Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தேர்தல் ஆணையரை நீக்க தலைமைத் தேர்தல் ஆணையர் பரிநதுரை

தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர்  கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.

நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அவர் அக்கட்சிக்கு சார்பாக நடந்து கொள்கிறார் என்றும் பாரதீய ஜனதா கட்சி ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரும் இக்கோரிக்கையை வைத்திருப்பதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கோபால் சாமியின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவருக்குப் பின் நவீன் சாவ்லாதான் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பார்.  பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்பரிந்துரையால் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் அரசியல் வெளிப்பட்டுள்ளதாகக் கருத முடிகிறது.

தலைமைத் தேர்தல் அதிகாரியின் இப்பரிந்துரையை ஏற்று நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் டி. ராஜா, இப்பரிந்துரை அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றம் சுமத்தினார்.

நடிகர் நாகேஷ் காலமானார்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

அண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.

தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் பூர்வீகம் மைசூர். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். கர்நாடக மாநிலம் அரிசிக்கரேயில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தவர். தாயார் ருக்மணி அம்மாள். ஆரம்பகாலக்கட்டத்தில் இவர்கள் தமிழகத்தில், தாராபுரத்தில் வசித்து வந்தனர். நாகேஷின் முழுப்பெயர் நாகேஸ்வரன்.

'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆசியாவின் தூய்மை கிராமம் மெளலினாங்


மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மெளலினாங் என்ற கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

"டிஸ்கவரி இந்தியா" எனும் புகழ்பெற்ற சுற்றுலா இதழில் பணிபுரியும் இத்துறை வல்லுநர்களால் இந்த கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அழகிய இந்த கிராமத்து மக்கள் 
தங்கள் கிராமத்தை தூய்மை படுத்துதல், சாலைகளில் செடிகளை வளர்த்து அதனைப் பராமரித்து வருதல் என்று அரசை எதிர்பார்க்காமல் தாங்களாகவே செய்து கொள்கின்றனர். சிறு குழந்தைகள் கூட இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். குழந்தைகள் குப்பைகளை சாலைகளில் போடுவது இல்லை.

மூங்கிலால் பிண்ணப்பட்ட கூடைகளை கிராமத்தின் முக்கிய இடங்களில் வைத்து அதில் மட்டுமே குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.

நமது கிராமத்தையும் அழகிய கிராமமாக ஆக்க முயல்வோம்.

ஹரியானா முன்னாள் முதல்வரின் மனைவி கைது

ஹரியாணா முன்னாள் முதல்வரின் இரண்டாவது மனைவி தன்னுடைய கணவர் கடத்தப்பட்டதாக புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை முன்னாள் முதல்வர் மறுத்ததும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தான் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் சக்திவாய்ந்த தூக்க மாத்திரை உட்கொண்டதால்தான் இந்நிலை ஏற்பட்டதாகவும் கூறிய பிஜா, சாந்து முகம்மது பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார். இல்லையெனில் தன்னைப் பார்க்க மருத்துவமனை வந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

ஹரியாணாவின் முன்னாள் முதல்வர் சந்தர் மோகன் என்ற சாந்து முகம்மது அனுராதா பாலி என்ற பிஜாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காகவே இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் மதத்துக்கு மாறினர் என்பது குறிப்பிட்த் தக்கது.

பா.ஜ.க.வை ஆதரிக்க சிவ சேனை நிபந்தனை

பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலை தெளிவாக அறிவிக்கப் பட்டதால்தான் அத்வாணி பிரமாராக சிவசேனை ஆதரவளிக்கும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் மராட்டியர் அதிகமாக வாழும் பகுதியாகும். நீண்ட நாட்களாகவே கர்நாடகாவுக்கும் மகாரஷ்டிராவுக்கும் இது குறித்து பிரச்சனை இருந்து வருகிறது. பெல்காம் மாவட்டத்தை இழக்க விரும்பாத கர்நாடகா பெல்காமை தனது இரண்டாவது தலைநகரம் என்றறிவித்து அங்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராகத் தங்களது ஆதரவு வேண்டுமேனில் பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனை நிபந்தனை விதித்துள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவர்களில் ஒருவருமான மனோகர் ஜோஷி இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மற்றும் அத்வானி ஆகியோரை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்தாலும் பெல்காம் பகுதியில் உள்ள மராட்டி மொழியினர் மிகவும் கஷ்டப் படுகின்றனர் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் பயணம்: கட்டணங்கள் குறைகின்றன:

Published on: வெள்ளி, 30 ஜனவரி, 2009 // ,
விமான எரிபொருள் விலைகள் சரிந்து வருவதையொட்டி, ஏர் இந்தியா தனது பயணக் கட்டணங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

அபெக்ஸ் -21 (APEX - 21) என்ற திட்டத்தின் கீழ், உள்நாட்டு ப் பயணத்தில் இப்போதும் அடிப்படைக் கட்டணம் ரூ.99/= மட்டுமே என்ற போதிலும், அரசுவரியாக ரூ.225/=ம், எரிபொருள் கூடுதல் கட்டணமாக ரூ.2700/= வசூலிக்கப்படுகிறது.

இந்த விலைக்குறைவு பிப்ரவரி 28 வரை மட்டுமே என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பொருளாதார வீழ்ச்சியையும் மீறி விமான நிறுவனங்களிடையேயான போட்டியும் இவ்விலைக்குறைப்புக்கு காரணம் என்றும், பகரமாக தன் அடிப்படை ச்செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

திரும்பிவிடும் காசோலைகள் குறித்து உயர்நீதிமன்றம்.

வணிக நடவடிக்கைகளில் வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பிவிடும் காசோலைகள் குறித்த வழக்குகளில் மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் "லோக் அதாலத்" களே தீர்ப்பளிக்கலாம் என்றும் அவையே இறுதித் தீர்ப்பாகக் கருதப்படலாம் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றங்களில் காசோலை திரும்பல் வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கி இருப்பதை இம்முடிவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உயர்நீதிமன்றங்களில் இவ்வழக்குகளுக்காக வாதிகள் செலுத்தவேண்டிய கட்டண அளவு, காசோலைத் தொகைக்கேற்ப ரூ.200 லிருந்து ரூ.1.5இலட்சம் வரை வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை: இலங்கை தூதரகம் மீது தாக்குதல் முயற்சி

அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இலங்கை தூதரகம் இருக்கும் டிடிகே சாலையில் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் அவர்கள் பார்த்தசாரதி சாலை சந்திப்பு வழியாக இலங்கை தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை துணை ஆணையர் மவுரியா, உதவி ஆணையர் ரவீந்திரன் ஆகியோர் சேலம் சட்டக்கல்லூரியை சேர்ந்த 36 மாணவர்களை இது தொடர்பாக கைது செய்தனர்.

"போர் நிறுத்த அறிவிப்பை புலிகள் அறிவிக்கட்டும்" - அன்பழகன்.

48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டிருந்தும் இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது குறித்து தமிழ் நாடு நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் வியப்பு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது.புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை விரும்பவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
இவ்வாறு அன்பழகன் சட்டசபையில் பேசியுள்ளார்.

இந்தியா: தனிநபர் வருமானம் உயர்வு!

கடந்த 2007-2008 ல், பொருளாதார வளர்ச்சி காரணமாக, இந்தியாவின் தனிநபர் வருமான அளவு ரூ. 33,283/= என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாம். 2006-2007ல் இது 29,524/= என்ற அளவில் தான் இருந்தது.

வளர்ச்சி விகிதம் 12.7சதம் என்ற இரட்டை இலக்கத்தில் கடந்த ஆண்டு உயர்ந்துஇருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில், அதிகபட்சம் 9.7 சதம் என்ற அளவிலேயே வளர்ச்சி விகிதம் இருந்தது. இதே காலக் கட்டத்தில் 1.4% என்ற அளவு மக்கள் தொகைப் பெருக்கம் இருந்தது. அதாவது நிதியாண்டின் இறுதியில் மக்கள் தொகை 1.38 பில்லியன் ஆகும்.

2003-04 காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 60% சத வளர்ச்சியாகும். அவ்வருடத்திலிருந்து வருடந்தோறும் 10% க்கும் அதிகமான வளர்ச்சி இருந்து வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் பொருளாதார சிக்கல்கள் அலைக்கழிக்கும் நடப்பாண்டில் வளர்ச்சி என்பது வீழ்ச்சியாக மாறி 7% என்ற குறியீட்டுக்கு த்தாழ்வு அடையும் என்று கருதப்படுகிறது. இத்தகவலை ரிசர்வ் வங்கியும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுமமும் தெரிவித்துள்ளன.

மலேகான்: ஸ்ரீராமசேனா தலைவனிடம் விசாரணை!

Published on: //
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், கர்நாடகாவிலுள்ள் ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கிடம் மும்பை தீவிரவாத தடுப்புப் படை விசாரணை செய்ய இருக்கிறது. பெண்களைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முத்தலிக்கிடம் விசாரணை நடத்த, ஏடிஎஸ் குழு உடனடியாக மங்கலாப்புரத்திற்குப் புறப்படும் என ஏடிஎஸ் தலைவர் ரகுவன்சி தெரிவித்தார்.

மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சன்னியாசி ப்ரக்யா சிங் தாக்கூரைப் புகழ்ந்து உடுப்பியில் முத்தலிக் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் முத்தலிக்கின் செயல்பாடுகளை, மாலேகான் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கர்னல் பிரசாத் புரோஹித்வெகுவாக புகழ்ந்ததாகவும் அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் சில பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்தவும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முத்தலிக்கிற்குத் தொடர்பு உண்டா என்பதைக் குறித்து விசாரிக்கவுமே ஏடிஎஸ் கர்நாடகா வர இருக்கிறது.

ஜிம்பாப்வே தன் நாணயத்தைக் கைவிட்டது!

ஜிம்பாப்வே நாட்டில் நிலவிவரும் கடும் பணவீக்கத்தினால் அந்நாடு தனது நாணயமான் ஜிம்பாப்வே டாலரைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடும்பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் தாறுமாறாக விலையேறிவிட்டன.

எகிறிச்செல்லும் பணவீக்கத்தினைக் கையாளவோ, உருப்படியான பண மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவோ இயலாத நிலையில் தற்போது இருக்கும் ஜிம்பாப்வே அரசு, பெரும் மதிப்புள்ள நாணயங்களை அறிமுகப்படுத்தி வந்தது. ஐம்பது மில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டுகள் சர்வ சாதாரணமாக ஜிம்பாப்வே மக்கள் புழக்கத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டை ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அந்நாணயத்திற்கு மதிப்பு சிறிதுமின்றிப் போய்விட்டதால் அந்நாட்டுமக்களே இதனைப் பயன்படுத்தாமல் பிற நாட்டு நாணயங்களைப் புழங்கி வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஜிம்பாப்வே அரசு தன் நாணயப் பரிமாற்றத்தோடு பிறநாட்டு நாணயங்களையும் மக்கள் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இன்றைய மதிப்பில் ஓர் அமெரிக்க டாலருக்கு 1520 ஜிம்பாப்வே டாலர் என்ற மதிப்பில் இந்நாணயம் உள்ளது.

இதேநிலை இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஜிம்பாப்வே தன் நாணயத்தை முற்றிலும் கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் கூட்டணி இல்லை - காங்கிரஸ்

Published on: வியாழன், 29 ஜனவரி, 2009 // , , , , ,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் நாடாளு மன்றத் தேர்தல் முயற்சிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று அதன் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியளார்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி, காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் கூட்டணி அமைக்காது என்றும் மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகளுடனும் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார்.

கூட்டணி என்பது எண்ணிக்கையைப் பொறுத்தது என்றும், தேர்தலில் பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை படி தேர்தலுக்குப் பிறகே தெரியவரும் வரும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கிறது உண்மைதான.. ஆனால் அது தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலத் தலைவர்களுடன் கலந்து மாநில அளவில் உடன்பாடுகள் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் துணை முதல்வரின் மனைவி தற்கொலை முயற்சி

ஹரியாணா மாநில முன்னாள் துணை முதல் சாந்து முகம்மதுவின் மனைவி பிஜா (வயது 37) இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மொஹாலியில் உள்ள அவரது வீட்டில் விஷ மாத்திரை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இப்போது மருத்தவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவர்கள் அனுமதிக்குப் பின் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக தன்னுடைய கணவனும் முன்னாள் முதல்வருமான சந்தர் மோகன் என்ற சாந்து முகம்மதுவைக் காணவில்லை என்று நேற்று புகார் அளித்திருந்தார். ஆனால் அந்தப் புகாரை சாந்து முகம்மது மறுத்துள்ளார். காணாமல் போவதற்கு தான் குழந்தை இல்லை என்றும் தானாகவே சென்றதாகவும் அவர் கூறினார்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை - உ.பி. முதலிடம்

நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரப் பிரதேசத்தில்தான் அதிகம் நிகழ்வதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார். உத்திரப் பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் நிகழ்வதாகவும் அவர் கூறினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து விவாதிப்பதற்காக 5 மாநிலப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற அமர்வுக்குப் பின் அவர் இதைத் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலமும் தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்த வரிசையே இது என்றும் அவர் கூறினார்.

வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாமல் இருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் வன்கொடுமைக்கு எதிரான புகார்களில் 39 சதவீதம் அளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. 71 சதவீத புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

நேற்று நடைபெற்ற இந்த அமர்வில் மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், உத்திரப் பிரதேசம், உத்தர்காண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலப் பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.

பிரான்சில் இன்று முழு அடைப்பு

பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர் சங்கங்கள் விடுத்த வேண்டுகோளின்படி இன்று பிரான்சில் முழு அடைப்பு நடைபெறுகிறது. சுமார் 75 சதவீத மக்களும் அனைத்து முக்கிய தொழிற் சங்கங்களும் இந்த முழு அடைப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உலகப் பொருளாதார சீர் குலைவால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். அடுத்த ஆண்டு பிரான்சில் வேலையற்றோர் விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் வேலைக்கும் தாங்கள் பெறும் ஊதியத்திற்கும் உத்தரவாதம் தரக் கோரி பிரான்சில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் முயற்சியாக பல பில்லியன் யூரோ உதவிகளை வங்கிகளுக்கு வழங்கும் பிரெஞ்சு அரசு, தொழிற் கூடங்களுக்கும் மற்ற வணிக நிறுவனங்களுக்கும் மிகக் குறைந்த அளவு உதவி செய்கிறது என்று பிரெஞ்சு அரசு மீது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இன்றைய வேலை நிறுத்தத்தால் போக்குவரத்து, கல்விக் கூடங்கள் மற்றும் சுகாதாரப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஹரியாணா முன்னாள் துணை முதல்வர் கடத்தப்பட்டதாக 2வது மனைவி புகார்

ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான சந்தர் மோகன் (தற்போது சாந்து முகம்மது) நேற்று கடத்தப்பட்டதாக அவரது இரண்டாவது மனைவி கூறினார்.

சாந்து முகம்மதுவை அவரது வீட்டிற்கு சந்திக்கச் சென்ற சிலர் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிச் சென்றுவிட்டனர் எனவும் தன்னால் அவரை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், சாந்து முகம்மதுவை கடத்தியவர்கள் கொலை செய்யக் கூடும் என்று அஞ்சுவதாகவும் கூறிய பிஜா, இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறினார்.

சாந்து முகம்மதுவின் இளைய சகோதரரும் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குல்தீப் பிஷ்னோய் என்பவர்தான் இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தினார்.

ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனான சந்தர் மோகன் கடந்த டிசம்பர் மாதம் பிஜா என்ற இப்பெண்ணை மணம் புரிவதற்காகவே அவரும் இப்பெண்ணும் முஸ்லிமாக மாறினர். இது ஹரியானா அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் அவர் துணை முதல்வர் பதவியையும் இழக்க நேரிட்டது.

தற்போது கல்கா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இவர் இருந்து வருகிறார். நான்காவது முறையாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்நதெடுக்கப் பட்டவர் என்பது குறி்ப்பிடத் தக்கது.

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

Published on: //
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததையடுத்து இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது மீண்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும் டிசல் விலையில் இரண்டு ரூபாயும் சமையல் வாயுவின் விலையில் 25 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை குறைவும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வந்தது.

ஜெர்மனி பெண்ணை கடத்திக் கற்பழித்த ஐவருக்கு வாழ்நாள் சிறை

ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு மாவட்ட நீதி மன்றம் வழ்நாள் சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை ஐந்து நட்சத்திர விடுதியிலிருந்து கடத்திச் சென்று கற்பழித்தனர் என்று இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அம்பாலா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்குள் விசாரித்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராஜ் சேகர் அட்ரி குற்றம் சாட்டப்பட்ட ஐந்துபேரும் குற்றவாளிகள் என்றும் ஐந்து பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை அளிப்பதாகவும் தனது தீர்ப்பை அறிவித்தார்.

பங்கஜ் புனியா, மன்வீர் சிங் ஜோலி, ஹர்பீத் சிங் டல்லி, சுக்வீந்தர் சிங் சுகி மற்றும் சோம்பால் என்று அறியப்படும் ஐந்து குற்றவாளிகளும் அம்பாலா மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்றும் 20 வயதினர் என்றும் தெரிய வருகிறது.

கஷ்மீரில் இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்

Published on: புதன், 28 ஜனவரி, 2009 // , , , ,
ஜம்மு கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சன்டைகளில் அல் படர் தலைவர் உள்பட இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். ஒரு இராணுவ வீரர் பலியானார்.

நேற்று இரவு அமர்கர் எனும் கிராமத்தில் இராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இருந்த போது ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் இராணுவத்தினரை நோக்கிச் சுட்டனர்.  பின்னர் துப்பாக்கிச் சன்டையை நிறுத்தியிருந்த இராணுவம் அதிகாலையில் மீண்டும் துவக்கிய போது அந்த வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதி கொல்லப்பட்டார். இதில் சோஹன் சிங் என்ற இராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்றொரு வீரர் காயமுற்றார்.

கொல்லப்பட்ட தீவிரவாதி அல்படர் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபூ ஹம்சா ஆவார்.

நேற்று பகிஹாரா என்ற கிராமத்தில் நடந்த மற்றொரு சன்டையில் அடையாளம் தெரியாத தீவிரவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கு கஷ்மீரின் பன்டிபுரா மாவட்டத்திலும் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சன்டை நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி முடிவாகவில்லை - தேர்தல் ஆணையம்

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப் படவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 8 மற்றும் மே 15 ஆகிய நாள்களுக்கு இடையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி கூறியதாக நேற்று தகவல்கள் வந்தன.

லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் நேற்று 'ஜம்மு காஷ்மீர் தேர்தல் 2008' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் தேதி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப் படவில்லை என்றும், ஏப்ரல் 8 மற்றும் மே 15 ஆகிய தேதிகளுக்குள் நடைபெறும் என்றும் கூறினார்.

14ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

கழிவறையில் தண்ணீரைப் பயன்படுத்திய ஊழியர் பணி நீக்கம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்று தனது ஊழியர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்தியதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

43 வயதான பிலிப்பைனைச் சேர்ந்த அமடார் பெர்னாபே என்பவர் ஆஸ்திரேலியாவில் டவுன்ஸ்வில்லே இன்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் இயந்திர கையாளுராகப் பணியாற்றி வருகிறார். இவர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ததல் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று உள்ளூர் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டது.

அவர் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று மறுத்த அந்நிறுவனத்தின் மேலாளர், அவருடைய செயல்கள் சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பல முறை அவரிடம் அவருடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டாகத் தெரிவித்தார். அவருடைய செயல் கழிவறைப் பிரச்சனை மட்டுமல்ல. மற்ற பணியாளர்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது என்றும் மேலாளர் கூறினார்.

ஓரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழப்பு

ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழக்கப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக உலகப் பொருளாதாரம் பலத்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்கள் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றன. திங்கள் கிழமை பல்வேறு நிறுவனங்களும் அறிவித்த ஆட்குறைப்பு உலகப் பொருளதார பாதிப்பை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

கட்டுமான இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான கேட்டர்பில்லர் நிறுவனம் தன்னுடைய பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. பிஜர் என்ற மருந்து நிறுவனம் 26 ஆயிரம் பேரையும், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹோம் டிபோட் என்ற நிறுவனம் 7 ஆயிரம் பணியாளர்களையும், ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் எனும் தொலைத் தொடர்பு நிறுவனம் 8 ஆயிரம் பேரையும் நீக்க முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு அறிவிப்புகளை செய்துள்ளன.

அமெரிக்கர்கள் விரோதிகள் அல்லர் - ஒபாமா

Published on: செவ்வாய், 27 ஜனவரி, 2009 // , , , ,
அமெரிக்காவின் முதல் குடிமகனாக தேர்வு பெற்ற பராக் ஒபாமா தன்னுடைய முதல் தொலைக்காட்சி நேர்காணலை இன்று துபாயிலிருந்து செயற்படும் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளார்.

அதில் மிகவும் ஆறுதலளிக்கும் குரலில் " அமெரிக்கர்கள் உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விரோதிகள் அல்லர்" என்று அவர் கூறியுள்ளார். "முஸ்லிம்களிடத்தில் இச்செய்தியை வழங்குவது தமது கடமை" என்றும் குறிப்பிட்டுள்ள அவர் "பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையேயான பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

"நாம் சிலநேரம் தவறு இழைத்து விடுகிறோம்" என்ற ஒபாமா 'அமெரிக்கர்களுக்கும் முஸ்லிம் உலகத்திற்கும் இடையே கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நல்லுறவு மீட்டெடுக்கப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலத்தின் அதிகாரத் தோரணை மாறி புரிந்துணர்வுத் தோழமையை மேற்கொள்ளும் தொனியை ஒபாமாவின் இந்த பேட்டி அளித்ததாக அல் அரேபியா ஆங்கில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஒபாமாவின் சிறப்புத்தூதராக ஜார்ஜ் ஜே.மிட்சல் எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஃபிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் மீது குண்டர் சட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த சனிக்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஸ்ரீராம் சேனை என்ற அமைப்பினர் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் துணைத் தலைவர் பிரசாத் அட்டவார் உள்பட 27 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குண்டர் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வர முடியாது. மேலும் அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே காவல் துறையின் காவலில் 6 மாதத்திற்கு வைத்திருக்க முடியும்.

பிணையில் வர முடியாத எட்டு வழக்குகள் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதிவு செய்துள்ளதாகவும் கர்நாடக மேற்கு சரக டி.ஐ.ஜி கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க இவர்கள் மீது குண்டர் சட்டதத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யூனுஸ்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக யூனுஸ்கான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணிபெற்ற மோசமான தோல்வியைத் தொடர்ந்து எழுந்த கடுமையான விமர்சனத்தின் காரணமாக, தற்போதைய கேப்டன் சுஹைப் மாலிக்கை மாற்றியதாக தெரிகிறது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை - அரசு முயற்சியைத் தொடங்கியது

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பெரும் பணியை மேற்கொள்வதற்காக தனி ஆணையத்தை இந்திய அரசு ஏற்படுத்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 120 கோடி இந்தியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை இந்த ஆணையம் கண்கானிக்கும்.

ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கான தேசிய ஆணையம் (National Authority for Unique Indentify - UID) திட்டக் குழுவுடன் இணைந்து அடையாள எண்களைத் தரும். உள்துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை பதிவளார் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவர் மற்றும் மாநில அதிகாதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த அடையாள எண்கள் வழங்கப்படும். படிப்படியாக வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்கப்படும்.

தவறுகளைக் களைவதற்காக அடையாள அட்டையில் புகைப்படமும், இரத்தப் பிரிவு போன்ற தகவல்களும் இடம்பெறும். புதிதாக பதிவு செய்வதற்கோ அல்லது தகவல்களில் மாற்றம் செய்வதற்காக எளிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் மரணம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இன்று மதியம் டெல்லியில் மரணமடைந்தார்.

இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார கால அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து ஒரு வார காலத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.

வெங்கட்ராமன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், ஆர்.வெங்கட்ராமன் நாட்டு அரசியலிலும் - இந்திய தேசிய அரசியலிலும் தனி வரலாறு படைத்தவர். அவரது மறைவு ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

போதைப் பொருளுடன் காவல்துறை உயர் அதிகாரி கைது

Published on: திங்கள், 26 ஜனவரி, 2009 // , , , , , ,
ஞாயிற்றுக் கிழமை மும்பை தீவிரவாத தடுப்பு காவல் படை (ATS) 12 கிலோ ஹெராயின் வைத்திருந்த ஜம்மு கஷ்மீர் படைப்பிரிவைச் சார்ந்த இந்திய காவல் பணியின்  (IPS) அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளது.

ஷாஜ்ஜி மோகன் என்றறியப்படும் அந்த அதிகாரி திங்கள் கிழமை அதிகாலையில் வடக்கு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்ட்ட ஹெராயினின் மதிப்பு இந்திய சந்தையில் 12 இலட்சம் எனவும் வெளிநாட்டுச் சந்தையில் 1கோடியே 20 இலட்சம் எனவும் தீவிரவாத தடுப்புப் படையின் தலைமை அதிகாரி ரகுவன்ஷி கூறினார்.

ஜனவரி 17ஆம் தேதி ஹரியானா காவல்துறையால் 1.500 கிலோ ஹெராயின் கைது செய்யப் பட்ட ராகேஷ் குமார் மற்றும் விக்கி ஓபராய் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மோகன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து போதைப் பொருள் மட்டுமின்றி மடிக்கணினி ஒன்றும் சில சிடிகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஷஜ்ஜி மோகன் சண்டிகரில் போதைப் பொருள் தடுப்புத் துறையில் தொகுதி இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார். இன்று மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக இவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி இவரை இம்மாதம் 30ஆம் தேதிவரி காவல்துறையின் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

60ஆவது குடியரசு தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்



இந்தியாவின் 60வது குடியரசு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார். ராஜ்பத்தில் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ராஜ்பத்தில் குடியரசு தின விழா தொடங்கியது. கஜக்ஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நசர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் 24 முறை பீரங்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன.

பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்காக வீரமரணம் அடைந்த 11 பேருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரேவின் குடும்பத்தினர் உள்பட 11 பேரின் குடும்பத்தினர் இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையினரின் அணிவகுப்பு, காவல் துறையினரின் அணிவகுப்பு. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் முக்கியத் தலைவர்களும் வெளிநாட்டுத் தலைவர் மற்றும் தூதரக அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு 
ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. சுமார் 15000 துப்பாக்கி ஏந்திய காவலர்களும் 5000 துணை இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

தமிழகத் தலைநகர் சென்னையில் மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தமிழக முதல் கருணாநிதியின் உடல் நலக் குறைவால் அவர் இந்நிகழ்வில் பங்கு பெறவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு வீர தீரச் செயல் புரிந்தோருக்கு விருதுகளை வழங்கினார்.

வாசகர்களுக்கு இந்நேரம் குழுமம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்ரேலியப் படையினருக்கு சட்டப் பாதுகாப்பு - ஒல்மர்ட்

சமீபத்தில் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து அங்குப் பெருமளவு சேதங்களை விளைவித்தது. இஸ்ரேலியப் படையினர் ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் இருக்கும் குடியிருப்புகளின் மீது சர்வதேசப் போர் நடைமுறைகளை மீறிக் கடும் தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தின.

இதனையடுத்து 'ஹேக்'கில் இருக்கும் பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியப் படையினர் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்போவதாக தொண்டுநிறுவனம் ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் அவ்வாறு வழக்குத்தொடுக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எந்த ஓர் இஸ்ரேலியப் படையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய அரசு அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

சர்வதேசப் போர் நடைமுறைகளின் படி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸாவில் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசு, அதனைப் பொதுமக்கள் மீது வீசவில்லை என மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கஞ்சா பயன்படுத்தல் குற்றம் என பிரிட்டன் மீளறிவிப்பு!

கஞ்சா பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றம் என மீண்டும் பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் போதை அளிக்கும் வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பிரிவில் முன்னதாக கஞ்சா B பிரிவு வேதிப்பொருள் என அறிவிக்கப்பட்டிருந்தது. டோனி பிளேய்ர் பிரதமராக இருந்த போது 2004 ஆம் ஆண்டு கஞ்சா C பிரிவில் நகர்த்தப்பட்டது.

பிரிட்டனின் சட்டப்படி C பிரிவு போதை மருந்துகளை வைத்திருப்பவரை சட்டம் ஒழுங்கு காவலர்கள் அறிவுறுத்த மட்டுமே முடியும். அவர்கள்மீது வழக்குத் தொடுக்கவோ தண்டனை பெற்றுத் தரவோ இயலாது.

தற்போது கஞ்சா B பிரிவு வேதிப் பொருள் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கஞ்சாவை வைத்திருப்பதோ பயன்படுத்துதலோ குற்றம் என்ற பிரிவில் அடங்கும். கஞ்சாவின் புழக்கம் பிரிட்டிஷ் சமூகத்தில் பெருமளவு அதிகரித்துவிட்டதால் கார்டன் பிரவுன் இந்த அறிவிப்பை அளிக்கப் பரிந்துரை செய்தார்.

இதன்படி முதல்முறை விதி மீறுவோருக்கு எச்சரிக்கையும், அவரே இரண்டாம் முறை பிடிபட்டால் 80 பவுண்டு அபராதமும், மூன்றாம் முறை பிடிபட்டால் சிறைத் தண்டனையும் அளிக்க்கப்படும்.

ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம்

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியை மீண்டும் அளிக்க முடிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு உலகளாவிய அளவில் அமெரிக்க அரசு நிதி உதவி செய்து வந்தது. இந்த நிதி உதவிக்கு கடந்த புஷ்ஷின் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டது. ஒபாமா பதவியேற்றதும் கடந்த வெள்ளிக் கிழமையன்று இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.
 
வாழ்க்யையும் மரணத்தையும் தாங்கள் தீர்மாணிக்க முடியும் என்ற எண்ணும் ஆட்சியாளர்களுக்கு வாட்டிகன் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிரான செயல் கருக்கலைப்பு என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

வியட்னாம் படகு விபத்தில் 40 பேர் பலி!

வியட்னாமின் தலைநகர் ஹனோயிலிருந்து தெற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள மத்திய குவாங் பின் பிரதேசத்திலுள்ள கியான் ஆற்றில் நிகழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பொருள்கள் வாங்க அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த படகில் அளவிற்கு அதிகமாக பயணிகள் ஏற்றப் பட்டிருந்தனர். 20 பேர் மட்டுமே பயணம் செய்ய உரிமம் வழங்கப் பட்டிருந்த அப்படகில் 80-ற்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. படகு கரையை நெருங்கியபோது விரைவாக படகிலிருந்து இறங்குவதற்காக பெரும்பாலான பயணிகள் முண்டியத்துச் சென்றபோது எதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்தது.

ஆற்றிலிருந்து இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. அவர்களுள் இரு கர்ப்பிணிகளையும் சேர்த்து 32 பேர் பெண்கள். 36 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். காணாமல் போன மேலும் சிலரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

விடுதலைப்புலிகளின் வசமிருந்த முக்கியப் பகுதியான முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. தொலைக்காட்சியி்ல் பேசிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முல்லைத்தீவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார். விடுதலைப் புலிகள் இப்போது 15 அல்லது 20 கிலோ மீட்டர் பகுதியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய நிலையி்ல் முல்லைத் தீவை இழந்திருப்பது விடுதலைப்புலிகளுக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் முல்லைத் தீவை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. முல்லைத் தீவு மீட்டுப் பணியில் 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக சனிக்கிழமை இலங்கை இராணுவம் முல்லைத் தீவை நோக்கி வரும்போது கல்மடுக்குளம் அணைக்கட்டைத் தகர்த்தனர். இதில் சுமார் 4000க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் காலரா பரவுகிறது

Published on: ஞாயிறு, 25 ஜனவரி, 2009 // , , ,
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் பல நாடுகளில் பரவி வந்த காலரா தற்போது தென் ஆப்ப்ரிக்க நாட்டையும் தாக்கி உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் முதலில் பரவத் தொடங்கிய காலரா அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் பரவியது.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற குரூகர் தேசியப் பூங்காவில் காலரா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பூங்காவின் சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என அரசு அலுவலர்கள் கூறினாலும், இப்பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்காக வழங்கப்படும் குடிநீரிலும் இக்க்கிருமிகள் தென்பட்டதாக சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

ஒவ்வோராண்டும் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குரூகர் தேசியப் பூங்காவிற்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜிம்பாப்வேயில் கடந்த ஆகஸ்டு முதல் 3000க்கும் அதிகமானோர் காலரா தாக்கி இறந்துள்ளனர் என்பது கவலையளிக்கும் தனித் தகவல்.

சத்யம் நிறுவன தணிக்கையாளர்கள் கைது!

சத்யம் நிறுவனத்தின் தணிக்கையாளர்களான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற பன்னாட்டு தணிக்கை நிறுவனத்தின் இரு மேலாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

சத்யம் நிறுவன கணக்கு வழக்குகளில் 8000 கோடி ரூபாய் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது வெளியானதைத் தொடர்ந்து அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு இம்மாதத் துவக்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் பற்றிய விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்பில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரினிவாஸ் தலுரி ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

"சத்யம் நிறுவனம் தொடர்பான விசாரணகளுக்கு எங்கள் குழு முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைது நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" என தணிக்கை நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இந்தியா - கஜகஸ்தான் : நான்கு ஒப்பந்தங்கள்

இந்தியா - கஜகஸ்தான் இடையே 4 அரசாங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

மத்திய ஆசியாவில் யுரேனியச் செறிவு மிக்க நாடான கஜகஸ்தான் உலகின் யுரேனிய உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நாட்டுடன் இந்தியா குடிமை அணுசக்தி ஒப்பந்தம், குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி யுரேனியம் சார்பொருட்களை கஜகஸ்தான் இந்தியாவுக்கு வழங்கவும், அணுசக்தி நிலையங்களை இந்தியா கஜகஸ்தானில் நிர்மாணிக்கவும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புது டெல்லியில் இருநாட்டு குடியரசுத்தலைவர்கள் பிரதீபா பாட்டீலும், நூருல் இஸ்லாம் நஸர்பயேவ்வும் இவ்வொப்பந்தங்களை மேற்பார்வையிட்டனர்.
"இவை இருநாட்டுகளிடையேயான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும்" என்று நமது செய்தியாளர்களிடம் நஸர்பயேவ் பின்னர் தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பிலும், உலக வர்த்தக அமைப்பில் கஜகஸ்தானுக்கு இடமளிப்பது குறித்தும் மற்ற இரு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

25 இந்திய கடற்பிரயாணிகள் விடுவிப்பு

Published on: //
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இருமாதங்களாக பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 25 இந்திய கடற்பயணிகளும், மூன்று வங்கதேசத்தவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வேதிப்பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலான M T பிஸ்காலிகா என்ற லைபீரிய கப்பலிலிருந்து ஏடன் வளைகுடா அருகே கடந்த நவம்பர்28 அன்று இவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

இத்தகவலை தேசிய கடற்பிரயாணிகள் நல ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அப்துல்கனி செராங் தெரிவித்துள்ளார். "அனைவரும் நலமாக உள்ளனர்" என்றார் அவர்.

தொடக்கத்தில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்கள் பிணைத்தொகை கோரியிருந்த கொள்ளையர்கள், பின்னர் அதை 25இலட்சம் டாலர்களாக ஏற்றிக்கேட்டிருந்தனர். எனினும், விடுவிக்கப்படுவதற்கு முன்பாக பிணைத்தொகை வழங்கப்பட்டது பற்றி தெரிய வரவில்லை.

கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட 18 இந்தியர்களுக்குப் பிணைத்தொகையாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இக்கொள்ளையர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹோலோகாஸ்டை மறுத்த பாதிரியார்கள் மீண்டும் கிருஸ்துவ திருச்சபையுடன் இணைப்பு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியதற்காக 1988-ஆம் ஆண்டு 4 பிஷப்கள் வாடிகன் கிருஸ்துவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களை போப் பெனடிக்ட் மீண்டும் திருச்சபையுடன் இணைத்துக் கொண்டார். இது யூதத் தலைவர்களை கோபமடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஹிட்லரின் நாஜிப்படையினரால் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வு 'ஹோலோகாஸ்ட்' என வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இச்சம்பவங்களை உண்மை என ஏற்றுக் கொண்டிருந்தாலும் சிலர் அவற்றைப் பற்றிய சந்தேகங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சந்தேகங்களை எழுப்புவது பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்தை புரிந்ததற்காகவே 4 பிஷப்களும் திருச்சபையிலிருந்து நீக்கப் பட்டிருந்தனர்.


நால்வரில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்சன் ஹோலோகாஸ்ட் பற்றி கூறப்படுபனவற்றை மறுத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சுவீடன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யூதர்களைக் கொல்வதற்காக விஷ வாயு கிடங்குகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றே தாம் நம்புவதாகத் தெரிவித்தார். அச்சம்பவங்களில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 60 லட்சம் என்று சொல்லப்படுவதையும் அவர் மறுத்து, அதன் உண்மையான எண்ணிக்கை 3 லட்சம் மட்டுமே இருக்கும் எனவும் அவர் கூறினார்.

நான்கு பிஷப்களையும் மீண்டும் திருச்சபையில் இணைக்கும் உத்தரவை போப் வெளியிடுமுன்பாக பல யூதத் தலைவர்கள் போப்பின் இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். பல்லாண்டுகளாக நிலவி வரும் யூத கிருஸ்துவ சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை இது குலைத்து விடும் எனவும் 'ஆழமானதொரு காயத்தை இது மீண்டும் கிளறி விடும்' எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

குவாண்டனாமோ: 2 மலேஷிய கைதிகளை தாய்நாட்டிற்குக் கொண்டுவர பிரதமர் விருப்பம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமா குவாண்டனாமோ சிறையை ஓராண்டிற்குள் மூடும்படி உத்தரவிட்டிருப்பது தெரிந்ததே. அங்கு அடைபட்டிருக்கும் கைதிகளுள் இரு மலேஷிய நாட்டவரும் அடங்குவர். அவர்களை மலேஷியாவிற்கு கொண்டுவர பிரதமர் அப்துல்லா படாவி விருப்பம் தெரிவித்துள்ளார்.

முகமது நாசிர் லெப் மற்றும் முகமது பரிக் அமின் என்ற இரு மலேஷிய நாட்டவரும் 2002-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்புகளை நடத்திய ஜெமா இஸ்லாமியா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

"அதிபர் பாரக் ஒபாமா (குவாண்டனாமோ சிறையை மூடுவது பற்றிய) தமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக மலேஷியா தனது மகிழ்வை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறிய மலேஷிய பிரதமர், அக்கைதிகள் மலேஷியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் எஞ்சிய தண்டணைக் காலத்தை மலேஷிய சிறையில் கழிப்பர் என்றும் தெரிவித்தார்.

குவாண்டனாமோ சிறையில் இன்னும் அடைபட்டிருக்கும் சுமார் 250 பேரில் செப் 11 தாக்குதல் நடக்க உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 நபர்களைச் சேர்த்து சுமார் 20 பேர் மீது மட்டுமே குற்ற வழக்கு பதியப் பட்டிருக்கிறது.

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பலி!

Published on: //
வடக்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதி மீது அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் 3 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக பல ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும் ஏவுகணை விழுந்தப் பகுதி முழுவதும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எனவும் கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

அநேகமாக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்ற பின்னர், அமெரிக்கப் படைகள் நடத்திய முதல் தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.

"தீவிரவாத எதிர்ப்புப் போரின் முக்கிய பகுதிகளாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இருக்கும்" என அதிபர் பராக் ஒபாமா ஸ்டேட் டிபார்ட்மென்ட் கூட்டத்தில் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

சர்மா கைது செய்த காஷ்மீர் தீவிரவாதி விடுதலை!

Published on: // ,
டெல்லி ஜாமிஆ நகர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மோகன்சந்த் சர்மா தீவிரவாதி என குற்றம் சுமத்தி கைது செய்த இக்பால் என்றழைக்கப்படும் அயாஷ் அஹமது ஷா என்ற காஷ்மீர் இளைஞரை நீதிமன்றம் நிரபராதி எனக் கூறி விடுதலை செய்தது.

டெல்லி சாஸ்திரி பார்க்கின் அண்மையிலுள்ள மெட்ரோ ஸ்டேசனில் வைத்து கடந்த 2004 ஜனவரி 22 அன்று அயாஷ் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்யும் பொழுது அவர் வைத்திருந்தப் பையில் வெடிபொருட்களும் மூன்று லட்சம் ரூபாயும் இருந்ததாகவும் அடுத்து வரும் குடியரசு தினத்தில் டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக அவர் அதனை வைத்திருந்தார் எனவும் டில்லி ஸ்பெஷல் செல் வழக்கு பதிவு செய்திருந்தது.

நிதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பொழுது, ஸ்பெஷல் செல்லிலுள்ள எ.எஸ்.ஐ. ரிஷிகேசிற்கு இக்பாலை கைது செய்த இடம் எங்கு என்பதைக் குறித்து விவரிக்க இயலவில்லை. மற்றொரு ஸ்பெஷல் செல் அதிகாரியான ஜெய் கிஷன், காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டவைக்கு எதிராக, மெட்ரோ அதிகாரிகள் அந்த ரெய்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். ரெய்டில் கலந்துக் கொண்ட எஸ்.ஐ. உமேஷ் பாரதியினால் எவ்வளவு நேரம் ரெய்டு நடந்தது என்றக் கேள்விக்குப் பதிலளிக்க இயலவில்லை.

"குற்றம் சுமத்தப்பட்ட பிரதி, நாட்டுக்கு எதிராக போர் பிரகடன் செய்ததையும் நாட்டைத் தகர்க்க சதியாலோசனை நடத்தியதையும் தெளிவிப்பதில் அரசு தரப்பு தோல்வியடைந்ததாக" தீர்ப்பு கூறிய நீதிமன்றம், காவல்துறைக்கு எதிராகக் கடும் விமர்சனமும் கண்டனமும் தெரிவித்தது.

சீனா பொம்மைகள் இறக்குமதிக்கு இந்தியா தடை!

சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே மெலாமின் என்ற விஷ ரசாயனப்பொருள கலந்துள்ளதுக் கண்டுபிடிக்கப்பட்டக் காரணத்தினால் சீனாவிலிருந்து சாக்லேட், பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தற்பொழுது சீன உற்பத்தி பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொம்மைகள் உருவாக்கப்படுத்தப்படும் பொருட்களில் விஷ ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக எழுந்த சந்தேகமும் மிக விலை குறைந்த சீன பொம்மைகளின் அளவுக்கதிகமான இறக்குமதி உள்நாட்டு பொம்மை உற்பத்தியை வெகுவாக பாதித்திருப்பதும் இத்தடைக்குக் காரணமாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் 5 வயது சிறுமி கற்பழிப்பு

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று 5 வயதே ஆன சிறுமி கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறியது.

நேபாளத்தில் இருந்து வேலை தேடி பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே குராலி எனும் கிராமத்தில் அச்சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். பெற்றோர் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டனர். இவர்களது வீட்டருகே வசித்து வரும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த 27 வயதுடைய ராஜேஷ் பாரதி என்பவன் இச்சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, சிறுமியிடம் நயமாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று இக்குற்றத்தை செய்ததாக விசாரணை அதிகாரி லக்விந்தர் சிங் கூறினார்.

மொஹாலியில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது நிகழ்வு இது. இம்மாதம் 7ஆம் தேதி 6 வயது நேபாளச் சிறுமி மொஹாலியின் தொழில்பேட்டை அருகே கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

"தேச துரோகி" வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!

Published on: // ,
சமீபத்தில் வெளியான தேசதுரோகி இந்தி திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட்டால், குழப்பங்கள் விளையலாம் என்ற மஹாராஷ்டிரா அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்னர், மும்பை உயர்நீதிமன்றமும் இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு உச்சநிதிமன்றத்தை அணுகியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மற்றப்பாகங்களில் வெளியான இத்திரைப்படத்தை, மஹாராஷ்டிராவில் வெளியிட மட்டும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்தது.

அதேநேரம், உச்சநிதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரும் இதுவரை மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கிலும் இத்திரைப்படம் இதுவரை திரையிடப்படவில்லை. திரைப்படம் திரையிட நினைத்திருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க தயாராகாததே இதற்கான காரணமாகும்.

மாலேகான் வழக்கு: சதி திட்டத்தில் ஹிமானி சவார்க்கரும்!

Published on: //
மாலேகாவ் குண்டு வெடிப்பிற்காக சதி திட்டம் தீட்டியவர்களில் வி.ட்டி. சவார்க்கரின் மருமகளும் காந்தியைக் கொன்ற கோட்சேயின் அண்ணன் கோபால் கோட்சேயின் மகளுமான அபினவ் பாரதின் தலைவி ஹிமானி சவார்க்கருக்கும் பங்குண்டு என மாலேகான் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.டி.எஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 அன்று போபாலிலுள்ள ராம ஷேத்திரத்தில் வைத்து நடந்த குண்டு வெடிப்பிற்கான ரகசிய சதியாலோசனை கூட்டத்தில் தானும் ஹிமானி சவார்க்கரும் கலந்துக் கொண்டதாக கடந்த டிசம்பர் 24 அன்று, அபினவ் பாரதின் உறுப்பினருமான வழக்கின் முக்கிய சாட்சி வாக்குமூலம் கொடுத்தார்.

இதனைக் குறித்த கேள்விக்கு, "தான் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வேளையில் தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகளாக இருந்தனர்" என ஹிமானி பதிலளித்துள்ளார்.

ஹிமானியையும் முக்கிய சாட்சியையும் குற்றவாளிகள் பட்டியலில் ஏ.டி.எஸ் சேர்க்கவில்லை. எதனால் இவர்கள் இருவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு, "இதற்கான பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்" என ஏ.டி.எஸ்ஸின் தற்காலிக தலைவர் ரகுவன்ஷி பதிலளித்தார்.

மரம் வெட்டிக்கு தண்டனை

42 மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய ஒருவருக்கு டெல்லி நடுவர் நீதிமன்றம் 210 மரக்கன்றுகளை நடும் விநோத தண்டனையை அளித்துள்ளது.

வாசுதேவா என்ற பெயருடைய அந்த நபர் தனக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே இப்படி செய்துவிட்டதாகக்  கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். 


மரங்களே நகரின் நுரையீரல்கள் எனவும், உலகின் பசுமை குறைந்துவருவது கவலையளிக்கும் விதயம் என்றும் நீதிபதி தேவந்தர் குமார் ஜங்காலா தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமருக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனை(AIIMS)யில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இருதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக  இச்சிகிச்சை என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் P.K. பாண்டா தலைமையில் 11 மருத்துவர்களைக் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.

76 வயதான மன்மோகன், 18 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை  ஃபைபாஸ் சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார். மேலும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் பெற்றுள்ளார்.

இதனால் சுமார் ஒருமாத காலம் மருத்துவ விடுப்பில் பிரதமர் இருக்க வேண்டியுள்ளதால், எதிர்வரும் குடியரசு தினக் கொண்டாட்டங்களையும், பிரதமருக்கான மற்ற அலுவல்களையும்  மூத்த அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி தலைமையேற்று நடத்துவார் எனத் தெரிகிறது. முன்னர் ப.சிதம்பரம் வசமிருந்த  நிதிஅமைச்சர் பொறுப்பையும் திரு. முகர்ஜியே தற்காலிகமாக கவனிப்பாராம்.

தீவிரவாத வழக்குகள்: பார் கவுன்ஸிலுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்!

Published on: //
தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடும் உரிமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முறையீட்டின் மேல் விளக்கம் கோரி பார் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மாநில பார் அஸோஸியேசன்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பார் அஸோஸியேசன்களின் நடவடிக்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பொதுநல வழக்கின் மீது வாதம் கேட்கும் பொழுது, தலைமை நிதிபதி கெ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலுள்ள நீதிபதிகள் குழு பார் கவுன்ஸிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. முஹம்மது ஷிஐப்(லக்னோ), ஸமால் அஹ்மது(ஃபைஸாபாத்), நூர் அஹமது(உஜ்ஜயினி), சுரேந்தர் ஸிகாட்லிங்(மாஹாராஷ்டிரா) ஆகிய வழக்கறிஞர்கள் இணைந்து இந்த பொது நலவழக்கு தொடுத்துள்ளனர்.

"பார் அஸோஸியேசன் சட்ட விரோத தீர்மானம் நிறைவேற்றியுள்ளது" எனவும் "இதன் மூலம் கடந்த ஆண்டு நடந்தத் தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக இருந்ததிலிருந்து விலக வேண்டி வந்ததாகவும்" புகாரில் அவர்கள் கூறினர். "குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக வந்த வேளையில் மற்ற வழக்கறிஞர்கள் தங்களைத் தக்கியதாகவும்" அவர்கள் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

Published on: வெள்ளி, 23 ஜனவரி, 2009 // , , ,
அமெரிக்க கணிணி நிறுவனமான மைக்ரோஸாப்ட் தமது ஊழியர்களில் 5000 பேரை வேலையிலிருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அவர்களில் 1400 பேர் உடனடியாகவும் மற்றவர்கள் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாகவும் நிறுத்தப் படுவர். மெதுவடைந்திருக்கும் பொருளியல் சூழலும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்தில் செலவிடும் தொகை வெகுவாகக் குறைந்து விட்டதுமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை அந்நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு குறைந்து விட்டதாகத் தெரிவிக்கிறது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இந்த ஆட்குறைப்பு செய்யப் படுகிறது.

அந்நிறுவனத்தில் ஆய்வு, சந்தைப் படுத்தல், விற்பனை, நிதி, சட்டம், மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப் படுவர் என்று தெரிகிறது.

குவாண்டனாமோ சிறையை மூட ஒபாமா உத்தரவு!

புதிய அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா தான் வாக்களித்தபடி குவாண்டனாமோ சிறையை முற்றிலும் மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

"பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் அதேவளை, அமெரிக்க விழுமியங்களையும் விட்டுக் கொடுக்கமாட்டோம்" என அவர் கூறியுள்ளார்.

குவாண்டனாமோவில் நடைபெற்றுவரும் அனைத்து இராணுவ விசாரணைகளையும் நிறுத்தி வைக்க முன்னதாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. குவாண்டனாமோவில் தண்ணீரில் மூழ்கடிக்கும் உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற சித்திரவதை விசாரணை முறைக்கு முந்தைய அதிபர் புஷ் ஒப்புதல் அளித்திருந்ததும் பல்வேறு மனிதநேய அமைப்புகள் அம்முறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததும் அறிந்ததே.

ஒபாமாவின் உத்தரவை அடுத்து குவாண்டனாமோ சிறை ஓராண்டுக்குள் முற்றிலும் மூடப்படும் எனத் தெரிகிறது.

11 லாரிகள் தீக்கிரை

Published on: வியாழன், 22 ஜனவரி, 2009 // ,
பீஹாரில் உள்ள ரோஹ்டாஸ் மாவட்டத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 11 வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.

இன்று அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் நடந்த இச்செயலை மாவோ கம்யூனிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த நக்சல்கள்தான் செய்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். 

தங்கள் இயக்கத்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் மாவோ கம்யூனிஸ்டுகள் ஜார்கண்ட், பீஹார், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  முழு அடைப்புக்கிடையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சிமெண்ட் கல்யாண்பூரில் உள்ள சிமெண்ட் ஆலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டவை என்று கூறிய காவல்துறை அதிகாரி, எரியூட்டுவதற்கு முன் ஓட்டுநரையும உதவியாளரை கீழே இறக்கிவிட்டு எரியூட்டியுள்ளனர் என்று கூறினார். முழு அடைப்பு நடக்கும் போது இரவு நேரத்தில் சிமெண்ட் மூட்டைகளை அனுப்ப வேண்டாம் என்று அந்த ஆலைக்கு காவல்துறை ஏற்கனவே கூறியதாகவும் கூறப்படுகிறது.

சினிமா தயாரிப்பாளர் பரத்ஷா கைது

இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் வைர வியாபாரியான பரத்ஷா இன்று கைது செய்யப்பட்டார். சில்வசா நீதிமன்றம் வழங்கிய பிணையில் வெளிவரா இயலாத கைது ஆணையின் படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் மலபார் ஹில் பகுதி காவலர்கள் அந்த ஆணையைப் பெற்று அவரைக் கைது செய்தனர். எந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை காவல்துறையினர் கூற மறுத்துவிட்டனர்.

ஒபாமா ஆரவாரமான துவக்கம்!

Published on: //
அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பதவியேற்றுள்ள ஆப்ரிக்க-அமெரிக்க வம்சத்தில் வந்த பராக் ஹுசைன் ஒபாமா, பதவியேற்பு முடிந்தக் கையோடு அதிபர் பணிகளை ஆரவாரத்துடன் துவங்கியுள்ளார்.

பதவியேற்பு முடிந்து நேரடியாக வெள்ளை மாளிகை சென்ற ஒபாமா, முதல் வேலையாக தனது பதவியேற்பிற்கு முன், முன்னாள் அதிபர் புஷ் தனது பதவி காலத்தின் இறுதியில் கையெழுத்திட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, தனது தேர்தல் பிரச்சார வேளையில் அளித்திருந்த "குவாண்டனமோ சிறைச்சாலையினை மூடும்" வாக்குறுதியினை நிறைவேற்றும் ஆரம்பப்படியாக, உடனடியாக குவாண்டனமோ கைதிகளின் நீதிமன்ற விசாரணைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று நடக்க இருந்த ஒரு வழக்கினை நீதிபதி பாட்ரிக் பாரிஷ் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

அதிபர் பதிவேற்ற ஒபாமாவின் முதல் நாள் நடவடிக்கைகள் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியது

Published on: புதன், 21 ஜனவரி, 2009 // ,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்களுக்கு மேல் தொடர்ந்து தரை, வான் மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தி கடந்த 18ஆம் தேதி நள்ளிவில் தன்னிச்சையாக தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. இராணுவத்தினர் காஸாவிலேயே இருப்பார்கள் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவத்தினரை எதிர்த்து சன்டையிட்டு வந்த ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்களும் சன்டை நிறுத்தத்தை அறிவித்து, ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்திருந்தன.

செவ்வாய்க் கிழமையிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் கூறின. இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலின் அனைத்து இராணுவத்தினரும் காஸாவிலிருந்து வெளியேறிவிட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இதனை தங்களின் வெற்றி என்று கூறுகின்றன. காஸாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெற்றி குறித்து கேட்டபோது, சன்டையில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் எல்லாற்றையும் இழந்துவிட்டோம் என்று கூறினார்.

இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 1340 பேர் கொல்லப்பட்டனர். 5320 பேர் காயமுற்றனர். இதில் குறைந்த 1100 பேர் பொதுமக்கள் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் கொல்லப் பட்டதாகவும் அவர்களில் மூவர் பொதுமக்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் 80 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது - அந்தோணி

Published on: //
இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது என்றும் நம்முடைய பாதுகாப்பு வசதிகளை நவீனப்படுத்த வேண்டும் என்றும் இந்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார். 

இந்திய கடல் பாதுகாப்புக்காக அதிவேக கப்பலான சாம்ராட் என்னும் கப்பலை பணியமர்த்தும் நிகழ்வு இன்று நடந்தது. அப்போது பேசும்போது, நம்மிடம் இருக்கும் வசதிகள் போதுமானது இல்லை. நமக்குத் தேவையானதில் 30 சதவீதம் மட்டுமே நம்மிடம் உள்ளன. இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால் இந்திய கடல் பாதுகாப்பை அரசு நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். நம்முடைய இராணுவம் எந்நேரமும் செயல்படத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இராணுவத் தளவாட உற்பத்தி துறையின் இணை அமைச்சர், இந்திய கப்பல்படை அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஒபாமாவுக்கு மெர்கெல் காட்டமான வரவேற்பு!

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றதைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் வேளையில் ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்கெல் காட்டம் கலந்த தொனியில் வரவேற்பு அளித்துள்ளார்.

ஒபாமா தனது பதவியேற்புக்கு முன்பான உரையின் போது ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவது தான் தனது முதல் முனைப்பாக இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதற்குத் துணையாக இருக்கும் நாடுகளும் அதற்காக உதவவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் முகமாக ஜெர்மனி அதிபர் மெர்கெல், "ஆப்கானிஸ்தானில் எங்கள் (ஜெர்மனியின்) கடமை என்ன என்று எங்களுக்குத் தெரியும்; இது நாள் வரை ஆப்கனில் நாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை மிகச் சரியாகவே செய்து வந்துள்ளோம். இதைச் சொல்ல புதிய அதிபர் தேவையில்லை"என்று காட்டமாகக் கூறினார்.

ஒபாமா அமெரிக்க அதிபரானதற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதே செய்தியிலேயே இதைக் குறிப்பிட்ட அதிபர், "ஜெர்மனியின் வீரர்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிப்பதும் குறைப்பதும் அமெரிக்க அதிபராக யார் வருகிறார் என்பதைப் பொறுத்ததில்லை" என்றும் கூறினார்.

காங்கிரசில் அஸாருத்தீன் ?

Published on: செவ்வாய், 20 ஜனவரி, 2009 // ,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருத்தீன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அஸாருத்தீனிடம் கேட்டபோது "இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றும், நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்குத் தகவல் தருகிறேன்" என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் அஸாருத்தீன் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் போட்டியிடும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவை சந்தித்தபோது, அஸாருத்தீன் அக்கட்சியில் இணைந்ததாக இதுபோன்ற வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6215 ரன்களையும், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9379 ரன்களும் எடுத்திருந்த அஸாருத்தீன் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாகவும் விளங்கினார். 2000 ஆம் ஆண்டு எழுந்த ஊழல் புகாரை அடுத்து இவர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

மும்பையின் தாராவி பகுதி அழகுபடுத்தப்படும்

மும்பையில் உள்ள தராவி என்றழைக்கப்படும் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். ஒழுங்கற்ற வீதிகள், வீதி தோறும் குப்பைகள் என்று சுகாதாரக் கேட்டுடன் உள்ள இப்பகுதி ஆசியாவின் மிகப் பெரும் குடிசைப் பகுதியாகும். இந்தப் பகுதியை அழகுபடுத்தப் போவதாக மகாராஷ்டிர அரசு இன்று அறிவித்துள்ளது.

இதற்காக உலகளாவிய அளவில் டெண்டர் விடப்படும் என்று மாநில வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று அமைச்சர் பிரீத்தம் குமார் தெரிவித்தார். மகாராஷ்டிர அரசு 2009ஆம் ஆண்டை "வீடுகளுக்கான ஆண்டு" என்று அறிவித்துள்ளதாகவும், இந்த ஆண்டில் தனியாருடன் இணைந்து வீட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருவோம் என்றும் அவர் கூறினார். இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க.விலிருந்து கல்யான் சிங் விலகல்

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து உத்திர பிரதேச மாநில முதல்வர் கல்யான் சிங் அந்தக் கட்சியி்ல் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக இன்று அறிவித்தார்.

பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தது தான் செய்த மாபெரும் தவறு என்றும், பா.ஜ.க.வில் தன்னை அவமானப்படுத்தினர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 76 வயதாகும் கல்யான் சிங் தற்போது பா.ஜ.க.வி்ன் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். 1992ஆம் ஆண்டு பாபரி மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல்வராக இருந்தார்.

லோத் எனப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவரான கல்யான் சிங் பா.ஜ.க.விலிருந்து விலகியிருப்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று டெல்லியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை இவர் சந்தித்துப் பேசியதாகவும், முலாயம் இவருக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் தருவதாக வாக்களித்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இந்தியா பாகிஸ்தானை புரிந்து கொள்ள வேண்டும் - ரைஸ்

Published on: திங்கள், 19 ஜனவரி, 2009 // , ,
இன்றுடன் பதவி முடியும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த கான்டலீசா ரைஸ் இந்தியா பாகிஸ்தானை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பதவி முடியும் தறுவாயில் மூன்று தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரைஸ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருவதாகவும், எல்லை தாண்டிய பயங்கராவாதத்தை ஒடுக்குவதிலும் அக்கறை காட்டி வருவதாகவும் ரைஸ் அப்போது விவரித்தார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைய ஒப்புக் கொண்ட ரைஸ், இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையாக நடந்து கொண்டால் அது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபாகரன் வெளிநாடு தப்பினார்?

Published on: //
ஸ்ரீலங்காவில் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்தியத் தாக்குதலில் 31 புலிகள் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ரகசிய படகு நிர்மாணசாலையைத் தகர்த்ததாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பகுதியான முல்லை தீவினை நோக்கி இராணுவம் நகரத்துவங்கிய நிலையில், பிரபாகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லை தீவை நோக்கியை இராணுவத்தின் முன்னேற்றம் தற்பொழுது மாங்குளம்-முல்லை தீவு சாலைவரை வந்துள்ளது. மிக விரைவிலேயே முல்லைதீவினுள் இராணுவம் நுழையும் எனக் கருதப்படுகிறது.

புலிகளிடம் தற்பொழுது பயிற்சி பெற்ற வெறும் 1000 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளதாகவும் அவர்களும் முல்லை தீவின் உள் காட்டுப்பகுதியில் ஒளிந்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி சரத் போன்ஸகா கூறினார். புலிகளுக்கெதிரான போராட்டம் மிக விரைவிலேயே முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

மாலேகான் வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி!

Published on: //
11 வயது சிறுமி உட்பட 6 பேர் மரணத்திற்குக் காரணமான மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி நகர்கிறது!

வெடிகுண்டு தயாரிப்பில் திறமைசாலியான பிரவீன் முதலிக் எனும் நபரைத் தேடி, வழக்கை விசாரிக்கும் மும்பை தீவிரவாதத் தடுப்புப்படை கர்நாடகா விரைந்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்புக்குத் தேவையான வெடிகுண்டுகளைத் தயாரித்து வழங்கிய ராம்ஜி மற்றும் சந்தீப் டாங்கெயுடன் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதான பிரவீனும் இருந்ததாக ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது. வெடிகுண்டு தயார் செய்வதில் நிபுணனான இந்நபரைக் கைது செய்தால், தலைமறைவாக இருக்கும் மற்றும் இருவரைக் குறித்தத் தகவல்கள் தெரிய வரும் என ஏடிஎஸ் கருதுகிறது.

இதற்கிடையில் மும்பை ஏடிஎஸ், தங்களைச் சட்டவிரோதமாக கஸ்டடியில் வைத்ததாகவும் ஆகவே ஏடிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மத்திய பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் வழங்கிய புகாரை இன்டோர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாரக் ஏவுகணை விவகாரம்: சி.பி.ஐ இஸ்ரேல் உதவி கோரியது!

Published on: //
இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட 1,150 கோடி ரூபாய்கான பாரக் ஏவுகணை வியாபாரத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் மத்திய புலனாய்வு துறை இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணையில், ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலில் வைத்து நடந்த பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவரங்களை இஸ்ரேல் அரசிடம் சிபிஐ கேட்டுள்ளது.

இவ்வொப்பந்தத்தில் உள்ள முக்கிய சில குளறுபடிகள் இஸ்ரேலில் வைத்து நடந்துள்ளதால் அவை தொடர்பான அனைத்து விவரங்களும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட அனுமதியின் மூலம் இஸ்ரேல் அரசுக்குச் சி.பி.ஐ கோரிக்கை அனுப்பியுள்ளது.

முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃப்ர்னாண்டஸ், இராணுவ முன்னாள் உயரதிகாரி சுஷில் குமார், சமதா கட்சியின் தலைவராக இருந்த ஜெயா ஜெட்லி, ஆயுத வியாபாரி சுரேஷ் நந்தா போன்றவர்களை உட்படுத்தி கடந்த 2006 அக்டோபர் மாதம் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

இஸ்ரேலிடமிருந்து 7 பாரக் ஏவுகணைகள் வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட தொகை 17 மில்லியன் டாலர் எனவும், இத்தொகை 1996 ஆம் ஆண்டு இஸ்ரேல் வாக்களித்த ஒப்பந்தத் தொகையை விட அதிகமானது எனவும் சி.பி.ஐ கண்டுபிடித்தது.

1996 ல் இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் இறக்குமதி செய்வதற்கான அட்மிரல் குமாரின் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய விஞ்ஞான ஆலோசகராகவும் இருந்த விஞ்ஞானி அப்துல் கலாம் எதிர்த்த போதிலும் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தின்படி ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ஃபெர்னாண்டஸ் கட்டளையிட்டிருந்தார்.

2001 ல் தெஹல்கா இதழ் இரகசிய கேமரா மூலம் நடத்திய விசாரணையின் மூலமே இவ்வொப்பந்தத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட ஊழல் வெளியானது.

வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம்

தலைநகர் டில்லி உள்பட இந்தியாவின் வட மாநில மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குறைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள மாற்றங்களை எதிர்த்து இப்போராட்டம் நடைபெறுகிறது. தலைநகரில் இம்மாதம் வழக்குறைஞர்கள் நடத்தும் மூன்றாவது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இம்மாதம் 7 மற்றும் 14 ஆம் தேதிகளில் ஏற்கனவே வேலை நிறுத்தம் நடைபெற்றது.

வட மாநிலங்களான டில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ஜம்மு கஷ்மீர் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறுவதாக வழக்குறைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.


ஜார்கண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஷிபு சோரன் முதல் அமைச்சராகப் பதவி வகிகத்து வந்தார். பதவியேற்றதிலிருந்து ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தற்காலிக முதல்வராகத் தொடர்கிறார்.

அவருக்குப் பதில் வேறொரு முதல்அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நிலவி வந்தது. இதனையடுத்து மாநில ஆளுநர் சையத் சிப்தி ராஜி ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். மத்திய அமைச்சரவையும் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.

மாநில சட்டமன்றம் கலைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் திருமா

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

நான்காவது நாளான நேற்று திருமாவளவனின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. நேற்று மாலை அவர் மயக்க நிலைக்கு போனார். இதையடுத்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். பல்வேறு கட்சித் தலைவர்களும் திருமாவளவன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரினர்.

பின்னர் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம், உண்ணாவிரதம் நடந்த மேடைக்கு அருகில் கூடியது. அக்கூட்டத்தில் உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிட வேண்டும் என மமுடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மாலை 5 மணியளவில் உண்ணாவிரத மேடைக்கு டாக்டர் ராமதாஸ் வந்தார். அவர் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. எனவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். அப்போராட்டத்தில் பால் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் எந்த ஊர்தியும் ஓடாது.

எனவே உண்ணாநிலை போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

அதனைக் கேட்ட திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவதாகவும், இலங்கைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் கலைஞர் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாகவும் ராமதாஸ் உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

திருமாவளவனின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ராமதாஸ் உறுதியளித்தார். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

தேவாலயத்தின் கூரை விழுந்து ஏழுபேர் பலி

ஞாயிற்றுக் கிழமையன்று பிரேசிலின் மிகப்பெரிய நகரான சாபோலோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் கூரை நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 7 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

தீயனைப்புத் துறையினரும் உதவிக் குழுவினரும் விரைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2000 பேர் ஒரே நேரத்தில் வழிபடக் கூடிய அளவில் உள்ள இந்த தேவாலயத்தில் சம்பவத்தின் போது 400லிருந்து 500 பேர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்று பிரேசிலின் செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது. ஆனால் 60 பேர்தான் இருந்ததாக தேவலாய நிர்வாகம் தெரிவித்தது.

பாலஸ்தீனிய குழுக்கள் சன்டை நிறுத்த அறிவிப்பு

Published on: ஞாயிறு, 18 ஜனவரி, 2009 // , ,
ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஹமாஸ் போராளிகளும் மற்ற போராளிக் குழுக்களும் இந்த சன்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று ஹமாஸ தலைவர்களில் ஒருவரான அய்மான் தாஹா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களைத் தொடுத்து வந்தது. சுமார் 1300க்கும் அதிகமானோரை பலி வாங்கிய இந்த தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கோரி வந்த நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் நேற்று தன்னிச்சையான சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை பாலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் உள்பட பல அமைப்புகளும் ஏற்க மறுத்து, இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று அறிவித்திருந்தனர்.

இஸ்ரேலிய சன்டை நிறுத்தத்தை அறிவித்திருந்தும் காஸாவின் பல பகுதிகளிலும் இன்றும் சிறிய அளவிளான தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாயின. காஸாவிலிருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் தொடர்ந்தன. இந்நிலையில் ஹமாஸ் இயக்கம் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காஸா குறித்து விவாதிப்பதற்காக எகிப்து கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எகிப்தின் ஷரம் அல் ஷைக் எனுமிடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் , அரபு லீக் தலைவர், பிரான்சு, துருக்கி, ஜோர்டான், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

காஸா : தொடரும் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்குப் பணிந்து, ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரம் காலை 2 மணி முதல் தாக்குதலை தன்னிச்சையாக நிறுத்திக் கொள்வது என்று அறிவித்தது. இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதிக்குள் இருப்பதே காஸா மீதான தாக்குதலின் அடையாளம்தான். எனவே காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறும் வரை இராணுவத்துடன் சன்டையிடுவோம் என்று ஹமாஸ் அறிவித்தது. காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசும் கோரியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலிய இராணுவ ஹெலிகாப்டர் காஸா நகரின் மீது வெள்ளை பாஸ்பரஸ் கொண்ட குண்டுகளை வீசியதாக பிரஸ் தொலைக்காட்சி கூறி உள்ளது.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்கதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளன. இன்று மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபலியா மற்றும் பைத் லஹியா என்ற இடங்களில் இடிபாடுகளை அப்புறப்படுத்தும்போது  குழந்தைகள் உள்பட 95 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன.

இதுவரை 1300க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதல்களில் பலியாகி உள்ளனர். 6000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய தரப்பிலான சேதம் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. எனினும் 10 இராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவைத் தகர்க்க எதிரிகள் சதி - பிரணாப் முகர்ஜி!

Published on: //
உலகில் இந்தியாவின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட நாடுகள், இந்தியாவின் உயர்வைத் தகர்ப்பதற்காகவே தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுகின்றன என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கடந்தச் சில மாதங்களாக இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைத் தனிப்பட்ட சம்பவங்களாக காண இயலாது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றில் பின்னணில் இந்தியாவைத் தகர்க்கத் திட்டமிடும் சக்திகள் உள்ளன.

தீவிரவாதத்துடன் இஸ்லாமிய சமுதாயத்தைத் தொடர்புபடுத்துவதற்குச் சில சக்திகள் முயற்சிக்கின்றன. இதனை அங்கீகரிக்க இயலாது. உண்மையில் ஒரு மதத்திலும் இது போன்ற செயல்பாடுகளுக்கு இடமில்லை. மதநூல்களைச் சிலர் தங்களின் தீவிரவாத செயல்பாடுகளுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். தீவிரவாதிகள் மனிதகுலத்தின் எதிரிகளாவர்" என அவர் மேலும் கூறினார்.

அரசு திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக நிற்கும் திரிமுணால் காங்கிரஸுக்கு எதிராகவும் அவர் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

"நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக இங்கு ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயமும் இரயிவே பாதைகளும், சாலைகளும் ஆகாயத்தில் உருவாக்க இயலாது. இன்றைய எதிர்கட்சியே நாளைய ஆளும்கட்சி என்பதைப் புரிந்துக் கொள்ள வேன்டும். ஆட்சியில் வரும் பொழுது, மறந்து போகும் படியிலான வாசகங்களை எவரும் பயன்படுத்தக் கூடாது" என அவர் கூறினார்.

சாலை விபத்தில் ஐவர் பலி

Published on: //
இன்று அதிகாலையில் ஆக்ராவில் சாலையோரக் கடை மீது வேகமாக வந்த சரக்குந்து மோதி அக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள். மேலும் மூன்று பேர் படுகாயமுற்றனர். ஆக்ராவின் மகாத்மா காந்தி சாலையில் உள்ள மருத்துவமனை ஒன்றின் எதிரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு பெற்ற சரக்குந்து அது என்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அஹமதாபாத்தில் 4 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன

குஜராத் மாநிலத் தலைநகர் அஹமதாபாத்தில் வெடிக்காத நிலையில் இருந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அஹமதாபாத்தின் கரன்ஜ் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டன என்று கரன்ஜ் பகுதியின் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கரன்ஜ் பகுதியின் தலைமைத் தபால் அலுவலகம் அருகில் குண்டு உள்ளதாக ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாவும் அவர் கூறினார்.

4ஆவது நாளாக திருமாவளவன் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. அவரது போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் சில பகுதிகளில் அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதுரையில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. இன்று நள்ளிரவில் விழுப்புரத்தில் இரு பேருந்துகள் மீது பெட்ரோல் வீசி எரியூட்டப்பட்டன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதால் பேருந்துகள் காவல்துறை உதவியுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள திருமாவளவனை டாக்டர் இராமதாஸ் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தித்த இராமதாஸ், இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சுமத்தினார். உங்கள் முடிவால் இலங்கை தமிழர்களைக் காப்பற் முடியும். நீங்கள் மத்திய அரசை நம்புவதாகக் கூறுகிறார். நாங்கள் உங்களை நம்புகிறோம் என்று முதல் அமைச்சர் கருணாநிதிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அஹஹமதாபாத் குண்டு வெடிப்பு துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் நாளன்று அஹமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான துணை குற்றப் பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மாநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட 3, 200 பக்கங்களைக் கொண்ட இந்த துணைக் குற்றப்பத்திரிகையில், அமீரா ரஜா கான் என்ற முக்கிய குற்றவாளி உள்பட 44 பேர் மறைந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் 26 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருந்தது. இதில் 19 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது.

57 பேரை பலிவாங்கிய இந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒவ்வொரு குற்றவாளியும் என்னென்ன செய்தனர், குண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைத்தவர் எவர், எப்போது வைக்கப்பட்டது, எப்படி வைக்கப் பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஸா மீதான தாக்குதல் நிறுத்தம்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 22 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்.  சுமார் 6000க்கும் மேற்பட்டோர் காயமுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 450 குழந்தைகள் மற்றும் 100 பெண்களும் அடக்கம். இஸ்ரேலின் இச்செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சற்று முன் இஸ்ரேலியப் பிரமர் எஹூத் ஓல்மர்ட் தாக்குதல் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். காஸா மீதான தாக்குதல் இஸ்ரேலிய நேரம் அதிகாலை 2 மணி முதல் நிறுத்தப்படும் என்று அறிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதலால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். காஸா மக்கள் இஸ்ரேலுக்கு விரோதிகள் அல்லர் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர்தான் இஸ்ரேலின் விரோதிகள். அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கும் எதிரிகள் என்று அவர் கூறினார். தற்போதைக்கு இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் இருக்கும் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்கினால் திருப்பித் தாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிறுத்த அறிவி்ப்பை ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்துவிட்டது. இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை இராணுவத்திற்கெதிரான தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் சன்டை நிறுத்தம் செய்வதற்கு ஹமாஸ் இயக்கம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. 1. காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், 2. காஸாவை விட்டு இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும், 3. காஸா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கி, பாலஸ்தீனத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு ஏதுவாக எல்லைகளைத் திறந்துவிட வேண்டும். இந்த நிபந்தனைகளைச் செயல்படு்த்தாவிட்டால் சன்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பி்ல்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது.

தாழ்த்தப்பட்ட சாதி அமைச்சர் சென்ற கோயில் சுத்தம் செய்யப்பட்டது?

Published on: வெள்ளி, 16 ஜனவரி, 2009 // ,
ஒரிசாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அமைச்சர் கோயிலுக்குச் சென்றதால் கோயில் சுத்தப்படுத்தப்பட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரிசாவைச் சேர்ந்த அமைச்சர் பிரமிளா மல்லிக் என்ற அமைச்சர் இந்த வாரம் புகழ்பெற்ற கோயிலுக்குச் சென்று வந்த பின்னர், கோயிலின் கதவை மூடிவிட்டு தரைகள் கழுவிவிடப்பட்டன. சாமி சிலையின் துணிகள் மாற்றப்பட்டன. யாகம் நடத்தப்பட்டது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

கோயிலின் கருவறைக்குள் அமைச்சர் நுழைவதற்கு சில சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உபேந்திரா மல்லிக் என்னும் அரசு அதிகாரி கூறியதாக ராய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை தாக்குதல் விசாரணை இந்தியாவில் நடக்க வேண்டும்

மும்பையில் நவம்பர் 26ஆம் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் விசாரணை இந்தியாவில்தான் நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதத்திற்கெதிரான சார்க் அமைப்பின் மாநாட்டில் இப்படித்தான் தீர்மானிக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்றே கூறுகின்றன என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தங்கள் எதுவும் செய்து கொள்ளவில்லை. என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உலகின் பல்வேறு நாடுகளும் குற்றவாளிகளை ஒப்படைத்துள்ளன. எனவே பாகிஸ்தானும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோருகிறது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 40 பேரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது.

இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து விலக்க வேண்டும் - துருக்கி


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத ஒரு நாட்டை ஐ.நா. சபையின் தலைமையத்திற்குள் எவ்வாறு அனுமதிப்பது என்று துருக்கி பிரதமர் எர்தோகான் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஹமாஸ் இயக்கத்தினரைத்தான் குறி வைத்து தாக்குகிறோம் என்ற பெயரில் பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் காஸா மீதான தாக்குதல் குறித்து துருக்கி பிரதமருடன் ஆலோசனை செய்ய உள்ள நிலையில் எர்தோகான் இவ்வாறு கூறியுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் சன்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று மீண்டும் கோரியுள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பராக் ஒபாமா பொறுப்பேற்றவுடன் உடனடியாக பாலஸ்தீனப் பிரச்சனையில் தலையிட்டு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இஸ்ரேலுடன் அதிக உறவு வைத்திருக்கும் நாடு துருக்கி என்பது குறிப்பிடத் தக்கது.

பறவை மோதி அமெரிக்க விமானம் ஆற்றில் கவிழ்ந்தது

Published on: //
அமெரிக்காவின் ஜெட்விமானம் எண் 1549 ஒன்று பறவை மோதி மன்ஹாட்டனின் புகழ்பெற்ற ஹட்சன் நதியில் கவிழ்ந்தது.

நேற்று மதியம் (15-01-2008), லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்தது. 150 க்கும் மேற்பட்ட பயணிகளையும் விமான பணியாளர்களையும், நதியில் இருந்து மீட்டனர்.

வெறும் பறவைகள் ஒரு விமானத்தைக் தகர்க்கும் அளவுக்கு தொழில் நுட்பம் பலவீனமானதாக இருக்கிறதா என்ற ரீதியில் அமெரிக்கா முழுக்க விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

இது தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கே காணலாம்.



இந்திய கிரிக்கெட் அணி இலங்கை பயணம்

Published on: வியாழன், 15 ஜனவரி, 2009 // , , ,
பாகிஸ்தான் செல்லவிருந்த இந்திய கிரிக்கெட் அணி மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் ரத்து செய்யப் பட்டன. அதனைத் தொடர்ந்து இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இன்று அதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.

வரும் 24ஆம் தேதி இந்திய அணி கொழும்பு செல்கிறது.  28 மற்றும் 30 ஆம் தேதி டம்போலாவில் இரு ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. மூன்றாவது போட்டி அடுத்தமாதம் 2ஆம் தேதி நடைபெறும். 4 மற்றும் 5ஆவது போட்டிகள் ஓரிரு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும். அதன் பின்னர் T-20 எனப்படும் 20 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கைப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மும்பை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததையும், தென் ஆப்பிரிக்காவில் முன்பு இருந்த நிற வெறி அரசுக்கெதிராக அந்த அணி சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்ததையும் சுட்டிக் காட்டிய பா.ம.க. தலைவர் இராமதாஸ், தன் நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டிக்கும் விதமாய் இலங்கையுடனான கிரிக்கெட் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக ஸ்ரீனிவாசன், தேர்வுக் குழுத் தலைவராக ஸ்ரீகாந்த் போன்ற தமிழர்கள் பொறுப்பில் இருந்தும் தமிழர்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்திய அணியை இலங்கை அனுப்ப முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்திய அணி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா தலையிட வேண்டும் என்று கோரி தொடர் உண்ணா நிலை மேற்கொண்டு வருகிறார் என்பது நினைவு கூரத்தக்கது.

காஸா - பலி எண்ணிக்கை 1100ஐ தாண்டியது

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 20 நாட்களாக வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காஸா நகரின் உள்ளே பாலஸ்தீன போராளிக் குழுக்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருகி
றது.

இதுவரை 1100க்கும் அதிகமான 
பாலஸ்தீனியர்கள் 
கொல்லப்பட்டுள்ளனர். 4700க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 311 குழந்தைகள் மற்றும் 97 பெண்களும் அடங்குவர்.

இன்று காலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உதவி மையத்தின் தலைமை அலுவலகம் குறி வைத்து தாக்கப் பட்டுள்ளது. சன்டை நிறுத்தம் தொடர்பாக 
பேச்சு வார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவில் சென்றிருக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்செயலுக்கு பான் கி மூன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். 

இன்று காலை காஸா நகரின் அல்குத்ஸ் மருத்துவமனை மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது காஸா நகரின் மைய பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் குழுக்களுக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய தரப்பின் சேதம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் நேற்றிலிருந்து இதுவரை சுமார் 33 இராணுவத்தினர் காயமுற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ் இயக்கத்தின் தகவல்படி 34 இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர். 96 பேர் காயமுற்றுள்ளனர்.

காஸாவிலிருந்து அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீதான ராக்கெட் தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.

நீதிபதிகள் சம்பளம் மூன்று மடங்கு உயர்வு

Published on: //
இந்திய நீதிபதிகளின் சம்பளங்களை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு இந்தி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மாதம் இதற்கான சட்ட முன்வரைவை மத்திய சட்ட அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அந்துலே பிரச்சனையால் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வில்லை. பிறகு மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதற்கு ஜனாதிபதி கடந்த வாரம் ஒப்புதல் அளித்ததாக சட்டத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இன்று கூறினார்.

நீதிபதிகளின் உயர்த்தப்பட்ட சம்பள விவரம் வருமாறு: அடைப்புக்குறிக்குள் இருப்பவை பழைய சம்பள விகிதம்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி : ரூ. 1 இலட்சம் (33 ஆயிரம்)
உச்சநீதி மன்ற நீதிபதிகள் : ரூ. 90 ஆயிரம் (30 ஆயிரம்)
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள் : ரூ. 90 ஆயிரம் (30 ஆயிரம்)
உயர் நீதி மன்ற நீதிபதிகள் : ரூ. 80 ஆயிரம் (26 ஆயிரம்)

மும்பை தாக்குதல் விசாரணை - பாகிஸ்தானில் நடத்தலாம்

மும்பையில் நவம்பர் 26ஆம் தேதியன்று நடத்தப்பட் தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. 

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தானிய அரசு மறுத்து வருகிறது. இந்திய அரசு அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பாகிஸ்தானிய அரசுக்கும் தீவிரவாதிகளின் பாகிஸ்தானிய தொடர்பு குறித்த ஆதாரங்களை அளித்தது. இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இவை வெறும் தகவல்கள் மட்டுமே என்றும் பாகிஸ்தான் கூறி வருகிறது.

மும்பை தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த அமெரிக்க தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியது. பின்னர் இது குறித்த விசாரணை பாகிஸ்தானில் நடத்தலாம் என்று கருத்து கூறியது. ஆனால் விசாரணை இந்தியாவில்தான் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா கூறி வந்தது.

"இந்தியாவில் நடந்த குற்றங்கள் குறித்து இந்தியாவில்தான் நீதி விசாரணை நடத்த வேண்டும். சில காரணங்களால் இது முடியாமல் போனால் பாகிஸ்தானில் முறையான விசாரணை நடத்த முடியும் என்றால் பாகிஸ்தானில் நடத்தலாம்" என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியா அளித்த ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

துபாயில் கொண்டாட்டம் நிறுத்தம்.

துபாயில் ஆண்டுதோறும் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடக்கும். இதன் வண்ண மயமான துவக்க விழா ஆட்சியாளர்களால் மிகக் கோலாகலமாக நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஷாப்பிங் திருவிழா இன்று துவங்குகிறது. ஆனால் இஸ்ரேல் நடத்தும் கொலைவெறித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர் களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய துவக்கவிழா கொண்டாட்டங்களை ரத்துச் செய்து துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகங்களின் பிரதமரும் துணை ஜனாதிபதியுமான ஷெய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுளார்.

இதே காரணத்துக்காகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் துபாயில் ரத்துச் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

15 ரூபாய்க்காக தாயைக் கொன்ற மகன்

Published on: புதன், 14 ஜனவரி, 2009 //
குடிப்பழக்கம் உள்ள பக்குராம் தன்னிடம் குடிப்பதற்குப் பணம் இல்லாததால் தாயிடம் 15 ரூபாய் கேட்டான். மகன் குடிப்பதை விரும்பாத தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டாள். இதனால் கோபமடைந்த மகன் 58 வயதான ஹிர்மத் பாய் என்ற தன்னைப் பெற்ற தாயையே கொலை செய்துவிட்டான்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தின் கயா எனும் கிராமத்தில் கடந்த திங்கள் கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பக்குராம் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், கொலை செய்யும்போது குடித்திருந்ததாகவும் கூறியதாக உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் 17 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக லெபனானின் எல்லையிலிருந்து 4 ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லையில் வந்து வீழ்ந்ததாகவும் அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலைத் தொடுத்தது எனவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது கடந்த 19 நாட்களாக இஸ்ரேல் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில் நடக்கும் இரண்டாவது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக கடந்த 8ஆம் தேதியன்று இதுபோன்று தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. இந்த தாக்குதல்களை தாங்கள் மேற்கொள்ளவில்லை என லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏற்கனவே கூறியிருந்தன.

கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனான் மீதும், ஹிஸ்புல்லாஹ்வின் தொலைக்காட்சி நிலையம், அதன் தலைமையகம் உள்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து வான் தாக்குதல்களைத் தொடுத்தது. ஐ.நா. தலையீட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தெற்கு லெபானனின் இஸ்ரேலிய எல்லைப் பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இராணுவம் கண்கானித்து வருவது குறிப்பிடத் தக்கது.

ஐ.நா. செயலாளர் எகிப்து வருகை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுவிட்டதாகவும், 4500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சன்டையை நிறுத்த வேண்டும் என்று இரு தரப்பினரையும் வலியுறுத்தினார். இஸ்ரேல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் 19ஆவது நாளாகத் தாக்குதலை தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சற்று முன் வந்து சேர்ந்தார். இங்கு எகிப்து அதிபர் முபாரக்குடன் பேச்சு வார்ததை நடத்துகிறார். அதன் பின்னர் இஸ்ரேல், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களை அவர் சந்திக்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

மும்பை சம்பவம் - பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பில்லை : பிரிட்டன்

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை உதவியுடன் நடத்தப்பட்டது என்று இந்திய அரசு கூறி வரும் நிலையில் அதனை பிரிட்டன் மறுத்துள்ளது.

"மும்பை தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசால் நடத்தப்பட்டதல்ல என்று உறுதியாக நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தேன். அதனை மீண்டும் கூறுவது அவசியமானது என்று நான் நம்புகிறேன்" என்று பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் நேற்று கூறினார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உபயோகித்த சாட்டிலைட் போன் தகவல்கள் மற்றும் உயிருடன் பிடிபட்டுள்ள கசாப்பின் வாக்கு மூலம் ஆகியவற்றை இந்தியா பாகிஸ்தான் அரசிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தது.

இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும், இவை வெறும் தகவல்கள்தான் எனவும் பாகிஸ்தானின் பிரதமர் கூறியுள்ளார்.

போலி விமான விபத்து

அமெரிக்காவைச் சேர்ந்த மார்கஸ் ஷ்ரன்கர் (வயது 38) என்ற விமான ஓட்டி பல்வேறு நிதி மோசடி வழக்குகளில் சிக்குண்டு காவலர்களால் தேடப்பட்டு வந்தார். இந்த வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக இவர் போலியாக விமான விபத்து சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை இன்டியானா மாநிலம் ஆன்டர்சன் நகரிலிருந்து ப்ளோரிடாவுக்கு விமானத்தில் பறந்தார். அலபாமா மாநில எல்லையில் இருக்கும் போது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு போலியாக அவசர அழைப்பு விடுத்து தனது விமானத்தின் இறக்கைகள் சேதமடைந்துள்ளதாக தகவல் தந்தார். பி்ன்பு விமானம் தானாகவே இயங்கும் வகையில் ஏற்பாடு செய்தார். பின்பு பாராசூட்டைக் கட்டிக் கொண்டு விமானத்திலிருந்து குதித்துவிட்டார். விமானம் ப்ளோரிடா மாநிலம் மில்டன் நகர் அருகே தரையில் விழுந்தது.

இப்படி அவர் செய்யக் காரணம் தான் இறந்துவிட்டதாகப் பதியப்பட்டு விட்டால் நிதி மோசடி வழக்குகளிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்காக. ஆனால் அவர் போலியாக விடுத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து அவரது விமானத்திற்கு உதவி செய்ய இராணுவ விமானம் ஒன்று விரைந்து வந்தது. அவர்கள் அந்த விமானத்தின் அருகி்ல் வந்து பார்த்தபோது விமானத்தின் கதவு திறந்த நிலையில் இருப்பதை அறிந்தனர். எனினும் விபத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் அலபாமா நகரில் ஒருவர் கால் முட்டியில் காயத்துடன் தனது ஓட்டுநர் உரிமத்தைக் காண்பித்து தனக்கு உதவி தேவை என்று காவலர்களிடம் கோரினார். ஓட்டுநர் உரிமத்தி்ல் ஷ்ரன்கர் என்று அவர் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. தான் ஒரு விபத்தில் அடிபட்டதாகக் கூறிய அவரை காவலர்கள் ஒரு விடுதியில் தங்க வைத்தனர். சற்று நேரத்திற்குள் அலபாமா காவலர்களுக்கு போலி விமான விபத்து தகவல் வந்து சேர்ந்தது. விடுதிக்கு வந்து ஷ்ரன்கரைத் தேடியபோது அவர் தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது.

வட இந்தியாவில் குளிருக்கு 100 பேர் பலி

Published on: //
இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. குளிரின் காரணமாக இதுவரை சுமார் 100 பேர் இறந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குளிர் மட்டுமல்லாது கடும் பனியும் பொழிவதால் சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. பல இரயில்கள் தாமதமாக புறப்பட்டன.

ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிர்தசரசில் 3.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. நேற்று காலையில் டில்லியில் கடும் குளிராக இருந்தது. டில்லியின் வெப்ப நிலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது. வழக்கமான சராசரி அளவை விட இது குறைவாகும்.

உத்திரப் பிரதேசத்தில் குளிரின் காரணமாக நேற்று 4 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இம்மாநிலத்தின் முஜப்பர்நகர் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 பேர் குளிரின் காரணமாக இறந்துள்ளனர்.

இந்தியா ஆதாரங்கள் வழங்கவில்லை - பாகிஸ்தான்!

Published on: //
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் குறித்த ஆதாரங்களை இந்தியா வழங்கவில்லை என பாகிஸ்தான் அதிபர் கிலானி தெரிவித்துள்ளார்.

"இந்தியா வழங்கியவை ஆதாரங்கள் அல்ல எனவும் ஆதாரங்கள் என்ற பெயரில் சில விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளனர் எனவும்" கிலானி தெரிவித்தார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் - முக்கிய சாட்சி மாயம்!

Published on: //
கடந்த நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்தத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை நேரடியாக கண்ணால் கண்ட 47 வயதுடைய அனிதா ராஜேந்திர உதயா என்ற முக்கிய சாட்சியைக் காணவில்லை. இவர் எங்கு சென்றார் என்பதைக் குறித்து குடும்பத்தினருக்கோ காவல்துறைக்கோ எவ்விதத் தகவலும் தெரியவில்லை.

தாக்குதல் நடந்த நாளில் மீன்பிடி படகில் அமர்ந்திருந்த இவர், கப் பரேடிலுள்ள பத்வர் பார்க்கில் படகில் வந்திறங்கிய 6 தீவிரவாதிகளைப் பார்ந்திருந்தார். தாக்குதலுக்குப் பின்னர் ஜெ.ஜெ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இந்த 6 பேரின் உடல்களை இவர் அடையாளம் கண்டிருந்தார்.

இதற்குப் பின்னர் அனிதாவிற்கு மிகுந்த பயம் இருந்ததாக மகள் சீமா கேதல் ஜோஷி கூறினார். சீமா தெரிவித்தப் புகாரின் அடிப்படையில் கப் பரேட் காவல்துறை விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

விப்ரோ நிறுவனத்திற்கு உலக வங்கி தடை

Published on: திங்கள், 12 ஜனவரி, 2009 // ,
இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ நிறுவனத்துடன் உலக வங்கி வணிகத் தொடர்பு கொள்வதற்கு நான்கு ஆண்டுகால தடை விதித்துள்ளது. உலக வங்கி வணிகத் தடை விதிக்கும் மூன்றாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் விப்ரோ என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு முன் சத்யம் மற்றம் மெகா சாப்ட் ஆகிய நிறுவனங்களுக்குத் தடை விதித்திருந்தது.

உலக வங்கியின் ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்கள் இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி இந்த தடை விதிதக்கப் பட்டுள்ளது. இவையன்றி நெஸ்டார் பார்மாசூட்டிகல், கேப் இன்டர்நேஷனல், சுரேந்திர சிங் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கும் இந்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

சரக்குந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

Published on: //
எட்டு நாட்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த சரக்குந்து வாகனங்கள் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கும் சரக்குந்து உரிமையாளர் சம்மேளனத்திற்கும் இடையே இன்று மதியம் நடைபெற்ற பேச்சு வார்த்தை சுமுகமாக அமைந்ததைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கூறினார். எந்த வகையான உடன்பாடுகள் அரசுக்கும் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

கேம்பிரிட்ஜ் பல்கலை: இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டய கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பெயரால் இந்த உதவித் தொகை அறியப்படும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அலிசன் ரிச்சர்ட் கூறினார்.

உதவித் தொகை தேவைப்படும் மாணவர்களுக்கு அவர்கள் எந்தப் பிரிவு பாடம் படித்தாலும் கல்விக் கட்டணம் உள்பட மற்ற செலவுகளுக்கு இந்த உதவித தொகை வழங்கப்படும். இதற்காக 1.5 மில்லியன் பவுண்ட் நிதி வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த தொகையை எரன்டா அறக்கட்டளையும், பார்தி அறக்கட்டளையும் அன்பளிப்பாக அளித்துள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர்நிலைப் பட்டயக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மன்மோகன் சிங் பெயரால் ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர் என்பதும் பொருளாதாரப் பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார் என்பதும் குறிப்பிடத்த்ககது.

திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. வெற்றி

Published on: //
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.  வேட்பாளர் லதா அதியமான் 39, 266 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முத்துராமலிங்கம் 40, 156 வாக்குள் பெற்றார். வாக்கு விவரம் வருமாறு:

மொத்த வாக்குகள் : 1, 55, 647
பதிவானவை : 1, 38, 191

தி.மு.க. : 79, 422
அ.தி.மு.க. : 40, 156
தே.மு. தி.க. : 13, 136
ச.ம.க. : 831

ஆதாரங்களுக்கு பதில் தராத பாகிஸ்தான்!

Published on: ஞாயிறு, 11 ஜனவரி, 2009 // ,

இந்தியா சமர்ப்பித்துள்ள ஆதாரங்களுக்கு இதுவரை ஏதும் பதில் தரவில்லை பாகிஸ்தான்.

மும்பை பயங்கரவாதம் தொடர்பான ஆதாரங்களைப் பாகிஸ்தானிடம் சமர்ப்பித்தது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சரான ஆனந்த் ஷர்மா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மும்பையின் இப் பயங்கரவாதச் செயலில் தொடர்புடைய தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் அவை மீதான அரசின் நடவடிக்கை பற்றியும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஷர்மா.

மேலும், பாகிஸ்தான் இச்செயலைச் செய்தது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்றை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்றார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இனை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பிக்கப் பட வேண்டும் என்று பிஜேபியின் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று பாஜக நேற்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!