Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கும். இஜாஜ் பட் நம்பிக்கை

Published on: ஞாயிறு, 8 மார்ச், 2009 // ,

பாகிஸ்தானில் சமீபத்தில் இலங்கை வீரர்கள் மீது நடந்த தாக்குதலை தொடர்ந்து, அங்கு நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், சர்வதேச போட்டிகள் விரைவில் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். வீரர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டார். எனினும், எப்பொழுது போட்டிகள் ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு, பதிலளிக்கையில், வாரியம், பாதுகாப்புக்கு அரசாங்கத்தையே, முழுமையாக சார்ந்து இருப்பதகவும், பாதுகாப்பு குறித்து, அரசு உத்தரவாதம் தரும் பட்சத்தில், 6 மாதங்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்.

பெங்களூருவில் 39 வெளிநாட்டவர் உள்பட 101 பேர் கைது!

பெங்களூரு அருகே ரமனங்கரா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் உரிமம் இல்லாமல் மது பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தபோது 39 வெளிநாட்டவர் உள்பட 101 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டுப் பெண்கள் உள்பட 22 பெண்களும் அடங்குவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டவரில் ஜெர்மனி, பிரான்சு, சூடான், இரான் மற்றும் எமன் ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரேபள்ளியில் படித்த 10 மாணவர்கள் தற்கொலை?

ஒரே பள்ளியில் படித்த பத்து மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் உ.பி.மாநிலம் நொய்டாவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திரபுரம் டிபிஎஸ் என்ற பள்ளியில் படித்து வந்தவர்கள் என்று வெளியாகியுள்ள செய்தி பள்ளி முதல்வர் மீதாராய் மறுத்துள்ளார். தேர்வு பயம் என்று காரணம் கூறப்பட்டாலும் காவல்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரிசா : மார்ச் 11ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டதை அடுத்து வரும் புதன்கிழமை (11ஆம் தேதி) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அறிவ்ததுள்ளார்.

தமக்கு 76 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் தமக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் விவரங்களை ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும் கூறிய அவர், தம்முடைய ஆதரவாளர்களையும் அழைத்துச் சென்று ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறினார்.

147 உறுப்பினர்களைக் கொண்ட ஒரிசா சட்ட மன்றத்தில் பிஜு ஜனதா தளம் 59 உறுப்பினர்களையும், பா.ஜ.க. 30, காங்கிரஸ் 38 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆவர்.

காவலர் பயிற்சி மையத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் - 28 பேர் பலி

இராக்கின் தலைநகர் பக்தாதில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் அருகில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 58 பேர் காயமுற்றனர்.

தன்னுடைய உடலில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு மத்திய பாக்தாதில் உள்ள பாலஸ்தீன் சாலையில் கூட்டத்தினுள் புகுந்த சைக்கிளில் வந்த ஒருவர் குண்டுகளை வெடிக்கச் செய்தார் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியான 28 பேரில் காவலர்கள் மற்றும் காவல் பணிக்கு விண்ணப்பித்தோரே அதிகம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

கிரிக்கெட்: இந்தியா நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தியது

கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று இந்தியா நியூசிலாந்து இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியது.

பூவா தலையா போட்டதில் நியூசிலாந்து வென்றாலும் இந்தியாவை மட்டையாடப்பணித்து தான் பந்துவீச்சைத் தொடங்கியது. தொடக்கத்திலேயே சேவாக் ஆட்டமிழந்தாலும், டெண்டுல்கர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 133 பந்துகளில் 163 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு ஒருநாள் ஆட்டத்தில் 43வது சதமாகும். தோனி(68), யுவராஜ்சிங்(87) அவருக்கு உறுதுணையாக விளங்கினர். அபாரமாக ஆடிய இந்தியா 50 சுற்று பந்துவீச்சில் 392 ஓட்டங்கள் குவித்தது.

அதன்பின் ஆடிய நியூசிலாந்து அபாரமாகத் தொடங்கினாலும், பதட்டத்தில் தனது ஆட்டக்காரர்களை பறிகொடுத்து 334 ஓட்டங்கள் பெற்று வீழ்ந்தது. இந்தியா 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜாஹிர்கான், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் தலா இருவரையும், யூசுஃப்பதான், குமார் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.

இதற்கு முன் நடந்த முதலாம் ஒருநாள் ஆட்டத்திலும் இந்தியா வென்றுள்ளது. இரண்டாவது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது. எனினும் 20-20 சுற்று ஆட்டங்கள் இரண்டிலும் நடப்பு வாகையரான இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் காங்கிரஸில் இணைந்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் தற்போதைய ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான சுப்பரெட்டி காங்கிரஸில் இணைந்தார். இது ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்ட அரசியல் நிலவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பரெட்டி, 2004 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் கர்ணூல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஒரே தெலுங்கு தேச தலைவராவார். ஐந்து முறை கர்ணூலிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற சுப்பரெட்டி, கர்ணூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமானவராகத் திகழ்ந்தார்.

முன்னர், சுப்பரெட்டியின் மகள் ஷோபாநாகை ரெட்டியும், அவரின் கணவர் பூமாநாகை ரெட்டியும் தெலுங்கு தேசத்திலிருந்து வெளியேறி சிரஞ்சீவியின் தலைமையிலுள்ள பிரஜாராஜ்யம் கட்சியில் இணைந்திருந்தனர்.

சுப்பரெட்டியின் மகன் மோகன் ரெட்டியும், மாவட்ட முன்னாள் செயலாளர் பி. வெங்கடராமுடுவும் தெலுங்கு தேசத்திலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

பிரக்யா சிங் தாக்கூரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - நீதிமன்றம்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூரைத் தேவையெனில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் வழங்கப்பட்டும் உணவை உட்கொண்டதால் பிரக்யா சிங் தாக்கூருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் சமர்ப்பித்த புகாரின் மீது விசாரணை நடத்திய நீதிபதி வை.டி. ஷிண்டா, அவரின் உடல்நிலை கெட்டுள்ளது எனில் அவரை அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க வேண்டும் என சிறைதுறைக்கு உத்தரவிட்டார்.

இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பு! மேற்கிந்திய தீவுகள் பதிலடி கொடுக்குமா?

டிரினிடாட் நகரில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ரன்குவித்து உள்ளனர். அணித் தலைவர்,ஸ்ட்ராஸ், கோலிங்வுட் மற்றும் ப்ரியர் சதம் அடித்தனர். இங்கிலந்து தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 546 ரனகள் எடுத்து டெக்ளேர் செய்தது. பிறகு தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய, மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்ட நேர இறுதியில், ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது.

டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா பாலோ ஆனை தவிர்க்குமா?

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில், தென் ஆப்ரிக்கா 7 விக்கெட்களை இழந்து 138 ஒட்ட்ங்களை எடுத்து இருந்தது. முன்னனி ஆட்டக்காரர்கள் அனைவரும், சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இளம் அதிரடி வீர்ர, டுமின்ய், 73 ரன்களுடன், ஸ்டெய்ன், 8 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, 352 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, 1-0 என்ற முன்னனியில் உள்ளது.

ஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க. கோரிக்கை

ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டுள்ளது. அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியும் பிஜு ஜனதா தளமும் கூட்டணி அமைத்து வந்தன. எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் இவ்விரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படாமல் போனதை அடுத்து தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று ஒரிசா முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டுள்ளது.

கூட்டணி முறிந்துவிட்டது என்று நவீன் பட்நாயக் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம். நவீன் பட்நாயக் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கோருகிறோம் என்று பா.ஜ.க. சட்ட சபைக் கட்சித் தலைவரும் மாநில தொழில் துறை அமைச்சருமான பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் பா.ஜ.க. மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரிசா மக்கள் நவீன் பட்நாயக்கிற்கோ அவரது பிஜு ஜனதா தளத்திற்கோ வாக்களிக்கவில்லை என்றும் தங்களது கூட்டணிக்கே வாக்களித்தனர் என்றும் கூறிய அவர், மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.

இன்று மாநில ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பா.ஜ.க. கடிதம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

147 உறுப்பினர்களைக் கொண்ட ஒரிசா சட்டசபையில் பிஜு ஜனதா தளம் 61 உறுப்பினர்களையும் பா.ஜ.க. 30 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் கூட்டணி முறிவு!

ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று ஒரிசா மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 11 ஆண்டுகளாக பாரதீய ஜனதாவுடன் இருந்த கூட்டணியை பிஜு ஜனதா தளம் முறித்துக் கொண்டுள்ளது.

ஒரிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு மேல் பிஜு ஜனதா தளத்திற்குத் தர பாரதீய ஜனதா கட்சி தயாராகாதததைத் தொடர்ந்து இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பின் பிஜு ஜனதா தளம் தங்களை ஆதரிக்கக் கூடும் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. தவிர பிஜு ஜனதா தளம் மூன்றாவது அணியில் சேரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!