Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒதுக்கீடு கேட்கும் கப்பல் உரிமையாளர்கள்

Published on: புதன், 7 ஜனவரி, 2009 //
பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் அனுப்பும் சரக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமான கப்பல்களில்தான் அனுப்ப வேண்டும் என்று அரசுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கோரிக்கை மடல் அனுப்பியுள்ளது.

1980களில் இந்திய கப்பல்கள் 40 சதவீத சரக்குகளைக் கையாண்டதாகவும் தற்போது 12 முதல் 13 சதவீத சரக்குகளையே கையாள்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய கப்பல் நிறுவனங்கள் அதிக விலை கேட்பதாக எழும் புகார் குறித்து விசாரித்த போது, இந்திய நிறுவனங்கள் கப்பல்களைப் புதிதாக வாங்குவதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல்களைப் பயன்படுத்துவதாகவும் இதனால் அவர்கள் குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும் இந்திய கப்பல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் குல்கர்னி கூறினார்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதத்தில் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள் 391.8 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு இது 378.8 டன்னாக இருந்தது எனவும் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

காஸா : தொடரும் தாக்குதல்கள்

Published on: //
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுள்ளது. இதுவரை சுமார் 670பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 3000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் இராணுவப் பிரிவு மட்டுமின்றி இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் இஸ்ரேலிய இராணுவத்தினருடன் கடும் சன்டையில் ஈடுபட்டு வருவதாகவும் சுமார் 40க்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய இராணுவ சேதம் குறித்த உறுதிப்படுத்தப்படதாக தகவல்களே கிடைக்கின்றன. இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்ததப்பட்டதாகவும், 7 டாங்கர்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மொரிட்டீனியா, வெனிசுலா, எகிப்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதர்களை வெளியேற்றி உள்ளன.  டென்மார்க் தனது நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இஸ்ரேல் தன்னுடைய நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுவதைக் குறித்து கவலைப்படவில்லை என்று இஸ்ரேலிய ஜனாதிபதி சைமன் பெரஸ் கூறினார். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து இறங்கி உள்ளது. இதற்கான திட்டம் ஒன்றை நேற்று எகிப்து அதிபர் முபாரக் அறிவித்தார். இந்த திட்டம் குறித்து பரிசீலிப்பதற்காக இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் தற்போது கூடி விவாதித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சற்றுமுன் கிடைத்த தகவல்படி காஸாவின் கான் யூனுஸ் என்ற நகரிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறி இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

லாலு ஜப்பான் செல்கிறார்

Published on: //
சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை திட்டத்திற்கு ஜப்பானின் கடன் உதவி பெறுவதற்காக இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பான் செல்கிறார். சுமார் 1 வார பயணத்தில் அவருடன் இரயில்வே இணை அமைச்சர் வேலு, இரயில்வே போர்டின் தலைவர் ஜீனா மற்றும் இரயில்வேன் மூன்று உயர் அதிகாரிகளும் இம்மாதம் 11ஆம் தேதி ஜப்பான் செல்கின்றனர்.

ஜப்பான் பன்னாட்டு கூட்டறவு முகமை (Japan International Cooperation Agency)யிடம் 450 பில்லியன் யென் (சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய்) கடன் ஒப்பந்தம் ஏற்படும் என்று தெரியவருகிறது. இந்தத் தொகை இந்தியாவின் மேற்குப் பகுதியில் சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை அமைக்க பயன்படுத்தப்படும். இந்தப் பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட வேண்டும் என்ற ஜப்பானின் கோரிக்கையை இரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டதுடன், ஜப்பானிடமிருந்து அதிக சக்தியுள்ள என்ஜின்களை வாங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

160 என்ஜின்கள் வாங்கப்படும் என்றும் கடன் தொகையில் சுமார் 30 சதவீதம் இதற்கென பயன்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தியர் நியமனம்

Published on: //
அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தி வம்சாவளியைச் சார்ந்த சஞ்சய் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சி.என்.என். தொலைக்காட்சியில் மருத்துவ செய்தியாளரகப் பணியாற்றி வருகிறார். 40 வயதாகும் குப்தா அமெரிக்காவின்  மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா இராக்கைக் கைப்பறிய போது அமெரிக்காவின் கடற்படை பிரிவில் பணியாற்றிய இவர் இராக் சென்றார். அங்கு அமெரிக்க இராணுவத்தினருக்கு மட்டுமின்றி இராக்கியர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்தார்.

அரசுத்துறை மருத்துவமனைகளின் தலைவர் என்ற முறையில் சுகாதாரம் குறித்த அரசின் நிலையை மக்களுக்குத் தெரிவிப்பது இவரது பணியாகும்.

இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய வெனிசுலா

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழியாக கடும் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் உலகெங்கும் உள்ள அரசுகள் இஸ்ரேலின் இச்செயலைக் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் வெனிசுலாவில் உள்ள இஸ்ரேலியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலரையும் வெனிசுலாவை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக செவ்வாயன்று தொலைக்காட்சியில் உரையாற்றி வெனிசுலா அதிபர் சாவேஸ், வெனிசுலாவில் உள்ள யூதர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று கூறிய தனது உரையைத் தொடங்கினார். இஸ்ரேலியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை 215 குழந்தைகள் மற்றும் 98 பெண்கள் உள்பட 660 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3ஆவது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்

Published on: //
சரக்குந்து உரிமையாளர்களும் மத்திய அரசும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து, சரக்குந்து வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்திற்கு இரயில்வே துறையின் உதவியை நாடியுள்ள போதிலும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

எங்களுக்கு ஒவ்வொரு நாளும் நட்டம் ஏற்படுகிறது. எங்களால் தொடர்ந்து இந்த தொழில் செய்ய இயலவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அகில இந்திய போக்குவரத்துப் பேராயத் தலைவர் சரன்சிங் லோஹரா கூறினார். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் கூறினர்.

சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்று அத்தியாவசியப் பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வேலை நிறுத்தத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!