Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

விமானப் பயணம்: கட்டணங்கள் குறைகின்றன:

Published on: வெள்ளி, 30 ஜனவரி, 2009 // ,
விமான எரிபொருள் விலைகள் சரிந்து வருவதையொட்டி, ஏர் இந்தியா தனது பயணக் கட்டணங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

அபெக்ஸ் -21 (APEX - 21) என்ற திட்டத்தின் கீழ், உள்நாட்டு ப் பயணத்தில் இப்போதும் அடிப்படைக் கட்டணம் ரூ.99/= மட்டுமே என்ற போதிலும், அரசுவரியாக ரூ.225/=ம், எரிபொருள் கூடுதல் கட்டணமாக ரூ.2700/= வசூலிக்கப்படுகிறது.

இந்த விலைக்குறைவு பிப்ரவரி 28 வரை மட்டுமே என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பொருளாதார வீழ்ச்சியையும் மீறி விமான நிறுவனங்களிடையேயான போட்டியும் இவ்விலைக்குறைப்புக்கு காரணம் என்றும், பகரமாக தன் அடிப்படை ச்செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

திரும்பிவிடும் காசோலைகள் குறித்து உயர்நீதிமன்றம்.

வணிக நடவடிக்கைகளில் வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பிவிடும் காசோலைகள் குறித்த வழக்குகளில் மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் "லோக் அதாலத்" களே தீர்ப்பளிக்கலாம் என்றும் அவையே இறுதித் தீர்ப்பாகக் கருதப்படலாம் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றங்களில் காசோலை திரும்பல் வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கி இருப்பதை இம்முடிவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உயர்நீதிமன்றங்களில் இவ்வழக்குகளுக்காக வாதிகள் செலுத்தவேண்டிய கட்டண அளவு, காசோலைத் தொகைக்கேற்ப ரூ.200 லிருந்து ரூ.1.5இலட்சம் வரை வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை: இலங்கை தூதரகம் மீது தாக்குதல் முயற்சி

அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இலங்கை தூதரகம் இருக்கும் டிடிகே சாலையில் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் அவர்கள் பார்த்தசாரதி சாலை சந்திப்பு வழியாக இலங்கை தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை துணை ஆணையர் மவுரியா, உதவி ஆணையர் ரவீந்திரன் ஆகியோர் சேலம் சட்டக்கல்லூரியை சேர்ந்த 36 மாணவர்களை இது தொடர்பாக கைது செய்தனர்.

"போர் நிறுத்த அறிவிப்பை புலிகள் அறிவிக்கட்டும்" - அன்பழகன்.

48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டிருந்தும் இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது குறித்து தமிழ் நாடு நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் வியப்பு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது.புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை விரும்பவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
இவ்வாறு அன்பழகன் சட்டசபையில் பேசியுள்ளார்.

இந்தியா: தனிநபர் வருமானம் உயர்வு!

கடந்த 2007-2008 ல், பொருளாதார வளர்ச்சி காரணமாக, இந்தியாவின் தனிநபர் வருமான அளவு ரூ. 33,283/= என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாம். 2006-2007ல் இது 29,524/= என்ற அளவில் தான் இருந்தது.

வளர்ச்சி விகிதம் 12.7சதம் என்ற இரட்டை இலக்கத்தில் கடந்த ஆண்டு உயர்ந்துஇருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில், அதிகபட்சம் 9.7 சதம் என்ற அளவிலேயே வளர்ச்சி விகிதம் இருந்தது. இதே காலக் கட்டத்தில் 1.4% என்ற அளவு மக்கள் தொகைப் பெருக்கம் இருந்தது. அதாவது நிதியாண்டின் இறுதியில் மக்கள் தொகை 1.38 பில்லியன் ஆகும்.

2003-04 காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 60% சத வளர்ச்சியாகும். அவ்வருடத்திலிருந்து வருடந்தோறும் 10% க்கும் அதிகமான வளர்ச்சி இருந்து வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் பொருளாதார சிக்கல்கள் அலைக்கழிக்கும் நடப்பாண்டில் வளர்ச்சி என்பது வீழ்ச்சியாக மாறி 7% என்ற குறியீட்டுக்கு த்தாழ்வு அடையும் என்று கருதப்படுகிறது. இத்தகவலை ரிசர்வ் வங்கியும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுமமும் தெரிவித்துள்ளன.

மலேகான்: ஸ்ரீராமசேனா தலைவனிடம் விசாரணை!

Published on: //
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், கர்நாடகாவிலுள்ள் ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கிடம் மும்பை தீவிரவாத தடுப்புப் படை விசாரணை செய்ய இருக்கிறது. பெண்களைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முத்தலிக்கிடம் விசாரணை நடத்த, ஏடிஎஸ் குழு உடனடியாக மங்கலாப்புரத்திற்குப் புறப்படும் என ஏடிஎஸ் தலைவர் ரகுவன்சி தெரிவித்தார்.

மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சன்னியாசி ப்ரக்யா சிங் தாக்கூரைப் புகழ்ந்து உடுப்பியில் முத்தலிக் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் முத்தலிக்கின் செயல்பாடுகளை, மாலேகான் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கர்னல் பிரசாத் புரோஹித்வெகுவாக புகழ்ந்ததாகவும் அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் சில பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்தவும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முத்தலிக்கிற்குத் தொடர்பு உண்டா என்பதைக் குறித்து விசாரிக்கவுமே ஏடிஎஸ் கர்நாடகா வர இருக்கிறது.

ஜிம்பாப்வே தன் நாணயத்தைக் கைவிட்டது!

ஜிம்பாப்வே நாட்டில் நிலவிவரும் கடும் பணவீக்கத்தினால் அந்நாடு தனது நாணயமான் ஜிம்பாப்வே டாலரைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடும்பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் தாறுமாறாக விலையேறிவிட்டன.

எகிறிச்செல்லும் பணவீக்கத்தினைக் கையாளவோ, உருப்படியான பண மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவோ இயலாத நிலையில் தற்போது இருக்கும் ஜிம்பாப்வே அரசு, பெரும் மதிப்புள்ள நாணயங்களை அறிமுகப்படுத்தி வந்தது. ஐம்பது மில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டுகள் சர்வ சாதாரணமாக ஜிம்பாப்வே மக்கள் புழக்கத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டை ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அந்நாணயத்திற்கு மதிப்பு சிறிதுமின்றிப் போய்விட்டதால் அந்நாட்டுமக்களே இதனைப் பயன்படுத்தாமல் பிற நாட்டு நாணயங்களைப் புழங்கி வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஜிம்பாப்வே அரசு தன் நாணயப் பரிமாற்றத்தோடு பிறநாட்டு நாணயங்களையும் மக்கள் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இன்றைய மதிப்பில் ஓர் அமெரிக்க டாலருக்கு 1520 ஜிம்பாப்வே டாலர் என்ற மதிப்பில் இந்நாணயம் உள்ளது.

இதேநிலை இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஜிம்பாப்வே தன் நாணயத்தை முற்றிலும் கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!