Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முஸ்லிம் லீக் காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டும் - பிரகாஷ் கரத்

Published on: சனி, 10 ஜனவரி, 2009 //
ஃபலஸ்தீனில் இனப்படுகொலை நடத்தி வரும் தீவிரவாத நாடான இஸ்ரேலுடன் உறவு வைத்துள்ள மத்திய அரசிலிருந்து முஸ்லிம் லீக் வெளியேற வேண்டும் என சி.பி.எம் பொது செயலாளர் பிரகாஷ் காராட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

"இஸ்ரேலுடனான மத்திய அரசின் தொடர்பில் எவ்வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில், ஃபலஸ்தீன் விவகாரத்தில் முஸ்லிம் லீக்கிற்கு மனப்பூர்வமான நிலைபாடு தான் உள்ளது எனில் வெளியுறவு துறை இணையமைச்சர் பதவியிலிருந்து இ.அஹமது ராஜினாமா செய்து வெளியேற வேண்டும். இஸ்ரேலுடனான மத்திய அரசின் உறவை முறிக்க வேண்டும் என்ற லீக்கின் தீர்மானம் வரவேற்புக்குரியது. வெறும் தீர்மானத்தோடு நின்று விடாமல், மத்திய அரசிலிருந்து இராஜினாமா செய்து வெளியேறினால், லீக்கின் நிலைபாட்டைக் கேரள மக்கள் வரவேற்பர்" என கேரளத்தில் நடக்கும் சி.பி.எம் மத்திய கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காராட்டு தெரிவித்தார்.

"இந்திய மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமெனில் காங்கிரஸ் தலைமையிலுள்ள அரசை வெளியேற்ற வேண்டும். காங்கிரஸை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை வரவிருக்கும் தேர்தலில் சி.பி.எம் எடுக்கும். ஆனால், எவ்வகையிலும் பாஜக ஆட்சிக்கு வருவதை சி.பி.எம் அனுமதிக்காது. காங்கிரஸ் தவிர்த்த மற்ற மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன."

"சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா, இஸ்ரேலின் தீவிரவாதத்திற்கு முழு உதவியும் செய்து வருகிறது. உலகில் நடக்கும் அனைத்து தீவிரவாதச் செயல்பாடுகளுக்கும் பின்னணீயில் அமெரிக்காவும் இஸ்ரேலுமே செயல்படுகின்றன. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்காமல் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இயலாது" எனவும் அவர் கூறினார்.

பங்காரப்பா மீண்டும் காங்கிரசில் இணைகிறார்?

Published on: வெள்ளி, 9 ஜனவரி, 2009 //
கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் பங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்று பங்காரப்பா கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று கூறி காங்கிரசில் இருந்து வெளியேறிய பங்காரப்பா, "சோனியா காந்தி பிரதமர் பதவியை தியாகம் செய்தவர். காங்கிரஸ் கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். இந்திய அரசியலை நன்கறிந்தவர்" என்று செய்தியாளர்களிடம் கூறினார். கர்நாடக மாநிலம் ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் கட்சி அனுமதியளித்தால் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் கர்நாடக மாநில செயலாளராக இருக்கும் இவரை மீண்டும் காங்கிரஸில் சேர்த்துக் கொள்ள, காங்கிரசின் தற்போதைய கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பங்காரப்பா ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் பா.ஜ.க.விலிருந்தும் வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு ஷிமோகாவில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஷிகாரிபுரா எனும் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

நந்திகிராம் இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி

Published on: //
மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு பெரும் கலவரம் நடைபெற்ற நந்திகிராம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெரோஸா பீவி கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பரமானந்தா பாரதியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கம்யூனிஸ்டு கட்சியின் முஹம்மது இல்யாஸ் மீது ஊழல் புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

வெற்றி பெற்ற பெரோஸா பீவி நந்திகிராமில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னின்று போராட்டம் நடத்தியவர். தன்னுடைய வெற்றியை இப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.

சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கைது

Published on: //
கடந்த ஐந்து நாட்களாக இந்தியா முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் டீசல் விலை குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் மற்றும் சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்கள் அண்மித்து வரும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. வேலை நிறுத்தத்தைக் கைவிடாவிட்டால் சரக்குந்து உரிமையாளர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் மேலாண்மைச் சட்டத்தின் (ESMA)படியும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படியும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.

மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சரக்குந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ரமேஷ் குலாட்டி டில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது அத்தியாவசியப் பொருட்கள் மேலாண்மை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

டில்லி, உத்திரப் பிரதேசம்,  ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் எஸ்மா சட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற மாநிலங்களும் விரைவில் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் சுமார் 60 இலட்சம் சரக்குந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக ஓடாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் நடத்திய வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

மூன்றாவது அணி குறித்து ஆலோசிக்கும் சிபிஐ!

Published on: //
சிபிஎம் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் கொச்சியில் ஆரம்பித்தது. இக்கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் இறுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக மூன்றாம் அரசியல் முன்னணி குறித்து எவ்வித முடிவும் பெறப்படாமல் கூட்டம் முடிவு பெற்றது.

"காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றான மூன்றாம் முன்னணி, அரசியல் சூழல்களை அவதானித்து முடிவு செய்வோம்" என சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறினார்.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அதற்கான சலனங்கள் கிடைக்கத்துவங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

பணவீக்கம் மீண்டும் குறைந்தது!

Published on: //
இந்தியாவின் பணவீக்க மதிப்பு மீண்டும் குறைந்தது. ஒரு நேரத்தில் 12 மேல் சென்ற பணவீக்க மதிப்பு கடந்தச் சில வாரங்களாக வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த டிசம்பர் 27 அன்றைய கணக்குபடி அதற்கு முந்தைய வாரக்கணக்கான 6.38 லிருந்து மீண்டும் குறைந்து 5.91 ஆனது. 10 மாதங்களுக்கு இடைப்பட்ட காலயளவில் உள்ள மிகவும் முறைந்த மதிப்பாகும் இது.

உலக அளவில் பொருளாதார மந்தநிலை தொடரும் வேளையில், இந்திய பணவீக்க மதிப்பு குறைந்து வருவது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஸா : 14ஆவது நாளாகத் தொடரும் தாக்குதல்கள்

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது "ஆபரேஷன் கேஸ்ட் லீட்" என்ற பெயரில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 781 பேர் பலியானதாகவும், 3100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் உடனடியான சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்கவில்லை. மீதம் உள்ள 14 உறுப்பு நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்நிலையி்ல் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்றிரவு நடைபெற்ற தாக்குதலில் பாலஸ்தீன ஜனநாயக விடுதலை முன்னணி என்ற இடதுசாரி அமைப்பின் தலைவர் காயமுற்றதாகவும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வியாழன் அன்று ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் நிறைவேற்றிய பின் நடைபெற்ற தாக்குதலில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

5வது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்

Published on: //
கடந்த திங்கள் கிழமை அதிகாலை முதல் நாடு முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. டீசல் விலையில் 10 ரூபாய் வரை குறைப்பு, சேவை வரி விலக்கு, நாடு முழுவதும் ஒரே பெர்மிட் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவுற்றதால் வேலை நிறுத்தம் தொடரும் என்று இந்திய சரக்குந்து வாகன உரிமையாளர்கள் பேராயம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் அண்மித்து வரும் நிலையில் நாடு முழுவதும் இந்த வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருள்களின் விலைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது அத்தியாவசிய பணிகள் மேலாண்மை சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

குஜராத், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநில அரசுகள் இந்த சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கூறியுள்ளன.

சினிமா விமர்சனம்: அபியும் நானும்

Published on: //

அபியும் நானும்


ரஸ்ஸல்


தமிழ் சினிமா என்றால் இப்போதெல்லாம் குடும்பத்துடன் பார்க்கும்படியாக அமைவதில்லை.
வெட்டு, குத்து, அரிவாள், ரத்தம் எனக் "கவிச்சி நெடி" அல்லது குளோஸப்பில் தொப்புழ், பெரிதுபெரிதாகக் குலுங்கும் மார்பகம் எனக் "கவர்ச்சி நெடி".
இதிலிருந்து வித்தியாசமாக, அருவருத்து முகம் சுளிக்காமல் பார்க்கும்படி அமைந்த ஒரு திரைப்படம் "அபியும்நானும்".
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் ப்ரகாஷ்ராஜ் , தமிழில் பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கினாலும் ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களையே தருவதாகக் கூறுகிறார். அவ்வகையில் 'மொழி'க்கு அடுத்து அவர் தந்துள்ளது "அபியும்நானும்" திரைப்படம்.
அபியாக த்ரிஷா, அப்பாவாகப் ப்ரகாஷ்ராஜ், அம்மாவாக ஐஸ்வர்யா (ராய் இல்லை)
காலையில் நடப்பதற்கு வந்த ப்ரகாஷ்ராஜ் வழியில் தம் மகளுடன் இருக்கும் ப்ருத்விராஜிடம் உரையாடுவதாகத் தொடங்கும் கதை.
ஒரே பெண் குழந்தையான அபி ப்ரீகேஜி வகுப்பில் சேர்வது முதல்,திருமணமாகிக் கணவனுடன் போவது வரை ஒரு பாசக்காரத் தந்தையின் எதிர்பார்ப்புகளையும் எதிரொலிகளையும் விவரிக்கிறது படம்.
எனினும் சில காட்சிகள் ரொம்ப ஓவர் - பூ சுற்றும் ரகம்.
ப்ரீகேஜிக்கு மகளைச் சேர்க்க இண்டர்வ்யூவுக்குத் தயாராகும் காட்சிகள், அவளை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பும்போது காட்டும் உணர்ச்சிகள் போன்றவை மிகை ரகம்.
அதுபோல திட்டக்கமிஷனில் ஒரு உறுப்பினராக மட்டுமே இருக்கும் அபியின் காதலனை, அவளது வீட்டு லேண்ட் லைனில் பிரதமரே அழைத்துப் பேசும் காட்சி "பூ"ரகம்.
காலில் வெந்நீர் கொட்டியதாக அலறும் மகளைக் கண்டவுடன் என்ன ஏது என விசாரிக்காமல் மனைவியின் கன்னத்தில் அறைந்துவிட்டு மகளைத் தூக்கிக் கொண்டு ஓரும் பிரகாஷ்ராஜ், உண்மையில் வெந்நீர் கொட்டியது மனைவியின் காலில் என்று அறிந்த பின் காட்டும் பாவமும் ஐஸ்வர்யா கூறும் அறிவுரையும் யதார்த்தம் ரகம்.
"குழந்தைகளுக்கு நாம் எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்; ஆனால் குழந்தைகள் ஈஸியாக நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்" என்பன போன்ற சிறப்பான வசனங்கள் சில இடங்களில் மின்னி மறைகின்றன.
மகளின் ஆசைக்காக ஒரு பிச்சைக்காரனை வீட்டில் தங்க வைப்பதில் என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் எனத் தோன்றும் கேள்விக்கு, மகள் ஒரு சீக்கியனைத் தன் வருங்கால வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் ப்ரகாஷ்ராஜிடம் அதே பிச்சைக்காரன் கூறும் விளக்கத்தில் விடைசொல்கிறார்.
நகைச்சுவைக்கெனத் தனியாகக் காமெடி ட்ராக் வைத்து, கோடுபோட்ட அண்டர்வியர் தெரியும்படி வேட்டியை மடித்துக் கட்டி, அடியும் உதையும் வாங்கும் சீப்பான காட்சிகளை வைக்காததற்குஇயக்குநர்க்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்.
ப்ரகாஷ்ராஜிடம் இயக்குநர் மனோபாலா குறுக்கிட்டுக் கேட்கும் கேள்விகளும் ப்ரகாஷ்ராஜின் பதில்களும்தான் நகைச்சுவை. ப்ருத்வியிடம் ப்ரகாஷ்ராஜ் பேசிக்கொண்டிருக்கும்போது, "என்னசார் ஃப்ரெண்டா?" என மனோபாலா கேட்க, " இல்ல; என்னெ கொல பண்ண வந்திருக்கார் ரேட் பேசிட்டிருக்கேன்" என்று ப்ரகாஷ் ராஜ் அளிக்கும் பதில் இயல்பான நகைச்சுவை.
காதல் பறவையாக டூயட் பாடிப் படங்களில் உலாவரும் த்ரிஷா இப்படத்தில் அதிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார். ஐஸ்வர்யாவின் நடிப்பு கச்சிதம்.
பாடல்கள் எளிமையான ராகத்தில்..
"வா வா தேவதையே"," ஒரே ஒரு ஊரிலே" போன்ற பாடல்கள் ம்யூஸிக் சானல்களில் பிரபலமாகின்றன.
சீக்கியக் கதாபாத்திரங்கள் ஹிந்தியிலேயே உரையாடுவது ப்ள்ஸ்பாய்ண்ட்.
படம் பார்த்து முடிந்தபின்தான் தெரிகிறது இப்படம் சொல்லும் சேதி என்னவென்று.
" அன்பை விதையுங்கள்; அன்பால் வெல்லுங்கள்"
இதையே காட்சிகளாகவும் வசனங்களாகவும் காட்டியுளார் இயக்குநர் ராதாமோகன்.

சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்

Published on: வியாழன், 8 ஜனவரி, 2009 //
.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கட்சியின் தலைவர் சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, முதலமைச்சராகப் பதவியேற்ற இவர் தேர்தல் ஆணைய விதிகளின்படி, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.இதற்காக அவர் கடந்த 3 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலலில் போட்டியிட்டார்.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சிபுசோரன் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து ஜார்கண்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண பதார் வெற்றிபெற்றுள்ளார். இடைத்தேர்தல் முடிவு சிபுசோரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சிபுசோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக சஞ்சய் தத் அறிவிக்கப்பட்டார்

Published on: //
மும்பை குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இரு முறை சிறை சென்று பிணையில் வந்துள்ள நடிகர் சஞ்சய் தத் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியின் தற்போதைய உறுப்பினர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத் தக்கது.

சஞ்சய் தத் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சிறப்புச் சலுகை பெறப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மட்டைப் பந்து வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்து இத்தகைய அனுமதி பெற்றே தேர்தலில் போட்டியிட்டார்.

சஞ்சய் தத்தின் சகோதரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதால் காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்காது என்று கூறப்படுகிறது.

அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு: குற்றம்சாட்டப்பட்டவர் கொலை

Published on: //
அஸ்ஸாம் மாநிலத்தியில் கடந்த முதல் தேதியன்று நடைபெற்ற தொடர் கொண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியாக காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்ட பிரன்ஜோல் தேகா என்பவர் காவல் துறையினரால் இன்று சுட்டுக் கொல்லப் பட்டார். பிஜு சரனியா மற்றும்  பம்பால் என்ற பெயர்களாலும் அறியப் பட்டு வந்த 20 வயதே ஆன இவர் உல்பா இயக்கத்தின் முக்கியத் தலைவர் என காவல் துறை தகவல்கள் கூறுகின்றன.

அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மற்றும் நல்பாரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஹலிகுச்சி என்னும் கிராமத்தில் இவர் மறைந்திருந்த தகவல் அறிந்த காவல் துறையினர் இவரைச் சுட்டுக் கொன்றனர்.

புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

மாணவியின் கண்ணைக் குருடாக்கிய ஆசிரியை

Published on: //
சட்டீஸ்கர் மாநிலம் ரய்ப்பூரில் உள்ள 6 வயதே ஆன பள்ளி மாணவி ஆசிரியையின் கேள்விக்குப் பதில் அளிக்காததால் கோபமடைந்த அந்த ஆசிரியை மாணவியின் வலது கண்ணைக் குருடாக்கிவிட்டார்.

கடந்த நவம்பவர் மாதம் இச்சம்பவம் நடந்ததாகவும் புதன் கிழமைதான் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறிய காவல் துறை அதிகாரி, அந்த ஆசிரியை குண்டூசி கொண்டு மாணவியின் வலது கண்ணைக் குருடாக்கியதாகக் கூறினார். இச்சிறுமியின் கண் குருடாகிவிட்டதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்தபின் அந்த ஆசிரியை தலைமறைவாகி விட்டதாகவும் அவள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

சிறுமியின் கண்ணைக் குணப்படுத்த ஆகும் மருத்துவ செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

Published on: //
கடந்த 13 நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதில் 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தெற்கு லெபானான் பகுதி மீது இஸ்ரேல் 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக இன்று காலை தெற்கு லெபானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாவே லெபனான் மீதான ஏவுகணை தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் என்ற அமைப்பு தங்களுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது. லெபனானில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள்தான் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசியிருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. ஹமாஸ் இயக்கத்தினர் இதில் ஈடுபடவில்லை எனவும், மற்ற பாலஸ்தீனிய குழுக்கள் செய்தனவா என தங்களுக்குத் தெரியாது எனவும் ஹமாஸ் கூறியுள்ளது. ஹமாஸ் தனது தாக்குதல்களை பாலஸ்தீனத்தின் எல்லையிலிருந்துதான் தொடரும் எனவும் இதற்காக மற்ற அரபு நாடுகளைப் பயன்படுத்தாது எனவும் ஹமாஸ் கூறியுள்ளது.

ஒதுக்கீடு கேட்கும் கப்பல் உரிமையாளர்கள்

Published on: புதன், 7 ஜனவரி, 2009 //
பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் அனுப்பும் சரக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமான கப்பல்களில்தான் அனுப்ப வேண்டும் என்று அரசுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கோரிக்கை மடல் அனுப்பியுள்ளது.

1980களில் இந்திய கப்பல்கள் 40 சதவீத சரக்குகளைக் கையாண்டதாகவும் தற்போது 12 முதல் 13 சதவீத சரக்குகளையே கையாள்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய கப்பல் நிறுவனங்கள் அதிக விலை கேட்பதாக எழும் புகார் குறித்து விசாரித்த போது, இந்திய நிறுவனங்கள் கப்பல்களைப் புதிதாக வாங்குவதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல்களைப் பயன்படுத்துவதாகவும் இதனால் அவர்கள் குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும் இந்திய கப்பல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் குல்கர்னி கூறினார்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதத்தில் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள் 391.8 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு இது 378.8 டன்னாக இருந்தது எனவும் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

காஸா : தொடரும் தாக்குதல்கள்

Published on: //
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுள்ளது. இதுவரை சுமார் 670பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 3000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் இராணுவப் பிரிவு மட்டுமின்றி இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் இஸ்ரேலிய இராணுவத்தினருடன் கடும் சன்டையில் ஈடுபட்டு வருவதாகவும் சுமார் 40க்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய இராணுவ சேதம் குறித்த உறுதிப்படுத்தப்படதாக தகவல்களே கிடைக்கின்றன. இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்ததப்பட்டதாகவும், 7 டாங்கர்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மொரிட்டீனியா, வெனிசுலா, எகிப்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதர்களை வெளியேற்றி உள்ளன.  டென்மார்க் தனது நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இஸ்ரேல் தன்னுடைய நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுவதைக் குறித்து கவலைப்படவில்லை என்று இஸ்ரேலிய ஜனாதிபதி சைமன் பெரஸ் கூறினார். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து இறங்கி உள்ளது. இதற்கான திட்டம் ஒன்றை நேற்று எகிப்து அதிபர் முபாரக் அறிவித்தார். இந்த திட்டம் குறித்து பரிசீலிப்பதற்காக இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் தற்போது கூடி விவாதித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சற்றுமுன் கிடைத்த தகவல்படி காஸாவின் கான் யூனுஸ் என்ற நகரிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறி இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

லாலு ஜப்பான் செல்கிறார்

Published on: //
சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை திட்டத்திற்கு ஜப்பானின் கடன் உதவி பெறுவதற்காக இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பான் செல்கிறார். சுமார் 1 வார பயணத்தில் அவருடன் இரயில்வே இணை அமைச்சர் வேலு, இரயில்வே போர்டின் தலைவர் ஜீனா மற்றும் இரயில்வேன் மூன்று உயர் அதிகாரிகளும் இம்மாதம் 11ஆம் தேதி ஜப்பான் செல்கின்றனர்.

ஜப்பான் பன்னாட்டு கூட்டறவு முகமை (Japan International Cooperation Agency)யிடம் 450 பில்லியன் யென் (சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய்) கடன் ஒப்பந்தம் ஏற்படும் என்று தெரியவருகிறது. இந்தத் தொகை இந்தியாவின் மேற்குப் பகுதியில் சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை அமைக்க பயன்படுத்தப்படும். இந்தப் பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட வேண்டும் என்ற ஜப்பானின் கோரிக்கையை இரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டதுடன், ஜப்பானிடமிருந்து அதிக சக்தியுள்ள என்ஜின்களை வாங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

160 என்ஜின்கள் வாங்கப்படும் என்றும் கடன் தொகையில் சுமார் 30 சதவீதம் இதற்கென பயன்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தியர் நியமனம்

Published on: //
அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தி வம்சாவளியைச் சார்ந்த சஞ்சய் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சி.என்.என். தொலைக்காட்சியில் மருத்துவ செய்தியாளரகப் பணியாற்றி வருகிறார். 40 வயதாகும் குப்தா அமெரிக்காவின்  மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா இராக்கைக் கைப்பறிய போது அமெரிக்காவின் கடற்படை பிரிவில் பணியாற்றிய இவர் இராக் சென்றார். அங்கு அமெரிக்க இராணுவத்தினருக்கு மட்டுமின்றி இராக்கியர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்தார்.

அரசுத்துறை மருத்துவமனைகளின் தலைவர் என்ற முறையில் சுகாதாரம் குறித்த அரசின் நிலையை மக்களுக்குத் தெரிவிப்பது இவரது பணியாகும்.

இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய வெனிசுலா

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழியாக கடும் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் உலகெங்கும் உள்ள அரசுகள் இஸ்ரேலின் இச்செயலைக் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் வெனிசுலாவில் உள்ள இஸ்ரேலியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலரையும் வெனிசுலாவை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக செவ்வாயன்று தொலைக்காட்சியில் உரையாற்றி வெனிசுலா அதிபர் சாவேஸ், வெனிசுலாவில் உள்ள யூதர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று கூறிய தனது உரையைத் தொடங்கினார். இஸ்ரேலியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை 215 குழந்தைகள் மற்றும் 98 பெண்கள் உள்பட 660 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3ஆவது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்

Published on: //
சரக்குந்து உரிமையாளர்களும் மத்திய அரசும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து, சரக்குந்து வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்திற்கு இரயில்வே துறையின் உதவியை நாடியுள்ள போதிலும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

எங்களுக்கு ஒவ்வொரு நாளும் நட்டம் ஏற்படுகிறது. எங்களால் தொடர்ந்து இந்த தொழில் செய்ய இயலவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அகில இந்திய போக்குவரத்துப் பேராயத் தலைவர் சரன்சிங் லோஹரா கூறினார். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் கூறினர்.

சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்று அத்தியாவசியப் பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வேலை நிறுத்தத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!