Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்

Published on: வியாழன், 8 ஜனவரி, 2009 //
.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கட்சியின் தலைவர் சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, முதலமைச்சராகப் பதவியேற்ற இவர் தேர்தல் ஆணைய விதிகளின்படி, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.இதற்காக அவர் கடந்த 3 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலலில் போட்டியிட்டார்.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சிபுசோரன் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து ஜார்கண்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண பதார் வெற்றிபெற்றுள்ளார். இடைத்தேர்தல் முடிவு சிபுசோரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சிபுசோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக சஞ்சய் தத் அறிவிக்கப்பட்டார்

Published on: //
மும்பை குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இரு முறை சிறை சென்று பிணையில் வந்துள்ள நடிகர் சஞ்சய் தத் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியின் தற்போதைய உறுப்பினர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத் தக்கது.

சஞ்சய் தத் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சிறப்புச் சலுகை பெறப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மட்டைப் பந்து வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்து இத்தகைய அனுமதி பெற்றே தேர்தலில் போட்டியிட்டார்.

சஞ்சய் தத்தின் சகோதரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதால் காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்காது என்று கூறப்படுகிறது.

அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு: குற்றம்சாட்டப்பட்டவர் கொலை

Published on: //
அஸ்ஸாம் மாநிலத்தியில் கடந்த முதல் தேதியன்று நடைபெற்ற தொடர் கொண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியாக காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்ட பிரன்ஜோல் தேகா என்பவர் காவல் துறையினரால் இன்று சுட்டுக் கொல்லப் பட்டார். பிஜு சரனியா மற்றும்  பம்பால் என்ற பெயர்களாலும் அறியப் பட்டு வந்த 20 வயதே ஆன இவர் உல்பா இயக்கத்தின் முக்கியத் தலைவர் என காவல் துறை தகவல்கள் கூறுகின்றன.

அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மற்றும் நல்பாரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஹலிகுச்சி என்னும் கிராமத்தில் இவர் மறைந்திருந்த தகவல் அறிந்த காவல் துறையினர் இவரைச் சுட்டுக் கொன்றனர்.

புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

மாணவியின் கண்ணைக் குருடாக்கிய ஆசிரியை

Published on: //
சட்டீஸ்கர் மாநிலம் ரய்ப்பூரில் உள்ள 6 வயதே ஆன பள்ளி மாணவி ஆசிரியையின் கேள்விக்குப் பதில் அளிக்காததால் கோபமடைந்த அந்த ஆசிரியை மாணவியின் வலது கண்ணைக் குருடாக்கிவிட்டார்.

கடந்த நவம்பவர் மாதம் இச்சம்பவம் நடந்ததாகவும் புதன் கிழமைதான் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறிய காவல் துறை அதிகாரி, அந்த ஆசிரியை குண்டூசி கொண்டு மாணவியின் வலது கண்ணைக் குருடாக்கியதாகக் கூறினார். இச்சிறுமியின் கண் குருடாகிவிட்டதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்தபின் அந்த ஆசிரியை தலைமறைவாகி விட்டதாகவும் அவள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

சிறுமியின் கண்ணைக் குணப்படுத்த ஆகும் மருத்துவ செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

Published on: //
கடந்த 13 நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதில் 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தெற்கு லெபானான் பகுதி மீது இஸ்ரேல் 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக இன்று காலை தெற்கு லெபானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாவே லெபனான் மீதான ஏவுகணை தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் என்ற அமைப்பு தங்களுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது. லெபனானில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள்தான் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசியிருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. ஹமாஸ் இயக்கத்தினர் இதில் ஈடுபடவில்லை எனவும், மற்ற பாலஸ்தீனிய குழுக்கள் செய்தனவா என தங்களுக்குத் தெரியாது எனவும் ஹமாஸ் கூறியுள்ளது. ஹமாஸ் தனது தாக்குதல்களை பாலஸ்தீனத்தின் எல்லையிலிருந்துதான் தொடரும் எனவும் இதற்காக மற்ற அரபு நாடுகளைப் பயன்படுத்தாது எனவும் ஹமாஸ் கூறியுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!