Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காங்கிரசில் அஸாருத்தீன் ?

Published on: செவ்வாய், 20 ஜனவரி, 2009 // ,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருத்தீன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அஸாருத்தீனிடம் கேட்டபோது "இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றும், நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்குத் தகவல் தருகிறேன்" என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் அஸாருத்தீன் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் போட்டியிடும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவை சந்தித்தபோது, அஸாருத்தீன் அக்கட்சியில் இணைந்ததாக இதுபோன்ற வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6215 ரன்களையும், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9379 ரன்களும் எடுத்திருந்த அஸாருத்தீன் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாகவும் விளங்கினார். 2000 ஆம் ஆண்டு எழுந்த ஊழல் புகாரை அடுத்து இவர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

மும்பையின் தாராவி பகுதி அழகுபடுத்தப்படும்

மும்பையில் உள்ள தராவி என்றழைக்கப்படும் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். ஒழுங்கற்ற வீதிகள், வீதி தோறும் குப்பைகள் என்று சுகாதாரக் கேட்டுடன் உள்ள இப்பகுதி ஆசியாவின் மிகப் பெரும் குடிசைப் பகுதியாகும். இந்தப் பகுதியை அழகுபடுத்தப் போவதாக மகாராஷ்டிர அரசு இன்று அறிவித்துள்ளது.

இதற்காக உலகளாவிய அளவில் டெண்டர் விடப்படும் என்று மாநில வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று அமைச்சர் பிரீத்தம் குமார் தெரிவித்தார். மகாராஷ்டிர அரசு 2009ஆம் ஆண்டை "வீடுகளுக்கான ஆண்டு" என்று அறிவித்துள்ளதாகவும், இந்த ஆண்டில் தனியாருடன் இணைந்து வீட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருவோம் என்றும் அவர் கூறினார். இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க.விலிருந்து கல்யான் சிங் விலகல்

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து உத்திர பிரதேச மாநில முதல்வர் கல்யான் சிங் அந்தக் கட்சியி்ல் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக இன்று அறிவித்தார்.

பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தது தான் செய்த மாபெரும் தவறு என்றும், பா.ஜ.க.வில் தன்னை அவமானப்படுத்தினர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 76 வயதாகும் கல்யான் சிங் தற்போது பா.ஜ.க.வி்ன் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். 1992ஆம் ஆண்டு பாபரி மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல்வராக இருந்தார்.

லோத் எனப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவரான கல்யான் சிங் பா.ஜ.க.விலிருந்து விலகியிருப்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று டெல்லியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை இவர் சந்தித்துப் பேசியதாகவும், முலாயம் இவருக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் தருவதாக வாக்களித்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!