Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பதவி விலகு- ஒரிஸா அரசுக்கு உச்சநீதிமன்றம் சூடு

Published on: செவ்வாய், 6 ஜனவரி, 2009 //
ஒரிஸாவில் சிறுபான்மையினரான கிருத்துவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க இயலவில்லையெனில் பதவியை விட்டு விலகும்படி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்தது.

கிருத்துவர்கள் மீது வி.எச்.பி.யினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற நிலையில் சிறுபான்மையினர் காடுகளுக்குள் ஒளிந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட பெஞ்ச் இதை அனுமதிக்க முடியாது என்று கூறியது.

திருமங்கலம் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள்

Published on: //
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் திருமங்கலம் தொகுதியின் வாக்காளர்களுக்கு பலவிதமான அன்பளிப்புகள் வழங்கப் படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வாக்காளர்களுக்கு விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்த வரிசையில் இப்போது சாப்பாட்டு இலைக்குக் கீழ் ரூ 2,000 திருநெல்வேலி அல்வா என அன்பளிப்புகள் வழங்கப் படுவதாகத் தெரிகிறது.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் செய்துவரும் திரு வைகோ, "சாப்பாட்டு இலைக்குக் கீழ் 2,000 ரூபாய் வைக்கப்பட்டு நூதன முறையில் பணம் பட்டுவாடா நடக்கிறது," என்று குற்றம் சாட்டியுள்ளார். "ஆயிரக்கணக்கில் ஆடு, கோழி கறி விருந்துகள் நடத்தப்படுகிறது. அந்த விருந்துகளில் இலைக்குக் கீழ் 2,000 ரூபாய் வைக்கப்படுகிறது. இது ஊழல் பணம் வெள்ளமாக ஓடுவதைக் காட்டுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே திருமங்கலம் நகராட்சி 13-வது வார்டு முன்சீப் கோர்ட் ரோடு பகுதி, ராமச்சந்திரா தடாக ரோடு போன்ற பகுதியில் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் சில பொருட்கள் வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை அவர்கள் எடுத்துப் பார்த்தபோது 'நூற்றுக்கு நூறு' என்று எழுதப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் அரை கிலோ 'திருநெல்வேலி அல்வா' இருந்தது. அதனுடன் திமுக-வின் விளம்பர பிரசுரங்களும் இருந்தன. ஆனால் இதை யார் தங்கள் வீட்டிற்கு முன் போட்டார்கள் என்பது வாக்காளர்களுக்குத் தெரியவில்லை.

இந்நிலையில் 'இலவசத்தை கேலி செய்பவர்கள் எல்லாம் இன்று 'இலை' வசம் ஆனவர்கள்' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை அன்று தமிழக அரசின் சார்பில் இலவச பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி, சேலை வழங்குவதற்கான துவக்க விழாவில் அவர் பேசினார்.

"பொங்கலை முன்னிட்டு இலவசமாக பொங்கல் பொருட்கள் வழங்குவதை சிலர் கேலி செய்கின்றனர். இப்படி வழங்காவிட்டால் 'நீங்கள் மட்டும் சாப்பிடுகிறீர்கள். ஏழைகள் எதுவும் இல்லாமல் அல்லல்படுகிறார்களே' என்று கேட்பவர்களும் இருக்கின்றனர். இலவசமாகக் கொடுத்தால் நாடு உருப்படுமா? என்று கேட்பவர்களும் இருக்கின்றனர்" என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

ஆனால் தேர்தல் ஆணையம் தடை விதித்ததைத் தொடர்ந்து திருமலங்கலம் தொகுதியில் மட்டும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பிறந்த குழந்தை

Published on: //
நெதர்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் ஒரு குழந்தை பிறந்தது.

அந்த விமானத்தில் 124 பயணிகள் பயணம் செய்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணியும் ஒருவர். நடுவானத்தில் விமானம் பறந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த மருத்துவரும் மருத்துவ உதவியாளரும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தபோது கனடா நாட்டு வானில் விமானம் பறந்துக் கொண்டிருந்தது. அதனால் அந்நாட்டு விதிமுறைப்படி கனடா குடியுரிமை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி கோரிக்கை

Published on: //
இலங்கையில் நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிபட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு. வீரப்ப மொய்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளதாக தெரிவித்தார்.

சேவை வரியில் மாற்றம்

Published on: //
சேவை வரியிலிருந்து விலக்கு, 10 ரூபாய் வரை டீசல் விலை குறைப்பு, இந்தியா முழுவதும் சரக்குந்துகள் செல்ல அனுமதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சரக்குந்துகளின் உரிமையாளர்கள் திங்கள் கிழமை முதல் வேலை நிறுத்தத்தி்ல் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய சரக்குந்துகள் மற்றும் சிறிய சரக்குந்துகள் உட்பட சரக்குந்துகள் எதுவும் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சிறிய சரக்குந்துகள் ஓடவில்லை என்றும் இதனால் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்பட சுமார் 3 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நாடு முழுவதும் பொங்கல் மற்றும் சங்கராந்தி போன்ற பண்டிகை நாட்கள் அண்மித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படும்.

இன்று மத்திய அரசு அதிகாரிகளுடன் சரக்குந்து உரிமையாளர்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் சரக்குந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றான சேவை வரியை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கிளியரிங் முகமையாளர் (Clearing & Forwarding), பணியாள் சேர்ப்பு முகமையாளர்கள் (Manpower Recruitment), சரக்கு கையாளுநர்கள் (Cargo Handling), சரக்கு காப்பாளர்கள் (Cargo storage and Ware housing) மற்றும் இது தொடர்பான சேவை நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் தங்களின் மற்ற கோரி்க்கைகளும் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு

Published on: //
திருமலங்கலம் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலளார் தண்டபாணி மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கைலிகள், சேலைகள், தங்க மோதிரம், கறி விருந்து போன்றவற்றை அளித்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் இலஞ்சம் கொடுப்பது போன்ற காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டன. இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் மீது வழக்குத் தொடர உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தி.மு.க. வுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவவிக்கின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!