Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ராம் சேனா தலைவர் மங்களூர் மாவட்டத்திற்குள் நுழையத் தடை!

ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவரான பிரமோத் முதலிக் கர்நாடகாவின் தெற்கு கன்னடா மாவட்டத்திற்குள் ஒரு ஆண்டுக்கு நுழையத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு அவர் வந்தால் சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மங்களூரைத் தலைநகராக் கொண்டுள்ள தெற்கு கன்னடா மாவட்ட நிர்வாக அதிகாரிகள் 15 பக்கங்களைக் கொண்ட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக மாவட்ட அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜனவரி மாதம் கேளிக்கை விடுதிக்குள் சென்று இளம் பெண்களைத் தாக்கியது, கடந்த மாதம் காதலர் தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுகள் உள்பட பல்வேறு காரணங்கள் இந்த தடை உத்தரவுக்கு கூறப்பட்டுள்ளன.

மாவட்ட அமர்வு நீதிபதி பொன்னுராஜ் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேற்கு வங்கம் : நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகழ்பெற்ற இரு நடிகர்களும் பாடகர் ஒருவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நடிகர் தாபஸ் பால், நடிகை ஷதப்தி ராய் மற்றும் பாடகர் கபீர் சுமன் ஆகியோர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலிபூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் தாபஸ் பால் தற்போது நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகர் தொகுதி வேட்பாளராகவும், நடிகை ராய் பீர்பும் தொகுதி வேட்பாளாராகவும் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

நந்திகிராம் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மம்தா பானர்ஜியுடன் இணைந்து தீவிரமாகப் போராடிய பாடகர் சுமன் ஜதவ்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இடது சாரி சிந்தனையுள்ளவராக அறியப்பட்டு வந்த சுமன் தற்போது அவர்களுக்கெதிராய் திரும்பியுள்ளது குறிப்பிடத் தக்கது.

தென் இந்தியாவில் சினிமாத்துறையினர் அரசியலில் வெற்றி பெற்றது போன்று இங்கு முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு வங்காள நடிகர்களான விக்டர் பானர்ஜி, மவ்சூமி சாட்டர்ஜி, அனுப் குமார் மற்றும் பிப்லாப் சாட்டர்ஜி போன்று தேர்தலில் நின்று தோற்றுப் போயுள்ளதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அதிக கேள்விகள் கேட்டவர் கார்வேந்தன்

கடந்த ஐந்தாண்டுகால நாடாளுமன்றக் கூட்டங்களில் அதிக கேள்விகள் கேட்டவர் மற்றும் அதிக விவாதங்களில் பங்கு பெற்றவராக தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் உறுப்பிர் கார்வேந்தன் அறிவிக்கப் பட்டுள்ளார்.

பழனி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சுமார் 1200 கேள்விகள் கேட்டுள்ளார். 187 விவாதங்களில் பங்குபெற்றுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகெளடா, திரினாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி, நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் கோவிந்தா ஆகியோர் கடந்த 14ஆவது நாடாளு மன்றக் கூட்டங்களில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சுமார் 67 உறுப்பினர்கள் 10 அல்லது அதற்கும் குறைவான கேள்விகளையே கேட்டுள்ளனர்.

சென்னை: நடுக்கடலில் அமையும் சரக்குப்பெட்டக முனையம்

சென்னை துறைமுகத்தில் தற்போது சரக்குகளை ஏற்றி இறக்குவதில் உள்ள இடப்பற்றாக்குறை சிரமம் உள்ளது. இதனைத் தவிர்க்க, கூடுதலாக மேலும் ஒரு சரக்குப்பெட்டக முனையம் (Container Terminal) அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன்படி, சென்னை துறைமுகத்தில் இரண்டாவது ச.பெ.முனையம் அமைத்து அதன் பணிகள் முடிவு பெற்றுள்ளன. இரண்டொரு மாதங்களில் இந்த முனையம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

இந்நிலையில், மேலும் ஒரு புதிய முனையம் அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் நடுக்கடலில் மாபெரும் முனையம் அமைக்கப்படவுள்ளது. மூன்றாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த முனையம் 22 மீட்டர் ஆழமும், இரண்டு கி.மீ வரை நீளமும் கொண்டதாக இருக்கும். இந்த முனையத்திற்குச் செல்ல கடலுக்குள் இரண்டு கி.மீ தூரம் வரை சாலையும் அமைக்கப்படவுள்ளது.

சீனாவின் புகழ்பெற்ற ஷாங்காய் துறைமுகத்தில் 25 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் அமைந்துள்ள சரக்கு முனையத்துக்கு அடுத்தபடியாக பெரிய கடல் முனையம் சென்னை துறைமுகத்திலேயே அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!