Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மார்ச் 1 முதல் குறைகிறது தொலைபேசிக் கட்டணங்கள்!

Published on: வெள்ளி, 27 பிப்ரவரி, 2009 // , ,
மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.


இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.


இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதற்கிடையே - 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி, பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ். என்.எல். நிறுவனம் தெரி வித்துள்ளது. தற்போது, இந்த வசதியை வைத்து இருக்கும் சந்தாதாரர்கள் இனி மேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் பேருந்து சேவை நிறுத்தம்

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து, டாக்காவிலிருந்து கொல்கத்தா மற்றும் அகர்தலா இடையே இருந்து வந்த பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகர்தலா - டாக்கா, டாக்கா - கொல்கத்தா பேருந்து சேவை மறு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப் படுவதாக பங்களாதேஷ் சாலைப் போக்குவரத்துக் கழகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பங்களாதேஷ் நிலைமை திரிபுரா மாநிலத்தைக் கவலை கொள்ளச் செய்வதாக அம்மாநில முதல்வர் மானிக் சர்கார் கூறியுள்ளார். ஆனால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பங்களாதேஷ் எல்லையைத் தீவிரமாகக் கண்கானித்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

பங்களாதேஷுடனான வர்த்தக பரிமாற்றங்களும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக இந்திய சுங்கத் துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கோத்ரா கலவர வழக்கு மீண்டும்!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கோத்ரா கலவர வழக்கை குஜராத் காவல்துறை மீண்டும் தொடங்கி உள்ளது.

குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பாரூக் சேக் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டது. மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோத்ரா கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த 1958 வழக்குகளையும் மீண்டும் தொடர மாநில காவல்துறைக்கு உத்தரவிடடதாக அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டது.

1958 வழக்குகளில் 93 வழக்குகள் மீண்டும் தொடங்கப் பட்டுவிட்டதாகவும் மற்றவற்றில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் முழுவதையும் மீண்டும் தொடங்கி சாட்சிகளிடம் புதிய வாக்கு மூலங்களைப் பெறவும், புதிதாக விசாரணையை மேற்கொள்ளவும் 2004ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

லட்ச ரூபாய் கார் மார்ச் 23ம் தேதி முதல் விற்பனை

ஒரு லட்ச ரூபாய் காரான நானோ மார்ச் 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்த கார் டாடா மோட்டார்ஸ் டீலர்களிடம் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

ஏப்ரல் 2ம் வாரம் முதல் நானோ காருக்கான புக்கிங் தொடங்கும் என்று டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்பதிவு மற்றும் இதர நடைமுறைகள் குறித்தும் மேலதிக விவரங்கள் இத்தொடக்க விழாவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!