Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தென் ஆப்பிரிக்காவில் காலரா பரவுகிறது

Published on: ஞாயிறு, 25 ஜனவரி, 2009 // , , ,
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் பல நாடுகளில் பரவி வந்த காலரா தற்போது தென் ஆப்ப்ரிக்க நாட்டையும் தாக்கி உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் முதலில் பரவத் தொடங்கிய காலரா அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் பரவியது.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற குரூகர் தேசியப் பூங்காவில் காலரா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பூங்காவின் சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என அரசு அலுவலர்கள் கூறினாலும், இப்பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்காக வழங்கப்படும் குடிநீரிலும் இக்க்கிருமிகள் தென்பட்டதாக சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

ஒவ்வோராண்டும் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குரூகர் தேசியப் பூங்காவிற்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜிம்பாப்வேயில் கடந்த ஆகஸ்டு முதல் 3000க்கும் அதிகமானோர் காலரா தாக்கி இறந்துள்ளனர் என்பது கவலையளிக்கும் தனித் தகவல்.

சத்யம் நிறுவன தணிக்கையாளர்கள் கைது!

சத்யம் நிறுவனத்தின் தணிக்கையாளர்களான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற பன்னாட்டு தணிக்கை நிறுவனத்தின் இரு மேலாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

சத்யம் நிறுவன கணக்கு வழக்குகளில் 8000 கோடி ரூபாய் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது வெளியானதைத் தொடர்ந்து அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு இம்மாதத் துவக்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் பற்றிய விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்பில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரினிவாஸ் தலுரி ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

"சத்யம் நிறுவனம் தொடர்பான விசாரணகளுக்கு எங்கள் குழு முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைது நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" என தணிக்கை நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இந்தியா - கஜகஸ்தான் : நான்கு ஒப்பந்தங்கள்

இந்தியா - கஜகஸ்தான் இடையே 4 அரசாங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

மத்திய ஆசியாவில் யுரேனியச் செறிவு மிக்க நாடான கஜகஸ்தான் உலகின் யுரேனிய உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நாட்டுடன் இந்தியா குடிமை அணுசக்தி ஒப்பந்தம், குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி யுரேனியம் சார்பொருட்களை கஜகஸ்தான் இந்தியாவுக்கு வழங்கவும், அணுசக்தி நிலையங்களை இந்தியா கஜகஸ்தானில் நிர்மாணிக்கவும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புது டெல்லியில் இருநாட்டு குடியரசுத்தலைவர்கள் பிரதீபா பாட்டீலும், நூருல் இஸ்லாம் நஸர்பயேவ்வும் இவ்வொப்பந்தங்களை மேற்பார்வையிட்டனர்.
"இவை இருநாட்டுகளிடையேயான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும்" என்று நமது செய்தியாளர்களிடம் நஸர்பயேவ் பின்னர் தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பிலும், உலக வர்த்தக அமைப்பில் கஜகஸ்தானுக்கு இடமளிப்பது குறித்தும் மற்ற இரு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

25 இந்திய கடற்பிரயாணிகள் விடுவிப்பு

Published on: //
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இருமாதங்களாக பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 25 இந்திய கடற்பயணிகளும், மூன்று வங்கதேசத்தவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வேதிப்பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலான M T பிஸ்காலிகா என்ற லைபீரிய கப்பலிலிருந்து ஏடன் வளைகுடா அருகே கடந்த நவம்பர்28 அன்று இவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

இத்தகவலை தேசிய கடற்பிரயாணிகள் நல ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அப்துல்கனி செராங் தெரிவித்துள்ளார். "அனைவரும் நலமாக உள்ளனர்" என்றார் அவர்.

தொடக்கத்தில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்கள் பிணைத்தொகை கோரியிருந்த கொள்ளையர்கள், பின்னர் அதை 25இலட்சம் டாலர்களாக ஏற்றிக்கேட்டிருந்தனர். எனினும், விடுவிக்கப்படுவதற்கு முன்பாக பிணைத்தொகை வழங்கப்பட்டது பற்றி தெரிய வரவில்லை.

கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட 18 இந்தியர்களுக்குப் பிணைத்தொகையாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இக்கொள்ளையர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!