்டலை குண்டு வைத்துத் தகர்ப்போம் எனவும் மும்பையிலிருந்து அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

மிரட்டலைக் குறித்து ஹோட்டல் உரிமையாளர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை ஹோட்டலைச் சுற்றிப் பலத்தப் பாதுகாப்பு போட்டுள்ளது. மின்னஞ்சலை அனுப்பியவரைக் குறித்த விசாரணையும் துரிதபடுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் சமீபத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் நினைவு மறையும் முன், மற்றொரு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய்பாபா கோயில் சுவர் தங்க அலங்காரம் செய்யப்படுகிறது

Published on: //
ஷீரடியில் ஸ்ரீ சாய்பாபா சிலையைச் சுற்றி உள்ள நான்கு சுவர்களும் தங்கத் தகடுகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக 50 கிலோ தங்கம், 50 கிலோ வெண்கலம், 250 கிலோ தாமிரம் ஆகியவை உபயோகிக்கப் படுகின்றன. இந்தப் பொருள்களை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆதிநாராயண ரெட்டி என்ற வணிகர் சாய் சனாதன் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக அளித்ததாகக் கூறப்படுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த ராஜா அழகர் என்பவர் இதனை வடிவமைத்தார். இவர் ஏற்கனவே திருப்பதி  பாலாஜி போன்ற கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு இவரது மனைவி சாய்பாபாவிற்கு தங்க சிம்மாசனம் வழங்குவதாக கனவு கண்டு அதனை சாய்பாபாவிடம் கூற அதைச் செய்து தரும்படி சாய்பாபா கூறினார்.  சுமார் 100 கிலோ தங்கத்தில் 90 கோடி ரூபாய் செலவில் அழகரின் வடிவமைப்பில் செய்து சாய்பாபாவுக்கு காணிக்கையாக அளித்தார்.

இந்தியாவிலேயே சாய்பாபா கோயில் திருப்பதிக்கு அடுத்து செல்லவமிக்கதாகும். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 81 கோடி ரூபாய், 120 கிலோ தங்கம் மற்றும் 440 கிலோ வெள்ளி ஆகியவை சாய்பாபா கோயிலுக்கு காணிக்கையாகக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

காஸா நகரை நெருங்குகிறது இஸ்ரேலிய இராணுவம்

Published on: //


கடந்த 16 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 860க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  3500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். 

இஸ்ரேலிய இராணுவம் காஸா நகரை வேகமாக நெருங்கி வருவதாக செய்திகள் கூறுகின்றன. காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற பாலஸ்தீனிய குழுக்கள் 
இஸ்ரேலிய இராணுவத்துடன் கடுமையாக சன்டையிட்டு வருகின்றன.

பாலஸ்தீனிய குழுக்கள் இஸ்ரேலிய நகரைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 80க்கும் மேற்பட் இஸ்ரேலிய இராணுவத்தினர் காயமுற்றதாகவும் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 2 இராணுவ வீரர்கள் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய குழுக்கள் கூறி உள்ளன.

LAW எனப்படும் டாங்கர் எதிர்ப்பு ஆயுதம் மற்றும் சில ஆயுதங்களையும் பாலஸ்தீனிய குழுக்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிதம்பரம் அமெரிக்கப் பயணம் ரத்து

Published on: //
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அமெரிக்கா செல்ல இருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியாகி இருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கான்டலீசா ரைசைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் உள்துறை அமைச்சர் தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி அமெரிக்க செல்ல இருக்கும் நிலையில் இந்திய உள்துறை அமைச்சரின் பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தலைவர்களில் ஜர்தாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிதம்பரம் வருகை குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் கேட்டபோது, சிதம்பரம் அவர்களை எந்நேரமும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போது காஸா பிரச்சனையில் தனது கவனத்தைச் செலுத்தியிருப்பதால் கான்டலீசா ரைசுக்கு நேரம் இல்லை என்று கூறினார்.

கற்பழிப்புக்குப் பழி மூன்றுபேர் கொலை

Published on: //
தன்னுடைய ஐந்து வயது மகளைக் கற்பழித்த ஒருவனின் குடும்பத்தினர் மூன்று பேரைக் கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டார் அச்சிறுமியின் தந்தை. உத்திரப் பிரதேச மாநிலம் சீத்தாபூர் அருகில் உள்ள லெஹர்பூர் எனும் கிராமத்தில் நேற்று இந்நிகழ்வு நடந்தது. சிறுமியைக் கற்பழித்ததாய் பிரமோத் என்பவர் மீது இம்மாதம் 2ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சீத்தாபூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப் பட்ட சிறுமியின் தந்தை தனது உறவினர்களுடன் சென்று பிரமோதின் தந்தை மற்றும் இரு சகோதரர்களைச் சுட்டுக் கொன்றார். இது பழிவாங்கல் நடவடிக்கை என்று மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை கொலை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!