Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

புஷ் மீது ஷூ வீசியவருக்கு மூன்று வருட சிறை

முந்தஸர் அல் ஜைதி. தொலைக்காட்சி நிருபரான இவர், தன்ஆட்சியின் கடைசி காலத்தில் பாக்தாத் வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மீது ஷு வீசியதால் ஒரே நாளில் புகழடைந்தவர்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் புஷ் பேசிக்கொண்டிருக்கையில் முந்தசர் திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி, நாயே இதுதான் ஈராக் மக்கள் உனக்குத் தரும் கடைசி முத்தம் என்று கூறி அடுத்தடுத்து எறிந்தார். ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் புஷ்.

உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது இந்த சம்பவத்திற்குப் பிறகு ஜைதி கைது செய்யப்பட்டாலும் அரபு நாடுகளி்ல் அவர் நாயகனாகி விட்டார். இச்சம்பவத்தை விசாரித்த இராக் நீதிமன்றம் முந்தஸருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அறிவிக்கை!

லக்னோவில் நடைபெற்ற ஹோலி பண்டிகை விழாவொன்றில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆளுக்கொரு நூறு ரூபாய் கொடுத்த விவகாரம் பிரசினையாகி உள்ளது.

இந்தக் காட்சிகள் தொ.கா ஒன்றில் வெளியானது. இதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு எதிர்கட்சிகள் எடுத்துச் சென்றன. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்குமாறு முலாயம்சிங் யாதவ்வுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் - திரினாமுல் காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திரினாமுல் காங்கிரஸ் காட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்யப் பட்டுள்ளது. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளது.

மம்தா பானர்ஜிக்கும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் கேசவ் ராவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின் போது மூவர் கொலை!

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது நடந்த பல்வேறு வன்முறைகளில் மூவர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமுற்றுள்ளனர்.

சப்ரா மாவட்டத்தில் இரு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கோவிந்து யாதவ் மற்றும் நாராயன் யாதவ் என்ற இரு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமுற்றனர்.

ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மற்றொரு நிகழ்வில் ஒரு குழந்தைக்கு குண்டு பாய்ந்து காயமுற்றுள்ளது. மேலும் 16 பேர் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் காயமுற்றனர்.

நவடா மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக ஒரு இளைஞரது வீட்டில் இருந்த மரத்தை வெட்ட அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர் பலி

ஜெர்மனியில் 17 வயது மாணவன் ஒருவன் தன்னுடைய பழைய பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் சென்று 15 பேரைச் சுட்டுக் கொன்றான். இச்சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிம் க்ரெட்ஸ்மர் என்ற அந்த மாணவன் தான் முன்பு பயின்ற ஆல்பர்வில்லே மேல்நிலைப் பள்ளிக்கு புதன் கிழமை காலை 9.30 மணிக்குச் சென்றான். பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் தலையைக் குறிவைத்துச் சுட்டான். இதில் எட்டுச் சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மாணவன் காவல்துறைக்குத் தகவல் தந்ததை ஒட்டி காவலர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற அவன் வழியில் ஒருவரைக் கொன்று விட்டு, வழியிலிருந்த ஒரு காரைக் கடத்திச் சென்றான். அந்த காரின் டிரைவரை பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டான்.

பள்ளியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வென்டிங்கன் என்னும் ஊருக்கு வந்தான். அங்கு தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் இருந்த கார் விற்பனை நிலையத்தில் இருவரைக் கொலை செய்தான். காவலர்கள் அவனைச் சுற்றி வளைத்து அவனது காலை நோக்கிச் சுட்டனர். கீழே விழுந்த அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணமடைந்ததாகக் காவல்துறை கூறுகிறது.

அந்த மாணவனின் வீட்டைச் சோதனையிட்டதில் அவனது வீட்டில் சமார் 16 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் மாணவர்கள் பள்ளிகளில் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு மாணவன் 11 பேரை சுட்டுக் கொன்றான். 2002ஆம் ஆண்டில் பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் 17பேரைச் சுட்டுக் கொன்றான்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!