Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இலங்கை: மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்

Published on: செவ்வாய், 10 மார்ச், 2009 // , , , , ,
இலங்கையில் மட்டாரா என்னுமிடத்தில் மசூதி அருகே மிலாடி நபி விழா கொண்டாடப்பட்ட போது தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தபால் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் மஹிந்தா விஜயசேகராவுடன் 3 அமைச்சர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்,15 பேர் பலியாகியுள்ளனர்.தாக்குதலில் தெற்கு பிராந்திய முதல்வர் ஸ்ரீசேனாவும் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும் அமைச்சர்களை குறிவைத்தே இத்தாக்குதலை விடுதலைப்புலிகள் நிகழ்த்தியுள்ளதாக இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்

'பார்பி'க்கு வயது 50!

சிறு குழந்தைகள் முதல் பதின்ம வயதினர்ர் வரை பெண்குழந்தைகளின் கனவுப் பொம்மையாக இருந்து வரும் பார்பி, 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்தாலும் அதன் செல்வாக்கு உலகின் பல நாடுகளின் குழந்தைகளிடையே மேன்மேலும் பெருகி வருவதாக இந்தப் பொம்மையை உருவாக்கிய மேட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்விடுதலையை வலியுறுத்தும் ஒரு சின்னமாக இந்தப் பொம்மையை இதன் ஆதரவாளர் சிலர் வர்ணித்தாலும் பாலியல் சின்னமாக பெண்களை நிலை நிறுத்தும் கருவியாக இந்தப் பொம்மை இருப்பதாகவும் சாத்தியமில்லாத உடலியல் அம்சங்களைக் கொண்டு தவறான ஓர் எண்ணத்தைக் குழந்தைகளிடம் இது விதைப்பதாகவும் இதன் எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்துள்ளனர்.

எதிர்ப்புகள் பல இருப்பினும், போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல பொம்மைகள் இருந்தாலும் 50 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள பார்பி, மேட்டல் நிறுவனத்தைப் பொறுத்தவரை நல்ல லாபம் ஈட்டித் தந்துள்ளது. இப்பொம்மையின் சராசரி விலை கிட்டத்தட்ட 30 அமெரிக்க டாலராக இருக்கிறது. மிக உயர்ந்த விலையாக 8000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொம்மையும் சந்தையில் விற்பனையில் உள்ளது.

'அமெரிக்கக் கடற்படைக் கப்பலைச் சீனா அச்சுறுத்தியது' - அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படைக் கப்பல் 'தி இம்பெக்கபிள்' சீனாவின் ஹைனன் தீவுக்கருகே பன்னாட்டுக் கடற்பரப்பில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சீனாவைச் சேர்ந்த ஐந்து கப்பல்கள் அமெரிக்கக் கப்பலுக்கு மிக அருகே சூழ்ந்து கொண்டு அச்சுறுத்தியதாக அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

இது புதிதில்லை என்றும் இதே போல் சீனாவைச் சேர்ந்த கப்பல்கள் அமெரிக்கக் கப்பலை அச்சுறுத்துவது தொடர்கிறது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து சீனா அதிகாரப்பூர்வ பதில் ஏதும் அளிக்காத நிலையில் பெண்டகனில் இருக்கும் சீன ராணுவத் தொடர்பு மையத்திடம் கடும் கண்டனம் கையளித்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பன்னாட்டுக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபடும் கடற்படைக் கப்பல்களை இதுபோல் இன்னொரு நாட்டுக் கப்பல்கள் அச்சுறுத்துவது கவலைக்குரிய நடவடிக்கையில்லை என்றாலும், அமெரிக்காவின் பொறுமையைச் சோதித்து தாக்குதலுக்குச் சீண்டும் வகையில் சீனக் கப்பல்கள் நடந்து கொண்டன என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜப்பான் கரையருகே சரக்குக் கப்பல்கள் மோதல்!

ஜப்பானின் பல தீவுகளில் ஒன்றான இசு ஒஷிமோ தீவின் கரையருகே இரு சரக்குக் கப்ப்பல்கள் மோதிக் கொண்டன. இவற்றில் ஒன்று தென்கொரியாவைச் சேர்ந்தது என்றும் இன்னொன்று பனாமாவைச் சேர்ந்தது என்றும் தெரிய வந்துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் 16 ஊழியர்கள் இருந்ததாகவும், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய கரையோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

மோதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் காணாமல் போன தென்கொரியக் கப்பலைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. பனாமாவைச் சேர்ந்த கப்பல் பலத்த சேதத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கப்பலில் இருந்தோர் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!