Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹமாஸ் இயக்க பொறுப்பாளர் கொல்லப்பட்டார்

Published on: வியாழன், 1 ஜனவரி, 2009 //
ஹமாஸ் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மீது கடந்த 6 நாட்களாகக் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதுவரை 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகளும் தாக்குதலை நிறுத்தக் கோரியும் அவர்களின் கோரிக்கையை ஏற்காமல் நாள்தோறும் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கிறது.

தாக்குதலின் 6ஆம் நாளான இன்று பாலஸ்தீனத்தின் ஆளும் கட்சியான ஹமாஸ் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான நிஜார் ரயான் (வயது 52) என்பவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் 5 பேர் அடங்கிய ஹமாஸ் இயக்கத்தின் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் ஆவார். இவர் தங்கியிருந்த 8 மாடிக் கட்டிடத்தின் மீது வீசப்பட்டக் குண்டில் இவரும் மற்ற 12 பேரும் கொல்லப் பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் இவரது இரு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகளும் அடங்குவர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைக் கண்டிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் லிபியா நேற்று ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தது. அரபு லீக் என்றறியப்படும் 22 அரபு நாடுகள் சார்பாக இந்த தீர்மானத்தை முன்மொழிவாக லிபியா கூறியது.

பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா தனது வீட்டோ எனும் மறுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் தடுத்தது. "பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தைக் கண்டிக்காமல் இஸ்ரேலை மட்டும் கண்டிப்பதாக இந்த தீர்மானம் இருந்ததால் இதனை எதிர்ப்பதாக" அமெரிக்க கூறியது.

ஆப்கானில் 30 காவலர்கள் கொலை

Published on: //
ஆப்கானிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹேல்மன்ட் மாநிலத்தில் தாலிபான் ஆதரவாளர்கள் 30 காவலர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் அவர்களில் ஒருவர் பெண் என்றும் உள்ளூர் அரசு அதிகாரி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிகழ்வில் 2 தாலிபான் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டதாகவும் நான்கு பேர் காயமுற்றதாகவும் தாலிபான் செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அஹமதி கூறினார். 32 காவலர்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். கொல்லப்பட்ட காவலர்கள் மாவட்ட அரசு அதிகாரியின் காவலர்கள் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக புதன் கிழமையன்று இங்கிலாந்து இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 2008 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இங்கிலாந்து இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 137 ஆகும். 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானில் கடந்த ஆண்டு வெளிநாட்டுப் படையினர் அதிகமாக உயிரிழந்திருக்கின்றனர்.

2009 மத்தியில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கூடுதல் அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப் படுவார்கள் என்று அமெரிக்க கடந்த மாதம் அறிவித்தது நினைவு கூரத்தக்கது.

இஸ்ரேலுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

Published on: //
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக லண்டனிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

'ஸ்டாப் தி வார் கூட்டணி' என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இந்த அமைப்பின் நிர்வாகி, லிண்ஸே ஜெர்மன் கூறுகையில், தாம் மூன்றாம் முறையாக இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்வதாகவும், இது இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட மற்றொரு நபரான, கெவின் கூறுகையில், இஸ்ரேலுக்கு எதிராக தன் நாட்டில் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்காகத்தான் தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

20 வயது அரசு ஊழியர் ஒருவர், ஜார்ஜ் புஷ் மற்றும் கொண்டலிஸா ரைஸ் போன்றவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் போது பொதுமக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

நான்காவது நாளான நேற்றுவரை, சுமார் 350-க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர். 1400 -க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

இதற்கிடையில், மக்களின் நிவாரண உதவிக்கு வசதியாக, போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையையும் இஸ்ரேல் மறுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதல் குறித்து ஒபாமாவின் கருத்து

Published on: //
பாலஸ்தீன காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது பற்றி அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றிருக்கும் ஒபாமா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது, 'இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்பதால் கருத்து தெரிவிக்கவில்லை' என்று பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமையும் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதுவரை 387-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 1,720 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு இணையத்தளத்தில் அரசாணைகள்!

தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் கருதப்பட்டாலும், மாநில அரசின் இணையதளத்தில் இந்த வசதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.

அலுவலகத்திற்குள் காகிதங்கள் இல்லாமலே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துறைகளின் உயரதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் கூட இணையதளத்தில் தரப்பட்டுள்ளன ஆனால், மின்னஞ்சல் மூலம் ஒரு தகவலைக் கேட்டால், அதற்குப் பதில் கிடைப்பது இல்லை. பெயரளவுக்குதான் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, மக்களுக்கு நேரடியாக பயன் ஏதும் கிடைக்கவில்லை.

தமிழக அரசின் இணையதளத்தில், அன்றைய நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றி செய்திகள் இடம்பெற்றுள்ளன. பொது மக்களுக்குப் பயனுள்ள தகவலாக அமையும் 'அரசாணைகள்' என்ற ஓர் இணைப்புப் பகுதியும் அந்த இணையதளத்தில் உள்ளது. அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் ஆணைகளில் நேரடியாக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இருப்பவை எல்லாம் துறைவாரியாக இதில் சேர்க்கப்படும். ஆனால் ஓரிரு துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகள் ஓராண்டு வரை இந்தப் பகுதியில் புதிய அரசாணைகளைச் சேர்க்காமலே உள்ளன.

மாநிலத்தில் மின்வெட்டு காரணமாக மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ள எரிசக்தி துறையின் பட்டியலில் அரசாணையின் ஆங்கிலப் பக்கங்கள் 2008 அக்டோபர் 8-ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளன. 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற முழக்கம் தீவிரமாக எழுப்பப்படுகிறது. ஆனால், முதல்வருக்கு மிக நெருக்கமான வர்களில் ஒருவராகக் கருதப்படும் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் துறையில் வரும் இந்த இணைய தளத்தில் தமிழ் அரசாணைகள் 22.10.2002-க்குப் பிறகு சேர்க்கப்படவே இல்லை.

போக்குவரத்துத் துறையில் ஆங்கில ஆணைகள் 13.11.2007-க்குப் பிறகும், தமிழ் ஆணைகள் 1.10.2003-க்குப் பிறகும் புதியவை சேர்க்கப்படவில்லை. கூட்டுறவுத் துறையில் 2008 பிப்ரவரி வரை மட்டுமே அரசாணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையில் ஆங்கில அரசாணைகள் 12.12.2006-க்குப் பிறகு சேர்க்கப்படவில்லை. தமிழ் ஆணைகள் 2008 மார்ச் 10-ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஆங்கில அரசாணைகள் 28.5.2008 வரை மட்டுமே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. பிற துறைகளின் அரசாணைகள் ஒன்று முதல் 6 மாதங்கள் வரை சேர்க்கப்படாமல் உள்ளன. உயர் கல்வித் துறையின் ஆணைகள் 2.7.2008 வரையிலும், தகவல் தொழில்நுட்பத் துறை ஆணைகள் 20.9.2008 வரையிலும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளன.

இணையதள வசதி வந்ததும் உடனுக்குடன் தகவல்களை பொதுமக்கள் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கத்தில்தான் அரசு இணையதளத்தில், அரசாணைகள் குறித்த இணைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அன்றாட நிகழ்வுகள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் மட்டுமே உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றவே தவிர, மக்கள் விரும்புகிற நேரத்தில் அரசு உத்தரவு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளத்தால் தர முடியவில்லை. அதுவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் மாநிலம் என்ற நிலையில் இப்படியொரு நிலை இருப்பது வருத்தம் தருகிறது என இணையதளத்தில் தகவல்களைத் தேடி சிரமப்படும் கணினி மென் பொருள் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

'இந்த ஆணைகள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும் வகையில் இருந்தால்தான் நிர்வாகம் வெளிப்படையானதாக இருக்கும்' என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறினார்.

பேங்காக் இரவு விடுதி தீ விபத்தில் 59 பேர் மரணம்

Published on: //
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் இரவு விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் மரணமடைந்தனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பேங்காக்கிலுள்ள பிரபலமான 'சந்திகா' எனும் இரவு விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக 1000-த்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தபோது நள்ளிரவு 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலிலும் புகை மூட்டத்தாலும் மூச்சுத் திணறி 53 பேர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

காயமடைந்தவர்கள் நகரெங்கிலும் உள்ள 14 மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுகின்றனர்.

இரண்டு தளங்களைக் கொண்ட விடுதிக் கட்டிடத்தில் முதல் தளத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமைக்கப் பட்டிருந்த மேடைக்கு அருகில் தீப்பற்றியதாக தெரிகிறது. இது பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!