Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தமிழக அரசு இணையத்தளத்தில் அரசாணைகள்!

Published on வியாழன், 1 ஜனவரி, 2009 1/01/2009 12:58:00 PM // ,

தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் கருதப்பட்டாலும், மாநில அரசின் இணையதளத்தில் இந்த வசதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.

அலுவலகத்திற்குள் காகிதங்கள் இல்லாமலே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துறைகளின் உயரதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் கூட இணையதளத்தில் தரப்பட்டுள்ளன ஆனால், மின்னஞ்சல் மூலம் ஒரு தகவலைக் கேட்டால், அதற்குப் பதில் கிடைப்பது இல்லை. பெயரளவுக்குதான் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, மக்களுக்கு நேரடியாக பயன் ஏதும் கிடைக்கவில்லை.

தமிழக அரசின் இணையதளத்தில், அன்றைய நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றி செய்திகள் இடம்பெற்றுள்ளன. பொது மக்களுக்குப் பயனுள்ள தகவலாக அமையும் 'அரசாணைகள்' என்ற ஓர் இணைப்புப் பகுதியும் அந்த இணையதளத்தில் உள்ளது. அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் ஆணைகளில் நேரடியாக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இருப்பவை எல்லாம் துறைவாரியாக இதில் சேர்க்கப்படும். ஆனால் ஓரிரு துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகள் ஓராண்டு வரை இந்தப் பகுதியில் புதிய அரசாணைகளைச் சேர்க்காமலே உள்ளன.

மாநிலத்தில் மின்வெட்டு காரணமாக மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ள எரிசக்தி துறையின் பட்டியலில் அரசாணையின் ஆங்கிலப் பக்கங்கள் 2008 அக்டோபர் 8-ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளன. 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற முழக்கம் தீவிரமாக எழுப்பப்படுகிறது. ஆனால், முதல்வருக்கு மிக நெருக்கமான வர்களில் ஒருவராகக் கருதப்படும் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் துறையில் வரும் இந்த இணைய தளத்தில் தமிழ் அரசாணைகள் 22.10.2002-க்குப் பிறகு சேர்க்கப்படவே இல்லை.

போக்குவரத்துத் துறையில் ஆங்கில ஆணைகள் 13.11.2007-க்குப் பிறகும், தமிழ் ஆணைகள் 1.10.2003-க்குப் பிறகும் புதியவை சேர்க்கப்படவில்லை. கூட்டுறவுத் துறையில் 2008 பிப்ரவரி வரை மட்டுமே அரசாணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையில் ஆங்கில அரசாணைகள் 12.12.2006-க்குப் பிறகு சேர்க்கப்படவில்லை. தமிழ் ஆணைகள் 2008 மார்ச் 10-ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஆங்கில அரசாணைகள் 28.5.2008 வரை மட்டுமே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. பிற துறைகளின் அரசாணைகள் ஒன்று முதல் 6 மாதங்கள் வரை சேர்க்கப்படாமல் உள்ளன. உயர் கல்வித் துறையின் ஆணைகள் 2.7.2008 வரையிலும், தகவல் தொழில்நுட்பத் துறை ஆணைகள் 20.9.2008 வரையிலும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளன.

இணையதள வசதி வந்ததும் உடனுக்குடன் தகவல்களை பொதுமக்கள் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கத்தில்தான் அரசு இணையதளத்தில், அரசாணைகள் குறித்த இணைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அன்றாட நிகழ்வுகள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் மட்டுமே உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றவே தவிர, மக்கள் விரும்புகிற நேரத்தில் அரசு உத்தரவு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளத்தால் தர முடியவில்லை. அதுவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் மாநிலம் என்ற நிலையில் இப்படியொரு நிலை இருப்பது வருத்தம் தருகிறது என இணையதளத்தில் தகவல்களைத் தேடி சிரமப்படும் கணினி மென் பொருள் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

'இந்த ஆணைகள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும் வகையில் இருந்தால்தான் நிர்வாகம் வெளிப்படையானதாக இருக்கும்' என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!