Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கியதில் ரூ.900கோடி ஊழல்?

இந்திய இராணுவத்துக்காக இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் புதியதிட்டம் பற்றிய செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இந்திய ராணுவத்துக்காக ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரூ. 600 கோடி முதல் ரூ. 900 கோடி வரை ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ்நந்தா முன்னாள் இந்திய கடற்படை தளபதி எஸ்.எம்.நந்தாவின் மகன் ஆவார். இவர் 1971-ல் நடந்த போரில் கடற்படை தளபதியாக இருந்தார். ஆயுத முகவர்களாக செயற்பட்டு வருகிற கதிர்சவுத்ரி, சுரேஷ்நந்தா ஆகியோரிடம் ம.பு.து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இன்னொரு முகவர் கதிர், அவரது சகோதரர் அசில் ஆகியோர் இந்தியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுத விநியோகிகளாக உள்ளனர். இவர்கள் உருஷியா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆயுத நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். முகவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கும், அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. விரைவில் இந்த ஊழல் தொடர்பாக முக்கிய தலைவர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

சிதம்பரம்: திருமாவுக்கு எதிராக பா.ம.க நடப்பு எம்.பி

சிதம்பரம்: திருமாவுக்கு எதிராக பா.ம.க நடப்பு எம்.பி


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம்(தனி), விழுப்புரம்(தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழர்பாதுகாப்பு இயக்கம் என்று அவர்களுடன் தேர்தலுக்கு முன்புவரை தோழமை காட்டிவந்த பா.ம.க. எதிரணியான அதிமுகவில் இடம்பெற்றுவிட இவ்விரு கட்சிகளும் சிதம்பரத்தில் மோதிக்கொள்ளுமா என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே பா.ம.க-வுக்கு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் சிதம்பரம்(தனி)யும் இடம்பெற்றது. இதை அறிந்த திருமா பாமகவுடன் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு கடலூர் தொகுதியை மாற்றிக்கேட்டிருந்தார். வேண்டுகோளை மீறி, இறுதியில் அவருக்கு சிதம்பரம்(தனி) தொகுதியே ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் சிதம்பரம்(தனி) தொகுதியிலேயே போட்டியிட வேண்டிய நிலையில், அவரை எதிர்த்து பா.ம.க தரப்பில் நடப்பு எம்.பியான பொன்னுசாமியே நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இதே தொகுதியில் களம் காண்பது இது மூன்றாவது முறையாகும்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் ஜஸ்வந்த்சிங், வீடியோ!

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜஸ்வந்த்சிங் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் காட்சி இதோ:-


பா.ஜ.க. பிரிவினைவாதஅரசியலை விதைக்கிறது : ராகுல் காந்தி

பாரதீய ஜனதா கட்சி பிரிவிணைவாத அரசியலை விதைக்கிறது என்று அக்கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். மும்பை தாக்குதல் சம்பவத்தை பா.ஜ.க. தேர்தல் பிரச்சனையாக ஆக்குவதை எதிர்த்து இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த நாடு முழுவதையும் நாங்கள் (காங்கிரஸ்) ஒரே நாடாகக் கருதுகிறோம். இந்த நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் எங்கள் எதிர்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலை விதைக்கின்றனர்" என்று ராகுல் காந்தி கூறினார்.

"சில கட்சிகள் மத அரசியல் செய்கின்றன. சில கட்சிகள் ஜாதி அரசியல் செய்கின்றன. மேலும் எங்களுக்கும் மற்ற எதிர்கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் நாங்கள் இந்தியாவை பொதுமக்களின் பார்வை வழியாகப் பார்க்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

அவர்கள் இப்போது தீவிரவாதம் குறித்து பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இது குறித்து எதுவும் பேசவில்லை. நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த போது, ஒரு அமைச்சர் காந்தகார் சென்று தீவிரவாதி ஒருவரை விடுவித்து விட்டு வந்தார் என்று ராகுல் கூறினார்.

மன்மோகன் சிங்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் : சமாஜ்வாதி கட்சி

தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங்தான் என்று சமாஜ்வாதி கட்சி கூறி உள்ளது. டெல்லியின் செய்தியாளர்களுடன் பேசிய சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் காங்கிரசுடன் தங்கள் கட்சிக்கு தகராறு எதுவும் இல்லை எனவும், மன்மோகன் சிங்கையே மீண்டும் பிரதமராக்க விரும்புகிறோம் என்றும் கூறினார்.

உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அங்கும் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் சமாஜ்வாதி கட்சி தற்போது கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

வாக்காளர்களுக்கு பா.ஜ.க. தலைவர் பணம் கொடுத்தார்?

வாக்காளர்களுக்கு பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர் பணம் கொடுப்பது போன்ற காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கின் மகன் பார்மர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபின் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதனை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங்குடன் பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் கைலாஷ் மேக்வால் என்பவரும் இதில் இடம் பெற்றுள்ளார். தேர்தல் பேரணி்யில் கலந்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடன் வந்தவரிடம் பணம் கொடுப்பது போன்று காட்சி அமைந்துள்ளது.

இது குறித்து தாசில்தார் அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் நடிகர் கோவிந்தா ஆகியோர் மீதும் ஏற்கனவே இத்தகைய புகார்கள் எழுந்துள்ளன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!