Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

Published on: வெள்ளி, 23 ஜனவரி, 2009 // , , ,
அமெரிக்க கணிணி நிறுவனமான மைக்ரோஸாப்ட் தமது ஊழியர்களில் 5000 பேரை வேலையிலிருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அவர்களில் 1400 பேர் உடனடியாகவும் மற்றவர்கள் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாகவும் நிறுத்தப் படுவர். மெதுவடைந்திருக்கும் பொருளியல் சூழலும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்தில் செலவிடும் தொகை வெகுவாகக் குறைந்து விட்டதுமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை அந்நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு குறைந்து விட்டதாகத் தெரிவிக்கிறது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இந்த ஆட்குறைப்பு செய்யப் படுகிறது.

அந்நிறுவனத்தில் ஆய்வு, சந்தைப் படுத்தல், விற்பனை, நிதி, சட்டம், மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப் படுவர் என்று தெரிகிறது.

குவாண்டனாமோ சிறையை மூட ஒபாமா உத்தரவு!

புதிய அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா தான் வாக்களித்தபடி குவாண்டனாமோ சிறையை முற்றிலும் மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

"பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் அதேவளை, அமெரிக்க விழுமியங்களையும் விட்டுக் கொடுக்கமாட்டோம்" என அவர் கூறியுள்ளார்.

குவாண்டனாமோவில் நடைபெற்றுவரும் அனைத்து இராணுவ விசாரணைகளையும் நிறுத்தி வைக்க முன்னதாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. குவாண்டனாமோவில் தண்ணீரில் மூழ்கடிக்கும் உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற சித்திரவதை விசாரணை முறைக்கு முந்தைய அதிபர் புஷ் ஒப்புதல் அளித்திருந்ததும் பல்வேறு மனிதநேய அமைப்புகள் அம்முறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததும் அறிந்ததே.

ஒபாமாவின் உத்தரவை அடுத்து குவாண்டனாமோ சிறை ஓராண்டுக்குள் முற்றிலும் மூடப்படும் எனத் தெரிகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!