Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடி

Published on: சனி, 28 பிப்ரவரி, 2009 // , ,
கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடி

பெங்களூர், பிப். 27: கடந்த 9 மாதங்களில் முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக வாடகையாக ரூ. 4.52 கோடியை அரசு செலவு செய்துள்ளது.

மாவட்டங்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும்போது இப்போதெல்லாம் முதல்வர்கள் ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த வகையில் மற்ற முதல்வர்களை விட ஹெலிகாப்டரை முதல்வர் எடியூரப்பா அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மேலவையில் மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர் பசவராஜ் ஹொரட்டியின் கேள்விக்கு அரசு எழுத்து மூலம் பதில் அளித்துள்ளது.

இதில் முதல்வர் எடியூரப்பா 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி பதவி ஏற்றார். அன்று முதல் கடந்த 9 மாதங்களில் அரசு முறைப் பயணத்துக்கு முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் வாடகைப் பணமாக இதுவரை ரூ. 4.59 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு மே மாதம் முதல் 2006-ம் ஆண்டு பிப்ரவரி வரை முதல்வராக இருந்த தரம்சிங் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்கு அரசு ரூ. 3.75 கோடி செலவு செய்துள்ளது.

2006-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2007-ம் ஆண்டு அக்டோபர் வரை முதல்வராக இருந்த குமாரசாமி ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக அரசு ரூ. 4.94 கோடி செலவு செய்துள்ளது.

2004-ம் ஆண்டுமுதல் 2009-ம் ஆண்டு பிப்ரவரி வரை அமைச்சர்கள், அதிகாரிகள் ஹெலிகாப்டரை பயன்படுத்தியற்காக அரசு ரூ. 13.28 கோடி செலவு செய்துள்ளது என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹெலிகாப்டருக்காக குறைந்த காலத்தில் அதிக அளவில் செலவு செய்த முதல்வராக எடியூரப்பா உள்ளார்.

பீகார் வெள்ள நிவாரண உதவி: லாலு ரூ.40கோடி வழங்கினார்.

"கோசி ஆற்று வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பீகார் அரசு, மத்திய அரசு, அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என, ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை துடைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள அந்தப் பணியில் நாங்களும் பங்கேற்றுள்ளோம்" என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், ரூ.40 கோடிக்கான இரண்டு காசோலைகளை பீகார் முதலமைச்சரும் தன் அரசியல் எதிரியுமான நிதீஷ் குமாரிடம் அளித்துள்ளார்.

முதல் காசோலை இரயில்வே ஊழியர்களிடம் இருந்து ஒருநாள் சம்பளமாகத் திரட்டப்பட்ட முப்ப்த்தெட்டு கோடி ரூபாய்க்கானது. மற்றொரு காசோலை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட ரூ.இரண்டு கோடிக்கானது. இதுதவிர வேஷ்டி, சேலைகள், போர்வைகள் மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை வழங்கப்போவதாகவும் லாலு கூறினார்.

அரசியல் ரீதியான பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இது சரியான நேரம் அல்ல என்று கூறிய லாலு,வெள்ள நிவாரண நிதியாக பீகார் அரசு கேட்ட 14 ஆயிரத்து 800 கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என, முதல்வர் நிதிஷ்குமார் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார். லாலுவுக்கு பீகார் அரசு சார்பாக நிதீஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

இந்தியா: ஹோண்டா புதிய தொழிற்சாலைத் திட்டம் கைவிடல்?

தன் இரண்டாவது இந்தியத் தொழிற்சாலையை ரூ.1000 கோடி முதலீட்டில் தொடங்க இருந்த ஜப்பானின் ஹோண்டா வாகன தயாரிப்பு நிறுவனம் அதை தற்காலம் நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கிறது.பொருளாதார மந்த நிலை காரணமாக கார்களின் விற்பனை பெருமளவில் குறைந்து போனதையடுத்து ஹோண்டா நிறுவனம் இம்முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இந்தியாவில் சீல் குரூப்புடன் சேர்ந்து ஹோண்டா சீல் கார்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஹோண்டாவுக்கு, நொய்டாவில் ஏற்கனவே ஒரு கார் தயாரிப்புத்தொழிற்சாலை இருக்கிறது. ஒரு லட்சம் கார்களை தயாரிக்கக்கூடிய வசதி இருந்தும் கூட, அந்த தொழிற்சாலை 55,000 கார்களை மட்டுமே தயாரிக்கிறது.

மட்டுமின்றி, 1,000 தற்காலிக ஊழியர்களையும் இந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

தமிழகம்: பனிமூட்டத்தால் விமான, பேருந்து சேவைகளில் தடங்கல்

மெல்ல தலைநீட்டிக்கொண்டிருக்கிறது கோடைக்காலம். இருந்தும் அதிகாலை நேரங்களில் தமிழ்நாட்டில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும்பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமான, பேருந்து சேவைகள் தடங்கலும் தாமதமும் அடைகின்றன.

நேற்று கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானமொன்று தரையிறங்குகையில் பனிமூட்டத்தின் காரணமாக பறவையொன்றுடன் மோதியதில் விமான எந்திரத்தில் பறவையின் இறக்கை சிக்கிக்கொண்டது. என்றாலும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

இன்று காலை சென்னையிலும் கடும்பனி காணப்பட்டதால்,வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குவைத்தில் இருந்து வந்த குவைத் ஏர்லைன்ஸ் விமானமும்,கொழும்பில் இருந்து வந்த ஜெட் லைட் விமானமும் பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியவில்லை. அவை பெங்களூருக்குத் திருப்பியனுப்பப்பட்டன. அதுபோல, ஷார்ஜாவிலிருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டன. விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.

தூத்துக்குடியில் கடும் பனி மூட்டத்தால் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் நான்கு பெண்கள் காயமடைந்தனர்.

கொல்கத்தாவிலும் இதுபோன்ற பனிப்பொழிவு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாய் ரிக்கார்ட் வீழ்ச்சி!

தொடர்ச்சியான நான்காம் நாளான நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விழ்ச்சியைச் சந்தித்தது. இதுவரை இல்லாத அளவு முதன் முறையாக டாலருக்கு 51 ரூபாய் கடந்தது.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 50.60 ரூபாய் ஆனது. அதற்குப் பின் தற்பொழுது மிக அதிகபட்சமாக 51.60 ஆக ஆகியுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளிலும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலும் டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குழந்தையின் நுரையீரலில் பல்ப்: வெற்றிகரமாக அகற்றப்பட்டது

சுமார் 2 மி.மீ நீளமும், 1 மி.மீ அகலமும் கொண்ட சிறிய பல்ப் ஒன்று சிறுமியின் நுரையீரலிலிருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இச்சம்பவம் மேற்குவங்க மாநிலம் சோனார்பூரில் நடந்துள்ளது.

சோனார்பூரை சேர்ந்த நான்கு வயது சிறுமி பிராதிமா அலிம்ஜார். கடந்த வாரம் சிறிய பல்ப் ஒன்றை தவறுதலாக விழுங்கவிட அந்தச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உணவுக்குழாயில் பல்ப் சிக்கி விட்டதாக நினைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சில மலமிளக்கிகள் கொடுத்து பல்பை வெளியேற்ற முயற்சி செய்துள்ளனர்.

அந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காததால் சிறுமி உடனடியாக கொல்கத்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

அங்கும் சிறுமிக்கு மூச்சு திணறலும், சளித் தொல்லையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பல்ப் நுரையீரலில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல்ப் அகற்றப்பட்டது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அருண்வா சென்குப்தா கூறுகையில்,

பல்ப் குழந்தையின் வலது நுரையீரலில் சிக்கி கொண்டது. அவளது நிலைமை தொடர்ந்து மோசமாகி கொண்டிருந்ததால் தான் அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்தோம். நுரையீரல் மிகவும் மென்மையான பகுதி என்பதால் பல்ப் உடையாமல் எடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம் என்றார்

இலங்கை எந்த நாட்டிற்க்கும் காலனி நாடு அல்ல-இலங்கை பிரதமர்

இலங்கையில் போரை நிறுத்தும்படி சர்வதேச நாடுகள் வற்புறுத்துவது தொடர்பாக இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரம நாயகே கூறியதாவது:-

போரை நிறுத்தும்படி பல நாடுகள் எங்களை வற்புறுத்திவருகின்றன. இதற்காக நாங்கள் வளைந்து கொடுக்க முடியாது. விடுதலைப்புலிகளை முற்றிலும் தோற்கடித்த பின்தான் போரை நிறுத்துவோம். போர் கடைசி கட்டத்தில் இருக்கும் போது எப்படி அதை நிறுத்த முடியும்?

சில நாடுகள் எங்களை போரை நிறுத்துங்கள் என்று தொடர்ந்து சொல்கின்றன. நாங்கள் அவர்களின் காலனி நாடு அல்ல அவர்கள் சொல்லை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

இலங்கை ஜனநாயக நாடு. எனவே மக்கள் சொல்வதை மட்டுமே நாங்கள் கேட்போம்.

விடுதலைப்புலிகள் அரசை எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி சர்வதேச நாடுகளோ, அல்லது அமைப்புகளோ எங்களை வற்புறுத்த கூடாது. எங்களுடைய உணர்வுகளுக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் , என்று கூறினார்.

மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் பிரச்சாரம்

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் 7ஆம் நினைவு நாளான வெள்ளிக் கிழமையன்று, மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

குஜராத் மாநில முதல்வராக குஜராத்திற்கு அவர் செய்த சாதனைகளை மறைத்து, குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனவே கோத்ரா இரயில் எரிப்பு நாளான இன்று இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது என்று மாநில பாரதீய ஜனதா கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறினார்.

"கோத்ரா அவலம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், கோத்ரா கலவரம் தொடர்பான கெட்ட நினைவுகள் வருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சாரம் மூலம் குஜராத் மாநிலத்திற்கு மோடி செய்த சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டப்படுகிறது" என்று பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

ஆனால் இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் கோத்ராவை முன்னிட்டுச் செய்யவில்லை என்றும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் இதுபோன்ற பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும், மக்களவைத் தேர்தல் அண்மித்து வருவதால் இப்பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தகவல் நுட்பப் பிரிவு தலைவர் சசிரஞ்சன் யாதவ் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று சுமார் 2 இலட்சம் மின் அஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹோலோகாஸ்ட் பிஷப்பின் மன்னிப்பை வாட்டிகன் நிராகரித்தது

ஹோலோகாஸ்டை மறுத்து வந்த இங்கிலாந்து பிஷப்பின் மன்னிப்பை வாட்டிகன் ஏற்க மறுத்துவிட்டது. தன்னுடைய கருத்தை அவர் மனப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தன்னுடைய கருத்து மற்றவர்களின் மனதை இந்த அளவு பாதிக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் என் கருத்தை நான் தெரிவித்திருக்க மாட்டேன் என்று இங்கிலாந்தைச் சார்ந்த பிஷப் ரிச்சர்டு வில்லியம்சன் தெரிவித்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் அவ்வாறு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

ஹோலோகாஸ்ட் பொய் என்பதை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதை இந்த பிஷப் தெளிவுபடுத்தவில்லை என்று யூதத்தலைவர்கள் கூறினர். பிஷப் ரிச்சர்டு உண்மையாகவே மன்னிப்புக் கேட்கவில்லை என்றும், பல பொருள்களைத் தரும் வார்த்தைகளை உபயோகித்து தந்திரத்தைக் கையாண்டுள்ளார் என்றும் யூதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

வாட்டிகன் பிஷப் ரிச்சர்டுக்கு விதித்த நிபந்தனைகளை அவர் மதித்தது போல் தோன்றவில்லை என்று வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிகோ லோம்பார்டி கூறினார்.

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் தேதியை அறிவித்தார் ஒபாமா

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக் கிழமையன்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் இராக்கிலிருந்து 16 மாதங்களுக்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பெறுவேன் என்று ஒபாமா வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதிக்கு 3 மாதங்கள் அதிகமாக 19 மாதங்களில் அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இராக்கில் தற்போது 142,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். இவர்களில் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை 2011 ஆம் ஆண்டு வரை இராக்கில் இருப்பார்கள் எனவும், மற்றவர்கள் 2010 ஆகஸ்டு மாத இறுதிக்குள் திரும்பிவிடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புஷ் அரசும் இராக் அரசும் செய்து கொண்டு ஒப்பந்தப்படி 2011 ஆம் ஆண்டு இறுதி வரை அமெரிக்கப் படையினர் இராக்கில் இருக்க வகை செய்யப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

2003ஆம் ஆண்டு முதல் இதுவரை 4,250 அமெரிக்கப் படையினர் இராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

மார்ச் 1 முதல் குறைகிறது தொலைபேசிக் கட்டணங்கள்!

Published on: வெள்ளி, 27 பிப்ரவரி, 2009 // , ,
மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.


இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.


இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதற்கிடையே - 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி, பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ். என்.எல். நிறுவனம் தெரி வித்துள்ளது. தற்போது, இந்த வசதியை வைத்து இருக்கும் சந்தாதாரர்கள் இனி மேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் பேருந்து சேவை நிறுத்தம்

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து, டாக்காவிலிருந்து கொல்கத்தா மற்றும் அகர்தலா இடையே இருந்து வந்த பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகர்தலா - டாக்கா, டாக்கா - கொல்கத்தா பேருந்து சேவை மறு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப் படுவதாக பங்களாதேஷ் சாலைப் போக்குவரத்துக் கழகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பங்களாதேஷ் நிலைமை திரிபுரா மாநிலத்தைக் கவலை கொள்ளச் செய்வதாக அம்மாநில முதல்வர் மானிக் சர்கார் கூறியுள்ளார். ஆனால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பங்களாதேஷ் எல்லையைத் தீவிரமாகக் கண்கானித்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

பங்களாதேஷுடனான வர்த்தக பரிமாற்றங்களும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக இந்திய சுங்கத் துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கோத்ரா கலவர வழக்கு மீண்டும்!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கோத்ரா கலவர வழக்கை குஜராத் காவல்துறை மீண்டும் தொடங்கி உள்ளது.

குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பாரூக் சேக் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டது. மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோத்ரா கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த 1958 வழக்குகளையும் மீண்டும் தொடர மாநில காவல்துறைக்கு உத்தரவிடடதாக அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டது.

1958 வழக்குகளில் 93 வழக்குகள் மீண்டும் தொடங்கப் பட்டுவிட்டதாகவும் மற்றவற்றில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் முழுவதையும் மீண்டும் தொடங்கி சாட்சிகளிடம் புதிய வாக்கு மூலங்களைப் பெறவும், புதிதாக விசாரணையை மேற்கொள்ளவும் 2004ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

லட்ச ரூபாய் கார் மார்ச் 23ம் தேதி முதல் விற்பனை

ஒரு லட்ச ரூபாய் காரான நானோ மார்ச் 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்த கார் டாடா மோட்டார்ஸ் டீலர்களிடம் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

ஏப்ரல் 2ம் வாரம் முதல் நானோ காருக்கான புக்கிங் தொடங்கும் என்று டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்பதிவு மற்றும் இதர நடைமுறைகள் குறித்தும் மேலதிக விவரங்கள் இத்தொடக்க விழாவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

பாகிஸ்தான் மரியாட் நட்சத்திர விடுதியில் தீ விபத்து!

Published on: வியாழன், 26 பிப்ரவரி, 2009 // , ,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.


தீ விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்தாண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மரியாட் விடுதியின் மீது மோதச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் அயல்நாட்டினர் உட்பட 55 பேர் உயிரிழந்தனர்.


தற்கொலைத் தாக்குதல் காரணமாக கடுமையாகச் சேதமடைந்த மரியாட் நட்சத்திர விடுதி 3 மாதங்களுக்கு பின் மீண்டும் செயல்படத் துவங்கிய நிலையில், தற்போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் கருணாநிதி ராம.கோபாலன் சந்திப்பு

முதல்வர் கருணாநிதியை, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரத முடிவைக் கைவிட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

கலைஞரிடம் நலம் விசாரித்த ராம. கோபாலன், வக்கீல்கள் போலீஸாருக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும். உங்களது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சாலை விபத்துகளில் 22ஆயிரத்துக்கும் அதிகமான மரணம்!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2004 மற்றும் 2006 ஆண்டுகளுக்கிடையில் 22, 841 பேர் மரணமடைந்ததாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப் பட்டது.

கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் முனியப்பா இதனைத் தெரிவித்தார். 2004ஆம் ஆண்டு 6, 438 பேரும், 2005 ஆம் ஆண்டு 8,090 பேரும், 2006 ஆம் ஆண்டு 8,313 பேரும் மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி ஏற்பட்ட சாலை விபத்துகளில் இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 83, 937 பேர் காயமுற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு தேசிய சாலைப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றதென்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு உரிமம் அளிக்கப்படக் கூடாது என்று அப்போது முடிவெடுக்கப் பட்டதாகவும் அவர் கூறினார். அவ்வாறு உரிமம் வழங்கப்படவில்லை என்று உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் போக்குவரத்துச் செயலாளர்களும் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

யாஹூ நிறுவனம் கைப்பெட்டியை மூடுகிறது!




உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கோப்புகளைச் சேமித்துக் கொள்ளும் சேவையான யாஹூ கைப்பெட்டி (Yahoo! Breifcase) சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இலவசமாகவும் கட்டணம் பெற்றும் இச்சேவையை வழங்கி வந்த யாஹூ நிறுவனம் வரும் மார்ச்சு மாதம் 30ஆம் நாளுடன் இந்தச் சேவையை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாகவும், அதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்கள் கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கோரியும் வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல்களை அனுப்பி உள்ளது.

கட்டணம் செலுத்தி இச்சேவையைப் பெற்றவர்கள் தங்கள் கணக்குகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும், மிகுதியாகச் செலுத்தப் பட்டிருந்தால் திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளது.

யாஹூ மின் அஞ்சல் சேவை எல்லையற்ற சேமிப்பு வசதியைத் தருவதாலும் Flickr போட்டோ மற்றும் வீடியோ சேமிப்பு வசதிகளைத் தருவதாலும் கைப்பெட்டிச் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

வழக்குரைஞர்கள் காவலர் மோதல் விசாரிக்க உச்சநீதிமன்றக் குழு!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 19ஆம் தேதி காவல்துறையினருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன் இடைக்கால விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் வழங்கவும் கோரியுள்ளது.

காவல்துறையின் அத்துமீறல் குறித்து விசாரிக்கம் வேளை, நீதிமன்றத்திற்குள் காவலர்களை நுழைய உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்து இக்குழு ஆய்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது.

ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, குல்சாருக்கு தங்கப்பதக்கம் கேரள அரசு முடிவு

ஆஸ்கார் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலிக் கலவை நிபுணர் ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆஸ்கார் விருதை வென்ற மூவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

மூவருக்கும் வசதியான ஒரு நாளில் இந்தப் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அச்சுதானந்தன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , ,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி மகேஷ்வரி இந்த தீர்ப்பை அளித்தார். பின்னர் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அளித்ததைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.

150 பக்கங்கள் கொண்டிருந்த இந்த வழக்கின் தீரப்பை வாசித்த நீதிபதி மகேஷ்வரி, ஊழல் என்னும் புற்று நோய் இந்திய சமூகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்தால் மொத்த சமூக அமைப்பும் கோபமுற்று அரசு திட்டங்கள் பாதிக்கப்படும். எனவே ஊழல் அரசு ஊழியர் சமூகத்திற்கு பெரிதும் அச்சுறுத்தல் என்று கூறினார்.

அரசியல் சமூக அமைப்பில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்றும் அதில் ஊழல் கலப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மாதிரியாகக் கருதப்படும் தலைவர்களே ஊழலில் ஈடுபடும்போது பொதுமக்களிடம் நேர்மையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

1991 முதல் 1996 வரை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வருமானத்திற்கு அதிகமாக 42.5 மில்லியன் சொத்து சேர்த்தது உறுதிப்படுத்தப்பட்டு அந்த தொகையை பறிமுதல் செய்யவும் நீதி மன்றம் உத்தரவிட்டது.

1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் சுக்ராமின மகன் உள்பட மொத்தம் 79 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதமர்களான தேவகவுடாவுக்கும் நரசிம்மராவுக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் சன்டையில் அப்பாவியான தனது கட்சிக்காரர் சுக்ராம் பாதிக்கப்பட்டதாக அரவது வழக்கறிஞர் மினோச்சா கூறினார்.

விண்ணில் வெடித்துச் சிதறியது அமெரிக்க விண்கலம்

தாரஸ் எக்ஸ் - எல் என்ற அமெரிக்க விண்கலமொன்று கலிபோர்னிய விண்தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது.

விண்ணில் கார்பன் டை ஆக்சைடின் சதவீதத்தை அறிவதற்காகவும், பூமியில் தட்ப வெப்ப மாற்றங்களை அறிவதற்காகவும் இவ்விண்கோள் செலுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

விண்கலம் ஏந்திச்சென்ற செயற்கைக்கோள் அதிலிருந்து பிரிவடையும் நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து நேரிட்டதாக நாசா கூறி உள்ளது. ரூ.1300 கோடி செலவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாக போய்விடும்-நீதிபதி வேதனை

பார் கவுன்சிலுக்கு தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் வேதனையுடன் கூறினார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தேசிய வழக்காடு போட்டி சென்னையில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் 16 சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ப.சதாசிவம், உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் ஆகியோர் பரிசளித்துப் பாராட்டினர்

நீதிபதி சதாசிவம், இன்றைய சூழ்நிலையில் நீதித்துறைக்கு திறமையான வக்கீல்கள் தேவைப்படுகிறார்கள். வக்கீல்கள் சட்டத்துறையில் ஏற்படும் மாற்றங்களை விரல்நுனியில் வைத்திருக்க வேண்டும். வழக்குகளில் சாதுர்யமாக வாதாடினால் வக்கீல் தொழிலில் புகழ் பெறலாம் என்று கூறினார்.

நீதிபதி ரவிராஜபாண்டியன் பேசும்போது, சட்டக் கல்வியின் வளர்ச்சி குறித்தும், வக்கீல் தொழிலில் ஒழுக்கம் மற்றும் அறநெறி பற்றியும் குறிப்பிட்டார். பார் கவுன்சிலுக்கு இதுபோன்ற சீர்மிகு சட்டக் கல்லூரிகளில் இருந்து தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று வேதனையுடன் கூறினார்.

ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம்

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் இன்று அறிவித்துள்ளது.

ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இது ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளர் பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இப்பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதாக பல்கலைக் கழக வட்டாரம் தெரிவிக்கிறது.

பட்ஜெட் ப்ளஸ்: 29,000 கோடிக்கு வரிச்சலுகைகள்

இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில நாள்களுக்கு முன் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை ஏதும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், நிதிஅறிக்கை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்தபோது 29,000 கோடிக்கு புதிய வரிச்சலுகைகளை அமைச்சர் அறிவித்தார்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன் பேச்சில் உற்பத்தி வரி மற்றும் சேவை வரிகள் தலா 2 சதவீதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்டுமானத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சிமென்ட் மீதான உற்பத்தி வரி 2 சதவீதம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறிய ரக கார்களுக்கு 8 சதவீதமும், பெரிய கார்களுக்கு 20 சதிவீதமும் இப்போது எக்ஸைஸ் வரி விதிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலும், சிகரெட் போன்ற ஆடம்பரப் பிரிவில் வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் மருந்துகளின் விலைகளிலும் மாற்றமில்லை.

மாநில அரசுகளின் பற்றாக்குறை 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதம் வரை இருக்க் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மாநில அரசுகளுக்கு இதனால் ரூ.91,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும், இந்த கூடுதல் நிதி ஆதாரத்தை அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கெனவே உற்பத்தி வரி 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதவி விலகல்

நடுவண் மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இன்று அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நிருபர்களிடம் 'தேர்தல், கட்சிப்பணிகளில் ஈடுபடுவதற்காக' அமைச்சர் பதவியை விட்டு நீங்குவதாகத் தெரிவித்தார்

மாநிலங்களவை உறுப்பினராக ஆந்திராவிலிருந்து ஜெய்ராம் ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்தியா: டீசல் விலை மேலும் ரூ.2 குறைகிறது?

டீசல் விலையை இரண்டு கட்டமாக ரூ.4/= குறைக்க மத்திய அரசு கடந்த டிசம்பரில் முடிவு செய்திருந்தது. அதன்படி மத்திய அமைச்சரவை கூடி முதற்கட்டமாக ரூ.2/= குறைக்க முடிவெட்டியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளையே மத்திய அமைச்சரவை கூட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டீசல் விலையை குறைத்தால் பணவீக்கம் குறையும். வாகன போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் விலை குறையும் என்பதாக அரசு எதிர்பார்க்கிறது.

ஆயினும், பெட்ரோல் விலை இப்போதைக்கு குறைக்கப்பட மாட்டாது என்றும் ரூ.10 விலை, இரண்டு கட்டமாக குறைக்கப்பட்டு விட்டது என்றும் அரசுத்தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

துருக்கி விமானம் நொறுங்கி விழுந்தது!

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 20 பேர் காயமுற்றனர்.


134 பயணிகளுடன் இருந்த அந்த விமானம் ஓடுதளத்திற்கு சற்று உயரத்தில் மூன்று துண்டுகளாக நொறுங்கி விழுந்தது என்றும் ஆனால் தீப்பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்த விமானத்தில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 134 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனமும், 143 பேர் பயணம் செய்ததாக துருக்கி போக்குவரத்து அமைச்சரும் கூறியுள்ளனர்.


ஒருவர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாயின. ஆனால் உயிரிழப்புகள் குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை என விமான நிறுவன அதிகாரி கூறினார். உயிர் பலி எதுவும் இல்லை என துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் கூறினார். ஆனால் ஆறுபேர் இச்சம்பவத்தில் பலியானதாக டச்சு வானொலி தெரிவித்தது. விமானத்தின் சிதறிய பாகங்களிலிருந்து சுமார் 20 பேர் எழுந்து சென்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

இவ்விபத்து குறித்த அவசரத் தகவல்களுக்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +90 800 219 8035

நவாஸ் ஷரீஃபுக்கு விதித்த தடை உறுதி!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃபுக்கும் அவரது சகோதரர் ஷாபாசுக்க்கும் பாகிஸ்தான் அரசில் பங்கு வகிக்க நடத்தப்படும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட லாகூர் உயர் நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

நவாஸ் ஷரீஃபின் கட்சியான PML-N மேற்கு பஞ்சாபில் மிகவும் பலம் வாய்ந்ததாகும். நவாஸ் ஷரிஃபின் சகோதரர் ஷாபாஸ் தான் அங்கு முதல்வராக இருக்கிறார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஷாபாசும் பதவி விலக வேண்டி வரும்.

இந்தத் தீர்ப்பை மேல் முறையீடு செய்யவும் இயலாதவாறு மேலும் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் சதி என்று கருதுவதாக நவாஸ் ஷரீஃப் தரப்பினர் கூறியுள்ளனர்.

முந்தைய அதிபர் முஷரஃபை பதவி விலக நெருக்கடி கொடுக்க ஜர்தாரியுடன் ஒன்று சேர்ந்த நவாஸ் ஷரீஃப், முஷரஃப் பதவி விலகியவுடன் ஜர்தாரி அதிபராக உதவி செய்தார். பின்னர் அவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு இருவரும் எதிரெதிராகச் செயல்பட்டு வருகின்றனர். நவாஸ் ஷரீஃப் அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்ற முனைப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை மிரட்டி தடை உத்தரவு தீர்ப்பைத் திணித்துள்ளதாக நம்புவதற்குப் பெரிதும் இடம் இருப்பதாக நவாஸ் ஷரீஃபின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தைகளுக்கு பிளாட்

ஸ்லம் டாக் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருதீன் இஸ்மாயில் மற்றும் ருபினா ரபீக் ஆகிய குழந்தைகளுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ஸ்லம் டாக் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை வாங்கியதை அடுத்து பல்வேறு இடங்களிலிருந்தும் அதில் நடித்த கலைஞர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இத்திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருத்தீன் இஸ்மாயில் சேக் உஸ்மான் மற்றும் ருபினா ரபீக் அஸ்கர் அலி குரேசி ஆகிய இருவருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான் நேற்று இரவு அறிவித்தார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சி மாநில முதல்வரிடம் வைத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்குழந்தை நட்சத்திரங்கள் தற்போது மும்பையின் பந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள சேரிப் பகுதியான கரீப் நகர் பகுதியில் வசித்து வருகின்றன. ருபினாவின் தந்தை ரபீக் தச்சராகப் பணியாற்றி வருகிறார். அசாருதீனின் தந்தை இஸ்மாயில் பழைய மரச்சாமான்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

காஷ்மீரில் வேலை நிறுத்தம்

கடந்த நான்கு தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்கும் முகமாய் அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவினைவாத இயக்கங்கள் இந்தக் கொலைகளைக் கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை அடுத்து ஸ்ரீநகர் மற்றம் கஷ்மீரின் முக்கிய நகரங்களில் காவல் துறை மற்றும் இராணுவம் ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

முகம்மது அமீன் தன்தாரி மற்றம் ஜாவித் அகமது என்ற இளைஞர்கள் சோபூரில் கடந்த 4 நாட்களுக்கு முன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். பிர்தோஸ் என்ற மற்றொரு இளைஞர் காயமுற்றார். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிறன்னு சோபூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்நதது.

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்பு படையினர் கிளர்ச்சி

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களது தலைமை அலுவலகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கம் துப்பாக்கிச் சன்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்கானிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டாக்கா முழுவதும் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.

இதுவரை இந்த சன்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இராணுவத்தை எந்த வகையிலும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களுடைய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாததையடுத்து இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு அதன் தலைமையகத்தில் வங்கதேசப் பிரதமர் சேக் ஹசீனா நேற்றைய தினம் விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருந்த நிலையில் இக்கிளர்ச்சி நடைபெற்றுள்ளது.

இரு தரப்பும் ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும் வங்க தேச அரசு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்றுக- உச்ச நீதிமன்றம்.


சென்னை வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.


இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. தற்போது முக்கியத்துவம் கருதி இம்மனு 25-ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர் - காவல்துரை மோதல் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடுவர் ஸ்டீவ் பக்னர் ஓய்வு

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஸ்டீவ் பக்னர் வரும் மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். 62 வயதாகும் பக்னர், 126 டெஸ்ட் மற்றும் 179 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 5 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்றதும் அவரது சாதனைகளில் ஒன்று.

62 வயதாகும் தனக்கு மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் நடுவராக செயல்பட இயலும் என்றாலும் ஓய்வு பெறுவதற்க்கு இதுவே சரியான தருனம் என்றும் தெரிவித்தார்.


வரும் மார்ச் மாதம் தென்னாப்பிரிக்க-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்குப்பின் தான் ஓய்வு பெரும் முடிவை ஐ.சி.சி. யிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.

தனது ஒய்விற்குப்பிறகு மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற விரும்புவதாகவும் ஸ்டீவ் பக்னர் தெரிவித்தார்.

கஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் : பி.டி.பி.

Published on: செவ்வாய், 24 பிப்ரவரி, 2009 // , , , , ,
கஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் மாநிலக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியள்ளது.

சோபூர் நகரில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது துண்பியல் நாடகம் என்று வர்ணித்த மக்கள் ஜனநாயகக் கட்சி, கஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSP) நீக்க வேண்டும் எனவும், மாநிலத்தில் உள்ள இராணுவனத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் அப்பாவிகளைக் கொலை செய்வதை தனி ஒரு நிகழ்வாகப் பார்க்க இயலாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் ஆயுதங்களுடன் இருப்பது மனித உரிமைக்கு விடுக்கும் அச்சுறுத்தல் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

முகமது அமீன் மற்றும் ஜாவீத் அகமது என்ற இளைஞர்கள் கடந்த சனிக்கிழமையன்று பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த போது இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தீவிரவாதிகள் மக்களுடன் பதுங்கியிருந்த போது இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வின் போது மேலும் இருவர் காயமுற்றதாகவும் அதில் ஒருவர் இறந்திருக்கக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கூகிள் மின்மடல் (ஜிமெயில்) சேவையில் தடங்கல்!

கூகிள் வழங்கி வரும் பல சேவைகளில் ஒன்று ஜிமெயில் எனப்படும் மின்மடல் சேவை. இச்சேவையை இலவசமாகவும், நிறுவனங்களுக்குக் கட்டண சேவையாகவும் கூகிள் வழங்கி வருகிறது. இச்சேவையில் நேற்றும் இன்றும் தடங்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை கூகிளும் உறுதி செய்துள்ளது.

ஜிமெயில் சேவை 99.9 விழுக்காடு பயனுறத் தக்கதாக இருக்கும் என கூகிள் தனது சேவை வாக்களிப்பில் உறுதியளித்திருந்தாலும், இரு நாட்களாக ஏற்பட்டுவரும் தடங்கல் அதன் இலவசப் பயனாளர்களையும் கட்டணப் பயனாளர்களையும் பாதித்துள்ளது.

சென்ற ஆகஸ்டில் இதே போன்று ஜிமெயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டு அது சிலமணிநேரங்களில் சரி செய்யப்பட்டது நினைவிருக்கலாம். தற்போதைய தடங்கல் எதிர்பாராதது எனவும், தடங்கலுக்கான மூலகாரணம் கண்டறியப்பட்டு களையப்படும் என்றும் ஜிமெயில் சேவையின் மேலாளர் டோட் ஜாக்ஸன் தெரிவித்துள்ளார்

ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற அவைகளில் பாராட்டு!

ஸ்லம் டாக் திரைப்படத்திற்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையிலும், மாநிலங்களவைக் கூட்டம் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலும் இன்று நடைபெற்றது. மூன்று இந்தியர்களுக்குக் கிடைத்த இந்த அகாடமி விருதுகள் இந்தியக் கலைஞர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இது என்றும் கூறப்பட்டது.


மக்களவைக் கூட்டம் தொடங்கிய உடனே அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, ஸ்லம் டாக் மற்றும் ஸ்மைல் பிங்கி திரைப்படங்களுக்காக விருது பெற்றவர்களுக்கும் இத்திரைப்படங்களில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.


ஸ்லம் டாக் திரைப்படம் சிறந்த திரைப்படம் என்ற விருது உட்பட 8 பரிசுகளை வென்றிருப்பது பெருமிதம் அடைய வேண்டிய செய்தி என்றும், ஏ. ஆர். ரஹ்மான், குல்சார், ரசூல் பூக்குட்டி ஆகியோரின் இந்த வரலாற்றுச் சாதனையால் ஒவ்வொரு இந்தியனின் இதயமும் மகிழ்வடைவதாகவும் அவர் கூறினார்.


ஸ்மைல் பிங்கி படம் குறையுடைய உதடுகளைக் கொண்ட இந்தியப் பெண் குறித்த குறும் ஆவணப் படம் என்பது குறிப்பிடத் தக்கது.

"முதல்வரின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் கண்துடைப்பு" - இராமதாஸ்

வக்கீல் போலீஸ், ஒற்றுமைக்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்று முதல்அமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது கண்துடைப்பு நாடகம் போல் தான் இருக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தி வரும் போராட்டத்தை தடுப்பதற்காகவும் அதை திசை திருப்புவதற்காகவும் எங்கள் அணிக்கு கூடும் மக்கள் கூட்டத்தைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் மீது அவதூறுகளை பேசி வருகிறார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். மருத்துவர் இராமதாசுடன் வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் ஆகிய தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் உடனிருந்தனர்.


உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு காரணமான அதிகாரிகளை இதுவரையில் ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என்று கேட்ட இராமதாசு "எங்களை பார்த்து சதிகாரர்கள் என்கிறீர்களே! ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு யார் சதி செய்தது? தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அந்த சதிகாரர் யார்? இதை முதலமைச்சர் கருணாநிதி விளக்க வேண்டும்" என்று கோரினார்


மேலும் அவர் பேசுகையில்...

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்துவதை விட்டு விட்டு உணவு, மருந்து பொருட்களை அனுப்ப வேண்டும் என்று கூறி வருகிறீர்களே? போர் நிறுத்தம் ஏற்பட்டால் நீங்கள் சொன்னது நடந்து விடாதா? முதல் கட்டத்தை விட்டு விட்டு கடைசி கட்டத்துக்கு போய் விட்டீர்களே? முதல் தேவை போர் நிறுத்தம் தானே! என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சம்பளக்கணக்கில் தவறிழைத்த மைக்ரோசாஃப்ட்

பொருளாதார நெருக்கடியில் உலகம் முழுதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திணறி போயுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனமும் 5,000 ஊழியர்களை அடுத்த 18 மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. அதன் முதல்கட்டமாக கடந்த ஜனவரி 22ம் தேதி 1,400 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி அவர்களுக்கு இழப்பீடும் வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்கியதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தவறு நடத்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

சில ஊழியர்களுக்கு பணம் அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
பணம் குறைவாகக் கொடுக்கப்பட்டவர்கள் நிர்வாகத்திடம் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால், சிலருக்கு பணம் அதிகம் அளிக்கப்பட்ட விவகாரம் நிறுவனத்துக்கு தெரிய வர பல நாட்களாகிவிட்டது. இதில் அந்நிறுவனத்தின் மனிதவள துறையும் அதிக அக்கறைக் காட்டவில்லை.

இந்நிலையில் சம்பள பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட தவறுதலே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், சம்பளத் தொகை அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கமாறு கடிதம் எழுதியுள்ளது.



இப்படி கடிதம் கிடைக்கப்பெற்ற ஒருவர் அதை ஊடகத்துக்கு வழங்கியதால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு சராசரியாக ரூ. 2.2 லட்சம் கூடுதலாக கொடுத்துள்ளது.

முதலில் இது நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும் இடைப்பட்ட தனி விவகாரம் எனக் கூறிய மைக்ரோசாப்ட் பின்னர் தனது தவறுகளை ஒத்துக்கொண்டது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணம் அதிகம் பெற்ற ஊழியர்கள் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும். குறைவாகக் கொடுக்கப்பட்டவர்களுக்கு பணம் விரைவில் திருப்பி கொடுக்கப்படும். அவர்கள் அனைவரும் மனிதவள துறைத் தலைவர் லிசா பிரம்மலை நேரில் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இராணுவப் பயிற்சி

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு அமெரிக்க இராணுவத்தார் பயிற்சி அளித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியை அமெரிக்காவே வெளியிட்டுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளை எப்படி ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராணுவம் பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
70 அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் போர் நிபுணர்கள் இந்தப் பயிற்சியை அளித்து வருவதாகவும் 8 மாதத்துக்கு மேலாக இந்தப் பயிற்சி நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.எந்த இடத்தில் பயிற்சி நடக்கிறது என்ற விபரங்களை வெளியிடவில்லை. இரகசிய இடத்தில் பயிற்சி நடக்கிறது.

ஒரு காலத்தில் தாலிபானுக்கும் அமெரிக்காவே பயிற்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி

தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தற்காலிக தலைமை நீதிபதியாக முகோபாதயா செயல்பட்டு வருகிறார். அலகாபாத் தலைமை நீதிபதியாக பணியாற்றிவரும் எச்.எல்.கோகலேவை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.இதற்கு குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துவிட்டார்.

மும்பை நீதிமன்றத்தைல் 1994ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கோகலே, பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 1995ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, மும்பை உயர்நீதிமன்றத்துக்கே மீண்டும் மாற்றப்பட்டார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2007ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நியமிக்கப்பட்டார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் சில மாநில உயர்நீதிமன்றங்களிலும் தலைமை மாற்றம் இருக்கும் எனத் தெரியவருகிறது

புலிகள் போர் நிறுத்தம்: இலங்கை ஏற்க மறுப்பு

புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஐ நா, ஐரோப்பிய யூனியன்,பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்


ராக்கெட் லாஞ்சர், பீரங்கி மூலமாக அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தினமும் 50ல் இருந்து 100 அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே, 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்; 5,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்களை உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் செய்ய தயாராக உள்ளோம். பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண, உலக நாடுகள் உதவ வேண்டும். அதே நேரத்தில், எந்த காரணத்தைக் கொண்டும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய மாட்டோம்.
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே ஆயுதம் ஏந்தியுள்ளோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் கொல்யா ரம்புக்வெல்லா கூறுகையில், "தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம். தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள், அப்பாவி மக்கள் என ஏராளமானோரை புலிகள் கொன்று குவித்துள்ளனர். புலிகளுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் ஆயுதங்களை கீழே போடாதவரை போர் நிறுத்தம் செய்ய முடியாது' என்றார்.

"அத்வானி பிரதமராக வாய்ப்பில்லை" - லாலு

'அத்வானி பிரதமராக வாய்ப்பில்லை' என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இனவாதமும், பயங்கரவாதமும் உடன்பிறந்த சகோதரிகள். பா ஜ க ஒரு இனவாதக் கட்சி என்பது வெளிப்படை. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பர் என்ற லாலு தான் இம்முறை சரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறினார்.
தன்னுடைய சாப்ரா தொகுதி சீரமைப்பில் சரண் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர் உயர்ந்த சாதியில் உள்ள ஏழைகளுக்குப் பயன்தரும் வகையில் அமைப்பு வாரியான சட்டத்திருத்த மசோதாவுக்கு தங்கள் கட்சி ஆதரவளிக்கும் என்றார்

கல்விதான் வலிமையான நாடாக மாற்றும்: ப.சிதம்பரம்

கல்விதான் வலிமையான நாடாக மாற்றும்: ப.சிதம்பரம்


சிங்கம்புணரி, பிப். 22: கல்விதான் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும். ஆகவே, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை பாரத ஸ்டேட் வங்கியின் புதிய கிளையைத் திறந்துவைத்து, அவர் பேசியது:

இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. ஆனால், 25 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். வறுமையை ஒழிப்பதே அரசின் நோக்கம். நமது நாட்டில் வங்கிகளின் நிதி நிலை வலுவாக உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது.

பாரத ஸ்டேட் வங்கி தமிழ்நாட்டில் 50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்களை வழங்கியுள்ளது. நிதிநிலை சீராக இருப்பதால்தான், விவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும், கடந்த ஆண்டுவரை 72 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 57 கோடி பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 14 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 34 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 66 கோடி அளவுக்கு விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இந்தியாவில் 53 லட்சம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித் தொகையும், 11 லட்சம் பெண்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்றார் ப.சிதம்பரம்.

முன்னதாக, அமைச்சர் சிதம்பரம் 12 பேருக்கு கல்விக்கடன் உதவி, 17 பேருக்கு சுய உதவிக்குழுவினருக்கான கடன் உதவிகளை வழங்கினார்.

"ஒன்றுபடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்" - கருணாநிதி

Published on: திங்கள், 23 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்ட உருக்கமான அறிக்கையில் வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணக்கமாகச் செல்லும்படி உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் துவங்கிய அறவழிக்கிளர்ச்சியில் தாங்களும் ஓரணியில் வந்து நிற்பதாகக் கூறிவிட்டு ஆரம்பத்திலேயே அந்த அணியைச் சிதைக்க, இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள இரண்டு, மூன்று நண்பர்கள் ஈடுபட்டதை தமிழ்நாடு நன்கறியும். திமுக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கு அதில் தொடர்பு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தங்களுக்கென தனிவழி வகுத்துக் கொண்டவர்கள்.


அந்த நண்பர்களுக்கு இப்போது இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. அந்த கோஷத்தை வைத்து தமிழகத்தில் தங்கள் அரசியலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.அதனால் தான், தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணியை உடைப்பதற்கு மக்களிடத்தில் தவறான பிரசாரங்களைச் செய்தும், யார் தமிழகத்தில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக கிளர்ச்சி நடத்தினாலும், அங்கே போய் புகுந்துகொண்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, அதை பூதாகாரமாக ஆக்கி, திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காணுகின்றனர்.
எதிர்பாராத விதமாக திடீரென துருதிர்ஷ்டவசமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் அவர்களுக்குப் பிரதான ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.


அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, இன்னும் தையல் பிரிக்காத நிலையில், தினசரி உடல்நலிவோடு மருத்துவமனையில் இருக்கிற என் மனம் நோகும்படி, என்னென்ன காரியங்களை இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். இதற்கு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் பலியாகிவிடக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள். அவர்கள் தங்களுக்கிடையே இடையே ஏற்பட்டுள்ள கசப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டிக் கொண்டுவருகிறேன். இந்த அரசு அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பது தான்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கு அறிந்தோ, அறியாமலோ பலியாகிவிடக்கூடாது. இரு தரப்பும் இந்த அரசில் சகோதரர்கள் போல ஒன்றுபட்டு நற்பணி புரிய வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், பல நீதிபதிகளும் ஒரு சுமுகமான சூழ்நிலை இந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் போராட தூண்டிக் கொண்டிருக்கும் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


இந்தக் கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றுபடுங்கள்; ஜனநாயக நெறிகளை உயர்வடையச் செய்ய ஒத்துழையுங்கள்; நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க ஆர அமர அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்போம்.அப்படி ஒன்றுபட முடியாவிட்டால், நீங்கள் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையில் இருக்கிற நான் உண்ணாநோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.அந்த முடிவை நான் மேற்கொள்வதா, இல்லையா என்பதை நீங்கள் அளிக்க இருக்கிற விடையின் மூலம் தெளிவு பிறந்து, அதற்கான தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.


முதலமைச்சர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு வரன் தேடித்தரும் மகளிர் கல்லூரி

ஜம்செட்பூர் மகளிர் கல்லூரி அந்நகரின் புகழ் பெற்ற கல்லூரிகளுள் ஒன்றாகும். கடந்த ஆண்டு அக்கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்றது. படிப்பை முடித்த மகளிருக்கு திருமணத்திற்காக வரன் தேடித்தரும் பொறுப்பை தானே ஏற்க அக்கல்லூரி முன்வந்துள்ளது. அதற்காக சுயம்பார் என்ற அமைப்பை அது தொடங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் சுக்லா மொஹந்தி தெரிவித்துள்ளார். இது அக்கல்லூரியின் சமூகவியல் துறையின் யோசனையாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை கோராத மாப்பிள்ளைகளின் விண்ணப்பங்களே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற கல்லூரி முதல்வர், தன் பெண்பிள்ளைகள் படிப்பில் சிறக்க பெற்றோர் ஆர்வங்காட்டுவதற்காகவே 'படிப்பை முடித்திருக்கவேண்டும்' என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டதாகக் கூறினார்

பெண்பிள்ளைகளின் படிப்புக்கு பொறுப்பேற்கும் நாமே அவர்களின் பிற்கால நல்வாழ்வுக்கும் ஏன் உதவக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்த யோசனை என்றார் கல்லூரி முதல்வர்

'போர் நிறுத்தத்துக்குத் தயார்'- புலிகள் அறிவிப்பு

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்போது நடந்துவரும் கடும் சண்டையால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவ்வறிவிப்பை புலிகளின் அரசியல் தொடர்பாளர் நடேசன் ஐநாவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயாராக இருந்தாலும் ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நிறுத்தத்தை இலங்கை இராணுவம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் புலிகள் ஆயுதங்களைக் கைவிடாமல் போர் நிறுத்தத்துக்கோ சமாதானப் பேச்சுகளுக்கோ இடமில்லை என்று இலங்கை இராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

மாபெரும் இன அழிப்பைச் செய்துவரும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் அமைதி காப்பது வியப்பளிப்பதாக நடேசன் கூறியுள்ள போதும், புலிகள் அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலேயே உயிரிழப்புகள் நேரிடுவதாக உதய நாணயக்காரா பதிலளித்துள்ளார்.

ஏ.ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் விருது!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை அமைப்பாளர் ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டுள்ளது. ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கிலப் படத்திற்கு ரகுமான் அமைத்த இசையினால் இவ்விருது இவருக்கு வழங்கப்படுகிறது.

இதற்கு முன் இதே படத்திற்கு இவர் அமைத்த இசைக்காக கோல்டன் குளோப், பாஃப்டா போன்ற விருதுகளை இவர் வென்றெடுத்திருந்தார். இந்தியர் ஒருவர் ஆஸ்கர் விருதினைத் தட்டிச் செல்வது இதுவே முதன்முறையாகும்.

மும்பை சேரிப் பகுதியில் பிறந்த ஒரு சாதாரண சிறுவன் அதிர்ஷ்ட விளையாட்டு மூலம் கோடீஸ்வரனாக மாறுவதும் அதன் பின் உள்ள அவனது சோகமான வாழ்க்கைப் பின்னணியும் ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் கதையாகும்.

இந்தியா கோல்டன் 50: 50 பைசாவில் தொலைபேசலாம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. இதன்படி இந்தியாவின் எந்த பகுதிக்கும் 50 காசுகளில் பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ கால்' மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர்.

இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன் இண்டியா' திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 'இண்டியா கோல்டன் 50' என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல். வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப்பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள்.
என்று முதலமைச்சர் பேசினார்

கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல் மூலம் வழங் கப்பட்டுள்ளன. இந்த '3 ஜி' சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என்.எல் மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '3 ஜி' சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் பேசுகையில்
சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த '3 ஜி' சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிவழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் '3 ஜி' இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


'3 ஜி' சேவைக்கு தனி 'சிம் கார்டு' என்றும் அவர் தெரிவித்தார்

நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!

நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!


கோவை, பிப். 21: சர்வதேச நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகன போக்குவரத்து வசதியை ரத்து செய்ய துவங்கியுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கி வந்த டிராவல்ஸ் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா வங்கிகளில் ஏற்பட்ட சரிவு, பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக அமைந்தது. இதனால் அமெரிக்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா ஐடி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் பணிகளை குறைத்து வருகின்றன. இதனால் கோவையில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பணி வரத்து கடுமையாகப் பாதித்துள்ளன. இப் பிரச்னையில் இருந்து பெரிய நிறுவனங்களும் தப்பவில்லை.

ஆள்குறைப்பு, அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஐடி நிறுவனங்கள் மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகனப் போக்குவரத்து வசதியை பல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளது.

கோவை சரவணம்பட்டி, ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை வீட்டில் இருந்து அழைத்து வரவும், பணி முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடும் வேலையில் ஏராளமான டிராவல்ஸ் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இப் பணியை டிராவல்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன.

இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்த சில ஐடி நிறுவனங்கள், தங்களுக்கு வாகன போக்குவரத்து வசதி தேவையில்லை என அதிரடியாக அறிவித்துள்ளன. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் டிராவல்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.

"கடந்த ஒரு மாதமாகவே கார்களை வாடகைக்கு எடுப்பதை ஐடி நிறுவனங்கள் வெகுவாகக் குறைத்துவிட்டன. ஐடி நிறுவனங்களுக்கு ஓட்டுவதற்காக வாங்கப்பட்ட சொகுசு கார்களையும், வேன்களையும் வெளி வாடகைக்கு இயக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்' என்கிறார் சரவணம்பட்டி உள்ள தனியார் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன்.

"ஐடி நிறுவனங்களுக்காக கார்களை ஓட்டும்போது நல்ல லாபம் கிடைத்தது. தற்போது கார்களை வாடகைக்கு எடுப்பதை ஐடி நிறுவனங்கள் குறைத்துக் கொண்டிருப்பதால் கிடைக்கும் லாபம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

ஐடி நிறுவனங்களுக்காக இயக்கலாம் என்ற எண்ணத்தில் வங்கிகளில் கடன் பெற்று, கார்களை வாங்கிய டிராவல்ஸ் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

ஓராண்டுக்குள் ஐடி நிறுவனங்களின் நிலையை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னரே ஐடி நிறுவனங்களை நம்பி இருக்கும் டிராவல்ஸ் தொழிலும் உயிர் பெறும்' என்றார் மற்றொரு தனியார் டிராவல்ஸ் நிறுவன அலுவலர் கண்ணன்.

சீனா: நிலக்கரிச் சுரங்கம் வெடித்து 74 பேர் பலி

Published on: ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 // , , , , ,
சீனாவின் சான்க்ஸி மாகாணத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட பெருவெடிப்பில் சிக்கி 74 பேர் பலியாகியுள்ளனர். 114 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சுமார் 400க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ, பிரதமர் வென் ஜிபாவோ மீட்புப்பணிகளை முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஒரு வருட காலத்தில் இது பெருவிபத்தாகக் கருதப்படுகிறது.

இந்தியா: வாகனம் ஓட்டும்போது தொலைபேசினால் ரூ.5000 அபராதம்

வாகனம் ஓட்டும் போதும் கைபேசியில் பேசுவது அதிகரித்து வருவதால ஏராளமான விபத்துகள் நடக்கின்றன; உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வண்டி ஓட்டும் போது தொலை பேசினால், முதல் முறையாக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை அதே குற்றத்தைச் செய்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை இதே குற்றம் தொடர்ந்தால் 5,000 ரூபாய் அபராதத்தோடு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்ற சட்டத்தை மத்திய அரசு யோசித்து வருகிறது.


இதற்கு வகை செய்யும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குழு ஏற்கனவே இதற்கு பரிந்துரை அளித்துள்ள நிலையில், சட்டத்தைக் கடுமையாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கார் ஓட்டும் போது தொலைபேசினால், சில மாநிலங்களில் 100ல் இருந்து 300 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகை சிறிதாக இருப்பதால், அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. இதன் காரணமாகவே, சட்டத்தைக் கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒரிசாவில் வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலி

ஒரிசாவில் கல்யாண நிகழ்விற்குச் சென்று கொண்டிருந்த வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலியானார்கள்.

ஒரிசா மாநிலம் பார்கர் நகருக்கு அருகில் ஆளில்லா கிராசிங்கில் இன்று மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் கல்யாண நிகழ்விற்குச் சென்ற மணப்பெண் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட அருகில் இருந்த கிராம மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், அந்த இரயிலை அங்கிருந்து விட மறுத்து நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரிசாவில் அடுத்தடுத்து 10 நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது இரயில் விபத்து இது என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜ் தாக்கரேவை கைது செய்ய நீதிமன்ற ஆணை

வட இந்தியாவில் கொண்டாடப்படும் 'சாட்' என்னும் திருவிழாவைப் பற்றி தவறான கருத்து கூறியதாக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தக்கரே மீது, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராஜ் தாக்கரே இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிந்திர குமார் சின்கா, வழக்கை முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றினார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சூரத், கடந்த டிசம்பர் மாதம் தாக்கரேவுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தார். ஆனால், தாக்கரே முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு நீதிபதி கைது ஆணை பிறப்பித்துள்ளார்.

திருச்சியில் புதிய விமானநிலைய முனையம் திறப்பு

திருச்சியில் புதியதாகக் கட்டப்பட்ட விமானநிலைய முனையத்தை நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மத்திய தகவல்-தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ராஜா தலைமை வகித்தார். ஒருஇலட்சத்து எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் இப்புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எட்டாயிரம் சதுர அடி ஓடுபாதையாக உள்ளது. விரைவில் ஓடுதள அளவு பத்தாயிரமாகவும், பின்னர் படிப்படியாக பன்னிரண்டாயிரம் சதுர அடியாகவும் விஸ்தரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வளர்ந்துவரும் பெருநகரான திருச்சியில் பிரம்மாண்டமான விமானநிலையம் அமைய அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ரகுபதி, தமிழக அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், திருச்சி மக்களவை உறுப்பினர் கணேசன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ்ஸின் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கோவை சிறையில் கைதிகள் சிறைக்காவலர் இடையே மோதல்

கோவை சிறையில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதில் 8 சிறைக்காவலர்கள் உள்பட15 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலசுப்ரமணி, சுப்ரமணியன், செந்தில் குமார் ஆகிய மூன்று சிறைக்காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு இலேசான காயம் என்பதால் புற நோயாளியாகவே சிகிச்சப் பெற்று திரும்பியதாகவும் சிறைக் கண்கானிப்பாளர் கோவிந்தராஜ் கூறினார்.

சிறையில் உள்ள சுமார் 1500 பேருக்கும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் போட்டுக் காட்டியதாகவும், படம் முடிவடைந்தவுடன், அவரவர் செல்லுக்கு உடனே திரும்ப வேண்டும் என்று கூறியதால் ஆத்திரமடைந்த கைதிகள் அவர்களுடை சன்டையில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

கைதிகள் சிறையிலிருந்த கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு சிறைக் காவலர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 8 சிறைக்காவர்களும் 7 கைதிகளும் காயமுற்றதாக சிறை தகவல்கள் கூறுகின்றன.

திருப்பூர் மாவட்டம் உதயம்!

தமிழகத்தின் 32ஆவது மாவட்டமாக திருப்பூர் இன்று துவக்கி வைக்கப் பட்டது. இதன் துவக்கவிழா இடுவம்பாளையம் அரசு பள்ளியில் இன்று மாலை 4.00 மணிக்கு நடந்தது. இவ்விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தைத் துவக்கி வைத்தார்.

முன்னதாக திருப்பூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். திருப்பூர் உருவாக்கத்திற்கு இவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

அத்வானி பிரதமராக தெலுங்கு தேசம் ஆதரவளிக்காது!

அத்வானி பிரதமராவதற்கு தெலுங்கு தேசம் ஆதரவளிகாது என்று தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்தால் தெலுங்கு தேசம் ஆதரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தமது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என்றும், இந்தக் கேள்வியே எழாதும் என்றும் கூறினார். தங்களுடைய கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பின்போ பாரதீய ஜனதா கட்சியுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு, குஜராத் கலவத்திற்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தங்கள் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்றும் அதனாலேயே ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முறை வாஜ்பாய் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிமையத்த போது தெலுங்கு தேசக் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்தது குறிப்பிடத் தக்கது.

தமிழகம்: போக்கிரிகளை கண்டதும் சுட உத்தரவு

Published on: சனி, 21 பிப்ரவரி, 2009 // , , , ,
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் யாரையும் கண்டதும் சுட தமிழக காவல்துறைத் தலைவர் ஆணையிட்டுள்ளார்.

கடந்த வியாழனன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்-காவலர்களிடையே நடைபெற்ற கலவரத்தை காரணங்காட்டியும், ஈழத்தமிழர் பிரசினை என்ற உணர்ச்சிப் போர்வையிலும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் போக்கிரிகள் யாரையும் கண்டதும் சுடும்படி தமிழக காவல்துறைத் தலைவர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த இருநாள்களாக, நான்கு பேருந்துகள், நான்கு தீயணைப்பு வாகனங்கள், பதினான்கு இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அலிகர்: நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் சுட்டுக்கொலை

அலிகர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகளை கூலிப்படையைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து பணியிலிருந்த காவலர்கள் திருப்பிச் சுட்டதில் அந்த மூன்று கொலையாளிகளும் செத்து வீழ்ந்தனர்.

நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டால், கொலைகளால், நகரில் பதற்றம் நிலவுகிறது.

போலி என்கவுண்டர்: ஆதாரங்களுடன் ஜாமியா மில்லியா ஆசிரியர்கள்!

ஜாமியா மில்லியா மாணவர்களை டில்லி பாட்லா ஹவுஸில் வைத்து காவல்துறை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஜாமியா மில்லியா கல்லுரியின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இவை, டில்லி என்கவுன்டர் குறித்து காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு எதிரானவைகளாகும்.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையினை காவல்துறை இதுவரை வெளியிடாததற்கானா காரணம் என்ன என்றும் ஏதாவது உண்மைகளை மறைத்து வைப்பதற்காகவே காவல்துறை அதனை வெளியிடவில்லையா? என்றும் அவர்கள் வெளியிட்ட அறிக்கை கேட்கிறது.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் குறித்த காவல்துறையின் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள், வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள், இஐயல்லாத சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சேகரித்த ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தயாராக்கிய 58 பக்கங்கள் அடங்கிய, "பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்: விடையிலா கேள்விகள்" என்ற தலைபில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இக்கேள்விகள் உள்ளடங்கியுள்ளன.

"போலி என்கவுண்டரில் தீவிரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரியின் உடலில் துப்பாக்கி ரவைகள் எப்பக்கமிருந்து துளைத்தன என்ற விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் உடலை முதலில் கொண்டு சென்ற ஹோலி ஃபேமிலி மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், அவ்வுடலில் ஆதாரங்கலை அழித்துள்ளதாக, பிரேத பரிசோதனை செய்த ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளதாக" அறிக்கை கூறுகிறது.

என்கவுண்டர் தொடர்பாக நீதிபதி தலைமையிலான விசாரணை வேண்டும் என்ற தேசிய மனித உரிமை கழகத்தின் கட்டளைக்கு எதிரான நிலைபாட்டை டில்லி லெப்டினன்ட் கவர்னர் எடுத்ததாகவும் அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.

விடுதலைப்புலிகள் வான் தாக்குதல்

விடுதலைப்புலிகள் இரண்டு விமானங்கள் கொழும்பில் உள்ள அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 48 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள உள்நாட்டு வருவாய் அலுவலகம் மீது ஒரு விமானம் மோதியதாகவும் மற்றொரு விமானம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே சுட்டு வீழ்த்தப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 9.30 மணிக்கு நடத்தப்பட்ட இத்தாக்குதலையடுத்து கொழும்பு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விமான எதிர்ப்பு குண்டுகள் வீசப்பட்டன.

இந்திய தபால் துறை ஆண்டுக்கு ரூ.500 கோடி நஷ்டத்தில்!

இந்திய தபால் தந்தி துறை ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மக்களுக்கு 26 விதமான சேவைகளை வழங்கிவரும் இத்துறையில் 20 சேவைகள் அரசின் மானிய உதவியாலே வழங்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2005-06ம் ஆண்டு 1,200 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், 2007-08ம் ஆண்டு 1,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தனியார் கூரியர் நிறுவனங்கள் பற்றியும் அவைகளின் வருமானம் பற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லையென்றும், தபால் துறையின் வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஒசாமா வாழ்விடம்: அமெரிக்கப் பேராசிரியர்கள் தகவல்

ஒசாமா பின் லாதன் எங்கு மறைந்திருக்கக் கூடும் என்பதை அமெரிக்க புவியியல் துறை பேராசிரியர்கள் தாமஸ் கில்லெஸ்பி மற்றும் ஜான் அக்னியு ஆகியோர் செயற்கைக் கோள் புகைப்படங்கள், புவியியல் முறைகள் மூலம், தர்க்க ரீதியாக கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் ஆய்வின் படி, பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதியில் உள்ள பராசினார் நகரில் உள்ள மலைகளில், ஒசாமா ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில், 19 கி.மீ., தொலைவில் பராசினார் நகரம் இருக்கிறது. இந்நகரில் மூன்று சுற்றுச்சுவர்கள் கொண்ட வளாகத்தில் ஒசாமா பின் லாடன் தங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இந்த கண்டுபிடிப்பு அறிவியல் பூர்வமானது. ஒசாமா இடம் மாறினால், அமெரிக்க உளவுத்துறையின் புதிய தகவல்களின் அடிப்படையில், மறைவிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிடலாம், என்று இப்பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தனது மறைவிடத்தில் மின்சார வசதி, பாதுகாப்பு, தனிப்பட்ட வாழ்வுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் மிகக் குறைந்த மெய்க்காவலர்களுடன் ஒசாமா இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது


2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பாந்தட்டப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனை தொடங்கப் பட்டுள்ளது.

64 ஆட்டங்கள் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைப் போட்டிகளைக் காண சுமார் 30 இலட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முதல்கட்ட விற்பனையில் நுழைவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஏப்ரல் மாதம் குலுக்கல் முறையில் சிலர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

குறைந்த கட்டணமுள்ள சுமார் 4,50,000 சீட்டுகள் தென் ஆப்பிரிக்கர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,20,000 சீட்டுகள் விளையாட்டு மைதான உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

தென் ஆப்பிரிக்கர்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ள குறைந்த கட்டண சீட்டுகளின் விலை 20 டாலர் எனவும், இறுதி ஆட்ட நுழைவுச் சீட்டின் விலை 900 டாலர் எனவும் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் உலகக் கோப்பை போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவின் 9 நகரங்களில் உள்ள 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மைதானங்களை விரிவுபடுத்தும் பணி, விமான நிலையங்கள் விரிவாக்கப் பணி என்று அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

சரணடைய ஊர்வலமாக வந்த சீமான் கைது!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீமான் பேசினார் என்று காங்கிரஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுவை காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய தனிப்படைப் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் அவர்களிடம் பிடிபடாமல் ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்களில் சீமான் பங்கேற்றுப் பேசி வந்தார்.

நேற்று முன்தினம் நெல்லையில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், காலவர்களிடம் அகப்படாமல் தப்பித்தார். கடந்த இரு தினங்களாக காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.

சில பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் தான் சரணடையவில்லை என்றும், நீதிமன்றத்தில் நானே சரணடைவேன் என்றும் நேற்று சீமான் கூறியிருந்தார்.

இதற்கிடையே காங்கிரசார் இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பியதால், சீமானைப் பிடிக்க 5 தனிப்படைப் போலீஸார் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

இந்நிலையில் இன்று நெல்லையில் நீதிமன்றத்தில் சீமான் சரணடையச் சென்றார்.

அப்போது அவரை காவலர்கள் வழிமறித்துக் கைது செய்தனர். பின்னர் நெல்லை மாநகர காவல் ஆணாயர் முன்பாக சீமான் சரணடைந்ததாக அறிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சீமான் பின்னர் பாண்டிச்சேரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படக் கூடும்.

முன்னதாக முன்ஜாமீன் கேட்டு சீமான் பதிவு செய்திருந்த வழக்கின் விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இரயில்வேயில் 1,70,000 பணியிடங்கள் காலி!

இந்திய இரயில்வேயில் 1, 70, 000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக வியாழக் கிழமையன்று அரசு அறிவித்துள்ளது.

நாடாளு மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கையில் மத்திய இரயில்வே இணை அமைச்சர் வேலு இதனைத் தெரிவித்தார். இவற்றில் 32,600 பதவிகள் எஸ். சி., எஸ்.டி., மற்றும் பிற்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் என்றும் அவர் கூறினார்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்றும் பொதுவான இடங்களுக்கும் பணி நியமனங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில இடங்களுக்குத் திறமையான நபர்கள் கிடைக்கவில்லை என்றும், மேலும் சில இடங்கள் பணி உயர்வு வழங்கப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதம் ஐ.நா.வின் கட்டுபாட்டில் : பா.ஜ.க. கோரிக்கை

பாகிஸ்தானிய அரசு பல்வேறு வகைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் கேந்திரமாகவும் விளங்குகிறது. எனவே பாகிஸ்தானின் அனு ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை உடனே தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தாலிபான், அல்கைதா போன்ற தீவிரவாதிகளின் கைகளில் சென்றுவிட வாய்ப்பு இருப்பதால், பாகிஸ்தானின் அணு ஆயதங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுமைக்குமே அச்சுறுத்தல் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலத்தில் ஷரீயத் சட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பது தாலிபான்களிடம் அரசு சரணடைந்திருப்பதையே காட்டுகிறது என்று கூறிய அவர், பாகிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வாய்ப்புகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சருக்கெதிரான விசாரணையை மேற்கொள்ள குஜராத் நீதிபதி மறுப்பு!

குஜராத் மாநில அமைச்சர் மாயா கொடானி மற்றும் விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெயதீப் பட்டேல் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு தொடர்ந்த வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன். வேறொரு நீதிபதி விசாரிப்பார் என்றும் விசாரணை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதி ஆனந்த் தவே இதற்காக காரணத்தைக் கூறவில்லை.


முன்னதாக மாநகர அமர்வு நீதிமன்ற நீதிபதி அஷ்வனி, மாநில கல்வித்துறை அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத்தலைவருக்கும் முன்ஜாமீன் இந்த மாதம் 5ஆம் தேதி அளித்தார்.

குஜராத் கலவரம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து. இதுகுறித்த விசாரணைக்கு நேரில் வருமாறு மாநில அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத் தலைவருக்கம் சிறப்பு விசாரணைக் குழு பலமுறை அறிவிக்கை அனுப்பியும் இருவரும் ஆஜராகாமல் இருந்தனர். இவர்கள் இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

16 மாத குழந்தையைக் கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!

தன்னுடைய 16 மாத வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு டெல்லி மாநகரநீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

2004ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடந்த இந்த கொடூர செயலைச் செய்த 40 வயதான ஓம் பிரகாஷுக்கு டெல்லி மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அலோக் அகர்வால் ஆயுள் தண்டனையும் ரூ. 2000 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஓம் பிரகாஷ் சாராய பாட்டிலைக் குழந்தையின் தலையில் அடித்துப் பின்னர் குழந்தையைச் சுவற்றின் மீது தூக்கி வீசி கொலை செய்ததாக அவரது மனைவி கீதா புகார் அளித்திருந்தார்.

கீதா கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த அவனது கணவன் கீதாவைக் கண்டித்ததாகவும், பின்னர் இருவருக்கும் சன்டை ஏற்பட்டு இச்சம்பவம் நடந்ததாகக் கூறிய பிரகாஷின் வழக்கறிஞர், அவர் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை என்று வாதிட்டார்.

ஹோலேகாஸ்டை மறுக்கும் பாதிரியார் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற உத்தரவு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பிவரும் பாதிரியார் ரிச்சர்ட் வில்லியம்சன் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற அர்ஜென்டினா அரசு உத்தரவிட்டுள்ளது.

அர்ஜென்டினா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பத்து நாட்களுக்குள் அவர் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக 1988ஆம் ஆண்டு திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இவரையும் மேலும் மூன்று பாதிரியார்களையும் மீண்டும் திருச்சபையுடன் இணைத்து கடந்தமாதம் போப் உத்தரவிட்டிருந்தார். போப்பின் இந்த முடிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து பாதிரியார் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வாட்டிகன் கூறியிருந்தது.

சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியேற்றம்

உயர்நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்ற மோதல் தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அவையிலிருந்து ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து, சென்னை உயர்நீதி மன்ற மோதல் விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், தமிழக சட்டசபையில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது . சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விவாதிக்க வேண்டும் எனவும், அதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் , பா.ம.க., ம.தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சியினர் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. சபாநாயகர் குழப்பம் விளைவிப்பவர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். அமளி காரணமாக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பா.ம.க., கட்சியினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளியில் நின்று தி.மு.க., அரசு கலைக்கப்பட வேண்டும் எனவும், தாக்குதல் சம்பவத்துக்கு அரசு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள். வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வரலாறு காணாத கொடூர சம்பவம் எனவும் கூறினார்கள் .

மாலேகாவ்ன் : ஆர் எஸ் எஸ்ஸுக்கு ஐ எஸ் ஐ பணம் ?

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மாலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் தொண்டர் தயானந்த் பாண்டே என்பவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் பொதுச்செயலர் மோகன் பகவத், ஆர் எஸ் எஸ்ஸின் முஸ்லிம்பிரிவு தலைவர் இந்த்ரேஷ் குமார் ஆகியோர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ இடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், இத்தகவலை ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ஷியாம் ஆப்தே தன்னிடம் தெரிவித்ததாகவும் தயானந்த் பாண்டே வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை துணை ஆணையரிடம் பாண்டே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில்

2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் புனே சென்று ஷியாம் ஆப்தேவை சந்தித்தாகவும் அப்போது இந்த்ரேஷ் குமார் மற்றும் பகவத் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.யிடமிருந்து பணம் வாங்கி விட்டனர் என்று ஆப்தே வருத்தப்பட்டுக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்துக்குத் தெரிய வந்து கேப்டன் ஜோஷி என்பவரிடம், அந்த இரு தலைவர்களையும் கொலை செய்து விடுமாறு உத்தரவிட்டார் புரோஹித். புரோஹித் சொன்னபடி இரு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் கொல்லவில்லை ஜோஷி. இதனால் ஆப்தே கோபமடைந்தார்.

மாலேகான் குண்டுவெடிப்பு சதி முழுவதையும் தீட்டி, திட்டமிட்டது புரோஹித் மற்றும் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் ஆகியோர்தான். நாடு முழுவதும் முஸ்லீம்களால் இந்துக்கள் பாதிக்கப்படுவதற்கு பழி வாங்கும் வகையில் இந்தத் திட்டத்தை அவர்கள் தீட்டினர்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் நாசிக் அருகே உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று புரோஹித்தை சந்தித்தேன். அப்போதுதான் தான் அபினவ் பாரத் அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், இந்துத்வாவை இந்த அமைப்பின் மூலம் காக்கப் போவதாகவும் கூறினார் புரோஹித்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரீதாபாத்தில் நடந்த அபினவ் பாரத் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள சுதாகர் சதுர்வேதி, ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய் ஆகியோரும் வந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் இந்து ராஷ்டிரத்தை அமைப்பது குறித்தும், இந்துக்களின் நலனைக் காக்க தனி அரசியல் சாசனத்தை உருவாக்குவது குறித்தும் புரோஹித் விரிவாகப் பேசினார்.

மேலும், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்குத் தேவையான வெடிபொருட்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட உபாத்யாய், வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் ஆட்களை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், தான் இந்தூருக்குச் சென்று துறவி பிரக்யா சிங் தாக்கூரை சந்தித்ததாகவும் அப்போது, இந்துக்களைக் காக்க வெடிபொருட்களையும், வெடிகுண்டுகளையும் ஏற்பாடு செய்யுமாறு புரோஹித்திடம் கூறுங்கள் என்று தன்னை பிரக்யா சிங் தாக்கூர் கேட்டுக் கொண்டதாகவும் தயானந்த் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்

புரோஹித் தான் சொன்ன சொல்லில் மும்முரமாக இல்லாமல் போனதால் அவருக்கு எடுத்துக் கூறி வெடிகுண்டுகள உடனடியாக தயார் செய்யுமாறு அவரிடம் கூறும்படி தன்னைக் கேட்டுக் கொண்டார் பிரக்யா சிங் என்று கூறியுள்ளார் பாண்டே.

இதுவரை மாலேகான் வழக்கில் பாண்டே மற்றும் ராகேஷ் தாவ்தே ஆகிய இருவர் மட்டுமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சினிமா விமர்சனம் : நான் கடவுள்


நான் கடவுள்





ரஸ்ஸல்

கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா

வசனம்: ஜெயமோகன்

இசை: இளையராஜா

ன் மகனால் சொத்து ,சுகம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்று சொன்ன சோதிடனின் பேச்சை நம்பிப் பதினாலு வருடங்களுக்கு முன், சாஸ்திரம் படிக்க என்று மனைவியிடம் சொல்லிக் காசியில் தொலைத்த மகனைத் தேடித் தன் மகளுடன் காசிக்குத் தந்தை வருவதுடன் கதை துவங்குகிறது.

காசிப்பண்டிட்டின் உதவியுடன்,தலைமைச் சாமியாரைச் சந்தித்து மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தந்தை கெஞ்ச, "நீ அஹம் ப்ரம்மாஸ்மி; கடவுள்; உனக்கு உறவுகள் இருக்கக்கூடாது; ஊருக்குச் சென்று உன் உறவுகளை எரித்துவிட்டு வா" என்ற சாமியாரின் அனுமதியுடன் ஊருக்கு வருகிறார் மகன் ஆர்யா!



ஊருக்கு வரும் ஆர்யாவால் வீட்டில் தங்க இயலவில்லை. பாசத்துடன் நெருங்கும் தாயுடனும் ஒட்ட முடியவில்லை.சாப்பிடச் சொல்லும் தாயிடம் "கஞ்சா கிடைக்குமா?" எனக்கேட்டு, கஞ்சா கிடைக்கும் மலைக்கோவிலில் தங்குகிறார் ஆர்யா!



பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகச் செய்யும் பிச்சைக்கார மாஃபியாக் கும்பல்,கோயிலில் பிச்சை எடுப்பதற்காக ஆள் கடத்தல் செய்வதையும்,ஒரு கும்பலில் இருந்து மற்ற கும்பலுக்கும் பிற மாநிலத்துக்கும் காவல்துறையின் உதவியுடன் ஆள் கடத்துவதையும் கொடுமைப் படுத்துவதையும் விலாவாரியாகக் காட்டுவதே கதை.

ஒரு பிச்சைக்காரக் கும்பலில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் பார்வையிழந்த பிச்சைக்காரியான பூஜா, காவல்துறை உதவியுடன் வலுவான ஒரு கும்பலுக்குக் கடத்தப்படுகிறார். விகாரத் தோற்றமுள்ள மற்றொரு பிச்சைக்கார மாஃபியாத் தலைவனுடன் படுக்கையைப் பகிர கண்பார்வையுள்ள எந்தப் பிச்சைக்காரியும் சம்மதிக்காததால் பூஜாவைப் பத்துலட்சம் ரூபாய்க்கு விற்கிறான் கும்பல் தலைவன். ஆனால் இதை விரும்பாத சக பிச்சைக்காரர்கள் பூஜாவைத் தப்ப வைக்க முயலும்போது ஆர்யா மாஃபியாக் கும்பல் தலைவர்களைக் கொல்கிறார்.

சுமார் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் காசிக் காட்சிகள் மாதக் கணக்கில் படம்பிடிக்கப்பட்டன என்ற சொல்லப்பட்டது. ஆனால் காசிக்காட்சிகள் கொஞ்சமோ கொஞ்சம். படம் மொத்தமும் காசியில்தானோ என எண்ணும்படி ட்ரெய்லர் இருந்தது. படத்தில் ஆர்யா வரும் இடங்கள் /காட்சிகள் சுருக்கமே. எதனாலோ நிறைய காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது புரிகிறது.



இந்துத்துவா ஆள் என அறியப்பட்ட ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் சுருக்.

"ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டா பெத்த பிள்ளைய பதினாலு வருசம் காசியில் விட்டே?" எனக் காசிப் பண்டிட் கேட்கும் இடம்,



மலைமேல் இருக்கும் சாமியாரைத் தேடி வரும் ஒருவன் "சாமீ! சாமீ" எனும்போது, "கண் தெரியாதவனும் சாமி, காது கேட்காதவனும் சாமி, கல்லும் சாமி, மண்ணும் சாமி" " என ஆர்யா உறுமும் இடம்,

ஆர்யாவைத் தேடி வரும் பிச்சைக்காரச் சிறுவன் காவி உடுத்திய ஒருவனிடம்' " சாமியெப்பாக்கணும்"

"ஏன்? எங்களெப்பாத்தா சாமியாத்தெரியலையா?"

"சடபிடிச்சவனெல்லாம் சாமியா?"எனக்கேட்பது,

கோர்ட்டில் ஆர்யாவை நிறுத்தும்போது, மாஜிஸ்ட்ரேட், " இந்த மாதிரி ஆளுகளெயெல்லாம் ஒங்க சட்டம் ஒண்ணும் செய்யாது. ஒரு பரதேசி முதல் மந்திரியையே தலையை வெட்டுவேன்னு சொன்னானே? அவனெ ஒங்க சட்டம் என்ன செய்தது?" எனக் கேட்கும் இடம்.

தன்னைப் பார்க்க வந்த தாயிடம் ஆர்யா,

" ஐயிரண்டு திங்களாய் அடக்கி வைத்த தூமையே
கையிரண்டு காலிரண்டாய் பிள்ளையாய் ஆனதே

என்ற சித்தர் பாடலைக் கூறிவிட்டு, "தூமைன்னா என்னாண்ணு தெரியுமா உனக்கு? எனக்கேட்கும் இடத்தில் சுருக்....சுருக்..

கஞ்சா அடித்த ஜோரில், மலை மேலிருந்து ஆர்யா சங்கு ஊத, " சாமீ! நீங்க ஊதுற சத்தம் அடிவாரம் வரெ கேக்குது; நாங்க போலீஸுக்கு பயந்து சாமியார் வேசத்துலெ இங்கெ இருக்கிறொம்."எனக் காவி வேட்டிகள் கூறுவது எனப் பல இடங்களைக் கூறலாம்.

நகைச்சுவை நடிகராய் வடிவேலுவுடன் வரும் ஒருவர் இதில் மிக சீரியஸாக நடித்துள்ளார். நகைச்சுவைக்காட்சிகள் தனியாக ஏதுமில்லை. கதையோட்டத்தில் வசனங்களால் ஆங்காங்கே சிரிப்பு வெடிக்கிறது.

ஊனமுற்றவர்களைத் தேவைக்கேற்றபடி வேலை வாங்கி இருப்பதில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

தேர்ந்த நடிகர்களை விட இயல்பாக அனைவரும் நடித்துள்ளனர். வில்லன் தாண்டவனாக வருபவரின் நடிப்பு மிக அருமை. பூஜா விருதை எதிர்பார்த்து நடித்திருக்கலாம். அதற்காகவே சொந்தக் குரலில் டப்பிங்க் கொடுத்துள்ளார் போலும்.

பாலாவின் பிதாமகன் படத்துக்கும் இப்படத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

அதிலும் கஞ்சா; இதிலும் கஞ்சா..

அதிலும் சுடுகாடு; இதிலும் சுடுகாடு..



அதிலும் பழைய பாடல்களின் தொகுப்புப் பாடல் ; இதிலும் டிட்டோ..

நந்தாவில் மகன் தாய்ப்பாசத்துக்கு ஏங்குவான்;

இந்தப்படத்தில் தாய் மகன் பாசத்துக்காக ஏங்குகிறாள்.

இவை யதேச்சையா? அல்லது இதுதான் பாலாவின் ஸ்டைலா?

இந்த விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும்போது, மலையாள சானலான 'அமிர்தா டி.வி.யில், கேரளத்தில் பிச்சை எடுக்க, பிச்சைக்கார மாஃபியாவால் தமிழ்நாட்டிலிருந்து பிச்சைக்காரர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது, பொருத்தமாய் அமைந்தது.

வணிக ரீதியில் இல்லாமல் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக, பாலாவைப் பாராட்டலாம்.

படம் பார்த்தபின் மனதில் ஒரு வெறுமை. ஏனோ?

மொத்தத்தில் எதிர்பார்த்தது கிடைக்காதது ஏமாற்றமே!

ஈழப்பிரசினையில் இன்னுமொருவர் தீக்குளிப்பு

கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த அவர் இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று கூறி வந்தாராம்.

நேற்று மதியம் 2 மணி அளவில் மண்எண்ணெய் கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். அங்கு நடுரோட்டில் நின்று கொண்டு மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீ பற்றிப்பிடித்து எரிந்ததால் வேதனை தாங்க முடியாமல் ஓடிய அவர் ரோட்டோரத்தில் உள்ள டீக்கடை அருகில் கீழே விழுந்தார்.

அவரது உடலில் சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி தெரிந்து காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.

உடல் கருகி உயிருக்கு போராடியபடி கிடந்த தமிழ்வேந்தனை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தமிழ்வேந்தனுக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் யோசனைப்படி கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி நள்ளிரவு 1.30 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

ஜோதி என்ற தமிழ்வேந்தனுக்கு திருமணமாகி ஜான்சி என்ற மனைவியும், சந்தோஷ்(11/2) என்ற மகனும் உள்ளனர்.







முன்னதாக அய்யப்பன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று தமிழ் வேந்தனை பார்த்தனர்.

காங்கிரஸ்ஸில் அஸ்ஹருத்தீன் : இரண்டாவது இன்னிங்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக 90களில் செயற்பட்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஸ்ஹருத்தீன். தனது கிரிக்கெட் வாழ்வை சூதாட்டப் பிரசினையால் முடித்துக்கொண்ட அஸ்ஹருத்தீன் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸாக அரசியல் வாழ்வை தொடங்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைச் சந்தித்து காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக அவர் சேர உள்ளதாக ஒரு செய்தியை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி உறுதி செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே அஸ்ஹருத்தீன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் உள்ள தொகுதிகள் ஒன்றில் அவர் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.

"இலங்கைக்கு ஆயுதம் வழங்கவில்லை" - பிரணாப்

நேற்று நாடாளுமன்ற மேலவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்து பேசுகையில் அதிமுக எம்.பி மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா (உள்ளிட்ட சில உறுப்பினர்கள் "இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குகிறதா? இல்லையா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பிரதமர் பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் பதில் அளிக்கையில் "இலங்கைக்கு இந்தியா ஒரு போதும் ஆயுதங்கள் வழங்கவில்லை இலங்கை தங்களுக்கு தேவையான ஆயுதங்களை வேறு நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள்" என்று கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியாது என்றும் அரசியல் ரீதியில்தான் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

"நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும்"

நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும் என்று நேபாளம் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். அவர், அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தகால், முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசினார்.

"நேபாளத்தில் ஜனநாயக நடைமுறைகள் தொடர்ந்து நீடிப்பதற்கும், அமைதியான சூழ்நிலை ஏற்படுவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்."நேபாள பிரதமருடன் நடத்திய பேச்சில் இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்துடன் தொடர்ந்து நல்ல உறவை வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்" என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்

கடல் வழி அணு ஆயுதக் கடத்தலுக்கு வாய்ப்பு : கப்பற்படைத் தலைவர்

இந்தியாவின் கடல்பகுதி வழியாக அணுஆயுதங்கள் கடத்தப்படும் சாத்தியம் உள்ளதாக கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். "பலவீனமாக உள்ள இந்திய கடல் பகுதிகள் வழியாக ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களை சரக்கு கன்டெய்னர்கள் மூலம் கொண்டுவர முடியும்" என்றார் அவர்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறுகையில் "உலக அளவில் சரக்கு போக்குவரத்தில் 70 முதல் 75 சதவீதம், கன்டெய்னர்கள் மூலமாகவே நடக்கிறது. சட்ட விரோதமாக அணு ஆயுதங்களை கடத்த பயங்கரவாதிகளும் இந்த முறையை பயன்படுத்தலாம். அதனால், இந்த விஷயத்தில் உயரிய பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். முறையான பரிசோதனை மற் றும் ஸ்கேனிங் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். நூறு சதவீத பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாம் செயல்பட வேண்டும்" என்றார்

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படாது : லாலு

இரயில் நிலையங்களுக்குத் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று மத்திய இரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவரது கட்சியைச் சார்ந்த ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) என்ற உறுப்பினரின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் வைக்க ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சகம் தடை விதித்ததாகவும் அந்த உத்தரவு இன்றும் உள்ளதாகவும் அவர் கூறினார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரைக் கூட இரயில் நிலையத்திற்கு வைக்க முடியாது என்று அவர் கூறினார்.

எச்1பி விசா பிரச்சனை : அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க கோரிக்கை

அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வேலைக்கமர்த்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே நிதி உதவி அளிக்கப் படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் கோரியுள்ளது.

இந்த நிபந்தனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்யக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துவோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.

இந்த நிபந்தனைகளால் பிரச்சனை ஏற்படாது என்று அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் கருதினால் அது அவர்களின் அறியாமையையே வெளிப்படுத்தும். உகாண்டா, பிஜி தீவுகள் மற்றும் ஒபாமாவின் பூர்வீக நாடான கென்யா போன்ற நாடுகளில் இருந்த இலட்சக் கணக்கான இந்தியர்கள் எந்தவித கருணையும் இல்லாமல் விரட்டப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் கோரினார். அமெரிக்காவின் இந்த நிபந்தனை தளர்த்தப்படாவிட்டால் இந்தியாவில் உள்ள 14 அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்கக் கோரும் பிரச்சாரத்தைத் தொடங்குவோம் என்றும் அவர் கூறினார்.

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on: புதன், 18 பிப்ரவரி, 2009 // , , ,
மணிப்பூரில் நடந்து வரும் முழு அடைப்பினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. 50க்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

அரசு அதிகாரியும் அவருடன் பணியாற்றி இரு அதிகாரிகளும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மணிப்பூரில் 48 மணி நேர முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு உள்ளூர் அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பில் ஈடுபட்டவர்கள் சகோல்பந்த், கக்வா, யும்னாம் மற்றும் லீகய் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கைளச் சேதப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மணிப்பூர் முழுவதும் கடைகள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களிலும் மிகக் குறைவான அளவிலேயே வருகை இருந்தது. மாநிலத்திற்குள்ளும் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ஓடவில்லை. தலைநகர் இம்பாலில் பல்வேறு சாலைகளிலும் டயர்கள் கொழுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வன்னிப் பகுதியில் 108 பேர் படுகொலை


வன்னி பகுதியில் இன்று அதிகாலை இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் 108க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய ஊர்களைக் கொண்ட பாதுகாப்புப் பகுதி என்று புதிதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடித்த இந்த தாக்குதலின்போது கொத்து குண்டுகள் உபயோகிக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை

தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், அதனை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிகளின் படி வெளியிடப்பட்டுள்ள உத்தரவு மூலம் தேர்தல் ஒரே நாளில் நடந்தால் தேர்தல் முடிந்த 48 மணி நேரம் வரையும், பல கட்டங்களாக நடந்தால் இறுதிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும். அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கருத்துக் கணிப்பு வெளியட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி இருந்தது.

20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும்

11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இவ்வாறு கூறியுள்ளார்.

அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. தீவிவாதிகளின் தாக்குதலை முறியடித்தல் மற்றும் அவசர கால காட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மையங்களில் அந்தந்த மாநில காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஹரியானா முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் - 2வது மனைவி

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார்.

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் சாந்து முகம்மது அவரது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார். அவர் மீது காவல்துறையில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறினார்.

தான் கற்பழிக்கபட்டதாகவும், ஏமாற்றப்பட்டதாகவும், தன்னுடை மத உணர்வு புண்படுத்தப்பட்டதாகவும் பிஜா திங்கள் கிழமையன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சாந்து முகம்மது மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இஸ்லாமிய மதத்திலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராதா பாலி என்ற பிஜா உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசு துணை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனான சாந்து முகம்மது என்ற சந்தர் மோகன் ஹரியானா மாநில துணை முதல்வராக இருந்தவர்.

டென்னிஸ் தரவரிசை: சானியா முன்னேற்றம்

Published on: செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 // , , , , ,
பாட்டயா டென்னிஸ் போட்டி இறுதியாட்டம் வரை வந்த இந்தியாவின் சானியா மிர்ஸா மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இப்போட்டிக்கு முன் தரவரிசையில் 126 ஆவது இடத்தில் இருந்த சானியா, இப்போட்டியில் இறுதியாட்டம் வரை வந்ததால் 39 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 87 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோல் இரட்டையர் பிரிவில் இறுதியாட்டம் வரை சென்ற இந்தியாவின் போபண்ணா இரட்டையர் தரவரிசையில் 78ம் இடத்தைப் பெற்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி முறையே 7 மற்றும் 5 இடங்களில் உள்ளனர்.

இலங்கை: கருணா இயக்கத்தில் பிளவு

இலங்கையில் விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சியின் பிள்ளையான் முதல் அமைச்சராக இருந்து ஆட்சி நடத்தி வருகிறார். கருணா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கருணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டு கட்சித்தலைமையிலிருந்து அறிவிக்கை அனுப்பிவைக்கப்பட்டதாம். கருணா விளக்கம் தராததால் அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த கருணா தனது ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதிபர் இராஜ பக்சேயின் சுதந்திரா கட்சியில் சேர இருப்பதாக கருணாவும் அவர்ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்

காங்கிரஸ்ஸுடன் பாஜக, கம்யூனிஸ்ட் கூட்டணி: சிக்கிம் விசித்திரம்

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற மாநிலக் கட்சியை எதிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன.

சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற கட்சி சிக்கிம் மாநிலத்தில் வலுவாக உள்ளது. இதன் தலைவர் பவன்குமார் சாம்சிங் நான்கு முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் வரும் மேமாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு கடும்போட்டி ஏற்படுத்த நினைத்த தேசிய கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்கிற விசித்திரக் கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன.மாநில காங்கிரஸ்ஸின் மூத்த தலைவர் உப்ரதி இக்கூட்டணி அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டக்கல்லூரி மோதல்: இது பாண்டிச்சேரி சம்பவம்

புதுவை மாநிலத்தில் காலாப்பட்டில் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ஈழப்பிரச்னையை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வலியுறுத்தி நகரின் மையப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். கடந்த 11ம் தேதியிலிருந்து மூன்று நாள்களாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் கலந்துகொள்ளாமல் வகுப்புகளுக்குச் சென்று வந்தனர்.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு முதலாம் ஆண்டு படிக்கும் வில்லியனூரைச் சேர்ந்த மாணவர் அன்புமணி, பெரம்பலூரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் சுரேஷ் வயிற்றில் திடீரென கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டாராம்.
சம்பவம் குறித்து காலாப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை யடுத்து, மாணவர்கள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறினர். கல்லூரியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

பாண்டிச்சேரி: விமானநிலையம் செயற்பட தாமதமாகலாம்

பாண்டிச்சேரியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையம் எதிர்பார்த்தபடி வரும் மார்ச் மாதம் செயற்படாமல் போகலாம் என்றும் அது செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்றும் தெரிகிறது. இத்தகவலை துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஓடுபாதையையொட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கிங்ஃபிசர் உள்ளிட்ட நிறுவனங்கள் பாண்டிச்சேரியில் சேவை தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவ்ருகிறது.

ராஜ்தாக்கரே தலைமறைவு என நீதிமன்றம் அறிவிக்கை

மகராஷ்டிரா நிர்மான் சேனா தலைவர் தலைமறைவு என ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே பீகார் மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்ததை அடுத்து சுதீர் குமார் பப்பு என்ற வழக்கறிஞர் தாக்கரே மீது 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் வருமாறு நீதிமன்றம் பலமுறை அறிவிக்கை அனுப்பியும் ராஜ் தாக்கரே வரவில்லை.

இதனை அடுத்து ஜாம்ஷெட்பூர் 2வது அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில்குமார் ராஜ்தாக்கரே தலைமறைவாக இருப்பதாக இந்திய குற்றவியல் சட்டத்தின் 82 பிரிவின்படி அறிவித்து அறிவிக்கை அனுப்பினார். இந்த அறிவிக்கைக்கு ராஜ்தாக்கரே பதில் அளிக்காவிட்டால் அவரது சொத்துகள் பிரிவு 83ன் படி பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும்.

முன்னதாக ராஜ் தாக்கரையை பிணையில் வரமுடியாத அளவில் கைது ஆணையை நீதிமன்றம் டிசம்பர் 16ஆம் தேதி பிறப்பித்து, மும்பை காவல்துறை ஆணையர் இந்த ஆணையை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது.

சுப்ரமணிய சுவாமி மீது முட்டை வீசித் தாக்குதல்

சென்னை உயர்நீதிமன்றம் வந்த ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி மீது அழுகிய முட்டைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிபதி முன்னிலையிலேயே இச்சம்பவம் நடந்தேறியது.

சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்ரமணியம் சுவாமி நீதிமன்றம் வந்திருக்கையில் திடீரென நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசுவதால் சுப்பிரமணிய சுவாமி‌யை தாக்குவதாகக் கூறி அவருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பின்னர் உத்தரவிடப்பட்டது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!