Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பா.ஜ.க. கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல : நக்வி

பாரதீய ஜனதா கட்சி கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல என்று அதன் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

கோயில், மசூதி, தேவாலயம், குருத்வாரா போன்றவற்றைக் கட்டுவதற்கு பாரதீய ஜனதா கட்சி கட்டுமான நிறுவனம் ஒன்றும் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அது, மதத்தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக் கொள்ளப்பட்டதாகவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலோதான் அமைய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக் கிழமையன்று கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். இவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தலைவர் ராஜ்நாத் சிங், ராமர் கோயில் கட்டுவது பா.ஜ.க.வின் முக்கிய குறிக்கோள் மற்றும் ஆசை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதியை அரசுதான் இடித்தது : ஆர். எஸ். எஸ். தலைவர்

பாபர் மசூதியை சங்பரிவாரம் இடிக்கவில்லை, அரசுதான் இடித்தது என்று ஆர். எஸ். எஸ் தலைவர் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷஜாபூர் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஆர். எஸ் எஸ் தலைவர் சுதர்ஸன், பாபர் மசூதி அரசு ஆட்களால்தான் இடிக்கப்பட்டது. கரசேவகர்கள் பாபர் மசூதியை இடிக்கவில்லை என்று கூறினார்.

மாநிலத்தில் ஆட்சியிலிருந்து பாரதீய ஜனதாவின் பெயரையோ அல்லது மத்திய அரசு அமைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் பெயரையோ குறிப்பிடாத அவர், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று தான் அயோத்தியாவில் இருந்ததாகவும், பிரச்சனைக்கு அப்பாற்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட முனைந்ததாகவும் ஆனால் அரசின் ஆட்கள் பாபர் மசூதியை இடித்ததால் அங்கு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!