Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"ஒன்றுபடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்" - கருணாநிதி

Published on: திங்கள், 23 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்ட உருக்கமான அறிக்கையில் வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணக்கமாகச் செல்லும்படி உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் துவங்கிய அறவழிக்கிளர்ச்சியில் தாங்களும் ஓரணியில் வந்து நிற்பதாகக் கூறிவிட்டு ஆரம்பத்திலேயே அந்த அணியைச் சிதைக்க, இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள இரண்டு, மூன்று நண்பர்கள் ஈடுபட்டதை தமிழ்நாடு நன்கறியும். திமுக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கு அதில் தொடர்பு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தங்களுக்கென தனிவழி வகுத்துக் கொண்டவர்கள்.


அந்த நண்பர்களுக்கு இப்போது இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. அந்த கோஷத்தை வைத்து தமிழகத்தில் தங்கள் அரசியலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.அதனால் தான், தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணியை உடைப்பதற்கு மக்களிடத்தில் தவறான பிரசாரங்களைச் செய்தும், யார் தமிழகத்தில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக கிளர்ச்சி நடத்தினாலும், அங்கே போய் புகுந்துகொண்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, அதை பூதாகாரமாக ஆக்கி, திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காணுகின்றனர்.
எதிர்பாராத விதமாக திடீரென துருதிர்ஷ்டவசமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் அவர்களுக்குப் பிரதான ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.


அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, இன்னும் தையல் பிரிக்காத நிலையில், தினசரி உடல்நலிவோடு மருத்துவமனையில் இருக்கிற என் மனம் நோகும்படி, என்னென்ன காரியங்களை இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். இதற்கு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் பலியாகிவிடக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள். அவர்கள் தங்களுக்கிடையே இடையே ஏற்பட்டுள்ள கசப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டிக் கொண்டுவருகிறேன். இந்த அரசு அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பது தான்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கு அறிந்தோ, அறியாமலோ பலியாகிவிடக்கூடாது. இரு தரப்பும் இந்த அரசில் சகோதரர்கள் போல ஒன்றுபட்டு நற்பணி புரிய வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், பல நீதிபதிகளும் ஒரு சுமுகமான சூழ்நிலை இந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் போராட தூண்டிக் கொண்டிருக்கும் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


இந்தக் கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றுபடுங்கள்; ஜனநாயக நெறிகளை உயர்வடையச் செய்ய ஒத்துழையுங்கள்; நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க ஆர அமர அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்போம்.அப்படி ஒன்றுபட முடியாவிட்டால், நீங்கள் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையில் இருக்கிற நான் உண்ணாநோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.அந்த முடிவை நான் மேற்கொள்வதா, இல்லையா என்பதை நீங்கள் அளிக்க இருக்கிற விடையின் மூலம் தெளிவு பிறந்து, அதற்கான தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.


முதலமைச்சர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு வரன் தேடித்தரும் மகளிர் கல்லூரி

ஜம்செட்பூர் மகளிர் கல்லூரி அந்நகரின் புகழ் பெற்ற கல்லூரிகளுள் ஒன்றாகும். கடந்த ஆண்டு அக்கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்றது. படிப்பை முடித்த மகளிருக்கு திருமணத்திற்காக வரன் தேடித்தரும் பொறுப்பை தானே ஏற்க அக்கல்லூரி முன்வந்துள்ளது. அதற்காக சுயம்பார் என்ற அமைப்பை அது தொடங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் சுக்லா மொஹந்தி தெரிவித்துள்ளார். இது அக்கல்லூரியின் சமூகவியல் துறையின் யோசனையாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை கோராத மாப்பிள்ளைகளின் விண்ணப்பங்களே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற கல்லூரி முதல்வர், தன் பெண்பிள்ளைகள் படிப்பில் சிறக்க பெற்றோர் ஆர்வங்காட்டுவதற்காகவே 'படிப்பை முடித்திருக்கவேண்டும்' என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டதாகக் கூறினார்

பெண்பிள்ளைகளின் படிப்புக்கு பொறுப்பேற்கும் நாமே அவர்களின் பிற்கால நல்வாழ்வுக்கும் ஏன் உதவக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்த யோசனை என்றார் கல்லூரி முதல்வர்

'போர் நிறுத்தத்துக்குத் தயார்'- புலிகள் அறிவிப்பு

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்போது நடந்துவரும் கடும் சண்டையால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவ்வறிவிப்பை புலிகளின் அரசியல் தொடர்பாளர் நடேசன் ஐநாவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயாராக இருந்தாலும் ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நிறுத்தத்தை இலங்கை இராணுவம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் புலிகள் ஆயுதங்களைக் கைவிடாமல் போர் நிறுத்தத்துக்கோ சமாதானப் பேச்சுகளுக்கோ இடமில்லை என்று இலங்கை இராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

மாபெரும் இன அழிப்பைச் செய்துவரும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் அமைதி காப்பது வியப்பளிப்பதாக நடேசன் கூறியுள்ள போதும், புலிகள் அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலேயே உயிரிழப்புகள் நேரிடுவதாக உதய நாணயக்காரா பதிலளித்துள்ளார்.

ஏ.ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் விருது!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை அமைப்பாளர் ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டுள்ளது. ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கிலப் படத்திற்கு ரகுமான் அமைத்த இசையினால் இவ்விருது இவருக்கு வழங்கப்படுகிறது.

இதற்கு முன் இதே படத்திற்கு இவர் அமைத்த இசைக்காக கோல்டன் குளோப், பாஃப்டா போன்ற விருதுகளை இவர் வென்றெடுத்திருந்தார். இந்தியர் ஒருவர் ஆஸ்கர் விருதினைத் தட்டிச் செல்வது இதுவே முதன்முறையாகும்.

மும்பை சேரிப் பகுதியில் பிறந்த ஒரு சாதாரண சிறுவன் அதிர்ஷ்ட விளையாட்டு மூலம் கோடீஸ்வரனாக மாறுவதும் அதன் பின் உள்ள அவனது சோகமான வாழ்க்கைப் பின்னணியும் ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் கதையாகும்.

இந்தியா கோல்டன் 50: 50 பைசாவில் தொலைபேசலாம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. இதன்படி இந்தியாவின் எந்த பகுதிக்கும் 50 காசுகளில் பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ கால்' மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர்.

இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன் இண்டியா' திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 'இண்டியா கோல்டன் 50' என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல். வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப்பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள்.
என்று முதலமைச்சர் பேசினார்

கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல் மூலம் வழங் கப்பட்டுள்ளன. இந்த '3 ஜி' சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என்.எல் மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '3 ஜி' சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் பேசுகையில்
சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த '3 ஜி' சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிவழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் '3 ஜி' இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


'3 ஜி' சேவைக்கு தனி 'சிம் கார்டு' என்றும் அவர் தெரிவித்தார்

நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!

நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!


கோவை, பிப். 21: சர்வதேச நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகன போக்குவரத்து வசதியை ரத்து செய்ய துவங்கியுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கி வந்த டிராவல்ஸ் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா வங்கிகளில் ஏற்பட்ட சரிவு, பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக அமைந்தது. இதனால் அமெரிக்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா ஐடி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் பணிகளை குறைத்து வருகின்றன. இதனால் கோவையில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பணி வரத்து கடுமையாகப் பாதித்துள்ளன. இப் பிரச்னையில் இருந்து பெரிய நிறுவனங்களும் தப்பவில்லை.

ஆள்குறைப்பு, அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஐடி நிறுவனங்கள் மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகனப் போக்குவரத்து வசதியை பல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளது.

கோவை சரவணம்பட்டி, ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை வீட்டில் இருந்து அழைத்து வரவும், பணி முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடும் வேலையில் ஏராளமான டிராவல்ஸ் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இப் பணியை டிராவல்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன.

இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்த சில ஐடி நிறுவனங்கள், தங்களுக்கு வாகன போக்குவரத்து வசதி தேவையில்லை என அதிரடியாக அறிவித்துள்ளன. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் டிராவல்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.

"கடந்த ஒரு மாதமாகவே கார்களை வாடகைக்கு எடுப்பதை ஐடி நிறுவனங்கள் வெகுவாகக் குறைத்துவிட்டன. ஐடி நிறுவனங்களுக்கு ஓட்டுவதற்காக வாங்கப்பட்ட சொகுசு கார்களையும், வேன்களையும் வெளி வாடகைக்கு இயக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்' என்கிறார் சரவணம்பட்டி உள்ள தனியார் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன்.

"ஐடி நிறுவனங்களுக்காக கார்களை ஓட்டும்போது நல்ல லாபம் கிடைத்தது. தற்போது கார்களை வாடகைக்கு எடுப்பதை ஐடி நிறுவனங்கள் குறைத்துக் கொண்டிருப்பதால் கிடைக்கும் லாபம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

ஐடி நிறுவனங்களுக்காக இயக்கலாம் என்ற எண்ணத்தில் வங்கிகளில் கடன் பெற்று, கார்களை வாங்கிய டிராவல்ஸ் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

ஓராண்டுக்குள் ஐடி நிறுவனங்களின் நிலையை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னரே ஐடி நிறுவனங்களை நம்பி இருக்கும் டிராவல்ஸ் தொழிலும் உயிர் பெறும்' என்றார் மற்றொரு தனியார் டிராவல்ஸ் நிறுவன அலுவலர் கண்ணன்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!