Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மாலேகாவ்ன் : ஆர் எஸ் எஸ்ஸுக்கு ஐ எஸ் ஐ பணம் ?

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மாலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் தொண்டர் தயானந்த் பாண்டே என்பவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் பொதுச்செயலர் மோகன் பகவத், ஆர் எஸ் எஸ்ஸின் முஸ்லிம்பிரிவு தலைவர் இந்த்ரேஷ் குமார் ஆகியோர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ இடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், இத்தகவலை ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ஷியாம் ஆப்தே தன்னிடம் தெரிவித்ததாகவும் தயானந்த் பாண்டே வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை துணை ஆணையரிடம் பாண்டே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில்

2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் புனே சென்று ஷியாம் ஆப்தேவை சந்தித்தாகவும் அப்போது இந்த்ரேஷ் குமார் மற்றும் பகவத் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.யிடமிருந்து பணம் வாங்கி விட்டனர் என்று ஆப்தே வருத்தப்பட்டுக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்துக்குத் தெரிய வந்து கேப்டன் ஜோஷி என்பவரிடம், அந்த இரு தலைவர்களையும் கொலை செய்து விடுமாறு உத்தரவிட்டார் புரோஹித். புரோஹித் சொன்னபடி இரு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் கொல்லவில்லை ஜோஷி. இதனால் ஆப்தே கோபமடைந்தார்.

மாலேகான் குண்டுவெடிப்பு சதி முழுவதையும் தீட்டி, திட்டமிட்டது புரோஹித் மற்றும் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் ஆகியோர்தான். நாடு முழுவதும் முஸ்லீம்களால் இந்துக்கள் பாதிக்கப்படுவதற்கு பழி வாங்கும் வகையில் இந்தத் திட்டத்தை அவர்கள் தீட்டினர்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் நாசிக் அருகே உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று புரோஹித்தை சந்தித்தேன். அப்போதுதான் தான் அபினவ் பாரத் அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், இந்துத்வாவை இந்த அமைப்பின் மூலம் காக்கப் போவதாகவும் கூறினார் புரோஹித்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரீதாபாத்தில் நடந்த அபினவ் பாரத் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள சுதாகர் சதுர்வேதி, ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய் ஆகியோரும் வந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் இந்து ராஷ்டிரத்தை அமைப்பது குறித்தும், இந்துக்களின் நலனைக் காக்க தனி அரசியல் சாசனத்தை உருவாக்குவது குறித்தும் புரோஹித் விரிவாகப் பேசினார்.

மேலும், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்குத் தேவையான வெடிபொருட்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட உபாத்யாய், வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் ஆட்களை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், தான் இந்தூருக்குச் சென்று துறவி பிரக்யா சிங் தாக்கூரை சந்தித்ததாகவும் அப்போது, இந்துக்களைக் காக்க வெடிபொருட்களையும், வெடிகுண்டுகளையும் ஏற்பாடு செய்யுமாறு புரோஹித்திடம் கூறுங்கள் என்று தன்னை பிரக்யா சிங் தாக்கூர் கேட்டுக் கொண்டதாகவும் தயானந்த் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்

புரோஹித் தான் சொன்ன சொல்லில் மும்முரமாக இல்லாமல் போனதால் அவருக்கு எடுத்துக் கூறி வெடிகுண்டுகள உடனடியாக தயார் செய்யுமாறு அவரிடம் கூறும்படி தன்னைக் கேட்டுக் கொண்டார் பிரக்யா சிங் என்று கூறியுள்ளார் பாண்டே.

இதுவரை மாலேகான் வழக்கில் பாண்டே மற்றும் ராகேஷ் தாவ்தே ஆகிய இருவர் மட்டுமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சினிமா விமர்சனம் : நான் கடவுள்


நான் கடவுள்





ரஸ்ஸல்

கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா

வசனம்: ஜெயமோகன்

இசை: இளையராஜா

ன் மகனால் சொத்து ,சுகம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்று சொன்ன சோதிடனின் பேச்சை நம்பிப் பதினாலு வருடங்களுக்கு முன், சாஸ்திரம் படிக்க என்று மனைவியிடம் சொல்லிக் காசியில் தொலைத்த மகனைத் தேடித் தன் மகளுடன் காசிக்குத் தந்தை வருவதுடன் கதை துவங்குகிறது.

காசிப்பண்டிட்டின் உதவியுடன்,தலைமைச் சாமியாரைச் சந்தித்து மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தந்தை கெஞ்ச, "நீ அஹம் ப்ரம்மாஸ்மி; கடவுள்; உனக்கு உறவுகள் இருக்கக்கூடாது; ஊருக்குச் சென்று உன் உறவுகளை எரித்துவிட்டு வா" என்ற சாமியாரின் அனுமதியுடன் ஊருக்கு வருகிறார் மகன் ஆர்யா!



ஊருக்கு வரும் ஆர்யாவால் வீட்டில் தங்க இயலவில்லை. பாசத்துடன் நெருங்கும் தாயுடனும் ஒட்ட முடியவில்லை.சாப்பிடச் சொல்லும் தாயிடம் "கஞ்சா கிடைக்குமா?" எனக்கேட்டு, கஞ்சா கிடைக்கும் மலைக்கோவிலில் தங்குகிறார் ஆர்யா!



பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகச் செய்யும் பிச்சைக்கார மாஃபியாக் கும்பல்,கோயிலில் பிச்சை எடுப்பதற்காக ஆள் கடத்தல் செய்வதையும்,ஒரு கும்பலில் இருந்து மற்ற கும்பலுக்கும் பிற மாநிலத்துக்கும் காவல்துறையின் உதவியுடன் ஆள் கடத்துவதையும் கொடுமைப் படுத்துவதையும் விலாவாரியாகக் காட்டுவதே கதை.

ஒரு பிச்சைக்காரக் கும்பலில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் பார்வையிழந்த பிச்சைக்காரியான பூஜா, காவல்துறை உதவியுடன் வலுவான ஒரு கும்பலுக்குக் கடத்தப்படுகிறார். விகாரத் தோற்றமுள்ள மற்றொரு பிச்சைக்கார மாஃபியாத் தலைவனுடன் படுக்கையைப் பகிர கண்பார்வையுள்ள எந்தப் பிச்சைக்காரியும் சம்மதிக்காததால் பூஜாவைப் பத்துலட்சம் ரூபாய்க்கு விற்கிறான் கும்பல் தலைவன். ஆனால் இதை விரும்பாத சக பிச்சைக்காரர்கள் பூஜாவைத் தப்ப வைக்க முயலும்போது ஆர்யா மாஃபியாக் கும்பல் தலைவர்களைக் கொல்கிறார்.

சுமார் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் காசிக் காட்சிகள் மாதக் கணக்கில் படம்பிடிக்கப்பட்டன என்ற சொல்லப்பட்டது. ஆனால் காசிக்காட்சிகள் கொஞ்சமோ கொஞ்சம். படம் மொத்தமும் காசியில்தானோ என எண்ணும்படி ட்ரெய்லர் இருந்தது. படத்தில் ஆர்யா வரும் இடங்கள் /காட்சிகள் சுருக்கமே. எதனாலோ நிறைய காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது புரிகிறது.



இந்துத்துவா ஆள் என அறியப்பட்ட ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் சுருக்.

"ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டா பெத்த பிள்ளைய பதினாலு வருசம் காசியில் விட்டே?" எனக் காசிப் பண்டிட் கேட்கும் இடம்,



மலைமேல் இருக்கும் சாமியாரைத் தேடி வரும் ஒருவன் "சாமீ! சாமீ" எனும்போது, "கண் தெரியாதவனும் சாமி, காது கேட்காதவனும் சாமி, கல்லும் சாமி, மண்ணும் சாமி" " என ஆர்யா உறுமும் இடம்,

ஆர்யாவைத் தேடி வரும் பிச்சைக்காரச் சிறுவன் காவி உடுத்திய ஒருவனிடம்' " சாமியெப்பாக்கணும்"

"ஏன்? எங்களெப்பாத்தா சாமியாத்தெரியலையா?"

"சடபிடிச்சவனெல்லாம் சாமியா?"எனக்கேட்பது,

கோர்ட்டில் ஆர்யாவை நிறுத்தும்போது, மாஜிஸ்ட்ரேட், " இந்த மாதிரி ஆளுகளெயெல்லாம் ஒங்க சட்டம் ஒண்ணும் செய்யாது. ஒரு பரதேசி முதல் மந்திரியையே தலையை வெட்டுவேன்னு சொன்னானே? அவனெ ஒங்க சட்டம் என்ன செய்தது?" எனக் கேட்கும் இடம்.

தன்னைப் பார்க்க வந்த தாயிடம் ஆர்யா,

" ஐயிரண்டு திங்களாய் அடக்கி வைத்த தூமையே
கையிரண்டு காலிரண்டாய் பிள்ளையாய் ஆனதே

என்ற சித்தர் பாடலைக் கூறிவிட்டு, "தூமைன்னா என்னாண்ணு தெரியுமா உனக்கு? எனக்கேட்கும் இடத்தில் சுருக்....சுருக்..

கஞ்சா அடித்த ஜோரில், மலை மேலிருந்து ஆர்யா சங்கு ஊத, " சாமீ! நீங்க ஊதுற சத்தம் அடிவாரம் வரெ கேக்குது; நாங்க போலீஸுக்கு பயந்து சாமியார் வேசத்துலெ இங்கெ இருக்கிறொம்."எனக் காவி வேட்டிகள் கூறுவது எனப் பல இடங்களைக் கூறலாம்.

நகைச்சுவை நடிகராய் வடிவேலுவுடன் வரும் ஒருவர் இதில் மிக சீரியஸாக நடித்துள்ளார். நகைச்சுவைக்காட்சிகள் தனியாக ஏதுமில்லை. கதையோட்டத்தில் வசனங்களால் ஆங்காங்கே சிரிப்பு வெடிக்கிறது.

ஊனமுற்றவர்களைத் தேவைக்கேற்றபடி வேலை வாங்கி இருப்பதில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

தேர்ந்த நடிகர்களை விட இயல்பாக அனைவரும் நடித்துள்ளனர். வில்லன் தாண்டவனாக வருபவரின் நடிப்பு மிக அருமை. பூஜா விருதை எதிர்பார்த்து நடித்திருக்கலாம். அதற்காகவே சொந்தக் குரலில் டப்பிங்க் கொடுத்துள்ளார் போலும்.

பாலாவின் பிதாமகன் படத்துக்கும் இப்படத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

அதிலும் கஞ்சா; இதிலும் கஞ்சா..

அதிலும் சுடுகாடு; இதிலும் சுடுகாடு..



அதிலும் பழைய பாடல்களின் தொகுப்புப் பாடல் ; இதிலும் டிட்டோ..

நந்தாவில் மகன் தாய்ப்பாசத்துக்கு ஏங்குவான்;

இந்தப்படத்தில் தாய் மகன் பாசத்துக்காக ஏங்குகிறாள்.

இவை யதேச்சையா? அல்லது இதுதான் பாலாவின் ஸ்டைலா?

இந்த விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும்போது, மலையாள சானலான 'அமிர்தா டி.வி.யில், கேரளத்தில் பிச்சை எடுக்க, பிச்சைக்கார மாஃபியாவால் தமிழ்நாட்டிலிருந்து பிச்சைக்காரர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது, பொருத்தமாய் அமைந்தது.

வணிக ரீதியில் இல்லாமல் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக, பாலாவைப் பாராட்டலாம்.

படம் பார்த்தபின் மனதில் ஒரு வெறுமை. ஏனோ?

மொத்தத்தில் எதிர்பார்த்தது கிடைக்காதது ஏமாற்றமே!

ஈழப்பிரசினையில் இன்னுமொருவர் தீக்குளிப்பு

கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த அவர் இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று கூறி வந்தாராம்.

நேற்று மதியம் 2 மணி அளவில் மண்எண்ணெய் கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். அங்கு நடுரோட்டில் நின்று கொண்டு மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீ பற்றிப்பிடித்து எரிந்ததால் வேதனை தாங்க முடியாமல் ஓடிய அவர் ரோட்டோரத்தில் உள்ள டீக்கடை அருகில் கீழே விழுந்தார்.

அவரது உடலில் சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி தெரிந்து காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.

உடல் கருகி உயிருக்கு போராடியபடி கிடந்த தமிழ்வேந்தனை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தமிழ்வேந்தனுக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் யோசனைப்படி கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி நள்ளிரவு 1.30 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

ஜோதி என்ற தமிழ்வேந்தனுக்கு திருமணமாகி ஜான்சி என்ற மனைவியும், சந்தோஷ்(11/2) என்ற மகனும் உள்ளனர்.







முன்னதாக அய்யப்பன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று தமிழ் வேந்தனை பார்த்தனர்.

காங்கிரஸ்ஸில் அஸ்ஹருத்தீன் : இரண்டாவது இன்னிங்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக 90களில் செயற்பட்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஸ்ஹருத்தீன். தனது கிரிக்கெட் வாழ்வை சூதாட்டப் பிரசினையால் முடித்துக்கொண்ட அஸ்ஹருத்தீன் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸாக அரசியல் வாழ்வை தொடங்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைச் சந்தித்து காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக அவர் சேர உள்ளதாக ஒரு செய்தியை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி உறுதி செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே அஸ்ஹருத்தீன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் உள்ள தொகுதிகள் ஒன்றில் அவர் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.

"இலங்கைக்கு ஆயுதம் வழங்கவில்லை" - பிரணாப்

நேற்று நாடாளுமன்ற மேலவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்து பேசுகையில் அதிமுக எம்.பி மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா (உள்ளிட்ட சில உறுப்பினர்கள் "இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குகிறதா? இல்லையா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பிரதமர் பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் பதில் அளிக்கையில் "இலங்கைக்கு இந்தியா ஒரு போதும் ஆயுதங்கள் வழங்கவில்லை இலங்கை தங்களுக்கு தேவையான ஆயுதங்களை வேறு நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள்" என்று கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியாது என்றும் அரசியல் ரீதியில்தான் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

"நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும்"

நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும் என்று நேபாளம் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். அவர், அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தகால், முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசினார்.

"நேபாளத்தில் ஜனநாயக நடைமுறைகள் தொடர்ந்து நீடிப்பதற்கும், அமைதியான சூழ்நிலை ஏற்படுவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்."நேபாள பிரதமருடன் நடத்திய பேச்சில் இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்துடன் தொடர்ந்து நல்ல உறவை வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்" என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்

கடல் வழி அணு ஆயுதக் கடத்தலுக்கு வாய்ப்பு : கப்பற்படைத் தலைவர்

இந்தியாவின் கடல்பகுதி வழியாக அணுஆயுதங்கள் கடத்தப்படும் சாத்தியம் உள்ளதாக கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். "பலவீனமாக உள்ள இந்திய கடல் பகுதிகள் வழியாக ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களை சரக்கு கன்டெய்னர்கள் மூலம் கொண்டுவர முடியும்" என்றார் அவர்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறுகையில் "உலக அளவில் சரக்கு போக்குவரத்தில் 70 முதல் 75 சதவீதம், கன்டெய்னர்கள் மூலமாகவே நடக்கிறது. சட்ட விரோதமாக அணு ஆயுதங்களை கடத்த பயங்கரவாதிகளும் இந்த முறையை பயன்படுத்தலாம். அதனால், இந்த விஷயத்தில் உயரிய பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். முறையான பரிசோதனை மற் றும் ஸ்கேனிங் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். நூறு சதவீத பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாம் செயல்பட வேண்டும்" என்றார்

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படாது : லாலு

இரயில் நிலையங்களுக்குத் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று மத்திய இரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவரது கட்சியைச் சார்ந்த ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) என்ற உறுப்பினரின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் வைக்க ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சகம் தடை விதித்ததாகவும் அந்த உத்தரவு இன்றும் உள்ளதாகவும் அவர் கூறினார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரைக் கூட இரயில் நிலையத்திற்கு வைக்க முடியாது என்று அவர் கூறினார்.

எச்1பி விசா பிரச்சனை : அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க கோரிக்கை

அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வேலைக்கமர்த்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே நிதி உதவி அளிக்கப் படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் கோரியுள்ளது.

இந்த நிபந்தனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்யக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துவோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.

இந்த நிபந்தனைகளால் பிரச்சனை ஏற்படாது என்று அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் கருதினால் அது அவர்களின் அறியாமையையே வெளிப்படுத்தும். உகாண்டா, பிஜி தீவுகள் மற்றும் ஒபாமாவின் பூர்வீக நாடான கென்யா போன்ற நாடுகளில் இருந்த இலட்சக் கணக்கான இந்தியர்கள் எந்தவித கருணையும் இல்லாமல் விரட்டப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் கோரினார். அமெரிக்காவின் இந்த நிபந்தனை தளர்த்தப்படாவிட்டால் இந்தியாவில் உள்ள 14 அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்கக் கோரும் பிரச்சாரத்தைத் தொடங்குவோம் என்றும் அவர் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!